பிரபலமான இடுகைகள்

புதன், 18 மார்ச், 2015

போராடித் தான் ஆகணும்...

போராட்டம்லாம் வேஸ்ட், சும்மா விளம்பரதுக்கு பண்றது, அரசியல் ஸ்டண்ட் இப்படின்னு பலருக்கு எண்ணம்.

அவர்கள் கவனத்திற்கு...

05.03.2015 அன்று அரியலூரில், பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் மீது, சுண்ணாம்புக்கல் ஏற்றிய லாரி மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.


06.03.2015. இறந்த குழந்தைகள் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல சென்றோம். அப்போது அங்கு குழுமிய இளைஞர்கள், திமுக இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

07.03.2015. ஏற்கனவே முந்திரிக்கு வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி 10.03.2015 தேதி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி 12.03.2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

08.03.2015. அரியலூரில் இருந்து கைக்காட்டி செல்லும் சாலையில் விளாங்குடி அருகே சிமெண்ட் பல்க் லோடர் லாரி மோதி, டாடா 407 தலைக்குப்புற கவிழ்ந்தது. ஓட்டுனர் மருத்துவமனையில். நானே நேராக பார்த்தேன்.


09.03.2015. ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கைகளை பட்டியலிட்டு, துண்டறிக்கை வெளியிடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

         

10.03.2015. ஆண்டிமடம் கடைவீதியில், சிமெண்ட் லாரி மோதி, பைக்கில் சென்ற 25 வயது இளைஞர் பலி.

10.03.2015. தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்.

11.03.2015. பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்.

12.03.2015. காலை 11.00 மணி. அரியலூரில் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துண்டறிக்கையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

   

"இதுவரை நடவடிக்கை எடுக்க முன்வராத மாவட்டம் நிர்வாகம் இனியும் தூங்கினால், நாங்களே நடவடிக்கையில் இறங்க வேண்டியிருக்கும்" என மாவட்ட திமுக சார்பாக எச்சரித்தேன்.

நண்பகல் 01.30 மணி. அரியலூர் புறவழிச்சாலையில் நின்று, அரியலூர் சப்-கலெக்டர் சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரிகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

13.03.2015. சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை சப்-கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


இதற்கு பிறகு தான், மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திற்கு வந்தார். பத்திரிக்கையாளர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்.

இரவு 11.55. தா.பழூர் பொதுக்கூட்டம் முடித்து வந்தோம். அரியலூர் புறவழிச்சாலையில் கல்லங்குறிச்சி பிரிவில், ஜே.சி.பி இயந்திரம் வைத்துத் தோண்டிக் கொண்டிருந்தனர்.

14.03.2015. "அரியலூர் புறவழிச்சாலையில் செந்துறை பிரிவில் செட்டிநாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் நிரந்தர ரவுண்டானா அமைக்கிறது, கல்லங்குறிச்சி பிரிவில் டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நிரந்தர ரவுண்டானா அமைக்கிறது. மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு." தி இந்து பத்திரிகை செய்தி.

முதல் கோரிக்கையில் இரண்டு ரவுண்டானா நிறைவேறி இருக்கிறது.

"ஒரு மாதத்திற்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு தடை. உரிமங்கள் ரத்து. ஆய்வு செய்யப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை"

எண் 2 மற்றும் எண் 3 ஆகியக் கோரிக்கைகளுக்கு, இதன் மூலம் தீர்வு காணப்படும் என எண்ணுகிறேன்.

இறந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்க இத்தனை நாட்கள் கடந்தும் அரசுக்கு மனம் வராதது தான் வேதனையாக உள்ளது.

கடந்த ஆண்டு 13 பேரை கொன்ற ஓட்டக்கோவில் கிராமத்தில், அரசு பேருந்து மீது சிமெண்ட் லாரி மோதி ஏற்பட்ட விபத்திற்கு பிறகு நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும்.

மெல்ல கண் விழித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம் . இன்னும் அரசுக்கு தூக்கம் கலைய வேண்டும்.

ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கனும் - பழமொழி.

இந்த மாட்டை அடித்து தான் கறக்கனும். போராட்டமே தீர்வு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக