பிரபலமான இடுகைகள்

திங்கள், 16 நவம்பர், 2015

கதைத்த சேதி

கதைத்ததில் நேரம் போனதே தெரியவில்லை. வவுனியா தமிழ் என்னைக் கட்டிப் போட்டது. சில நேரங்களில் அர்த்தம் புரியாமல் தடுமாறினேன். அப்போது எல்லாம் பிரேக் போட்டு, திரும்ப சொல்லக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

ஆமாம் அந்த ஈழத் தமிழ் நண்பரை சந்தித்தேன். முகநூல் மூலம் தான் அறிமுகம். ஒரு நாள் தலைவர் கலைஞரை வியந்து பாராட்டி ஒரு பதிவு போட்டார். பதிவைக் கண்டு வியந்தேன்.  பிறகு அதனை பகிர்ந்தேன். அதன் பிறகு நெருக்கமானார். அடிக்கடி உள்டப்பியில் கதைப்போம்.

சென்னை வருவேன், சந்திப்போம் என்றார். நெருக்கடியானப் பணிகளுக்கு இடையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நல்ல வாய்ப்பு. உண்மையான ஈழத்து நிலவரம் பிடிபட்டது. அக்குவேறு, ஆணிவேறாக எடுத்துரைத்தார்.

"ஆன்றன் பாலசிங்கம் நின்றிருந்தா, இந்த நிலை இல்ல. அவர் உலகத் தலைவர்களை, இந்தியத் தலைவர்களை சந்தித்து நிலைமையை சரி செய்து இருப்பார். காலம் உதவவில்லை", என்றார். இப்படி பல செய்திகளை சொன்னார்.

பிசியோதெரபி படித்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவாறே உதவி இருக்கிறார். இதனை சிங்கள ராணுவம் மோப்பம் பிடித்த வேளையில், ரெட் கிராஸ் உதவிக்கு வந்திருக்கிறது.

இவரது பணியால் கவரப்பட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், இலங்கையை விட்டு வெளியேற ஏற்பாடு செய்தனர். சுவிட்சர்லாந்து போக விசா ஏற்பாடு செய்துள்ளனர். தப்பினார், இல்லை என்றால் இன்று ஆள் இருந்திருப்பாரா என்பதே சந்தேகம் தான். ஆனால் அவர் இதை சர்வ சாதாரணமாக சொன்னார். மிரண்டுப் போனேன்.

இப்போது சுவிட்சர்லாந்தில் மருத்துவத் துறையில் பணிபுரிகிறார். ஒரு மணி நேரம் அளவளாவினோம். தாய், தந்தை, சகோதரிகள் இலங்கையில் தான்.  "இன்னும் பத்து வருடம் நாட்டுக்கு போக முடியாது. போனால், அடுத்த நொடி திருப்பி விடுவார்கள்". அவர்கள் ஒருபுறம், இவர் ஒருபுறம். என்ன வாழ்க்கை.

ஆனாலும் மனிதர் அசரவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு முடிச்சையும் லாகவமாகவே அவிழ்கிறார். இத்தனை துன்பங்களுக்கும் இடையே சர்வதேச அரசியலை பிரித்து மேய்கிறார்.

"சென்னைக்கு எப்போது முதலாவதாக வந்தீர்கள் ?". "இது தான் முதல் முறை".

"சென்னை எப்படி இருக்கிறது?". "நான் நினைத்ததற்கு நேர் எதிராக".  "ஏன்?".  "தளபதி மேயராக இருந்த போது கட்டப்பட்ட மேம்பாலங்கள் போல பல வசதிகள் செய்யப்பட்டு சென்னை சிறப்பாக இருக்கும் என்று நினைத்து வந்தேன். வருத்தமாக இருக்கிறது".

"சென்னை வெள்ளக் காடாக இருக்கிறது.  கழக ஆட்சி என்றால் இந்நேரம் தளபதி வந்து நின்றிருப்பாராம். ஆட்டோ டிரைவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஏன் மக்கள் மாற்றி முடிவெடுத்தார்கள்? இப்போது அவதிப் படுகிறார்களே"

"சரி, தலைவர் கலைஞரை பாராட்டுகிறீர்களே, உங்களுக்கு பிரச்சினை இல்லையா?". "இருக்கிறது தான்". "யாரால்?". "இன்றைய இளைஞர்களால்"".

"இயக்கத் தோழர்களால்?".  "அவர்களுக்கு உண்மை தெரியும். இன்றைய சிறுவர்களுக்கு தெரியாது. சிலர்,'நான் தான் முதல்வர். முதல்வரான அடுத்த மூன்று மணி நேரத்தில், ஈழம் அமைக்கப்படும்' என முழங்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரியும், இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்றன, அதில் ஒன்று தான் தமிழ்நாடு என்பது. ஆனால் இவர்கள் அது தெரியாமல் அள்ளிக் கொடுக்கிறார்கள்".

அவர் பெயர் விவேகானந்த ரூபன், அன்பு சகோதரர்.

# உண்மை தெரிந்தவர் உரைக்கிறார். உணர்வீர் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக