வழக்கமாக மேடையில் அமரும் நாங்கள், அன்று மேடைக்கு எதிர்புறம். ஆமாம் பார்வையாளர்களாக, நிகழ்ச்சிகளை ரசித்தோம். எனக்கோ லேசான காய்ச்சல், பனியோ ஊற்றுகிறது தலைக்கு மேலே.

இருமுவதை பார்த்து, அருகில் இருந்தவர்கள் "வேணும்னா கிளம்புங்களேன்" என்றார்கள். "இருக்கட்டும், பிரச்சினையில்லை" என்று அமர்ந்திருந்தேன். காரணம், எனக்காக தேதி மாற்றி நடக்கின்ற நிகழ்ச்சி. உடனே கிளம்பினால் சங்கடப்படுவார்கள்.



அது "நாடக நடிகர்கள் சங்க" ஆண்டு விழா. ஆர்.எஸ்.மாத்தூரில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி. அழைக்கும் போதே, இந்த ஆண்டு வேண்டாமே என்றேன். "இல்லை, அவசியம் கலந்து கொள்ள வேண்டும்" என்று அன்பு கட்டளை பிறப்பித்தார் சங்கத் தலைவர் பாண்டியன்.

சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். பல்வேறு மாவட்ட சங்கத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். பல்வேறு துறையை சேர்ந்த கலைஞர்களும் பங்கேற்றனர். முதலில் நாதஸ்வர, மேள இசைக் கலைஞர்கள் இசைத்தனர். அடுத்து ஆதி தமிழன் இசையான பறை. இப்படி குழு குழுவாக தங்கள் திறமையை காட்டினர்.

நாங்கள் அமர்ந்து ரசித்ததில் அவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சி. நாடகக் கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் புனைந்து வந்தனர். அரிச்சந்திரன் சந்திரமதி, ராமன் சீதை, கிருஷ்ணன் என்று பல்வேறு நாடகங்களில் நடிக்கும் வேடங்களில் .

அப்போது தான் அவர் வந்தார் . தலையில் கரகம் சுமந்து வந்தார். மேடை ஏறாமல், தரையிலேயே கரகம் ஆடினார். பிறகு சிலம்பக் கம்பு சுற்றினார். அடுத்து சிலம்பு கம்பத்தின் நுனியில் துணியை சுற்றி மண்ணெண்ணெய்யில் நனைத்தார். தீவைத்து சுழற்ற ஆரம்பித்தார்.

கைத்தட்டி மகிழ்ந்தோம். எனர்ஜி'யானார். ஆட்டம் வேகம் பிடித்தது. நாங்கள் பாதுகாப்பாக அமர நினைக்கும் அளவுக்கு வேகம். அடுத்து சைக்கிள் வீலை எடுத்தார். அதில் நான்கு இடங்களில் துணி சுற்றப்பட்டு இருந்தது. அதனை பற்ற வைத்தார். வீல் தீயுடன் தலையில் சுழல ஆரம்பித்தது. கையில் சிலம்பக் கம்பு. இரு முனைகளிலும் தீயுடன் அதுவும் சுழல ஆரம்பித்தது.

தலையில் தீயுடன் வீலும், கையில் கம்பும் லயம் தப்பாமல் சுழல, அவர் கருப்பு வெள்ளை படத்தின் ஹீரோ போல் ஸ்டெப் வைத்து தனது சண்டைக் கலையை வெளிப்படுத்தினார். தலைக்கு மேல் இருந்து தீப்பொறிகள் அவர் மேல் விழுந்தன. சிறிதும் லட்சியம் செய்யவில்லை.

அவர் மகாலிங்கம். ஆண்டிமடம் ஒன்றியம் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். சிறு விவசாயி, விவசாயக் கூலியாகவும் பணி ஆற்றக் கூடியவர். கலை ஆர்வலர். நாடகம், திருவிழா போன்றவற்றில் குறவன் வேடம் கட்டி ஆடக் கூடியவர். துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். 70 வயதை தாண்டியிருப்பார். ஆனால் வயது அவர் கலை ஆர்வத்தை, வேகத்தை சிறிதும் குறைக்க முடியவில்லை.

இறுதியாக அவர் செய்த வேலை தான் உச்சம். வீர விளையாட்டுகள் நிகழ்த்தியவாறே தரையில் இருந்து மேடை ஏற முயற்சித்தார். படிக்கட்டு வழியாக அல்ல, காற்றில் தாவி ஏற முயன்றார், கையை மேடையில் ஊன்றாமல்.

மேடை நான்கு அடி உயரம். இவர் போதிய உயரம் எகிறாததால், இடுப்பில் மோதி கீழே விழுந்தார். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் மறுபடியும் முயன்றார்.

கையில் தீயுடன் கம்பு இருந்ததால், கையை மேடையில் ஊன்றாமலே இந்த முயற்சி.

நெஞ்சில் மோதி விழுந்தார். அசரவில்லை, மறுபடியும் முயன்றார். வலியைக் காட்டிக் கொள்ளவில்லை. பார்வையாளர்கள் அதை நகைச்சுவையாக எண்ணி கைத்தட்டி மகிழ்ந்தனர். ஆனால் அவர் ஆலம் விழுதைப் பிடித்து தாவும் எம்ஜியார் ஆகவே தன்னை நினைத்துக் கொண்டது போல தோன்றியது.

அய்ந்தாவது முயற்சியில் வென்றே விட்டார். இப்போது மேடையில் ஏறி,
 தீகம்பை சுற்றினார். பார்வையாளர்களை நோக்கி கண்களை சுழற்றினார், அது வெற்றிப் பார்வை. நம்பியாரை வீழ்த்திய எம்.ஜி.ஆர், வாள் உயர்த்தி பார்க்கும் அதே பார்வை.

அந்தப் பார்வை, அய்ந்து முறை பட்ட அடிகளை, மேலே விழுந்த தீப்பொறிகளை எல்லாம் விழுங்கியிருந்தது.

நாடக மேடையோ, திரையோ, வாழ்க்கையோ, ஒரு வெற்றிப் புன்னகை எல்லா வலிகளையும் துடைத்தெறிகிறது.

# வலிகளை தாங்குபவன் தான் வெற்றியாய் புன்னகைக்க முடியும் !