பிரபலமான இடுகைகள்

வியாழன், 12 நவம்பர், 2015

எல்லாப் புகழும் மோடிக்கே

உள் அறையில் இருந்து எட்டிப் பார்த்தேன். ஹாலில், டிவியில் சினிமா ஓடிக் கொண்டிருந்தது. டிவி பார்க்கும் வாய்ப்பு குறைவு என்பதால், பார்க்கலாமா என்ற எண்ணம். நான் போனால் மற்றவர்கள் பார்ப்பது பாதிக்கும், வேண்டாம் என முடிவெடுத்தேன்.

சரி, பீகார் தேர்தல் குறித்து ஒரு நிலைத் தகவல் போடுவோம் என அலைபேசியை எடுத்தேன். அண்ணன் மோடியை நினைத்தவுடன் அருள்வாக்கு சொல்வது போல் கடகடவென அவர் குறித்த செய்திகள், மனதில் ஃப்ளாஷ் அடிக்க ஆரம்பித்தன.

20 நிமிடங்கள் தான். ஸ்டேடஸ் ரெடி. சில சமயம் இரண்டு  நாட்களுக்கு  மூளையை குழப்பிக் கொண்டே இருக்கும்  சில நிலைத் தகவல்கள். சில இப்படித் தான், நிமிடக் கணக்கிலேயே  உருவெடுத்து விடும் .

ஆனா கொஞ்ச நேரத்தில் உருவான இந்த  நிலைத் தகவல் படுத்துற பாடு தான் தாங்கல. உள்டப்பாவில் வந்து அறிவுரை நிறைய சொல்றாங்க. ஒருத்தர் "senseless letter"ன்னு வெடிக்கிறாரு. இன்னொருத்தர் "உன் வேலைய பாரு. பிரதமருக்கு லெட்டர் எழுதறது உன் வேலை இல்ல"ங்கிறார்.

"It is harassing" அப்படின்னு ஒரு தாக்கீது. "It is spam"அப்படின்னு ஒரு ஓலை. இப்படியே பல சட்டப்பூர்வ எச்சரிக்கைகள். கடைசியா மோடி தான் இன்னும் பேசல, அண்ணன் ஹெச்.ராஜா திட்டல. மொத்தமா இப்ப ஸ்டேடச காணோம்.

ஆனா, இன்னொரு பக்கம் ஆரவாரமா போவுது. ஸ்டேடச போட்டுட்டு நான் தூங்கிட்டேன், ஆனா அது தூங்கல. காலையில் 1300 விருப்ப சொடுக்குகள். மாலை 2,100, மறுநாள் காலை 3,500 லைக்குகள். அப்புறம் தான் ஸ்டேடச காணோம்.

அப்புறம் மீள்பதிவு போட்டு  அது இப்போ 2,500 லைக்குகள் தாண்டி இருக்கு.

ஒரு அதிமுக நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு. "அண்ணா, உங்க ஸ்டேடச எங்கக் கட்சிக்காரங்க நான்கு, அய்ந்து பேரு ஷேர் பண்ணி இருக்கறத பார்த்தேன். மகிழ்ச்சி" என்றார்.

நைஜீரியாவில் இருந்து ஒரு தோழர், "சார், உங்க கடிதத்த 'ஒன் இண்டியா'வில் பார்த்தேன். சந்தோஷம். எழுத்து நல்லா இருக்கு". அப்புறம் News Hunt, Tutyonline என இணைய இதழ்களில் வெளிவந்த செய்திகள் குறித்தத் தகவல்கள்.

இன்னொரு அதிமுக தம்பி,"அண்ணே சான்ஸ்லெஸ். பிரிண்ட் அவுட் எடுத்து இரண்டு அமைச்சர்களிடம் கொடுத்தேன். பாராட்டினார்கள்" என்றார். ஆயிரம் இருந்தாலும் திராவிட ரத்தம் தானே.

இன்று இரண்டு அழைப்புகள். தி.க மண்டலத் தலைவர் அண்ணன் காமராஜ்,  விடுதலை நிருபர் ஶ்ரீதர். "விடுதலை நாளிதழில் உங்கள் கடிதம் வெளியிடப் பட்டிருக்கிறது. சிறப்பாக உள்ளது". பாராட்டினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சென்றிருந்தேன். சகோதரர் தீன் திருமண வரவேற்பு. பத்து இளைஞர்கள் நின்றிருந்தனர். ஒரு இளைஞர் முன்னால் வந்தார். "அண்ணே, மோடிக்கு கடிதம் எழுதிய எம்.எல்.ஏ நீங்க தானே ?". "ஆமாம்". இப்போது  அனைவரும் கைக் குலுக்கினார்கள்.

இது அண்ணன் மோடிக்கு கிடைத்த வெற்றி. அவர் மீதான அன்பு தான் இத்தனையும். எல்லாப் புகழும் அண்ணன் மோடிக்கு தான்.

# தெறிக்க விடறார்ல அண்ணன் மோடி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக