பிரபலமான இடுகைகள்

சனி, 16 நவம்பர், 2013

சார் வந்த வழிய மறக்கலாமா ?

அவர் நெடுஞ்சாலைத் துறையின் துணை கண்காணிப்பு பொறியாளர். மூன்று மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் இருக்கும். அந்த அளவிற்கு உயர் பதவி.

எனது தொகுதியின் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். 35 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் இருந்து பொறியியல் படித்த முதல் மனிதர். உயர் பதவியில் இருந்தாலும் டவுன் டூ எர்த்.

அவர் தந்தை கழகத்தில், அந்த கிராமத்திற்கு முன்னோடி. தேர்தல்களில் மும்முரமாக பணியாற்றக் கூடியவர். இவரும் தேர்தல் என்றால், விடுப்பு போட்டு விட்டு வந்து எனக்கு பணியாற்றியவர்.

சமீபத்தில் ஒரு நாள் அழைத்தார். “சார், நேரில் பார்க்கணும், சொந்த ஊர்ல வீடு கட்டியிருக்கேன். அழைப்பு கொடுக்கணும்”. நேரில் வந்தார். அழைப்பை பார்த்தால் இன்ப அதிர்ச்சி.

“தந்தை பெரியார் இல்லம்”
திறப்பு விழா. எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் எளிமையாக இருந்தது. பெயரை பார்த்த மகிழ்ச்சியில் “மூன்று சுயமரியாதை திருமணங்கள் இருக்கின்றன, இருந்தாலும் வந்து விடுகிறேன்” என்று உறுதியளித்தேன்.

இன்று காலை அழைத்தார், “சார், திருமணத்திற்கு போகும் முன் வந்து ரிப்பன் கட் பண்னிட்டு போயிடுங்க. காத்திருக்கிறோம்” என்றார். என்ன தான் பெரியார் பெயர் வைத்திருந்தாலும் சம்பிரதாய பூஜைகள் நடந்திருக்கும் என்று எண்ணி சென்றேன்.

கருப்புச் சட்டை தோழர்கள் வந்திருந்தார்கள். வீட்டின் முகப்பில் ரிப்பன் கட்டி வெட்ட சொன்னார்கள். வெட்டி, உள்ளே சென்றோம். ஆச்சரியம், எந்த பூஜையும் இல்லை. ஒரே ஒரு படம் மாத்திரமே இருந்தது. திறக்க சொன்னார்கள், “பெரியார் படம்”.


                                     


விடை பெறும் போது சொன்னேன், “நீங்கள் கழகக் குடுமபம் என்று மட்டுமே அறிவேன். வீட்டின் பெயர் பார்த்து மகிழ்ந்தேன். ஆனால் அய்யாவிடம் இவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதை இப்போது தான் உணர்ந்தேன். நன்றி. நன்றிக்கு காரணம், வேலைக்கு போய் சம்பாதித்தவுடன் பலர் ஆத்திகர்கள் ஆகிவிடுகிறார்கள். மாறாமைக்கு நன்றி ”

அவர் பதில் “சார் வந்த வழிய மறக்கலாமா ? நான் இன்னைக்கு படிச்சு ஆளாயிருக்கேன்னா அய்யா பெரியார் தானே காரணம். அந்த நன்றி தான் சார்”
# கண்ணுக்கு தெரியாத நன்றியாளர்கள் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக