பிரபலமான இடுகைகள்

புதன், 30 ஏப்ரல், 2014

தூய்மை தொடரும். ஊரும் பளீச் என இருக்கும்....

இந்திய ஜனநாயகத் திருவிழாவின், தமிழக வகையறாவின் மண்டகப்படி முடிவுக்கு வந்ததுள்ளது...

ஊர் திருவிழா என்றால், ஒரு வாரம் கொண்டாடப்படும். கோவில் சார்ந்த நிகழ்வுகளால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருவிழாவுக்கான திடீர் கடைகளில் மக்கள் முண்டியடிப்பார்கள். ஒரு சந்தை நிகழ்வாக, பணப்பரிமாற்றம் இருக்கும்.

இங்கும் அது தான் தேர்தலில். தேர்தலுக்கான அடிப்படைப் பணி கட்சிகளின் சின்னத்தை விளம்பரப்படுத்துவதில் துவங்கும். நன்கு பிரபலமான சின்னமாக இருந்தாலும், அதிக இடங்களில் வரையப்படும். காரணம், அதுவே ஒரு பிரம்மையை ஏற்படுத்தும் என்பதால்.

                   

என்ன பிரமையை ஏற்படுத்திவிடும் என சிலர் நினைக்கலாம். புனைவுச் செய்திகளை வெளியிட்டு, பத்திரிக்கைகள் குறிப்பிட்ட சதவீத படித்தோர் மத்தியில் ஏற்படுத்த முயற்சிப்பதைப் போல், சுவர் விளமபரம் பார்த்து கட்சிகளின் வலிமையை முடிவு செய்யும் சிலர் உள்ளனர்.

அரசியல் கட்சி நிர்வாகிகளிலேயே சிலர், அந்த ஊரில் அந்த சின்னம் மட்டும் தான் இருக்கு, வேற கட்சிக்கு வேலை இல்ல போல என சொல்பவர்கள் உண்டு. இதனால் சுவர் பிடிப்பதிலேயே அடிதடி துவங்கிவிடும். இதனால் சில இடங்களில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே, சுவரில் இடம் பிடிக்கத் துவங்கி விடுவர்.

வீட்டு உரிமையாளர் ஒப்புதல் பெற்றே, விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் நடைமுறை இருந்தாலும், மிரட்டி விளம்பரம் செய்யும் கட்சிகளும் உண்டு. அடிதடி நடந்து காவல்துறை வரை சென்று வழக்காகும் நிலை இன்னும் இருக்கிறது. "இரண்டு கட்சியினரும் தெரிந்தவர்கள், ரெண்டு பேரும் படம் போட்டுக்குங்க" என்ற நிலையும் உண்டு.


                   

இது ஓவியர்களுக்கு ஒரு முக்கியத் தொழிலாக இருந்த காலமும் உண்டு. ஆனால் இப்போது ஓவியர்கள் குறைந்து விட்டதால், சின்னம் போடும் பணி முடிக்க மிகச் சிரமமாகி விடுகிறது. புதிய சின்னம் பெறுகிறவர்களுக்கு, குறுகிய நாட்களில் சுவர் விளம்பரம் முடிப்பது பெரும் பணி.

எப்படியும் சுவர் விளம்பரத்திற்கு, ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் அனைத்து வேட்பாளர்களுடையதையும் கூட்டிக் கணக்கிட்டால், இரண்டு கோடியை தாண்டும். பதினைந்து நாட்கள் கூத்திற்கு, இந்த செலவு கூடுதல் தானே ?

கடந்தத் தேர்தலில் இருந்து, நகராட்சிப் பகுதிகளில், தேர்தல் கமிஷனால் சுவர் விளம்பரம் தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுவர்கள் “பளீச்” எனக் காட்சியளிக்கிறது. சுவர் விளம்பரம் இல்லாததால், நகராட்சியில் உள்ளோர் வாக்களிக்கத் தடுமாறவில்லை.

எனவே இதனை கிராமங்களுக்கும் அமல்படுத்தி, சுவர் விளம்பரத்தை தடை செய்தால், வீட்டு சுவர்கள் கறை படாமல் தப்பிக்கும். சண்டை, வருத்தம், வழக்குகள் வராது. வெட்டிச் செலவு குறையும். தூய்மை தொடரும். ஊரும் பளீச் என இருக்கும்.

# தேர்தல் ஆணையப் பார்வைக்கு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக