பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 24 நவம்பர், 2013

பணியே, பிணி போக்கும் மருந்து !

இரவு 1 மணி. திடீரென்று தூக்கம் போனது. வலது கையில் வலி. தாங்கவில்லை. எப்படி வலி வந்தது என்று தெரியவில்லை, ஆனால் உயிர் போவது போல வலி. டாக்டரிடம் போனோம். புரண்டு படுக்கும் போது ஏதோ தசைப்பிடிப்பு என சொல்லி டாக்டர் ஊசி போட்டார்.

ஆனாலும் நான்கு மணி ஆயிற்று தூங்க. காலை ஏழு மணிக்கு எழுந்து கிளம்ப மனம் இல்லை. என்ன செய்ய, அன்று உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கல் செய்ய கடைசி நாள். என் முன்னிலையில் மனு தாக்கல்செய்ய கழகத்தினர் காத்திருந்தனர். 2011 செப்டம்பர்.

குளித்து வீட்டை விட்டு வெளியே வந்த போது அங்கேயே 50 பேர். சிரமப்பட்டு இடது கையால் வலது கையை தூக்கி வணக்கம் வைத்தேன். முடியவில்லை. இடது கையால் மட்டும் வணங்கினேன். செந்துறை போனேன். 1000 வணக்கம் இரு கையாலும். லேசாக வலி குறைந்திருந்தது. அடுத்து வேப்பூர் ஒன்றிய அலுவலகம், அங்கு 1000 வணக்கம்.

கை வலி எங்கே போனது என்றே தெரியவில்லை......

******************************

கடந்த வாரம் சென்னையில் இருந்து அரியலூர் வந்து இறங்கும் போது இரவு 1 மணி. காலை கீழே வைக்கும் போதே இடுப்பில் வலி. காலையில் எழுந்து நடக்கும் போதும் வலி. காலை தொகுதியில் சுற்று பயணம், மாலை காரைக்குடி பயணம். இரவு அரியலூர் திரும்பி, மறுநாள் காலை ஏற்காடு தேர்தலுக்கு பயணம்.

கிட்டதட்ட "பேரழகன்" திரைப்பட சூர்யா போல இடுப்பை வளைத்து நடந்தேன். அப்படியே ஆகி விடுவேனோ என பயமாக ஆகிவிட்டது. கிராமத்து நிர்வாகிகள் வாக்கு சேகரிக்க அழைத்தார்கள். லேசாக 'S' போல வளைந்து நடக்க ஆரம்பித்தேன். பின் வரிசையிலேயே நடந்தேன்.

பார்த்தவர்கள் எல்லாம் என்ன என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். மூன்றாவது தெரு, வலி தெரியவில்லை. நான்காவது தெரு லேசாக முன் வரிசைக்கு வந்தேன். அவ்வளவு தான், வண்டி கிளம்பி விட்டது. அப்புறம் நான் தான் முதல் ஆள். அன்று 4 கி.மீ இருக்கும், நடந்தது. அடுத்த நாள் அடுத்த பகுதி, 3 கி.மீ.

இன்று வேட்பாளர் மாறனோடு வாக்கு சேகரிக்கும் பணி. அதிமுக வேட்பாளர் போல் இல்லாமல், இவர் வீடு வீடாக நடந்து ஓட்டு கேட்டார். இந்த பகுதி இரண்டு தெருக்கள் தொடர்ந்து இருந்தால், அப்புறம் விட்டு விட்டு தான் வீடுகள்.
விவசாயம் செய்யும் வயலிலேயே வீடுகள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் 50, 100 மீட்டர் இடைவெளி. ஒவ்வொரு வீட்டுக்கும் ஓட ஆரம்பித்தார் வேட்பாளர் மாறன். உடன் இரண்டு பேர், அதில் நான் ஒருவன். எல்லோரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இங்கு நின்று விடுவார், அங்கு நின்று விடுவார் என என் உடல் அளவை வைத்து கணிக்க ஆரம்பித்தனர்.



காலை 8.30 மணிக்கு ஆரம்பித்தது மதியம் 2 மணி வரை தொடர்ந்தது. மதியம் 3 மணிக்கு ஆரம்பித்தது மாலை 6.30 மணி ஆயிற்று முடிய. இதில் இசைக்குழுவில் பங்கேற்றதும் உண்டு. இடுப்பு வலி என்று ஒன்று இருந்ததே மறந்து போனது, எந்த வைத்தியமும் செய்யாமல். போயே போச்சி. போயிந்தி. it's gone.

# பணியே, பிணி போக்கும் மருந்து !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக