பிரபலமான இடுகைகள்

வியாழன், 21 நவம்பர், 2013

அவசர சட்டமன்ற கூட்டம் -விமர்சனம் - நக்கீரனில் எனது கட்டுரை

12.11.2013 மாலை 6 மணி. பேரவை திருக்குறளோடு துவங்கியது. அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கினார். இந்த தீர்மானங்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து நிறைவேற்றப்பட்டவை. உணர்ச்சிவயப்பட்டு நிறைவேற்றப் பட்டவையல்ல ஏற்கனவே 5 காமன்வெல்த் மாநாடுகளில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அது போல இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாததும் வழக்கமான ஒன்றாகத் தான் இருக்கிறது. “வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வது, தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். “பல துரோகங்களை இது வரை இந்திய அரசு செய்திருந்தாலும், இவற்றுக்கெல்லாம் பரிகாரம் தேடும் வகையில் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒருவர் கூட கலந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவை இந்திய பேரரசு எடுக்கும் என்று உலகத் தமிழர்களும், இந்த மாமன்றமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் மத்திய அரசு மீண்டும் தமிழர்களை வஞ்சித்துவிட்டது என்று 12 நிமிடம் உரையாற்றி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

எல்லோரும் எதிர்பார்த்து வந்த அனல், சூடு முதல்வர் உரையில் இல்லாததால் உறுப்பினர்கள் மத்தியில் லேசான அயர்வு. அதிமுக உறுப்பினர்களிடமே பெரிய உற்சாகம் இல்லை. காரணம் பழைய அறிக்கையின் மறுபதிப்பாகவே இந்த அறிக்கை அமைந்திருந்தது.

வாழ்த்துரைக்க தோழமைக் கட்சி தலைவர் செ.கு.தமிழரசனை அழைத்தார் சபாநாயகர். உலகத் தமிழர்களுக்கு உதவும் கரம் என ஆரம்பித்தவர், இந்திய திருநாட்டிலேயே அம்மா தான், அவரது தீர்மானத்தை வழிமொழிகிறேன் என்று 9 நிமிடம் பேசினார்.


இந்த சமயத்தில் அவசரமாக வெளியில் இருந்து வந்த காங்கிரஸ் கிள்ளியூர் ஜான் ஜேக்கப், பட்டுக்கோட்டை ரங்கராஜனோடு ஆலோசனை செய்தார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டில்லிபாபு சபையை விட்டு வெளியே போனார்.

அ.இ.ச.ம.க தலைவர் சரத்குமார்,விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு ஒய்வில்லாமல் உழைத்து தமிழகத்தை முதல் மாநிலமாக்க பாடுபடும் புரட்சித் தலைவி. இலங்கைத் தமிழர்கள் மேல் அக்கறையுள்ள் ஒரே தலைவர் புரட்சித்தலைவி தான். எடுத்துக் கொண்ட பிரச்சினைகளுக்காக ஓயாமல் போராடும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி தான் இப்படி புரட்சித்தலைவியை ஜெபித்துக் கொண்டிருந்தவர் ரூட் மாறினார்.

பேசாத பிரதமர் ஒருவரை பெற்றிருக்கிறோம் என்று சரத்குமார் பேசும் போதே காங்கிரஸ் கட்சியின் ரங்கராஜன் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். உடன் மீதி மூன்று பேரும் எழுந்தனர். சிறிது நேரம் வாக்குவாதமானது. முதலமைச்சர் ஜெயலலிதா சிரித்துக் கொண்டார். சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் எழுந்து முதல்வரிடம் சென்றார். திரும்பி வந்து சபாநாயகர் காதை கடித்தார். அது வரை உக்காருங்க, உக்காருங்க என்று சொல்லிக் கொண்டிருந்த சபாநாயகர்,பேசாத பிரதமர்னு சொல்லியிருக்கார், நீங்க பேசும் போது பேசுவார்னு சொல்லிடுங்க என சொல்ல காங்கிரஸார் கொதித்தனர்.

சபாநாயகர் முக்கிய தீர்மானம் என சொல்ல, காங்கிரஸார் அவையில் இல்லாதவரை பற்றி எப்படி பேசலாம் என வாதிட குழப்பம் நீடித்தது. ரங்கராஜன் சோர்ந்து உட்கார்ந்தார், ஆனால் விஜயதாரணியும் பிரின்ஸும் குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். ஜெ சிரித்து ரசித்துக் கொண்டிருந்தார். இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதில் 5 நிமிடம் போனது.

இந்த சந்தர்பத்தில் சி.பி.எம் உறுப்பினர்கள் தங்கவேல், ராமமூர்த்தி ஆகியோர் அவையில் இருந்து நழுவினர். தேமுதிக கொறடா சந்திரக்குமார், பார்த்தசாரதி மற்றும் முன்வரிசையில் உள்ள உறுப்பினர்கள் ஆலோசனையில் மூழ்கினர். பண்ருட்டியார் ஆப்சென்ட். காங்கிரஸ் மீண்டும் உள்ளே வந்து அமர, அதை பார்த்த ஜெ-வுக்கு சிரிப்பு.

புதிய தமிழகம் டாக்டர்.கிருஷ்ணசாமி,கடந்த நமது தீர்மானத்தால் பிரதமர் இலங்கை செல்லவில்லை என்பதை அங்கீகரிக்க வேண்டும். அதை வரவேற்பதில் எந்த தவறும் இல்லை என பேச குறுக்கிட்ட அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பிரதமர் 5 முறை மாநாட்டில் கலந்து கொள்ள்வில்லை. இந்த தீர்மானத்தால் என்று சொல்வது தவறு.  கிருஷ்ணசாமி மூடி மறைக்கிறார்என சாடினார். மீண்டும் கிருஷ்ணசாமி, முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்து இருக்க வேண்டும். என சொல்ல, இப்போது அமைச்சர் முனுசாமி குறுக்கிட்டார்,கிருஷ்ணசாமியின் பேச்சு தீர்மானத்தை நீர்த்து போக செய்யக் கூடாதுஎன்றார்.

சற்றே சூடான கிருஷ்ணசாமி,மாணவப் பருவத்தில் இருந்து இந்தப் பிரச்சினைக்கு போராடுபவன் நான்எனும் போது அதிமுக-வினர் கேலி செய்து கூக்குரலிட சபாநாயகர்,உக்காருங்க என கிருஷ்ணசாமியை பார்த்து உத்தரவிட்டார். கொதிப்படைந்த டாக்டர்,கொல்லப்பட்ட தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறோம். என பேசியவர் பரமக்குடியில் என்று ஏதோ சொல்ல சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார். துள்ளி எழுந்த அமைச்சர் வைத்திலிங்கம்,கிருஷ்ணசாமி கட்டபொம்மனா ? எட்டப்பனா ? எனக் கேட்க, டாக்டர் கூலாக,கிருஷ்ணசாமி என்றும் எட்டப்பனாக இருக்கமாட்டான் என பதில் சொல்ல அதிமுக பக்கமிருந்து குரல் வந்து கொண்டே இருந்தது.

அடுத்து ஜவாஹிருல்லா,கிழக்கு பாகிஸ்தானில் இனப்படுகொலை நடைபெற்ற போது மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர்ராய் குரலுக்கு மதிப்பளித்து பாரளுமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அந்த தீர்மான நகலை படித்துக் காட்டினார். காங்கிரஸ் சார்பாக ரெங்கராஜன் பேச அழைக்கப்பட்டார். தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தே, தீர்மானத்திற்கு மதிப்பளித்தே, மத்திய அமைச்சர்கள் கேட்டுக் கொண்டே பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு நன்றி. மத்திய அரசுக்கு வெளியுறவுக் கொள்கை இருக்கிறது, பாதுகாக்கிற கடமை இருக்கிறது என்ற போது அதிமுக பக்கமிருந்து கேலி குரல் வந்தது.கேலி,கிண்டல் வேண்டாம். மத்திய அரசின் நடவடிக்கை சரியே என்று முடித்தார்.

பேச அனுமதி கேட்டுக் கொண்டிருந்த டாக்டர்.கிருஷ்ணசாமி சபாநாயகர் அருகில் சென்று தரையில் அமர்ந்து குரல் கொடுத்தார். அவைக் காவலர்களை அழைத்து அவரை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர். புதியதமிழகம் கட்சியை சேர்ந்த இன்னொரு உறுப்பினரான ராமசாமி இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு பேப்பரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார். அவர் பின்னால் இருந்த அதிமுக உறுப்பினர்கள் அவர் முதுகில் தட்டி கொடுத்து பாராட்ட, “அடக்கமாக சிரித்தார். இதற்குள் காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளியேறிவிட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறுமுகம்,தீர்மானத்தின் அத்தனை அம்சங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்று பாராட்டுகிறது. தீர்மானத்திலஆழ்ந்த வருத்தம் என போட்டிருப்பது அம்மாவின் பெருந்தன்மையை காட்டுகிறது. கண்டனத் தீர்மானமே கொண்டு வந்திருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. மலையகத் தமிழர்கள், ஈழத்தமிழர்களைக் காக்கின்ற காவல் அரண் அம்மாஎன்று தாபா இல்லா கதவு போல் மனம் திறந்து பாராட்டினார்.

சி.பி.எம் சார்பாக சௌந்தர்ராஜன் பேச எழும்போதே பாலபாரதி அவசரமாக எங்கோ எழுந்து சென்றார். இலங்கை விசாரணைக்கு உடபட மறுக்கிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் சி.பி.எம் மாறுபடுகிறது. அமெரிக்க ஆதரவு அணு ஆயுத கொள்கையால் தான் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றோம் என ஏதேதோ சொன்னவர், முந்தைய தீர்மானமே போதுமானது என்று இந்தத் தீர்மான நிறைவேற்றம் தேவையற்றது என சொல்லாமல் சொல்லி, அவரும் அவசரமாக வெளியேறினார்.

திமுக சார்பாக பேசிய தளபதி மு.க.ஸ்டாலின் எழுந்தவுடன் அதிமுக-வினர் ஆவலாக பார்த்தனர். இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் கண்டிக்கும் வகையிலும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் உயிர்கள்உடைமைகள்,உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அவர்களே முடிவெடுத்துக் கொள்ளும் வண்ணம் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கும் வகையிலும் அதற்காக மத்திய அரசை வற்புறுத்தும் வகையிலும் கொண்டு வரப்படும் அரசின் தீர்மானத்தை திமுக சார்பில் வரவேற்று வழிமொழிகிறேன். என்று நறுக்கு தெரித்தார் போல் முடித்தார்.

தேமுதிக சார்பாக பேசிய சந்திரக்குமார்,மாநாட்டில் பிரதமர் மட்டுமல்ல, ஒரு துரும்பும் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழகம் எதிர்பார்க்கிறது என்று ஆரம்பித்தார். கலைஞர் சொன்ன துரும்பை இவர் பிடிக்கிறாரே என பின்னால் இருந்து குரல். சேனல் 4-ஐ கேப்டனோடு பார்த்த எங்களுக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. எந்த மக்களுக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என ஆண்டவனிடம் பிரார்திப்போம் என்றவர் இலங்கைப் பிரச்சினையில் தேமுதிக இரட்டை வேடம் போடும் இயக்கம் அல்ல என்று பன்ச் வைத்து முடித்தார். மிச்சம் இருந்த சி.பி.எம் உறுப்பினர் சிதம்பரம் பாலகிருஷ்ணனும் வெளியேறினார்.

சபாநாயகர் ஒரு பேப்பரை எடுத்தார். இதயத்தால் சிந்திப்பவன் மனிதன். புறநானூற்றின் புது வடிவத்தின் தூய்மையான அன்பின் வெளிப்பாடே தீர்மானம் என்று கவிதையாய் ஆரம்பித்தவர் குட்டிகதைக்கு போனார், குருவும் சீடரும் அலை,கரை குறித்து பேசினார்கள். அலை விடாமுயற்சிக்கும், கரை காப்பதற்கும் அடையாளம்.  மூத்தக்குடி தமிழ்குடியை காக்க அவதரித்த அன்னை திருமகள் அம்மா அலையாகவும், கரையாகவும் இருந்து காக்கிறார். என்றவர் சொன்ன அடுத்த வார்த்தை குபீர் சிரிப்பை உண்டாக்கியது. இதனால் அம்மா ஹிஸ்டரியில்இடம்பெறுகிறார். செங்கோட்டையையும் ஆளப்போகும் அம்மா ஹிஸ்டரியில் இடம் பெற போகிறார்””.

தங்கம் தென்னரசு, “அப்போ இந்த தீர்மானமும் ஹிஸ்டரியில்இடம் பெறுமா ? எனக் கேட்க, தேமுதிக பாபுமுருகவேல்,அண்ணே, ஹிஸ்டரின்னா எஸ்.டி.டீயாண்ணே என லேட்டஸ்ட் சினிமா ஜோக்கை சொல்ல காமெடியானது சபை.

குரல் வாக்கெடுப்பு நடத்தி தீர்மனத்தை மறுப்போரே இல்லை. தீர்மானம் நிறைவேறியது என சபாநாயகர் அறிவிக்க, ஓ.பி.எஸ் எழுந்து ஜெ-வை பார்த்து பாதி வளைந்து தனது டிரேட்மார்க் கும்பிடை போட்டு நன்றி தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், புதியதமிழகம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் அவையில் இல்லாத நிலையில் இருந்தோரை கொண்டு, தேவையில்லாத சர்ச்சைகளோடு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட போது இரவு 7.40. விடியற்காலை 05.00மணி, தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக