பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

அதிமுக அலுவலகம் திணறல் - வெளி மாநிலத்தினர் குவிந்தனர்....

பண்ருட்டியார் இயக்கத்தில் இணைந்தார். எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியன் சந்தித்தார். எம்.எல்.ஏ கலையரசன் நன்றி சொன்னார். வெண்ணிற ஆடை நிர்மலா தலைமையை ஏற்றார். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கட்சியில் சேர்ந்தனர்.

                      

தமிழக அரசியல் களம் சூடாகி விட்டது. அடுத்து யார் என்ற பரபரப்பு கிளம்பி விட்டது. இவரா, அவரா என்று யாரை பார்த்தாலும் எல்லோருக்கும் சந்தேகம் சில கட்சிகளில். அலுவலகங்களுக்கு கூடுதல் செக்யூரிட்டி ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்.

போயஸ் தோட்ட வாசலிலும், அதிமுக தலைமையகத்திலும், கோட்டையிலும் 24 மணி நேரமும் கேமராவுடன் ஊடக முற்றுகை. போயஸில் விடியற்காலை பால் ஊற்ற சென்ற பால்காரரை, யாரோ பிரமுகர் என கேமராக்கள் துரத்த, அவர் பயந்து ஓடிப் போனார். வீட்டு வேலைக்கு வந்த பெண் பணியாளரை துரத்த, அவர் அழவே ஆரம்பித்துவிட்டார்.

அதிகாரிகளை சந்திக்க, கோட்டைக்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் வந்தால், "சார், அப்பாயிண்ட்மெண்ட் எப்போ ?" "தொகுதி வளர்ச்சியா ?" "நன்றி சொல்லவா ?" "இப்போ எந்தக் கட்சி ?" என்று நிருபர்கள் துரத்த ஆரம்பித்தனர். தலை தெறிக்க ஓடினர்.

இதெல்லாம் போதாது என்று இன்று அடுத்த அதிரடி திருப்பம். மகராஷ்டிரா, ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைய, இன்றைய ஆல் இண்டியா நியூஸ் இது தான். "என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்" இது தான் அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் பேனல் டிஸ்கஷன்.

                             

நாளை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து, ஜார்கண்ட் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் "சூல்கணபதி" வருவதாக தகவல். ஜார்கண்ட் மாநிலவே தூக்கமிழந்து நிற்பதாக தொலைக்காட்சிகள் அலறுகின்றன. அசாம் மாநிலத்திலிருந்து அசாம் முற்போக்கு கழகத்தின் துணைத் தலைவர் "வர்க்கீஸ் ராமச்சந்திரன்" அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருப்பது, அசாமின் தலைப்பு செய்தி.

" இந்தியாவின் எதிர்காலம் அம்மா தான்" என ராயலசீமாவின் இரண்டு ஆந்திரதேச கட்சியின் எம்.எல்.ஏக்கள் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பதியில் தங்கதேர் இழுத்து கொண்டாடியுள்ளனர். அவர்கள் திருப்பதி லட்டுக்களோடு சென்னை நோக்கி நடைபயணமாக வந்து கொண்டுள்ளனர்.

"இந்திய சினிமாவின் நூற்றாண்டை எந்த மாநிலமும் கொண்டாட முன்வராத போது, கோடிகளை அள்ளி கொடுத்து, விழா நடத்தி இந்தியா சினிமாவின் உயிர்காத்தவர் அம்மா தான்" என்று கூறி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் ஆகியோர் நாளை மறுநாள் அதிமுகவில் இணைய உள்ளனர்.

கடந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இருந்த பிகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் மற்றும் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜார்கண்டின் முன்னாள் முதல்வர் மதுகோடா ஆகியோர் அதிமுகவின் வெப்சைட்டில் புதிதாக அளிக்கப்பட்டுள்ள "ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை" மூலம் அதிமுகவில் இணைய விண்ணப்பித்துள்ளனர்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முதல்வர் ஜெ-வை உதவியாளர் உலுக்கி எழுப்பினார்.

முதல்வர் கோபமாக "என்ன ?" என்றார். " தோட்டத்து கேட்டை ஏறிக் குதித்து, இரண்டு பேர் தூங்காம உங்கள பார்க்கனும்னு ஒக்காந்திருக்காங்கம்மா. பேர கேட்டா, பேசாம சைகை தான் காட்டுராங்க, கட்சியில சேரனுமாம்". "எப்படி இருக்காங்க ?"

"ஒருத்தரு தாடி வச்சிருக்காரு. பைஜாமா, ஜிப்பா போட்டிருக்காரு. டர்பன் கட்டியிருக்காரு. கையில மிக்சர் பாக்கெட் வச்சிக்கிட்டு சாப்பிட்டுகிட்டே இருக்காரும்மா"

"இன்னொருத்தரு ?"

"அவரு வேட்டி, சட்டைல இருக்காரும்மா. கழுத்துல சால்வையை மடிச்சி போட்டுருக்காரு. கண்ணாடி போட்டிருக்காரு. புஷ் குல்லா போட்டுருக்காரு. அப்பப்போ ரெண்டு விரல வச்சி மூக்க சுண்டுறாரும்மா"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக