பிரபலமான இடுகைகள்

வியாழன், 19 ஜூன், 2014

சொல்லிபுட்டன், சொல்லிபுட்டன்; ஒப்பாரிய சொல்லிபுட்டன்

இன்னும் கிராமம் உயிர்ப்புடன் இருக்கும் கிராமம் அது. மகன்கள் பக்கத்து நகரத்தில் வசித்தாலும், நகரத்து வாடை பாதிக்காத பெண்மணி அவர். வயது 80 இருக்கும். அவரது கணவர் இறந்து விட்டார்.

ஊரில் இல்லாததால், அன்றே நான் துக்கத்திற்கு செல்ல முடியவில்லை. நெருங்கிய உறவினர். இரண்டு நாட்கள் கழித்து தான் செல்ல முடிந்தது. வீட்டினுள் நுழைந்ததுமே பாட்டி அழ ஆரம்பித்தார்.

கிராமத்து வழக்கப்படி மாரடித்துக் கொண்டு என் அருகில் வந்தார். குரலெடுத்து ஒப்பாரி பாட ஆரம்பித்தார். கணீர் குரல். வேறு பக்கம் நகராமல் ஈர்த்தது.


                        

( படம் - ஓவியர் மணிவர்மா)


"பாத்து பாத்து கண்ணும் தான்
பூத்துப் போச்சே பூத்து போச்சே
வருவன்னு இருந்தனே, நீயும் வருவன்னு இருந்தனே"

"நான் ஊர்ல இல்ல ஆயா. அதான் வர முடியல" என் பதில்

"அப்பாரு நல்லாருந்தா வந்துருப்பாரே
அய்யான்னா ஆசையாச்சே அவருக்கும்" ஒப்பாரி தொடர்ந்தது.

"ஆமா ஆயா. அப்பா ஆஸ்பிட்டல் போயிருந்தாங்க. அதான் வரல"

"எப்படில்லாம் வாழ்ந்திருந்தோம்
என்னல்லாம் நினச்சிருந்தோம்"

ஒப்பாரி தொடர்ந்தது. இடையில் வந்த சில வார்த்தைகளை கூர்ந்து கவனித்து தான் அர்த்தம் கிரகிக்க முடிந்தது. இங்கே கொடுத்திருப்பதெல்லாம் சிம்ப்ளிபைட் ஃபார்ம்.

"ஒப்பாயி வந்தா பாக்காம போவாதே"
ஒரு நிமிடம் நிதானித்தே "ஒப்பாயியை" லைன் பிடித்தேன். ஒப்பாயி = ஒன் + அப்பா + ஆயி. என் அப்பாவின் அம்மா. என்ன அருமையான வட்டார வழக்கு. இதே போல பல வார்த்தைகள். லயம் தப்பாமல், ராகம் தப்பாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.

உறவினர்களுக்குள் ஒரு பிரச்சினை. அதையும் ஒப்பாரியிலேயே சொன்னார்.

"இப்போ போறவரா, இப்போ போறவரா
அந்த பிரச்சினயால இடிஞ்சு போனாரே
நீ தான் முடிக்கனும் நீ தான் முடிக்கனும்
இல்லன்னா எங்காரியத்துக்கு தான் வரணும்"

கடைசியாக ஒப்பாரியிலேயே எனக்கும் 'செக்'கும் வைத்தார்.

இது தான் கடைசி தலைமுறை. இதற்கு அடுத்த தலைமுறை பெண்கள் கூட இப்போது கூச்சப் படுகின்றனர், ஒப்பாரி பாடுவதற்கு. ஆனால் ஒப்பாரியை புறக்கணிப்பதற்கில்லை. தங்கள் மனசுமையை இறக்கி வைக்க ஒரு அருமையான வடிவம்.

நயமான வட்டார வழக்குகள், ராகம் தப்பாமல் வந்து விழும் வார்த்தைகள், சொல்ல நினைக்கும் செய்திகளையும் அதில் ஏற்றி சொல்லும் பாங்கு என கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு வாழ்வியல் இசை வடிவம் ஒப்பாரி எனத் தோன்றுகிறது.

சிறு வயதில் விளையாட்டாக கிண்டல் செய்த விஷயத்தின் முக்கியத்துவம் இப்போது தான் புரிகிறது. ஒப்புக்கு பாடுவதல்ல ஒப்பாரி, ஒப்புமை இல்லாதது ஒப்பாரி.

# சொல்லிபுட்டன், சொல்லிபுட்டன்;
ஒப்பாரிய சொல்லிபுட்டன்
அதையும் "ஒப்பாரியா" சொல்லிபுட்டன்...

செவ்வாய், 17 ஜூன், 2014

கலைஞர் பிறந்தநாள் 2014 - அந்த புன்முறுவல் போதும் !

என்ன தான் தலைவர் கலைஞரை அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தாலும் பிறந்தநாளில் பார்ப்பது தனி மகிழ்வல்லவா...

காலை 9 மணிக்கே அறிவாலயம் சென்று வரிசையில் நின்றோம் பெரம்பலூர் மா.செ அண்ணன் துரைசாமியும் நானும். உடன் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த கழக நிர்வாகிகள்.

நேரம் ஆக ஆக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகளும் வந்து இணைந்தனர். வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த கழக நிர்வாகிகளை பார்த்து வணக்கம் பரிமாற்றம் நடந்தது.

தலைவர், தளபதி பிறந்தநாட்கள், மாநாடுகள் போன்றவை திருமண நிகழ்ச்சிகளை போன்று குதுகலமானவை. நீண்ட நாட்கள் கழித்து உறவினர்களை ஒரு சேர சந்திப்பது போல தமிழகமெங்கும் இருந்து வருகிற கழக நண்பர்களை சந்திக்கிற வாய்ப்பு.


                           

மாவட்ட செயலாளர்கள் போன்ற நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வரிசை இருந்தாலும், அதில் செல்லாமல் எல்லோருடனும் செல்வதற்கு இதுவும் ஒரு காரணம். தஞ்சை, நாகை, திருவண்ணாமலை நண்பர்களை சந்திதோம்.

அதே போன்று முகநூல் நண்பர்களையும் சந்திக்கின்ற வாய்ப்பு. தலைவர் அண்ணா நினைவிடம், பெரியார் திடல் என்று சென்று வர சற்று தாமதமானதால் நிறைய உரையாடல்கள்.

நடந்து முடிந்த தேர்தல் குறித்த அலசல்கள், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்று களைகட்டியது. எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்தோம். எல்லோரும் விமர்சனத்திற்கு உள்ளானாகள், ஜனநாயக இயக்கம்.

திருவண்ணாமலை மாவட்டத்து தோழர்கள் சீர்வரிசை மற்றும் மேளதாளங்களோடு வந்தார்கள். கலைஞர் அரங்கம் அதிர ஆரம்பித்தது. 


                     

செண்டை மேளம் அடிக்கும் போது, அதற்கு நடனம் ஆடிய மூன்று வயது சிறுவனின் ஆட்டம் எல்லோரையும் கவர்ந்தது.

             

திடீரென அரங்கம் சுறுசுறுப்பானது. “முத்தமிழே நீ வாழ்க” பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. தலைவர் கலைஞர் அரங்கத்திற்குள் வந்தார். அடிவயிற்றிலிருந்து குரல் வந்தது, “தலைவர் கலைஞர்”. “வாழ்க” எதிரொலித்தது.

திரும்பி பார்த்தேன், அதுவரை தலைவரை விமர்சித்தவர் குரல் தான் அது. அது தான் தலைவர். அவன் தான் தொண்டன். மெல்ல வரிசை ஊர்ந்தது. மணி 12-ஐ தாண்டியது. சில தோழர்கள் தடுப்புகளை தாண்டி குதித்து முன்னேறினார்கள். ஆனால் பெரும்பாலானோர் வரிசையில் தான்.

மேடையை நெருங்கும் போது கூட்ட வரிசை பிதுங்க ஆரம்பித்தது. சட்டை எல்லாம் கசங்கி தலைவரை நெருங்கினோம். தலைவர் அமர்ந்திருந்த மேடைக்கு கீழே மூன்றடி தூரத்தில் நின்று வணங்கினோம். ஒரு புன்முறுவல் பூத்தார். அந்த தருணம் தான் நிகரற்ற தருணம்.


                 

தனியார் நிறுவனப் பணியில் இருக்கிற நண்பர்களும், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் வரிசையில் நின்று வாழ்த்தி, வாழ்த்து பெற்றது தான் குறிப்பிடத்தக்கது. எந்த அரசியல் எதிர்பார்ப்புமின்றி வந்த அவர்களுடைய வாழ்த்து தலைவரை நூறாண்டு தாண்டி வாழ வைக்கும்.

# வாழ்க தலைவர் கலைஞர் !

திங்கள், 16 ஜூன், 2014

அந்த முகமும், இனிய சிரிப்பும் என்றும் நினைவில் இருக்கும்...


                          Photo: இறப்பு இயற்கை என்றாலும் நம்மிடம் பழகியவர்களை பிரியும் போது ஏற்படும் துக்கம் அளவிட இயலாதது. வாக்கு எண்ணிக்கை பணிக்காக,  14.05 அன்று, தயாராகிக் கொண்டிருந்த போது தான் அந்த செய்தி தாக்கியது. பெரியார் சாக்ரடீஸ் மறைவு.

43  வயதில் பெரும் முத்திரையை பதித்துவிட்டு கிளம்பிவிட்டார். விபத்தில் பாதிக்கப்பட்டு நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அங்கிருந்தே பிரிந்து விட்டார். 

அரசுப் பணியில் இருந்தாலும் பெரியார் திடல் பணி தான் முழுமையானது, முதலானது அவருக்கு. முகநூலில் பெயரை பார்த்திருந்தாலும், அவரது முகப்புப்படமாக அய்யா பெரியார் படமே இடம் பெற்றிருந்ததால் அவரை அறியாமல் இருந்தேன்.

சிவந்த தேகம், சிரித்த முகமாக பெரியார் திடலில் என்னை அணுகிய போது யாரோ என்று நினைத்து பேசினேன். கொள்கையாளர் என்பதால் என்னைக் குறித்த விபரங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு பேசினார்.

முதல் சந்திப்பிலேயே அவரது பாசம், பல வருடம் பழகிய உணர்வை ஏற்படுத்தி விட்டது. பல தகவல்களை அள்ளிக் கொட்டினார், அவர் ஒரு தகவல் களஞ்சியம். அந்தப் புன்னகை மாறாமல் இனியப் பேச்சு, மறக்க முடியவில்லை.

இவரது தாத்தா சாமி தந்தைப் பெரியாரின் தளபதிகளில் ஒருவராக இருந்தார் என்றால், இவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் தளபதியாக திகழ்ந்தார். தாத்தா காலத்து உணர்வு கொஞ்சமும் குன்றாமல் இயக்கப் பணி ஆற்றியவர்.

அரசுப் பத்திரிக்கையான "தமிழரசு"வின் ஆசிரியர் குழுவில் இருந்தாலும், திராவிடர் கழகப் பத்திரிக்கையான "உண்மை" மற்றும் "பெரியார் பிஞ்சு" பத்திரிக்கைகளில் இவரது பங்களிப்பு தொடர்ந்தது, பொறுப்பாசிரியரும் கூட.

கடைசியாக திராவிடர் கழகப் பொருளாளர் அய்யா சாமிதுரை அவர்கள் மறைந்த அன்று பார்த்தோம். பெரியார் திடலுக்கு நான் போனதிலிருந்து உடன் இருந்து, அய்யா உடல் கள்ளக்குறிச்சி கிளம்பு வரை பேசிக் கொண்டிருந்து என்னை அனுப்பி வைத்தார். 

