பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 13 டிசம்பர், 2013

பிரியமானவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருக்கிறோம்....

ஏற்காடு தேர்தலுக்கு கிளம்புவதற்கு முதல் நாள் வெளிநாட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. எனது கல்லூரி நண்பர் வாசுதேவன். நான்கு ஆண்டுகள் ஒரே வகுப்பறையில் இருந்தவர்கள் என்பதை விட நெருக்கமானவர்கள் பட்டியலில் உள்ளவர்.

"சிவா, தேர்தலுக்கு போகும் போது சேலத்தில் தங்க ஏற்பாடுகள் செய்ய சொல்லியுள்ளேன். எனது பள்ளித் தோழன் எழில், எனக்கு மிக நெருக்கமானவான். உன்னை சந்திப்பான். உன் எண்ணைக் கொடுத்துள்ளேன். அவசியம் சென்று வர வேண்டும்."

அதே போல் எழிலிடம் இருந்து ஃபோன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்து சொந்தத் தொழில் செய்பவர். அன்று தான் முதன்முதலில் பேசினோம். ஆனால் நீண்ட நாள் நண்பர் போல் பேச்சு நீண்டது. காரணம் ஒரே வயது, ஒரு பொது நண்பர் என்பதைத் தாண்டி ஒரே ரசனை பல விஷயங்களில்.

அதைத் தாண்டி என்னை முகநூலிலும் தொடர்ந்திருக்கிறார். "வீரபாண்டியார் இல்லத்தில் ஒருவரை நீங்கள் சந்தித்தது நினைவிருக்கும் என நினைக்கிறேன். அவர் என் சகோதரர் ஈசன் இளங்கோ."

சில ஆண்டுகளுக்கு முன்பு, சேலத்தில் வீரபாண்டியார் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரை சந்தித்தேன். காத்திருந்த அய்ந்து நிமிடத்தில் பேசிக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தனது தொழில் நிறுவனத்தின் ஒரு கிளை திறப்பு விழா அழைப்பைக் கொடுக்க வந்திருந்தார். "உங்கள் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன், வாழ்த்துக்கள்" என்று உற்சாகப்படுத்தினார்.

                  

ஏற்காடு பணியால், தேர்தல் முடிந்து மறுநாள் தான் இருவரையும் சந்தித்தேன். பல சப்ஜக்ட்டுகளில் பேச்சு விரிந்தது. அவர்களது தந்தை அரசியலில் இருந்து, இவர்களும் தொடர்பவர்கள். அப்போது ஒரு முக்கிய விருந்தினர் வந்தார். எதிர்பாராத இன்ப நிகழ்வாக அமைந்தது. தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமை.

இலக்கியம், திரை, இசை என பல்துறை நண்பர்கள் இவர்களுக்கு. இவர்கள் வீட்டு மாடியில் ஒரு நந்தவனம். அதை ஒட்டி ஒரு அறை. அதில் ஓர் கயிற்றுக் கட்டில் என ரசனையான ஓய்வறை. இந்த அறை அந்த நண்பர்களுக்கானது. படைப்புலகம்.


                   

அடுத்து ஈசன் இளங்கோ சொன்ன செய்தி.

"இருபது ஆண்டுகளுக்கு முன்பாக சேலத்தில் நடந்த கழக மாநாட்டின் திறப்பாளராக உங்கள் தந்தை எஸ்.சிவசுப்ரமணியன் கலந்துக் கொண்டார். அப்போது மாநாட்டுக்கு முதல் நாள், இளைஞரணியில் இருந்த நான் உங்கள் தந்தையை எனது பைக்கில் உட்கார வைத்து, அழைத்து சென்று மாநாட்டு ஏற்பாடுகளை சுற்றிக் காட்டினேன்.

அதற்கு பிறகு உங்கள் தந்தையை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் குறித்த செய்திகளை தெரிந்துக் கொள்வேன். பிறகு உங்களை குறித்த செய்திகளையும் தெரிந்துக் கொள்வேன். இப்போது இப்படி வாசு மூலம் நண்பர்களாக இணைந்து இருக்கிறோம்." .

# பிரியமானவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருக்கிறோம்....
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக