பிரபலமான இடுகைகள்

சனி, 24 ஜனவரி, 2015

சிங்கப்பூர் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே...

“சிங்கப்பூர் போனியே, எப்புடியிருந்தது ?”
         

“சொல்லனுமா?. 1978-லேயே “அக்கரை சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே, புதுமையிலே மயங்குகிறேன்”ன்னு பாட வச்ச ஊராச்சே. இப்போ இன்னும் புதுமையாயிருக்கு”.

“எங்கெல்லாம் சுத்தி பார்த்தீங்க?”

“தங்கியிருந்த கல்லூரி நண்பன் முகில்வண்னன் வீட்டிலேர்ந்து ‘தேக்கா’ போனேன். தேக்காவிலிருந்து விமான நிலையம் வந்தேன். தேக்காவுல இருந்து, கல்லூரி நண்பர்களான மூர்த்தி, கலைவாணன் வீட்டுக்கு போனேன்.”

“என்ன சுத்தி பார்த்தீங்க?”

“தேக்காவ சுத்தி பார்த்தேன்”

“தேக்கான்னா தமிழர்கள் கூடுவாங்கன்னு சொல்லுவாங்களே, அந்த இடமா?, அவ்வளவு பெரிய ஏரியாவா?”

“சின்னப் பகுதி தான். அங்க தான் தமிழர்கள் பொருட்கள் வாங்க, சாப்பிட, நண்பர்களை சந்திக்க கூடுறாங்க. அதனால் நண்பர்களை சந்திப்பதற்காக தேக்கா போனேன். தேக்காவையே சுத்தி வந்தேன்”

“மலேசியாவில் சின்ன டீக்கடையில் கூட இலவச வைஃபை உண்டு. அதே போல சிங்கப்பூரில் இருக்கும்னு நினைச்சு போயிட்டேன். இங்க தொட்டதெல்லாம் காசு. மிக சில இடங்களில் மட்டுமே இலவச வைஃபை.

அதனால ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் போட முடியாம நண்பர் மொபைல்லேர்ந்து சிங்கை இணையதள செயல்பாட்டாளார் நரசிம்மன் நரேஷ புடிச்சேன். அவர ஸ்டேடஸ் போட சொல்லி சொன்னேன். எங்க சந்திக்கலாம்னு கேட்டேன். ‘காந்தி உணவகம்’ வந்துடுங்க-ன்னார். போனேன்.

அவ்வளவு தான், தேக்காவுல தமிழ் நண்பர்கள் கூடுற எல்லாக் கடையையும் பார்த்துட்டேன். நரசிம்மன் வரும் போது காந்தி உணவகம் திறக்கல. சரின்னு பக்கத்துல செட்டிநாடு ஹோட்டல்ல உட்கார்ந்து டீ சாப்பிட்டோம். சிங்கை சிங்கங்கள் தங்கள் வேலையை காட்டினாங்க.



ஆமாம், சால்வையை எடுத்து போட்டாங்க. வேணாம்னு சொல்லிப் பார்த்தேன் கேட்கல. அப்பவே கடைகாரர் ஒரு மாதிரியா பார்த்தாரு. ஆளுக்கு ஒரு டீ சாப்பிட்டோம். கொஞ்சம் நேரம் போச்சு. ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க. கலந்துரையாடல் போயிகிட்டு இருந்தது.


கூட்டம் பெருசா ஆக ஆரம்பிச்சு, சேர எல்லாம் நம்ம ஆட்கள் ஆக்கிரமிக்க ஆரம்பிச்ச உடனே, கடைகாரர் வந்து “அப்புறம்ணே?” அப்படின்னாரு. நரசிம்மனை பார்த்தேன். கிளம்பலாம்னாரு. ஜமாவை அடுத்த ரோட்டில் இருந்த ஹோட்டல் காயத்ரிக்கு மாற்றினோம்.

அது கொஞ்சம் உயர்-நடுத்தர ரெஸ்டாரண்ட். நாங்க உள்ள போகாம வெளியில் வராண்டாவில் இருந்த சேர்களை கைப்பற்றினோம். இங்கேயும் புதிதாக வந்த நண்பர்கள் சால்வை போட, இங்கிருந்த வேற்று நாட்டவர்கள் வித்தியாசமாக பார்த்தனர்.


இணையத்தில் செயல்படும் கழக உடன்பிறப்புகளான சிங்கை சிங்கங்கள், தொகுதியை சேர்ந்தவர்கள் என குழுமியிருந்தனர். "சிங்கப்பூர் வந்ததை நண்பர்களுக்கு தெரிவிக்க முடியவில்லை. ஸ்டேடஸ் போட்டாலாவது தெரியும். வைஃபை கிடைக்கல" என்றேன்.

பொன்னையா சார்லஸூம், அருள் செல்வராஜூம் தங்கள் மொபைலிலிருந்து ஹாட்ஸ்பாட் போட்டு தர, புகைப்படத்தோடு ஸ்டேடஸ் போட்டேன். அப்போ தான் சுவாசம் கிடைத்தது போல் இருந்தது. ஹோட்டல் முன்பாக நடந்து போய் கொண்டிருந்த, ஒருவர் ஒரு நிமிடம் நின்று உற்று பார்த்தார்…(தொடரும்)

செவ்வாய், 20 ஜனவரி, 2015

எத்தன புத்தகம் வாங்கியிருக்கீங்க ?

ருசிக்கறமோ இல்லையோ, பொங்கல் அன்னைக்கு கரும்பு வச்சு படைக்கினும்கிறது எப்படி மரபாயிடுச்சோ, அது போல வாங்கற புத்தகத்த படிக்கிறமோ, இல்லையோ புத்தகக்காட்சி அறிவிப்பு வந்தாலே கால் அரிக்க ஆரம்பிச்சிடுது, போகனும்னு.

         


போன வருசம் வாங்கின புத்தகத்துல பாதி தூங்குது, இந்த வருசம் தேவையா என்ற எண்ணமும் இருந்தது. இருந்தாலும், கண்ட்ரோல் பண்ண முடியல. போறதுன்னு முடிவு பண்ணியாச்சி. போன வருசம் மாதிரி அவஸ்தை படக் கூடாதுன்னு திட்டம் போட்டேன்.

இரண்டு நாட்கள் போறது, ஒரு நாளைக்கு பாதிப் பகுதி, அடுத்த நாள் மீதிப் பகுதின்னு திட்டம். பையன கூப்பிட்டேன். உங்கக்கூட அவ்வளவு நேரம் சுத்த முடியாதுன்னு மனசுல வச்சிக்கிட்டு, “பரிட்சை இருக்கு. நேரம் இல்லை. எனக்கு பாடம் சம்பந்தமா ரெண்டு புத்தகம்னு ஆர்டர் போட்டார்.

“பையன் பரிட்சையால நானும் வரல, அப்படின்னு துணைவியார் அவங்க துறை சம்பந்தப்பட்ட மருத்துவப் புத்தகம் கேட்டு ரெக்வஸ்ட்.

         

முதல் சுற்று போனேன். முதல் வரிசையில கூட்டம் நெரிஞ்சுது. சரின்னு நேரா கடைசி வரிசைக்கு போய் ஆரம்பிச்சேன். மனசக் கட்டுபடுத்திக்கிட்டு பையன் புத்தகத்தை தேடினேன். அப்படிப் பட்ட புத்தகமே கண்ணுல படல. கண்ணுல பட்டதெல்லாம், நம்ம சம்பந்தப்பட்டதாவே இருந்தது.

அரை மணி நேரம் தான். முடியல, ஒரு அரங்குல நுழைஞ்சேன். எதப் பார்த்தாலும் வாங்கனும்னு தோனுச்சி. காவிரி, கச்சத்தீவு சம்பந்தமான சின்ன சின்ன புத்தகமா வாங்கினேன். மறுபடியும் மனச ஒரு நிலைப் படுத்தி துணைவியாருக்கான புத்தகம் தேடினேன். கிடைக்கல.

அடுத்த அரங்கு. தொ.பரமசிவன் புத்தகங்கள் இருந்தன. ரெண்டு செட் வாங்கினேன். அப்புறம் அவ்வளவு தான். பெரிய புத்தகங்களா வாங்கக் கூடாது, சின்னப் புத்தகங்களா மட்டும் வாங்கறதுன்னு ஆரம்பிச்சேன். புத்தகப் பைகள் விரல்கள அறுக்க ஆரம்பிச்சிது.

சரி, மீதி அடுத்த நாள்ன்னு கிளம்பினேன். விட்ட இடத்த ஞாபகம் வச்சிக்கறதுக்காக அந்த அரங்கப் பார்த்தேன். “கதவை திறகுரூப். ஆமாங்க, நித்தியானந்தாவுக்கு ஒரு அரங்கு. என்ன கொடும சார் இது?

ஒரு செட் ‘தொ.ப புத்தகங்களை அண்ணன் ஆ.ராசா அவர்களிடம் கொடுத்தேன். புத்தகங்களைப் பார்த்தவர், இவரு, சுப.வீ போன்றவர்கள் எழுதுவதால் தான் இந்துத்துவா அமைப்புகளோட உண்மை ரூபம் வெளியில் வருதுன்னார்.

