பிரபலமான இடுகைகள்

சனி, 21 மார்ச், 2015

எஞ்சினியரிங் மாணவர்களுக்கு அது இரண்டாம் வீடு

அது சிதம்பரத்து மக்களுக்கு வேண்டுமானால் ரயில்வே ஸ்டேஷனாக இருக்கலாம். ஆனால் (அண்ணாமலை பல்கலைகழக) எஞ்சினியரிங் மாணவர்களுக்கு அது இரண்டாம் வீடு, ஹாஸ்டல் முதல் வீடு என்றால். (அவ்வளவு பக்கம்).

        

இன்னும் சிலருக்கு அதுவே முதல் வீடாகவும் இருந்தது உண்டு. அவர்கள் ஹாஸ்டலில் தங்குகிறார்களா, இல்லை ஸ்டேஷனிலேவா என்ற சந்தேகமே வந்து விடும். எப்போ பார்த்தாலும் அங்கு தான் இருப்பார்கள்.

இன்னும் சிலர் சற்று வித்தியாசம். விடியற்காலை மூன்று மணிக்கு கடைசி ரயிலை அனுப்பி விட்டு, ஹாஸ்டலுக்கு பத்திரமாக வந்து படுத்து விடுவார்கள். மறுபடி காலை ஆறு மணிக்குத் தான், திரும்ப டீ குடிக்க செல்வார்கள்.

சிலர் பொறுப்பாக மாலை நேரத்தில் மாத்திரம் வந்து, எல்லா ரயிலும் சரியான நேரத்திற்கு வருகிறதா, எல்லோரும் சரியாக டிரெயினை பிடித்தார்களா என்று பார்த்து விட்டு கிளம்பி விடுவார்கள்.

இன்னும் ஒரு கோஷ்டி உண்டு. வெள்ளிக்கிழமை நடராஜர் கோவிலுக்கு போகிறார்களோ இல்லையோ, இங்கு வந்து விடுவார்கள். சென்னை ரயிலை வழி அனுப்ப. எங்க போனா என்ன, தரிசனம் காணும் பக்தர்கள்.

ரயிலின் ஹாரன், நீராவி எஞ்சினின் பெருமூச்சு, முன் அறிவிப்பு மணி, மைக் அறிவிப்புக் குரல் போன்றவற்றை கேட்காத நாட்களில், காது கேட்கிறதா என்ற சந்தேகம் வந்து விடும்.

சிலருக்கு ஸ்டேஷனில் இருக்கும் புக் ஸ்டாலுக்கு வந்து காத்திருந்து, சுடசுட பிரிக்கப்படும் புத்தகக் கட்டில் முதல் புத்தகத்தை வாங்கிப் படித்தால் தான் திருப்தி. சிலர் புது புத்தக வாசத்துக்கு வாங்குவார்களோ என்னவோ.

அது ஆனந்தவிகடனாகவும் இருக்கலாம், ப்ரண்ட்லைனாகவும் இருக்கலாம், ஜூவியாகவும் இருக்கலாம், ஸ்போர்ட்ஸ் ஸ்டாராகவும் இருக்கலாம், பாக்கெட் நாவலாகவும் இருக்கலாம். கையில் இருந்தால் அது ஒரு பந்தா.

சில நண்பர்கள் இங்கிருக்கும் பெஞ்சை ஆக்கிரமித்து, படிக்கிறேன் பேர்வழி என புத்தகத்தை விரித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் கண்கள் புத்தகத்தில் இருக்காது.

உண்மையாகவே இங்கிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து படித்தே டிஸ்டிங்ஷன் தட்டியவர்களும் உண்டு. அவர்கள் கருமமே கண்ணானவர்கள், நம்ம பாஷையில் பழம்ஸ்.

இன்னும் சிலர் ஸ்டடி ஹாலிடேஸை இங்கு கழிப்பார்கள். சிலர் ஹாஸ்டலில் நைட் ஸ்டடி போடுவதே, இங்கு இரவு 1.00 மணிக்குவந்து முட்டை பரோட்டா, ஆம்லெட், டீ சாப்பிடுவதற்காகவே இருக்கும். என்.வி.எல்.ஆரின் சுவை ரசிகர்கள்.

சினிமா செகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் போது, இங்கு ஒரு டீ போட்டால் தான் சிலருக்கு நிம்மதியாக தூக்கம் வரும். சிலருக்கு தினமும்.

எது எப்படியோ, அது வெறும் ரயில்வே ஸ்டேஷன் அல்ல, அது ஒரு வாசஸ்தலம், பொழுதுபோக்கு மையம், போதிமரம், அதுவே ஒரு பல்கலைக்கழகம்.

# ரயிலும், ரயில்வே ஸ்டேஷனுமாய் வாழ்ந்த காலம் !
(1990-ல் பொறியியல் முடித்த மாணவர்கள் ஜூனில் சந்திக்க இருக்கிறோம். அதற்கு நண்பர்களை வார்ம்-அப் செய்ய, அடித்த வாட்ஸ்-அப் பதிவு. )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக