பிரபலமான இடுகைகள்

சனி, 4 ஏப்ரல், 2015

நானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாது



சட்டமன்றத்தில், இப்படி ஆரம்பித்தேன்.

“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்திருக்கின்ற எங்களது கழகத் தலைவரும், திராவிட இயக்கத்தின் பெருந்தலைவருமான, தலைவர் கலைஞர் அவர்களுக்கும், எங்களுடைய கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், இளைஞர்களின் எழுஞாயிறு, தமிழகத்தின் எதிர்காலம் தளபதி அவர்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏர் பின்னது உலகம்”, இது உலகம் அறிந்தது. விவசாயிகளுக்கு நாம் எதை செய்கிறோமோ, அதையே கைமாறாக உலகத்திற்கு பெறுகிறோம். எனவே விவசாயிகளின் நலனிலே அக்கறை கொண்டு எந்த அரசாங்கமும் செயல்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகள், கடந்த காலங்களில் சரி வர மழைப் பொழியாததால் பெருத்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். தொடர்ந்து வறட்சிக்கு ஆளாகி, அவதியிலே இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் ஆளுநர் உரையிலே ஏதாவது கருத்தை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்தோம்.

எனவே அரசாங்கம் வருங்காலத்திலாவது கருத்திலே கொள்ளவேண்டுமென்று வேண்டுகிறேன். இந்தத் தொடர் வறட்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் தென்னை மரங்கள் காய்ந்துபோய், பட்டுப்போய் இருக்கின்றன. இதைக் கருத்திலே கொண்டு அதைக் கணக்கெடுத்து தென்னை மர விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அரசு முன் வர வேண்டுமென்று வேண்டுகிறேன்.”

அதிமுகவினர் என்னை சற்று சந்தேகமாக பார்க்க ஆரம்பித்தார்கள், இவ்வளவு அமைதியான உரையா என்று. இதே கடந்த முறை அவையில் பேசும் போது, மூன்றாவது வரியிலேயே அமைச்சர்கள் எழுந்து கொந்தளித்து குறுக்கிட்டனர்.

“தென்னை மரங்களை இன்னும் கணக்கெடுக்காத காரணத்தினால், தென்னை மரங்களை வெட்டாமல், விவசாயிகள் காத்திருக்கிறார்கள் என்கிற நிலை இருக்கிறது என்பதை அமைச்சர் அவர்கள் உணரவேண்டும்.

எங்களுடைய அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முக்கியப் பயிராக இருக்கின்ற முந்திரி, மழை இல்லாத காரணத்தினால் பட்டுப்போகின்ற நிலையில் இருக்கின்றன. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அரசு நிவாரணம் வழங்கும் என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படாத ஓர் அவல நிலை நிலவுகிறது.

இதையும் கருத்தில்கொண்டு எங்கள் பகுதி விவசாயிகளுக்கு முந்திரிக்கும், பருத்திக்கும், சோளத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், கரும்பு விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான, தனியார் ஆலைக்கு கரும்பை வெட்டிக் கொடுத்துவிட்டு இதுவரை பணம் பெறாமல், பாக்கித்தொகை வராமல், அந்த விவசாயிகள் அவதியுறுகிறார்கள். பாக்கித் தொகையை தனியார் ஆலைகள் உடனடியாக வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரும்புக்கு கூடுதல் விலை வேண்டுமென்று தொடர்ந்து விவசாயிகள் போராட்டங்கள் நடத்துகிறார்கள், கோரிக்கை வைத்து வருகிறார்கள். டன்னுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அதே போல், நெல்லுக்கு, குவிண்டாலுக்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்க வேண்டுமென்று…”

அவ்வளவு தான், அதற்கு மேல் தொழில் துறை அமைச்சரால் பொறுக்க முடியவில்லை. எழுந்து தனியார் ஆலைகள் பாக்கி, கரும்பு விலை என ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தார்.

சபாநாயகர், என்னை மீண்டும் பேச அழைத்தார். நான் எழுந்து அவரை பார்த்தேன்.

“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கொஞ்சம் கூறினால் நன்றாக இருக்கும்” என்று கேட்டேன். தொடர்ந்து அமைச்சர்கள் குறுக்கிடுவார்கள் என்பதால் கேட்டுக் கொண்டேன்.

அவர் பதில் சொல்லாமல் என்னையே பார்த்தார். மீண்டும் கேட்டேன். “பதினைந்து நிமிடம்” என்று சொன்னார். (வேண்டா வெறுப்பாக).

“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்தப் பதினைந்து நிமிடத்திற்கு மேல் நானும் போக மாட்டேன். நீங்களும் உள்ளே வந்திடக் கூடாது என்பதைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றேன். சபையில் லேசாக சிரிப்பொலி எழுந்தது.

“சிவசங்கர், சபாநாயகருக்கு நீங்க உத்தரவு போடக்கூடாது. பேசுங்க” என்றார் கடுமையாக. அவருக்கு புரியவில்லை. இப்போது அனைவரும் கவனிக்க ஆரம்பித்தனர்.

“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்தக் கோட்டுக்கு பிறகு நானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாது” என்று நிறுத்தினேன். இந்த முறை அதிமுகவினர் உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர். ஆனால் அண்ணன் சபாநாயகர் மட்டும் சிரிக்கவேயில்லை.

அவர் சிரிப்பொலி, ஆதித்யா சேனல்லாம் பார்க்க மாட்டார் போல…

     

(இணைப்பு; தினத்தந்தி செய்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக