பிரபலமான இடுகைகள்

வியாழன், 2 ஏப்ரல், 2015

முயலை பார்க்கும் புலியின் பார்வை....

 2015-ம் ஆண்டு ஆளுநர் உரை சட்டமன்றக் கூட்டத் தொடர், எனக்கு மிக முக்கியமானதாக அமைந்து விட்டது. தாதுமணல் பிரச்சினை குறித்த தொடர் கட்டுரை, தொலைக்காட்சி பேட்டிகள் என பரபரப்பாக போய்விட்டதால் அதை அப்போதே பகிர்ந்து கொள்ள இயலாமல் போனது.

ஆளுநர் உரை அன்று அதிமுக அரசின் தோல்விகளை, தவறுகளை, ஊழல்களை கண்டித்து வெளிநடப்பு செய்துவிட்டோம். அடுத்த நாள் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நான் பேசுவது என தளபதி அவர்களும், கொறடா அவர்களும் முடிவெடுத்தனர்.

பிறகு அந்த வாய்ப்பு, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திராவிடமணி அவர்களுக்கு சென்றது. அவர் தொகுதியில் புலியால் தாக்கப்பட்டு ஒரு பெண் இறந்து போனார். கோபத்தில் மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் இறங்கினர்.

அந்த நேரத்தில் சில சமூக விரோதிகள் அரசு வாகனங்களை கொளுத்தி விட்டனர். அரசு அப்பாவி பொதுமக்கள் மீது பொய் வழக்கு போட்டது. அது குறித்த குரல் எழுப்ப, முதல் நாள் வாய்ப்பு அவருக்கு போனது.

அன்று தான் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கழக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை பார்த்து கோமாளி என்று சொல்லி பிரச்சினை. அந்த பிரச்சினையில் நாங்கள் வெளியேற்றப்பட, திராவிடமணி பேச முடியாமல் போனது.

அடுத்த நாள் அலுவலகத்தில் குழுமும் போதே, இன்று யார் பேசுவது என மற்றோர் கேட்க, கொறடா அண்ணன் சக்கரபாணி என்னை கைகாட்டினார். சிலர் “இன்னைக்கும் போச்சா” என்று சிரித்தனர். ஏனென்றால் என்னை கண்டால் அதிமுகவினருக்கு அவ்வளவு பிரியம் என்பது பிரசித்தம்.

நானும் அதே எண்ணத்தில் தான் இருந்தேன். முதல்நாளே அதிமுக-வினர் தேவை இல்லாமல் வம்பிழுத்தே எங்களை வெளியேற்றி இருந்தனர். இன்றும் தொடரலாம் என்ற எண்ணம். அதனால் தயார் செய்த குறிப்புகளை நான் எடுத்து செல்லவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.

ஸ்பின் என்றால் அடித்தாடுவது, ஃபாஸ்ட் என்றால் தற்காத்து ஆடுவது என்று முடிவு. ஆனால் அதிமுகவினர் எடுத்தவுடன் வேகப்பந்தில் புகுந்தனர். விவாதத்தில் பேச எழுந்தார் அதிமுக ச.ம.உ கடம்பூர் ராஜூ.

அவர் தேவை இல்லாமல் தலைவர் கலைஞரையும், விஜயகாந்தையும் அநாகரிகமாக விமர்சிக்க, தேமுதிகவினர் கொந்தளிக்க, தேமுதிகவினரை ஒட்டு மொத்தமாக அவை காவலர்களை விட்டு வெளியேற்றினார் சபாநாயகர். சஸ்பெண்ட்டும் செய்தார். தேமுதிக கிளீன் போல்ட்.

சபை கொந்தளிப்பான நிலையில் நான் எழுந்தேன். ஒட்டு மொத்த சபைக்கும் நான் ஒரு நிமிடம் தாண்டுவேன் என்ற நம்பிக்கை இருந்திருக்காது. முதல் பந்திலேயே டக் அவுட் என்பது எல்லோரது எண்ணமும்.

ஆனால் தளபதி அவர்களும், கொறடா அவர்களும் என் மீது நம்பிக்கையோடு இருந்தனர். நானும் முழு நம்பிக்கையாய் இருந்தேன்.

சபாநாயகர் என்னை பார்த்தார். தேமுதிகவினரை வெளியேற்றிய வெற்றிக் களிப்பு. முயலை பார்க்கும் புலியின் பார்வை. நானும் அப்படியே பார்த்தேன்.

      

பேசுவதற்கு வாய்ப்பளித்த தலைவருக்கும், தளபதி அவர்களுக்கும் இரண்டு வரிகளில் நன்றி சொல்லி சப்ஜெக்ட்டுக்கு சென்றேன். அவர்களை போல் நானும் வாழ்த்துப்பா பாடுவேன், குறுக்கிடலாம் என்று காத்திருந்த அதிமுகவினருக்கு முதல் ஏமாற்றம்.
தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக