பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

குழந்தைகள் நடனம்...குழந்தையாக்குகிறது நம்மையும்

சிறு குழந்தைகள் ஆடும் போது, பாடல் குறித்த நமது கண்ணோட்டமே மாறிவிடுகிறது...

மாலை அரியலூர் அருகே தவுத்தாய்குளம் கிராமத்தில் விஜயதாரணி நர்சரி மற்றும் துவக்கப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா. பேசி,பரிசளித்த பிறகு கலைநிகழ்ச்சிகள். சின்னக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி.

முதலில் பரதநாட்டியம், சிறப்பாக ஆடினார்கள். அடுத்து, “சொய், சொய்...” கிராமிய நடனத்தில் கலக்கினார்கள். பெண்கள் பக்கத்திலிருந்து இசைக்கு ஏற்ப கைதட்டி மகிழ்ந்தனர்.

“வேணாம் மச்சான் வேணாம்” பாடலுக்கு ஆண்கள் பக்கமிருந்து ஏக வரவேற்பு. பிள்ளைகளின் நிகழ்ச்சியில் பெற்றோர் கல்லூரி காலத்திற்கு போய்விட்டார்கள் போல...

“என்னாசை மைதிலியே” பாடலுக்கு குழந்தைகள் ஆடிய போது, பாடலின் விரசம் அடிபட்டு போனது. கந்தசாமியின் “அலக்ரா”, அவன்-இவன் இசைக்கோர்புக்கான நடனத்தை பார்த்த போது, திரைவடிவத்தை பார்க்க தூண்டியது... காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

# தன தரனானே தானானே.....


நாங்க இருக்கோம், ஜெயலலிதாவிற்கு பயப்படாதீர்கள்....

மருதையாற்றில் புதிய நீர் தேக்கம் மக்கள் கருத்து -3...

" நாங்க இருக்கோம், ஜெயலலிதாவிற்கு பயப்படாதீர்கள். துணிச்சலா எங்களுக்காக சட்டமன்றத்தில் பேசுங்க"

இது ஆதனூர் குரல். வெள்ளந்தியாய், இயல்பாய் சொன்னார்கள். ஆனால் உறுதியாய் சொன்னார்கள். ஒரிருவர் மாத்திரம் சொல்லவில்லை, பேசிய அனைவருமே வலியுறுத்தினர்.

யாரும் நிலச்சுவான்தார் இல்லை. எல்லோருக்கும் இருப்பதே ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் தான். அதனால் தான் இந்த கோபம்.

ஊராட்சிமன்றத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகளும் மக்களோடு இருக்கின்றனர். மொத்தத்தில் திட்டத்திற்கு எதிர்ப்பே வலுவாக உள்ளது.

                                              


சட்டை போடாத உடல், கலைந்த காய்ந்த தலை, போட்டிருக்கும் உடையும் பழைய உடை, காலை முதலே காட்டில் உழைத்த களைப்போடே வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இவர்கள் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வது பாவம். இவர்கள் வாழ்க்கையோடு விளையாடுவது கொடூரம் என்ற எண்ணமே எங்களுக்கு ஏற்பட்டது. அரசுக்கும் ஏற்பட வேண்டும்...

மக்கள் கருத்தை அரசு நேரிடையாக அறிந்து செயலாற்ற வேண்டும், அது வரை மட்டுமல்ல.... கடைசி வரை உடன் இருப்போம்.

# ஆதனூர் மக்கள் அளித்த துணிச்சலோடு...



பத்திரிக்கைகளின் பார்வையில் தளபதி ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்
60,பொருளாளர் , தி.மு.க.

உறுதியான பயணம் 

ஏனெனில் வாரிசுப் போட்டியில் சகோதர, சகோதிரிகளை பின்னுக்குத் தள்ளிய 
இவரது கையில்தான் இப்போது தி.மு.க. வின் எஞ்சின் இருக்கிறது.

ஏனெனில் மென்மையான அணுகுமுறை கொண்ட இவர் பின்னுக்குத் தள்ளப்படுவார் என்ற பொதுவான பிம்பத்திற்கு மாறாக, உறுதியான முடிவுகளை எடுக்க தலைமைக்கு உதவுகிறார்.

ஏனெனில் தமிழகம் முழுவதும் கட்சியின் இளைஞரமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி அவற்றை ஜனநாயகப்படுத்துகிறார்.

புதிய இலக்கு: சென்னை மாநகராட்சி அது செயல்படவே இல்லை என விமர்சித்து வருகிறார்.

மாற்றம்: சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சி தலைவராகியிருப்பது


( இந்தியா டுடேயில் செல்வாக்குமிக்க 50 நபர்களில் தமிழகத்தின் டாப் 10 –ல் இரண்டாம் இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தி.மு.க.வின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்து வெளியிட்டுள்ள செய்தி.)




பல சிறகுகளை தாங்கிய கிரீடத்துடன் ஒரு அரசியல்வாதி

மு.க.ஸ்டாலின் எப்போதும் யாரையும் கவரத் தவறுவதில்லை, மேல்தட்டையும் கூட. சமீபத்தில் ஒரு தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பில், சுறுசுறுப்பான, புத்திசாலியான, ஆர்வலராக இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் குறித்த விவாதம் எழுந்த போது, இவருடைய ஈர்ப்பான ஆளுமை விவாதிக்கப்பட்டிருக்கிறது. சைனீஸ் காலருடன் கூடிய மிடுக்கான வெள்ளை சட்டைகளுடனான இவரது மதிப்புமிகு தோற்றத்திற்கு கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் நல்ல தோற்றத்துடனான ஆண் அரசியல்வாதிகளை பட்டியலிட்டால், இவர் எளிதாக முதலிடத்தை பெறுவார்.

( Deccan Chronicle நாளிதழ் )



திங்கள், 29 ஏப்ரல், 2013

யாருடைய நிலத்தை கையகப்படுத்தப் போகிறார்கள் ?


மருதையாற்றில் புதிய நீர் தேக்கம் மக்கள் கருத்து -2...

குரும்பாபாளையத்தில் மக்களை சந்தித்துவிட்டு, அடுத்து கொட்டரை கிராமத்திற்கு சென்றோம்.

ஊருக்கு மத்தியில் ஆலமரத்தடியில் ஊர்மக்கள் கூடியிருந்தனர். கன அமைதி. ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும்....

              

இங்கு தான் சில கூடுதல் தகவல்கள் கிடைத்தன. ஊரின் மூத்தவர் ஒருவர் பேசினார்.

" 1983-ல் முதன்முதலாக இந்த திட்டம் தீட்டப்பட்டது, அப்போது அரசு அதிகாரிகள் சர்வேக்கு வந்தார்கள். ஊரே கூடி எதிர்ப்பு தெரிவித்தோம். அத்தோடு இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டார்கள் .

இப்போது சென்ற வருடம் ஒரு நாள் வந்து பார்த்தார்கள். எந்த சர்வேயும் செய்யவில்லை. மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டமும் நடத்தப்படவில்லை. எந்தப் பகுதியில் நீர்தேக்கம் வரப்போகிறது எனவும் தெரியப்படுத்தவில்லை.

யார் யாருடைய நிலத்தை கையகப்படுத்தப் போகிறார்கள் என்பதையும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். எல்லாம் மர்மமாகவே இருக்கிறது. 

தனியார் திட்டங்களுக்கே விளக்கக் கூட்டங்கள் நடத்துகிறார்கள். அரசு திட்டத்தை மூடுமந்திரமாக சட்டசபையில் அறிவிப்பது ஏன் ?

அதையும் எந்த கிராமங்களுக்கு பயன் என்று அறிவித்தார்கள். ஆனால் எந்த கிராமங்கள் பாதிக்கப்பட போகிறது என்பதை சொல்லவில்லை.

எடுக்கப்பட போகிற இடத்திற்கு, மாற்று இடம் தருவார்களா ?
 பணம் கொடுத்தால் என்ன செய்வது ? 
வேறு எங்கே போவது ? ஒன்றும் புரியவில்லை. 
எங்கள் எதிகாலம் என்ன ? "

 பதில் யாருக்கும் தெரியவில்லை......

                               

90 வயது மூதாட்டி முதல், 12 வயது பள்ளி மாணவி வரை மைக் பிடித்து பேசினார்கள். சிலர் அழுத போது என்ன சமாதானம் சொல்வது என தெரியவில்லை. ஒவ்வொருவர் பேசியதும் தனித்தனி சோகக் கதை.

( தொடரும்...)

பாலிடால் வாங்கிக் கொடுத்தா குடிச்சுட்டு செத்து போவோம்....

"எங்களுக்கு பாலிடால் வாங்கிக் கொடுத்தா குடிச்சுட்டு செத்து போவோம்...."

இவ்வளவு கடுமையான எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை.

கடந்த 04.04.2013 அன்று சட்டசபையில் விதி 110ன் கீழ் ஜெயலலிதா படித்த அறிக்கையில் அறிவித்த ரூபாய் 108 கோடி மதிப்பிலான மருதையாறு நீர் தேக்கத் திட்டத்தினால் பாதிக்கப்படும் குரும்பாபாளையம் கிராமத்து மக்களின் குரல் தான் இது.

சட்டசபையில் அறிவிக்கும் போதே நினைத்தேன், இது போன்ற கோரிக்கையை தேர்தலுக்கு முன்னும், பின்னும் யாரும் வைத்ததில்லையே என.

சட்டசபை முடிந்தவுடனே, ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசி விசாரித்தேன். 25 ஆண்டுகள் ஒன்றிய செயலாளரான அவரே சற்று யோசித்தார், இதன் முக்கியத்துவம் குறித்து.

ஊர் மக்களிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள். பெரும்பாலும் எதிர்குரலே. மூன்று ஊர்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு.

எனவே அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்கள் கருத்தை கேட்டு, சட்டபேரவையில் எதிரொலிப்போம் என முடிவெடுத்தேன். இன்று மூன்று கிராமங்களுக்கும் சென்றேன்.

பகல் 03.00 மணிக்கு உச்சி வெயில் நேரத்தில் சென்ற போதே, மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். அப்பாவி ஏழை மக்கள். காலையில் வயலுக்கு சென்றால், இரவு வீடு திரும்புகிறவர்கள்.

        



வயல் தான் இவர்களுக்கு முதலீடு, இரண்டாம் வீடு, தொழில், பொழுதுபோக்கு, வாழ்வாதாரம், உயிர்நாடி. இதையும் அரசு எடுத்துக் கொண்டால் போக்கிடமே கிடையாது.

இந்த அறிவிப்பால், இந்த கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் பறிபோகிறது. பிரமை பிடித்து போய் இருக்கிறார்கள். மூன்று நாட்களாக பல வீடுகளில் உலை வைக்கவில்லை, உண்ணும் மன நிலையில் இல்லை.

தங்கம்மாளின் கணவன் இறந்து பத்தாண்டாகிறது, மூன்று பிள்ளைகள். இரண்டு ஏக்கர் நிலம் தான், அதுவும் மேட்டாங்காடு, கருமண்பூமி.

மழை பெய்தால் விவசாயம், பருத்தியும், சோளமும். இருக்கும் இரண்டு ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட போகிறது. இவரின் குரல் தான் முதல் வரி.

# தங்கம்மாள்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்...
( தொடர்கிறது... )

அனைத்தும் வசப்படும் - தளபதி மு.க.ஸ்டாலினுக்கு....

மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எனது அப்பா எஸ்.சிவசுப்ரமணியன் ( கழக சட்ட திருத்தக் குழு உறுப்பினர் ) அவர்களை இன்று காலை, சென்னையில் சந்தித்து நலம் விசாரித்தார். 

வரவேற்று வேட்டி அணிவித்த அப்பா, "உங்கள் பிறந்த நாளில் அணிவிக்க வாங்கிய வேட்டி, உடல்நலக் குறைவால் வர இயலாமல் அப்படியே இருந்தது" என சொல்ல, " அதனால் தான் நானே வந்து வாங்கிக் கொண்டேன்" என தளபதி அவர்கள் கூற அப்பாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி.

தளபதி அவர்கள் தனக்கு வழங்கிய அவருடைய மணிவிழா மலரில், அப்பா கையொப்பம் கேட்க, உணர்வு கண்டு மகிழ்வுடன் கையொப்பமிட்டு அளித்தார் தளபதி அவர்கள்.





உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். உடன் இருந்த உறவினர்கள் தளபதி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பப்பட, அன்புடன் இசைந்து அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

          



தளபதி அவர்கள் எளிமையாக பழகியதையும், பேசியதையும் கண்டு, அங்கு வந்திருந்த அப்பாவின் நண்பர் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் திரு.குப்புசாமி அவர்கள், " நான் நினைத்ததை விட எளிமையாக இருக்கிறார். மாநில அளவில் ஒரு தலைவர், எதிர்காலத்தில் முதல்வராக இருப்பவர் இவ்வளவு அன்பாக பழகுகிறாரே" என வியந்தார்.

              


அரசியல் சார்பற்ற அவர் மனதிலும் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார் தளபதி அவர்கள், அங்கிருந்தோரை எல்லாம் வசப்படுத்தி விட்டார்.


# அனைத்தும் வசப்படும் !

காலங்களும் மாறுது, காட்சிகளும்....

கல்லூரியில் முதல் வருடம், ஒரு விடுமுறை நாள். மாம்ஸ் சங்கர் அழைக்கிறார். "இன்னாடா சொம்மா தான இருக்குற, ஒரு கை குறையுது வா". வேலூர் மாவட்டத் தமிழ்....

சீட்டுக்கச்சேரி சூடுபிடித்திருக்குது. " எனக்கு விளையாடத் தெரியாது மாம்ஸ்" -நான். "இன்னா வெளயாடுறியா, இன்ஞினேரிங் சேந்துட்டு சீட்டாட தெரியாதாம்".

மாம்ஸ் ஒரு வயது மூத்தவர், ஏற்கனவே கல்லூரி அனுபவம் கொண்டவர். ஆனால் நம்ம கிராமத்து நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில் சீட்டாட்டம் மிகப் பெரிய குற்றம்.

பள்ளிக்கு பக்கத்திலேயே காவல் நிலையம். அடிக்கடி அங்கு வெளியே கைகட்டி நிற்கும் கூட்டம், சீட்டாடி பிடித்து வரப்பட்டதாகக் கேள்விப்பட்டு அந்த பயம் வேறு இன்னும் மனதில். ( பணம் வைத்து ஆடியதால் பிடித்து வரப்பட்டார்கள் என்பது அப்போது தெரியாது).

வீட்டிலோ அதற்கு மேல், என் மாமா சீட்டாடுவதை பெருங்குற்றமாக அம்மா பஞ்சாயத்து சொல்வதை கேட்டு சீட்டே தூரமாகியிருந்தது.

************


"இல்ல மாம்ஸ், உண்மையா தெரியாது"
"சரி வா, கத்துக்கலாம்"
"அய்யோ வீட்டுக்கு தெரிஞ்சா போச்சு"
"இவன்லாம் காலேஜ் வந்துட்டான்"


**************


சமீபத்தில் ஒன்றாவது படிக்கும் என் மகனுடன், எனது சித்தி அமர்ந்து சீட்டாட என் அம்மா ரசிக்கும் காட்சி காணப் பெற்றேன். இதில் சர்டிபிக்கேட் வேறு," சூர்யா சூப்பரா ஆடுது". ( இப்போ நமக்கும் தெரியும் என்பது வேற விஷயம் )

# காலங்களும் மாறுது, காட்சிகளும்....




திங்கள், 8 ஏப்ரல், 2013

அமைச்சர் வளர்மதியின் கவித பேச்சும், மோகனின் கண்ணியப் பேச்சும்...


மனதார பாராட்ட விரும்புகிறேன், அதிமுக அமைச்சர் மோகன் அவர்களை. ஊரகத் தொழில் துறை அமைச்சரான இவர், தனது துறை மானியக் கோரிக்கை மீது இன்று பதிலளித்து பேசும் போது, மிக கண்ணியமாக தனது துறை குறித்து மட்டும் பேசினார்.

மூன்று முறை மைனாரிட்டி திமுக அரசு என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டார்.

ஆனால் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, துறையை அம்போ என்று விட்டுவிட்டு, டெசோவை பிடித்துத் தொங்கினார். சண்டை வளர்த்தார். நாங்கள் வெளியேற உழைத்தார்.

# அவரவர் குணம்....
                      ***************************
சபையில் அமைச்சர் வளர்மதியின் கவித பேச்சு...

அம்மா
சட்டசபையில் நீங்கள் பவுர்ணமி
அதனால் தான் அமாவசை வருவதில்லை
வந்த அமாவசையும் வராண்டாவோடு போய்விட்டது...

எந்த சிற்பியும் வடிக்காத அம்மன்
நீங்கள் சுயம்பு தெய்வம்

இன்று காவிரியாறு
நாளை முல்லைபெரியாறு
இதுவே உங்கள் வரலாறு...

அம்மா
சட்டமன்ற தீர்மானமே
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்தது
ஹிலாரி உங்களை சந்தித்ததே
அமெரிக்காவின் மாற்றம்...( இந்த இடத்தில் எனக்கு காது வலி ஏற்பட்டதால் பேசியது புரியவில்லை )

முக்கி
முனகி
திக்கி
திணறி – இந்த வார்த்தைகளை போட்டு ஒரு "பிட்டு" கவிதை படித்தார் தலைவர் கலைஞரை பற்றி, அதை போட்டால் மாநகராட்சி லாரி வரணும் உங்க கமெண்ட அள்ள ....

வாழ்க அக்கா வளர் !

                       ************************************************

ஜெயலலிதா இல்லாத சபை இன்று ஆரோக்கிய விவாதகளமாகியது....

சமூக நலத்துறை மீதான விவாதம்...

மாற்று திறனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் அய்ந்து லட்சம் ஒதுக்கப்படும். ஆனால் அது எந்த வகையில் செலவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை என்பது உறுப்பினர்களுடைய புகார்.

அதை பேச விடாமல் சிறிது நேரம் அமைச்சர்கள் போராடி பார்த்தார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி அந்த நிதி முறையாக செலவு செய்யப்படுகிறது என பூசி மெழுகினார்.

மார்க்சிஸ்ட், இ.கம்யூ போன்ற கட்சிகளுக்கு இதன் மீது கருத்து சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டு, டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு நீண்ட நேரம் வாய்ப்பு மறுக்கப்பட கோபத்தின் எல்லைக்கே போய்விட்டார். தவிர்க்க முடியாமல் வாய்ப்பு வழங்கினார்கள்.

Dr.
கிருஷ்ணசாமி : இரண்டு ஆண்டுகளுக்கு 10 லட்சத்தோடு, கூடுதலாக 10 லட்சம் ஒதுக்கி, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனத்திற்காக, முகாம் நடத்தி பயனாளிகளை தேர்வு செய்து பட்டியலையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தேன். இரு வருடங்களாக வழங்கவில்லை.

ரெங்கராஜன் (காங்) : யார் யாருக்கு வழங்கப்பட்டது எனவும் தெரியவில்லை, வழங்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. முறையான தகவல் இல்லை.

தங்கம் தென்னரசு : வருடத்தின் நடுவில் தொகுதி மேம்பாட்டு நிதியில் அங்கன்வாடிக்கு கேஸ் அடுப்பு வழங்க ஆணை வழங்குகிறீகள். ஏற்கனவே நடைபெறுகிற வேலைகளை நிறுத்தமுடியுமா ? செய்வதை வருட ஆரம்பத்தில் செய்யுங்கள்.

அஸ்லம் பாஷா (ம.ம.க) : இரண்டு ஆண்டுகளாக நிதி செலவு செய்யப்படவில்லை. நேற்று கூட மாவட்ட மறுவாழ்வு அலுவலரை சந்தித்தேன், மேலிருந்து உத்தரவு வரவில்லை என்கிறார்கள். நீங்கள் உத்தரவிட்டு விட்டதாக சொல்கிறீர்கள். இடையில் இருக்கும் தடையை கண்டுபிடித்து நீக்குங்கள்.

இந்த விவாதம் வரை இடைமறித்து மறுத்து வந்த அமைச்சர் முனுசாமி இறங்கி வந்தார்.

முனுசாமி : உறுப்பினர்களுடைய வருத்தம் புரிகிறது. வருத்தம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்ற விபரம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

இது போன்ற விவாதம் நடந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி அவர்களது நியாயமான கேள்வியும் எனது பதிலும்



மதிப்பிற்குரிய கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி அவர்கள் ஒரு நியாயமான கேள்வி எழுப்பியுள்ளார்.

"திரு சிவசங்கர், உங்களுடைய சட்டமன்றச் செய்தி அப்டேட் நான் தொடர்ந்து படிக்கும் ஒன்று. ஆனால் ஒருவிதத்தில் இந்த செய்திகள் அலுப்புட்டுகின்றன. அவைக்குறிப்பிலிருந்து நீக்கு, உனக்குத் தகுதியில்லை, அதெப்படி நீ சொல்லலாம் போன்றவை தவிர சட்டமன்றத்தில் உருப்படியான விவாதம் என்பது நடக்கப்போவதில்லை என்பதாகத் தெரிகிறது. இது எப்படி பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும்? இது குறித்து உங்கள் கருத்து என்ன? "

எனது கருத்து :

நீங்கள் சொல்வது உண்மை தான். ஒரு கட்டத்தில் பொதுமக்களுக்கு மட்டுமல்ல உள்ளே இருக்கிற எங்களுக்கே அலுப்பாகத் தான் ஆகி விடுகின்றது.

கடந்த தலைவர் கலைஞர் ஆட்சி காலத்திலும் நான் சட்டமன்ற உறுப்பினர். சமயங்களில் அப்போதும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் எப்போதாவது. இப்போது எப்போதும் இதே வேலையாக இருக்கிறது.

நேற்றைய நிகழ்வில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் முழு பதிலையும் சட்டமன்றக் குறிப்பேட்டில் படித்தால் உணர்வீர்கள். தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பதை விடுத்து, எதிர்கட்சிகளை எள்ளி நகையாடுவதையே முதன்மையாக கொண்டு பேசினார்.

அதையும் பொறுத்திருந்தோம். தகுதி இல்லை, லட்சத்தில் ஒரு பங்கும் தகுதியில்லை என்று பேசும் போதும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால், நாங்கள் அவர்கள் பேசுவதை ஒப்புக் கொள்வது போலவும், சொரணையற்றவர்கள் போலவும் ஆகும்.

அன்று காலை 10 மணிக்கு அவை துவங்கியதிலிருந்தே, சும்மா திமுக அரசு என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் கூட மைனாரிட்டி திமுக அரசு என்றதையும், ஜெவை புகழும் போது தீய சக்தியை வீழ்த்திய மகாசக்தி என்றதையும், இது போன்ற இன்ன பிறவற்றையும் பொறுத்துக் கொண்டே அமர்ந்திருந்தோம்.

இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆட்சி அமைந்து. இப்போதும் ஆட்சியின் சாதனைகளை பேச முடியாமல், எங்கள் மீது வீண்பழி சுமத்தும் வேலையை எவ்வளவு நாள் தொடர்வார்கள் என தெரியவில்லை.

சட்டமன்ற குறிப்பேடுகளை புரட்டினால் தெரியும், திமுக ஆட்சிகாலங்களில் நடந்த விவாதங்கள். பீட்டர் அல்போன்ஸ், பாலபாரதி, சிவபுண்ணியம், வேலூர் ஞானசேகரன் ஏன், ஓ.பி.எஸ் போன்றோர் ஆட்சி மீது கடுமையான குற்றச்சட்டுகளை வைப்பார்கள், விவாதங்கள் நடக்கும்.

நீங்களே யாரையாவது அனுப்பினால், சட்டமன்ற குறிப்பேடுகளை எடுத்து காட்டுகிறேன். இப்போதைய சட்டமன்ற நிகழ்வை ஒரு நாள் நீங்களே வந்து பாருங்கள். உணர்வீர்கள்.

என்னை பொறுத்தவரை இதற்கான தீர்வு, நாடாளுமன்றம் போல், சட்டமன்ற நிகழ்வுகளை தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பினால் தான் இந்த கூத்துகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொகுதி மக்கள் பார்ப்பார்கள் என்ற பயம் இருந்தால் தான், ச.ம.உ-க்கள் புகழ்மாலைகளை விடுத்து விவாதத்தில் ஈடுபடுவார்கள். அமைச்சர்கள் இகழ்மாலையை விடுவார்கள்.
சபா நடுநிலையோடு செயல்படுவார்.

காலம் வரும்....

அதிமுக - பாமக கூட்டு செட்டாகல போல...நத்தம் விளாசல்...

அதிமுக - பாமக கூட்டு செட்டாகல போல...

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் சிறப்பாக பேசிக் கொண்டே வந்தார்.

ஒவ்வொரு சப்ஜெக்டாக பேசிக் கொண்டே வந்தவர் மதுவிலக்கை அமல்படுத்த கோரி பேசினார். அவ்வளவு தான், கலால்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் துள்ளி எழுந்தார்.

" முதலில் உங்கள் கட்சியில் இருப்பவர்களை நல்வழிப்படுத்துங்கள். உங்க கட்சித் தலைவர் சொல்வதை உங்கள் தொண்டர்களே கேட்பதில்லை.

கடந்த வருடம் மாமல்லபுரத்தில், நீங்கள் பவுர்ணமி விழா நடத்திய போது, அங்கிருக்கும் டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளில் ஆன வசூல் 50 லட்சம் ரூபாய்." என்று காய்ச்சி எடுத்து விட்டார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் கருத்து சொல்ல முயல, அவர்களை பார்த்த நத்தம் “ நம்மை சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்கு கொண்டு வரட்டும், பிறகு பார்க்கலாம். நீங்க ஆளுகிற மாநிலங்களில் அமல் படுத்திட்டு அப்புறம் சொல்லுங்க என்றார்

“ குஜராத்தில் மதுவிலக்கு இருக்கிறதே “ என்ற குரலுக்கு, “ நம்ம ஊருல குறிப்பிட்ட நேரம் தான் டாஸ்மாக் கடை திறந்திருக்கும். குஜராத்ல 24 மணி நேரமும் மது கிடைக்கும். இன்னும் சொல்லனும்னா ஃபோன் பண்ணினா, வீடு தேடி வரும், டோர் டெலிவரி “ என குஜராத்தை பிரித்து மேய்ந்தார்.

                        *************************

மறுநாள் பேசிய இன்னொரு பாமக உறுப்பினரான கணேஷ்குமார், நத்தம் விஸ்வநாதன் அவர்களின் முந்தைய நாள்
பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க,

மீண்டும் நத்தம் " இந்த வருடமும் நீங்கள் நடத்தும் விழாவன்று எவ்வளவு விற்பனையாகிறது என பார்ப்போம்...மதுவிலக்கை அமல்படுத்துவதன் மூலம் சமூக விரோத சக்திகள் வளர வழி பார்க்கிறீர்களா ? " எனப் பேச, கணேஷ்குமார் எதிர்ப்பு தெரிவிக்க... அனல் தான்.

சமீபகாலமாக இணக்கம் நிலவிய சூழலில், நத்தம் வெடித்தது ஏன் என உறுப்பினர்களுக்குப் புரியவில்லை.

# பாமக மதுவிலக்குன்னாலே, குலுக்கிய பாட்டிலாய் பொங்கிடுறாரு நத்தம் !

வியாழன், 4 ஏப்ரல், 2013

வெளியேற்றம், சஸ்பெண்ட். சட்டமன்ற நிகழ்வுகள் 01.04.2013

செந்தில்பாலாஜி அரை பாட்டில் தண்ணீர் குடித்தார். அப்போதுதான் சபா " போக்குவரத்துத் துறையில் முறைகேடு நடந்ததாக பத்திரிக்கையில் வந்த செய்தியின் மீது எதிர்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப் படுகிறது" என்று அறிவிப்பு கொடுத்தார்.

திமுக சார்பாக, தளபதி அவர்கள் பேசினார்கள். முறைகேடுகள் குறித்து விளக்க முற்பட்டதற்கு குறுக்கீடு செய்தார்கள். "வெறுமனே கவனத்தை ஈர்க்கிறேன்" என்று சொல்லுங்...கள் என்று அமைச்சர் பெருமக்கள் வகுப்பு எடுத்தார்கள்.

அப்படியும் சில செய்திகளை தளபதி அவர்கள் பதிவு செய்தார்கள். பிறகு மார்க்சிஸ்ட் சார்பாக சவுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக ஆறுமுகம், புதியத் தமிழகம் சார்பாக டாக்டர்.கிருஷ்ணசாமி ஆகியோரும் முறைகேடு குறித்து பேசினார்கள்.

பதிலளிக்க எழுந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழின் பழமையும், பெருமையும் கொண்டவர் அம்மா என வாழ்த்திவிட்டு, நாடக வசனம் போல் பேச ஆரம்பித்தார்.

இடையில்,"மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை சபையில் பாடிய தருமி போல் பேசினார்கள், ஏதோ கிருமி வெளியிட்ட செய்தி" என எதிர்கட்சிகளையும், செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையையும் தாக்கினார்.

" இந்தக் குற்றச்சாட்டுகளை சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது ?" என்றவுடன் நாங்கள் எழுந்துவிட்டோம். மக்கள் வாக்களித்து அனுப்பிய உறுப்பினருக்கு தகுதியிருக்கிறதா என பேசுவது மமதை, நீக்க வேண்டும் என குரல் எழுப்பினோம்.

சபா மறுக்க எங்கள் கோபம் அதிகமானது. " அமைச்சர் ஆகிவிட்டாலே எதை வேண்டுமானாலும் பேசுவதா" என குரல் கொடுத்து முன்னேறினேன். எல்லா கழக உறுப்பினர்களும் சபையின் மையப் பகுதிக்கு சென்றோம்.

சபா அசைந்து கொடுக்கவில்லை. அண்ணன் ஜெ.அன்பழகன் முதல் வரிசைக்கு வந்து எதிர்ப்பு குரல் வலுவாக கொடுத்தார். நான் "தகுதியை பற்றி சொன்ன வார்த்தைகளை நீக்குங்கள்" என குரல் கொடுத்தேன். சபா என்னை விரல் நீட்டி எச்சரிக்க, சும்மா மிரட்டாதீர்கள் என நான் சொல்ல...

ஜெ எழுந்து பேச முயற்சித்தார், அந்த வாசகங்களை நீக்கி விட்டுதான் பேச முடியும் என அனுமதிக்கவில்லை. ஜெ அமர்ந்தார். சபா பார்த்தார். எழுந்து எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

சபைகாவலர்கள் கொரடா அண்ணன் சக்கரபாணி அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். எங்களை பலவந்தமாக தள்ளி வெளியேற்றினர்.

வெளியே வந்த பிறகுதான் அந்த செய்தி - இரண்டு நாள் சஸ்பெண்ட் ஜெ.அன்பழகனும், சிவசங்கரும்.

தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்தோம், அண்ணன் துரைமுருகன் சொன்னார்," முன்னாடி நின்னு குரல் கொடுத்தாரு, அன்பழகனை சஸ்பெண்ட் செஞ்சாங்க,. சிவசங்கர் ஒரு தப்பும் பண்ணல, சபாநாயகரு சாய்ந்து இருக்கிற டேபிள் சரியா இருக்கான்னு செக் பண்ணான், அதுக்கு போய்..."

# வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி !
 
******************************************************************
 
தனபால் அண்ணே நன்றிண்ணே !

07.30 p.m - தந்தி TV live
09.00 p.m - கலைஞர் செய்திகள் live கூப்பிட்டாங்க.

அண்ணே என்னமோ பி.பி.சின்னு சொல்றாங்களே, அங்கேயும் அம்மா பெருமைய சொல்லனும்னே.

# மனசு வைங்கண்ணே !


 

சட்டமன்ற நிகழ்வுகள் 27.03.2013

ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் தொடர்ந்து போராடி வரும் சூழலில், அரசின் கவனத்தை ஈர்க்கின்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கழகத்தின் சார்பாக கொடுக்கப் பட்டிருந்தது.

அதன் மீது கழகத்தின் சார்பாக கோவி.செழியன் பேச துவங்கினார். மாணவர்கள் உணர்வு பூர்வமாக போராடுகிறார்கள் என்று சொல்லி லயோலா என்று ஆரம்பித்தார். அவ்வளவு தான் அமைச்சர்கள் எழுந்து குரல் எழுப்ப ஆரம்பித்தார்கள். சபாநாயகர் குற்றச்சாட்டாக பேசக் கூட...ாது என எச்சரித்தார்.

மீண்டும் செழியன் பேசத் துவங்கினார், "காவல்துறை " என்றார். உடனே அமைச்சர்கள் எழ, சபா குறுக்கிட்டார். என்னை பேச விடுங்கள், குற்றச்சாட்டாக பேசவில்லை என சொன்னதையும் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து குறுக்கிட தளபதி அவர்கள் அவரை பேச அனுமதியுங்கள் என்றார்.

செழியன், "எங்கள் தலைவர் அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கோரியது போல, முதலமைச்சரும் கடிதம் எழுதியிருக்கிறார்" என்றார், அதிமுகவினர் கூச்சல் எழுப்பினர். சபா பேச்சை நீக்க உத்தரவிட்டார். பேசவும் அனுமதிக்க மறுத்தார்.

தளபதி எழ, கழகத் தோழர்கள் அனைவரும் எழுந்து செழியனை பேச அனுமதிக்க வேண்டுமென வற்புறுத்த, சபா அனுமதித்தார். " 67ல் ஆட்சி மாற்றத்திற்கே வித்திட்டது மாணவர் போராட்டம்" என்றார் செழியன். அமைச்சர்கள் எழுந்து நின்றுக் கொண்டனர். நீண்ட வாக்குவாதம் சபை குறிப்பில் ஏறாமல்.

ஏதோ சமிங்ஞை வர சபா, " இனி செழியனை பேச அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் நீங்கள் பேசுங்கள்" என தளபதி அவர்களை பார்த்து சொல்ல, தளபதி" பேசிக் கொண்டிருக்கிறவரை மறுப்பது அவமதிப்பது போல, அவரே பேச வேண்டும்" என வலியுறுத்தினார்.

ஜெ.அன்பழகன் குரல் எழுப்ப சபா அவரை எச்சரித்தார். நாங்கள் சற்றே முன்னேறி தளபதி அவர்கள் அருகே நின்று சபாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். "எங்கள் கட்சியில் யார் பேசுவது என முடிவு செய்வது எங்கள் உரிமை, நீங்கள் தலையிட முடியாது" என குரல் எழுப்பினோம்.

தளபதி " செழியன் ஒரு பேச்சாளர், வழக்கறிஞர். அவர் பேசுவதை அனுமதிக்க வேண்டும். ஒரு தலித் சகோதரர் பேசுகிற வாய்ப்பை மறுக்க முடியாது" என சொல்லியும் சபா மறுக்க, வேறு வழியில்லாமல் வெளிநடப்பு செய்தோம்.

மீண்டும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள சென்ற போது, சரத் முழங்கி முடித்து, ஜெ-வை உரையாற்ற சபா அழைத்தார். எங்களை ஒரு "புன்னகையோடு" பார்த்துக் கொண்டே எழுந்தார்.

கவன ஈர்ப்பிலே சொன்ன செய்திகளை விடுத்து பழைய வரலாற்றிலிருந்து துவங்கினார். தலைவர் கலைஞர் அவர்களை இழுத்தார். குற்றச்சாட்டுகள் அடுக்க ஆரம்பித்தார். பொறுமை காத்தோம். கவன ஈர்ப்பு குறித்து குறித்து பேசுவதாக தெரியவில்லை.

நாங்கள் எழுந்து சபாநாயகரை பார்த்து, " செழியன் குற்றம் சாட்டி பேசுகிறார் என்றீர்கள், இப்போது இவர் குற்றம் சாட்டுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள்" எனக் கேட்க, சபா எங்கள் பக்கம் திரும்பவில்லை.

சபா நோக்கி முன்னேற ஆரம்பித்தோம். குரலெழுப்பினோம். ஜெ உட்கார்ந்தார்." சட்டசபையில் ஏற்கனவே அதிமுக போட்ட தீர்மானங்கள் குறித்தும் பேசலாமா "என கேட்க சபா எழுந்து நின்று எச்சரிக்க ஆரம்பித்தார். லால்குடி சவுந்தரபாண்டியனும் என்னருகே வந்து " பிரபாகரனை பிடித்து வர தீர்மானம் போட்டது யார் ?" என குரல் கொடுத்தார்.

சபா எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். சபைக் காவலர்கள் எங்களை வெளியேற்ற துவங்கினர். சபையில் தேமுதிகவும் இல்லை, திமுகவும் இல்லை.

ஈழத்தாய் உரையாற்ற ஆரம்பித்தார்...

( இரவு செல்லில் ஒரு பத்திரிக்கை நண்பர் அழைத்தார். "மம்மி உங்களையே தான் பார்த்துகிட்டு இருந்தாங்க. நீங்களும், சவுந்தரபாண்டியனும் ரொம்ப எமோஷனலாயிட்டிங்க" என்றார் )

# அந்தப் புன்னகை இந்த வினையா ?

சட்டமன்ற நிகழ்வுகள் 26.03.2013

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், திமுக சார்பாக ..வேலு பேசத் துவங்கினார், 12.05க்கு மணிக்கு...

12.06க்கு அமைச்சர் வளர்மதி குறுக்கிட துவங்கினார். இனி குறுக்கீடுகளின் விவரங்கள்....

1. அமைச்சர் வளர்மதி 12.06 - 12.08.

 2. . வளர்மதி 12.10 - 12.11

 3. மு. நைனார் நாகேந்திரன் 12.11 - 12.12

 4. அமைச்சர் ரமணா 12.14 - 12.17

 5. .பி.எஸ் 12.17 - 12.20

 6. . செந்தில்பாலாஜி 12.21 - 12.22

 7. செந்தில்பாலாஜி 12.23 - 12.24

 8. நத்தம் விஸ்வநாதன் 12.24 - 12.28

 9. .பி.எஸ் 12.29 - 12.30

 10. நத்தம் 12.30 - 12.34

 11. முனுசாமி 12.34 - 12.35

 12. நத்தம் 12.35 - 12.36

 13. நத்தம் 12.37 - 12.39

 ( 12.40 -க்கு நாங்கள் அனைவரும் எழுந்து குரல் கொடுக்கும் அளவுக்கு நிலை )

 14. .பி.எஸ் 12.41 - 12.42

 15. நத்தம் 12.43 - 12.49

 16. நத்தம் 12.51 - 12.54

 17. நத்தம் 12.55 - 12.55

 18. . தங்கமணி 12.56 - 12.57

 அண்ணன் வேலு மீண்டும் பேச எழுந்திரிக்க, சபா மணியடித்து " நேரம் முடிந்தது, உட்காருங்கள்" என்று முடித்தார்.

அமைச்சர்கள் குறுக்கீடு போக இடையில் கிடைத்த நேரத்தில் தான் அண்ணன் ..வேலு அவர்கள் பேச முடிந்தது.

# எதிர்கட்சி குரலை ஓங்கி ஒலிக்க செய்யும் சபா தனபால் வாழ்க !
 
 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக சார்பாக அனிதா ராதாகிருஷ்ணன் பேச எழுந்தார். (26.03.2013)

அதிமுக உறுப்பினர்கள் பக்கத்திலிருந்து " ஊஊஊஊஊ " என்று கேலி சத்தம் வந்தது. சிலர் அதை சிரித்து ரசிக்க, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். சபா கண்டுகொள்ளவில்லை.

நானும், அண்ணன் செங்குட்டுவனும் எழுந்து குரல் எழுப்ப, சபா எங்களை உட்கார சொல்லி சைகை காட்டினார். ஜெ எங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

நான் "சபைக்குள் ஏதோ விலங்கினம் வந்துவிட்டது போல் தெரிகிறது. வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள்" என சொல்ல, அவர் சிரித்து விட்டார்.

சபா என்ன செய்வது என தெரியாமல் விழித்து, அதிமுகவினரை பார்த்து அமைதி காக்க சைகை காட்ட....

# இப்படி தான் ஓட்டுறோம்.....

 


சட்டமன்றத்தில் 26.03. 2013 அன்று கேள்வி நேரத்தில் நான் எழுப்பிய கேள்வி


" பின்தங்கிய தொகுதியான குன்னம் தொகுதியில், ஆலத்தூர் ஒன்றியத்தில் அரசுக்கு சொந்தமான இடங்கள் இருக்கின்றன. இது திருச்சி-சென்னை நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கின்ற பகுதி.

எனவே அங்கே ஒரு தொழிற்பேட்டை கொண்டு வந்தால் எங்கள் பகுதி வளர்ச்சி பெற மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்க முன் வருவாரா எனத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
 
மாண்புமிகு திரு.. மோகன் ( ஊரகத் தொழில் துறை அமைச்சர்) : பொதுவாக எந்த மாவட்டமாக இருந்தாலும் தகுதியுடைய நிலங்கள் இருக்குமேயானால், அதிலே 20 தொழில் முனைவோர்கள் திட்டங்களுடன் முன்வருவார்களேயானால், அதனை அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

# நாங்க வேலையும் பாக்கறோம்ணா.....