அடுத்த நாள் நித்திக்கு எதிர் அரங்கிலிருந்து துவங்கினேன். அப்போ ஒரு வி.ஐ.பியோட கூட இருக்கறவரு கிராஸ் பன்னினாரு. கொஞ்சம் தலைமறைவானேன். காரணம் நான் இருந்த கோலம் அப்படி. பேண்ட், கலர் சர்ட். தோளில் ஷோல்டர் பேக், புத்தகப்பைகள் கைய அறுத்த அனுபவத்தால.

இரண்டாம் சுற்றும் இனிதே முடிவுற்றது. ஷோல்டர் பேக் தோள் கனக்க ஆரம்பித்தது. வீட்டுக்கு வந்தேன். மகன் கேட்டார், என்னப்பா, என் புத்தகம் வாங்கினீங்களா?. “இல்லப்பா. நீ சொன்ன பப்ளிகேஷன தவிர மீதி எல்லாம் இருந்துச்சு, நீ சொன்னது மட்டும் இல்ல. என்றேன்.

“அட போங்கப்பா. சரி, உங்களுக்கு எத்தன புத்தகம் வாங்கியிருக்கீங்க?”. “ஒரு பத்து இருக்கும்பா. எண்ணிப் பார்த்தார், இது தான் பத்தா? முப்பது புத்தகம் இருக்கும்மா. “ஹி, ஹி. சரி இந்தக் காமிக்ஸ் படிப்பா என்று கொடுத்தேன். என் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் காமிக்ஸ் ஹீரோ “இரும்புக்கை மாயாவி”. ஆசையாய் வாங்கியிருந்தேன்.

“இது காமிக்ஸு? காமெடி பண்ணாதீங்கப்பா. தலைமுறை இடைவெளி. துணைவியாரின் மருத்துவத் துறை புத்தகமும் கிடைக்கவில்லை. சமாளிக்க வாங்கியிருந்த மருத்துவர் கு.சிவராமனின் “ஆறாம் தினையை பெருமிதமாகக் கொடுத்தேன்.

“உன் புத்தகமும் கிடைக்கல. உனக்கு புடிச்ச புத்தகம் இந்தாம்மா என்றேன். ஆவலாய் வாங்கிப் பார்த்தவர்,ஆஹா. இது போன மாசமே வாங்கிட்டனே என்றார். அடுத்த பல்பு. அந்த காமிக்ஸ படிச்சிட்டு அவர் மகிழ்ந்தது, கொஞ்சம் ஆறுதல். இரும்புக்கை மாயாவி தலைமுறை.

அந்த வி.ஐ.பி கூட வர்றவரு பத்தி சொன்னேனே. அந்த வி.ஐ.பி பற்றி நினைச்சிக்கிட்டே புத்தகக் காட்சிய விட்டு வெளியே வந்தேன். அங்கே அவரது கார். ஓட்டுனர்கிட்ட போய் “அண்ணன் வந்துருக்காங்களா?ன்னு கேட்டேன். அவர் என்னை மேலும் கீழூம் பார்த்துட்டு, “நீங்க? அப்படின்னாரு.

“நான் சிவசங்கர்.... எம்.எல்.ஏ... என்று இழுத்தேன். படக்குன்னு சீட்ட விட்டு கீழ இறங்கியவர், “அண்ணே நீங்க தானா அது. அண்ணன் வந்திருங்காங்க என்று மீண்டும் ஒரு முறை மேலும் கீழுமாகப் பார்த்தார். “யாருக்கும் தெரிய வேண்டாம்னு இந்த டிரெஸ். அண்ணன் என் கண்ணில் படல என்றேன்.

சுதாரித்து கேட்டேன், அண்ணன் வேட்டி, சட்டைல வந்திருக்காங்களா?. இப்போ அவர் சிரித்தார். “இல்ல. அண்ணன் பேண்ட் சர்ட்ல தான் வந்திருக்காங்க.

“ஆஹா, அண்ணனோட ஒரு செல்பி எடுத்துடுவோம்னு மணி பார்த்தேன். ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. முத்துநகர் விரைவு ரயிலை பிடிக்க வேண்டும். ஏழு மணிக்கு ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். மனச தேத்திக்கிட்டு கிளம்பினேன்.

அந்த வி.ஐ.பி.... அவரும் ஒரு புத்தகக் காதலர்.

முன்னாள் அமைச்சர் அண்ணன் தங்கம்.தென்னரசு. “அண்ணே, ரகசியத்த வெளியிட்டுட்டேன்னு கோவிச்சுக்காதீங்க.


# சரி, நீங்க எல்லாம் போனீங்களா, இல்லையா ?

சனி, 10 ஜனவரி, 2015

காலம் தான் காத்திருக்கிறது, இந்தத் தலைவனுக்காக !

தளபதி மு.க.ஸ்டாலின் என்றால் இன்று நாடறியும். அது தலைவர் கலைஞரின் மகனாக அறியப்பட்ட நேரம். ஆனால் அவர் அப்படி நடந்துக் கொள்ளவில்லை. கழகத்தின் தொண்டனாகவே நடந்து கொண்டார். பள்ளிப் பிராயத்திலேயே கழக ஈடுபாடு.

                       

பேரறிஞர் அண்ணாவை அழைத்து கழகப் பிரச்சார நாடகம் நடத்த நாள் கேட்டு, நடத்துகிறார். பேராசியர் அன்பழகன் அவர்களை அழைத்து வந்து, தன் வயதை ஒத்த  மாணவர்களை ஒருங்கிணைத்து “இளைஞர் திமுக” என்ற அமைப்பை துவங்குகிறார்.

இந்தப் புகைப்படம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தப் புகைப்படம். பதினைந்து வயது இளைஞராக காட்சியளிக்கும் தளபதி. அப்போது இந்த அணி பெரும் உருவெடுக்கும், இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் என்று எண்ணியிருக்க வாய்ப்பு இல்லை.

பெரும் திட்டம் தீட்டும் வயதும் அல்ல அது. மற்ற பிள்ளைகள் விளையாட்டில் நாட்டம் கொள்ளும் நேரத்தில், இவர் கொள்கையில் நாட்டம் கொண்டார். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, 1980-ல், இளைஞரணி ஒரு  அமைப்பாக உருவெடுத்தது, அவரது உழைப்பால்.

மற்ற தலைவர்கள் வீட்டுப் பிள்ளை போல எதுவும் இவருக்கு எளிதாக வாய்த்திடவில்லை, கடும் உழைப்பு இருந்தும். அதற்காக அவர் கிஞ்சித்தும் துவள்வதும் இல்லை. தன் உழைப்பை நிறுத்துவதுமில்லை.

1975-ல் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்து, சித்ரவரை செய்து அவரது தியாக உணர்விற்கு சான்றிதழ் கொடுத்தது இந்திரா அரசு.

1989-ல் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர், அவரது உழைப்பிற்கு அதுவே தாமதம் தான். 1996-ல் கழகம் ஆட்சி அமைத்த போது, அமைச்சர் ஆவார் என்று நாடே ஆவலாக பார்த்தபோது, தலைவர் கலைஞர் தவிர்த்தார், தன் மகன் என்பதால்.

ஆனாலும் அசரவில்லை தளபதி அவர்கள். சென்னை மேயரானார். சிங்கார சென்னையாக செதுக்கினார். அவர் கட்டிய மேம்பாலங்கள் தான், இன்றும் சென்னை சீராக இயங்க காரணம். தன் முத்திரையை பதித்து, 2001-ல் கழகம் ஆட்சியை இழந்த போதும், மீண்டும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காழ்ப்புணர்ச்சியால் ஜெயலலிதா, இவருக்காக ஒரு சட்டத்தையே கொண்டு வந்து மேயர் பதவியை பறித்தார். ஆனாலும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக தன் பணி தொடர்ந்தார். இன்னொருபுறம் கழகத்தின் இளைஞரணி செயலாளராக பணியாற்றியவர், துணை பொதுச் செயலாளரானார்.

எல்லாமே படிப்படியான வளர்ச்சி, உயர்வு. ஆனாலும் அவர் உழைப்புக்கானவை அல்ல. தலைவரின் மகன் என்பதால் தூக்கி விடப்பட்டார் என விமர்சனம் வந்து விடக்கூடாது என்பதனாலேயே தாமதம். கடந்த கழகத் தேர்தலில், பொருளாளர் ஆனார். இந்தப் பொதுக்குழுவில் பதவி உயர்வு பெறுவாரா என பத்திரிக்கைகள் பட்டிமன்றங்கள் நடத்தின.

இந்தியாவின் மற்ற தலைவர்களின் மகன்கள் முதல்வராகி விட்டனர் என எழுதிப் பார்த்தார்கள். வதந்தீ’களுக்கு இடம் கொடுக்காமல் முற்றுப்புள்ளி வைத்தார் தள்பதி. இரண்டாவது முறையாக மீண்டும் பொருளாளர் பொறுப்பு. தலைவர் கலைஞர் முத்திரை பதித்த அதே பொறுப்பு. இவரும் முத்திரை பதித்தார்.

தலைவர் கலைஞரே சொன்னது போல, தளபதி என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. தனக்கான காலத்திற்காக இவர் காத்திருக்கவில்லை, உழைத்துக் கொண்டே இருக்கிறார்.


# காலம் தான் காத்திருக்கிறது, இந்தத் தலைவனுக்காக !

                  

வெள்ளி, 9 ஜனவரி, 2015

மிகச் சிலரே வரலாறாய் வாழ்கிறார்கள்....

நான் அப்போது நான்கு மாதக் குழந்தையாக இருந்திருப்பேன். அப்போது கிலுகிலுப்பையை ஆட்டி விளையாடிக் கொண்டிருந்திருப்பேன். எனக்கு அன்றைய நாட்டு நடப்பு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

                

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த ஆண்டு. கழகம் என்ன செய்யப் போகிறது என்று, இன்று போல அன்றும் பத்திரிக்கைகள் ஆருடம் எழுதிக் கொண்டிருந்த நேரம். அண்ணா வகித்த முதல்வர் பதவி தலைவர் கலைஞரை தேடி வருகிறது.

அப்போது கழகத்தின் நான்காவது பொதுக்குழு கூடியது. தலைவர் கலைஞர், கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் முறை. அப்போது யாருக்கும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள், இந்தத் தலைவர் பெரும் சாதனைகளை படைக்கப் போகிறார் என்று.

அதற்கு பிறகு, இரண்டு முறை கழகத்தை பிளக்க, சிதைக்க முயற்சி நடந்தது. நெருக்கடி மிசா காலத்தில் கழகத்தை கரைத்து விட ஆன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால் அத்தனையும் தாண்டி இன்றும் கழகத்தை வலுவோடு வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

பதிமூன்று ஆண்டு காலம் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி. வனவாசம் போன்ற எதிர்கட்சி பயணம். பல வித நெருக்கடிகள். அத்தனை சோதனைகளையும் தகர்த்து, மீண்டும் 1989-ல் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றினார்.

ஒன்றரை ஆண்டு கால ஆட்சி கலைக்கப்பட்டது. ராஜிவ்காந்தி கொலை பழியை கழகத்தின் மீது சுமத்தி, வரலாறு காணாத தோல்வியை ஏற்படுத்தினார்கள். அந்தப் பழியையும் துடைத்து எறிந்து, மீண்டும் அரியணை ஏறினார்.
விபரம் தெரியும் வயது வரை தந்தையின் தலைவர், நமக்கும் தலைவர் என்று நேசித்து வந்தேன். விபரம் தெரிய ஆரம்பித்த பிறகு, அவரது இந்தக் கடும் பயணத்தை உணர்ந்து பிரமிக்க ஆரம்பித்தேன். அவருக்கு வந்த சோதனைகள் வேறு மனிதனுக்கு வந்திருந்தால், நூறு முறை இதயம் நின்றிருக்கும்.

2000-ல் நடைபெற்ற பதினோராவது கழக அமைப்புத் தேர்தலில் நான் போட்டியிட்டு மாவட்ட செயலாளராகி, அந்தப் பொதுக்குழுவில் தலைவர் கலைஞர் எட்டாவது முறையாக தலைவரானதை நேரடியாக பார்க்கின்ற வாய்ப்பை பெற்றேன்.

இப்போது பதினான்காவது கழக அமைப்புத் தேர்தல் முடிந்து, இன்று (09.01.2015) நடைபெற்ற பொதுக்குழுவில் பதினோராவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கலைஞர். இன்றும் பிரமிப்பு குறையாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆட்சி மாற்றங்கள், காட்சி மாற்றங்கள் எதற்கும் களைத்துப் போகாமல், மாரத்தான் பந்தயத்தில் ஓடுகிற வீரனைப் போல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

பலர் வாழ்வும் தெரியாமல், வரலாறும் தெரியாமல் மறைந்து போகிறார்கள். சிலர் வரலாற்றை படித்தும், ரசித்தும் வாழ்கிறார்கள். சிலருக்கே வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாகின்ற வாய்ப்பு கிடைக்கும். மிகச் சிலரே வரலாறாய் வாழ்கிறார்கள். அந்த மிகச் சிலரில் ஒருவர் தலைவர் கலைஞர்.

# வாழும் வரலாறு தலைவர் கலைஞர் வாழ்க !

               

சனி, 3 ஜனவரி, 2015

அக்பர் - நூல் மதிப்புரை