இன்னும் எழுத என்னை உற்சாகப்படுத்தினார். எந்தத் தகவலாக இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னவர், தொடர்பு கொள்ளாமலே மறைந்து விட்டார். பணி நெருக்கடியில் கடைசியில் முகம் பார்க்கவும் இல்லை.

# அந்த முகமும், இனிய சிரிப்பும் என்றும் நினைவில் இருக்கும்...


இறப்பு இயற்கை என்றாலும் நம்மிடம் பழகியவர்களை பிரியும் போது ஏற்படும் துக்கம் அளவிட இயலாதது. வாக்கு எண்ணிக்கை பணிக்காக, 14.05 அன்று, தயாராகிக் கொண்டிருந்த போது தான் அந்த செய்தி தாக்கியது. பெரியார் சாக்ரடீஸ் மறைவு.

43 வயதில் பெரும் முத்திரையை பதித்துவிட்டு கிளம்பிவிட்டார். விபத்தில் பாதிக்கப்பட்டு நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அங்கிருந்தே பிரிந்து விட்டார்.

அரசுப் பணியில் இருந்தாலும் பெரியார் திடல் பணி தான் முழுமையானது, முதலானது அவருக்கு. முகநூலில் பெயரை பார்த்திருந்தாலும், அவரது முகப்புப்படமாக அய்யா பெரியார் படமே இடம் பெற்றிருந்ததால் அவரை அறியாமல் இருந்தேன்.

சிவந்த தேகம், சிரித்த முகமாக பெரியார் திடலில் என்னை அணுகிய போது யாரோ என்று நினைத்து பேசினேன். கொள்கையாளர் என்பதால் என்னைக் குறித்த விபரங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு பேசினார்.

முதல் சந்திப்பிலேயே அவரது பாசம், பல வருடம் பழகிய உணர்வை ஏற்படுத்தி விட்டது. பல தகவல்களை அள்ளிக் கொட்டினார், அவர் ஒரு தகவல் களஞ்சியம். அந்தப் புன்னகை மாறாமல் இனியப் பேச்சு, மறக்க முடியவில்லை.

இவரது தாத்தா சாமி தந்தைப் பெரியாரின் தளபதிகளில் ஒருவராக இருந்தார் என்றால், இவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் தளபதியாக திகழ்ந்தார். தாத்தா காலத்து உணர்வு கொஞ்சமும் குன்றாமல் இயக்கப் பணி ஆற்றியவர்.

அரசுப் பத்திரிக்கையான "தமிழரசு"வின் ஆசிரியர் குழுவில் இருந்தாலும், திராவிடர் கழகப் பத்திரிக்கையான "உண்மை" மற்றும் "பெரியார் பிஞ்சு" பத்திரிக்கைகளில் இவரது பங்களிப்பு தொடர்ந்தது, பொறுப்பாசிரியரும் கூட.

கடைசியாக திராவிடர் கழகப் பொருளாளர் அய்யா சாமிதுரை அவர்கள் மறைந்த அன்று பார்த்தோம். பெரியார் திடலுக்கு நான் போனதிலிருந்து உடன் இருந்து, அய்யா உடல் கள்ளக்குறிச்சி கிளம்பு வரை பேசிக் கொண்டிருந்து என்னை அனுப்பி வைத்தார்.

இன்னும் எழுத என்னை உற்சாகப்படுத்தினார். எந்தத் தகவலாக இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னவர், தொடர்பு கொள்ளாமலே மறைந்து விட்டார். பணி நெருக்கடியில் கடைசியில் முகம் பார்க்கவும் இல்லை.

# அந்த முகமும், இனிய சிரிப்பும் என்றும் நினைவில் இருக்கும்...
— with Periyar Socrates.