பிரபலமான இடுகைகள்

புதன், 11 செப்டம்பர், 2013

தளபதி வழிப்பயணம் - சுற்றுப்பயணம் ஆனது....


09.09.2013 அன்று தளபதி அவர்கள் தலைமையில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்கள் இல்லத் திருமணம், கும்பகோணத்தில். திருமணம் முடிந்து திருச்சி சென்று விமானத்தில் செல்வதாக இருந்ததை கார் பயணமாக சென்னை செல்வதாக முடிவு மாறியது. குடந்தையிலிருந்து மதனத்தூர் கொள்ளிடம் பாலம் வழியாக தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், விருத்தாசலம் வழியாக உளுந்தூர்பேட்டையில் நெடுஞ்சாலை அடைவது என திட்டம் இறுதியானது.

தளபதி அவர்கள் தற்போது கார் பயணத்தையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களோடு தொடர்புடையவராக இருப்பதற்கும், செல்கின்ற வழியில் இருக்கும் ஊர்களின் நிலை அறியவும் இது உதவுகிறது. அதனால் தான் கார் பயணத்தை விரும்புவதாக நினைக்கிறேன்.


தளபதி திருமணம் முடித்து தா.பழூர் வருகை தந்த போது, ஒன்றிய திமுக அலுவலகம் முன்பு கழகத் தோழர்கள் திரண்டு வரவேற்றோம். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர் அவர்கள் கழகத் தோழர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதை தெரிவிக்க தளபதி அவர்கள் உடனே இறங்கி அலுவலகத்தின் உள் வந்தார்கள், உடன் தளபதி அவர்களின் துணைவியார் அண்ணியார் அவர்களும் வந்தார்கள்.

கழகத் தோழர்கள் வரிசையாக வந்து இளைஞர் அணி வளர்ச்சி நிதி வழங்கி சால்வை, துண்டு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். புகைப்படம் எடுத்த மூன்று பேரில் ஒருவரிடம் தளபதி அவர்கள், " உங்க கேமராவில் பிளாஷ் செயல்படவில்லை. புகைப்படம் எடுத்தவர்களுக்கு கொடுக்கலைன்னா ஏமாந்துவிடுவார்கள்" என்றார். தளபதியின் அலர்ட்னெஸை கண்ட புகைப்பட தோழர் அயர்ந்து போனார்.

புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு தோழர் வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றி வருவதை தளபதி அவர்கள் கவனித்து விட்டார்கள. "ஏன், மீண்டும் புகைப்படம் எடுக்கனுமா ?" எனக் கேட்க ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் " அண்ணா, அவர் எங்கள் ஒன்றியத்தை சேர்ந்த கழகத் தோழர். தலைமைக் கழகப் பேச்சாளர் இளஞ்செழியன். தலைவர் கலைஞரின் 90வது பிறந்தநாளை ஒட்டி 90 கவிதைகள் எழுதி ஒரு நூலாக தயார் செய்திருக்கிறார். அதை நீங்கள் வெளியிட்டால் எங்களுக்கு பெருமை" என சொன்னார்.

தளபதி அவர்கள் உடன் ஒப்புக் கொண்டு, "தாய் தமிழ் 90" என்ற கவிதை நூலை, வாங்கிக் கொண்டு "யார் வாங்குவது" எனக் கேட்க, ஒன்றிய செயலாளர் என்னைக் காட்டினார். தளபதி அவர்கள் வழங்க பெற்றுக் கொண்டேன். நூலாசிரியர் இளஞ்செழியனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவருக்கு இது வாழ்நாள் சாதனையல்லவா....

Photo: இன்று (9-9-13) தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் கலைஞரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு தலைமை கழக பேச்சாளர் இரா.இளஞ்செழியன் அவர்கள் எழுதிய ”தாய் தமிழ்” எனும் கவிதை நூலினை வருங்கால தமிழகம் தளபதி அவர்கள் வெளியிட்டார்கள்.மாவட்ட கழக செயலாளர் அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர்,மாநில இளைஞரணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகர்,குடந்தை சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன்,ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தனசேகர்,மற்றும் கழக முன்னோடிகள் உள்ளனர்..

தளபதி அவர்களிடத்தில் ஒன்றிய செயலாளர் மினிட் நோட்டில் கையொப்பம் பெற கொடுக்க, கட்சி அலுவலகம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்று தளபதி அவர்கள் கேட்டார்கள். மறைந்த சட்டமன்ற உறுப்பினர் க.சொ.கணேசன் 
அவர்களால் கட்டப்பட்டு 92ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புகைப்படத்தை காட்ட


 தளபதி அவர்கள் மகிழ்ந்தார்கள். "தலைவர் அவர்களால் திறக்கப்பட்ட அலுவகத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைந்தேன். பணிகள் சிறப்பாக உள்ளது, தொடரட்டும்" என எழுதி கையெழுத்து இட்டார்கள்.

            

ஜெயங்கொண்டத்தில் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று பயணம் தொடர்ந்தார்கள். அலைபேசியில் அழைத்த ஒசெ க.சொ.க.கண்ணன் "தனியாக தேதி பெற்று இருந்தால் கூட எங்களுக்கு இவ்வளவு சிறப்பு கிடைத்திருக்காது. தளபதி எங்களை பெருமைப்படுத்தி விட்டார்" என அகமகிழ்ந்தார்.

ஆண்டிமடத்தில் ஒன்றிய செயலாளர் தர்மதுரை அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் வரவேற்பளித்தனர். அங்கு கழக சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியன் (எனது தந்தையார்) காரில் இருந்து இறங்கி நடக்க சிரமப் படுவதை கண்ட தளபதி அவர்கள் காரில் இருந்து இறங்கி தானே அருகே சென்று வேட்டியினை பெற்றுக் கொண்டார். "உடல் நலமாக இருக்கிறதா ? நீங்கள் ஏன் வெயிலில் காத்திருக்கிறீர்கள்" எனக் கேட்டு காரில் அமர சொல்லிவிட்டு பிறகு தனது காருக்கு திரும்பினார். அவர் எளிமையை கண்டு, மூத்த கழகத்தவரை மதிக்கின்ற பாங்கு கண்டு பொதுமக்கள் பிரமித்து பார்த்தனர். 

Photo


தளபதி சென்னை நோக்கி கிளம்பினார்கள். தளபதி அவர்களுக்கு இது தினம் மேற்கொள்ளும் பயணத்தில் ஒன்று, வழக்கமான நிகழ்வு. ஆனால் எங்கள் மாவட்டத்துக் கழகத் தோழர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.

# நம்பிக்கையான எதிர்காலம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக