பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 19 டிசம்பர், 2014

வாதாடி 'பெற்ற' தீர்ப்பு (சட்டமன்ற விமர்சனம்)

04.12.2014 ஜீரோ நேரம். அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்பும் நேரம்.

அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் எழுந்து நின்றனர். கிட்டத்தட்ட அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் எழத் துவங்கினர். பதறி எழுந்தார் நத்தம் விஸ்வநாதன். அவை முன்னவராகப் பொறுப்பேற்ற முதல் தினம். அதனால் மிக பக்குவமாக பேசினார்,”ஒவ்வொரு உறுப்பினராக பேசுங்கள்".

துரைமுருகன் பேச எழுந்தார். ”சட்டமன்றம் நடக்கும்” என்று ஆரம்பித்தார். ஆனால் அவர் பேசுவதற்கு, சபாநாயகர் அனுமதிக்க மறுத்தார். சட்டசபை மூன்று நாட்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் அனைத்து எதிர்கட்சிகளும் பிரச்சினை எழுப்பியது. அதனால் தான் சபாநாயகர் அனுமதிக்க மறுத்தார்.

திடீரென சபாநாயகர்,”சவுந்தர்ராஜன் அத உள்ள வைங்க” என்று திரும்பி, திரும்பி உத்தரவிட்டார். மார்க்சிஸ்ட் சட்டமன்றக் குழு தலைவர் சவுந்தர்ராஜன் ஒரு அச்சடிக்கப்பட்ட காகிதத்தை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார்.

எல்லா மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கையிலும் அதே போன்ற காகிதம். அதில் இருந்த வாசகம்,”மக்கள் பிரச்சினையை பேச, பேரவைக் கூட்ட நாட்களை அதிகப்படுத்துக”. சபாநாயகர் உஷ்ணமாகிவிட்டார். “அலுவல் ஆய்வுக்குழு முடிவு தான் இறுதி” என்றவர் “ஆறுமுகம் பேசுங்க” என்று இ.கம்யூ தலைவரை பார்த்து சொன்னார்.

ஆறுமுகம், “தஞ்சை மாவட்டத்தில் போராட்டம்” என்றார். அவ்வளவு தான், உடனே சபாநாயகர் “முனுசாமி பேசுங்க” என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை அழைத்தார். அந்த நேரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினரை பேச அழைப்பது மரபு அல்ல, ஆனாலும் அழைத்தார்.

எதிர்கட்சிகளை வம்பிழுக்க சரியான ஆள், முனுசாமி தான் என இந்தத் திட்டம். மார்க்சிஸ்ட் வெளி நடப்பு செய்தனர். முனுசாமி மூச்சுக்கட்டி பேச ஆரம்பித்தார், முதல் வரிசைக்கு வர வேண்டுமல்லவா. பேச விடாததை கண்டித்து, திமுக வெளிநடப்பு செய்தோம். அடுத்து தேமுதிகவும் வெளிநடப்பு செய்தது.

இந்த நேரத்தில், "ஜெயலலிதாவால் 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" என்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தேமுதிக சார்பில் பார்த்தசாரதி பேசினார்.

அடுத்து பேசிய தளபதி அவர்கள்,”21,893 கோடிக்கு திட்டங்கள் முதல் ஆண்டு அறிவித்திருக்கிறீர்கள். அடுத்து 18,000 கோடி. மொத்தம் 39,893 கோடி. இதில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்ன நிலையில் உள்ளது ?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்,”என் மக்கள் யாரிடமும் கையேந்தி நிற்காத காலம் வரும் வரை உழைப்பேன் என்ற அம்மா, விழிகாட்டி, வழிகாட்டி வழி நடத்துகிறார்கள்” என்று புகழந்து கொண்டே போனார்.

அப்போது ஜெ.அன்பழகன் எழுந்து,” முதல்வர் யாரை புகழ்கிறார்? ஏன் இந்த அவையில் புகழ்கிறார்?” என இடைமறித்து கேட்க, அவரை அவையை விட்டு வெளியேற்றினார் சபாநாயகர்.

மறுபடியும் ஓ.பி.எஸ், ஜெ புகழ்பாடிக் கொண்டே போனார். நத்தம், ஓ.பி.எஸ்ஸை உட்கார சொல்ல, ஓ.பி.எஸ்ஸும் உட்கார்ந்து தண்ணீர் குடித்தார். அண்ணன் துரைமுருகன் எழுந்து,”எங்கள் தலைவரை சுருக்கமா பேச சொன்னீங்க. ஆனா முதல்வர் இப்படி பேசிக்கிட்டே போறாரே !” என்று கேட்டார்.

அதற்கு சபாநாயகர்,”இது அவைக் குறிப்பில் ஏறாது” என சொல்ல, அண்ணன் துரைமுருகன்,”எழுதுனா எழுதுங்க, எழுதாங்காட்டி போங்க” என கேஷூவலாக சொல்லி விட்டு அமர, அவையில் சிரிப்பலை.

ஓ.பி.எஸ்,” அரசு 110 விதியின் கீழ் சொன்னதை செய்யவில்லை என திமுகவினர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் 110 விதி அறிவிப்புகள் மக்கள் தலைவிதியை மாற்றி அமைத்திருக்கிறது, எதிர்கட்சிகளை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.” என டி.ராஜேந்தர் போல வார்த்தை விளையாட்டு ஆடினார்.

இப்படியாக 12.05 - 12.51 வரை பேசிக் கொண்டே போனார் ஓ.பி.எஸ். அடுத்து பால் விலை உயர்வு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு ஆகியன குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

அடுத்து முல்லைப் பெரியார் பிரச்சினை குறித்து ஓ.பி.எஸ் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இது குறித்து ஓ.பி.எஸ் மிக நீண்ட விளக்க உரையாற்றினார். பல உறுப்பினர்கள் தூங்கியே போனார்கள். செ.கு.தமிழரசன், தனியரசு ஆகியோரது வாழ்த்துரைக்கு பிறகு பா.ம.க கலையரசு வாழ்த்துரை வழங்கி களத்தில் போட்டியாகக் குதித்தார்.

இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்,” இது அம்மா சட்ட நுணுக்கங்களை அடுக்கி வாதாடி பெற்ற தீர்ப்பு” என சொல்ல, “இந்த நுணுக்கம் பெங்களூரு வழக்கில் எங்கப் போச்சி?” என பின் வரிசையில் இருந்து குரல் வர, பதில் இல்லை.

துரைமுருகன் முல்லைப் பெரியார் பிரச்சினை குறித்து பேச, தொடர்ந்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “முல்லைப் பெரியார் பிரச்சினைக்கு காரணம் எம்.ஜி.ஆர் தான், தீர்ப்பின் வெற்றிக்கு முன்னோடி கலைஞர்” என துரைமுருகன் சொன்னதற்கு, அமைச்சர் வைத்தி பொங்கி எழுந்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ எழுந்து, நாடகத்தில் வரும் பபூன் நடிகர் போல முகபாவங்களைக் காட்டி நக்கல் செய்தார். இதனைக் கண்டித்து திமுக சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஒரு கட்டத்தில் பதில் அளிக்க அனுமதி மறுத்த சபாநாயகரை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

# ஜெ’னநாயக பாதுகாவலர் சபாநாயகர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக