பிரபலமான இடுகைகள்

திங்கள், 29 பிப்ரவரி, 2016

செம்பருத்தி IPS

கொளப்பாடி கிராமத்தில் படிப்பகக் கட்டிடம் திறந்து வைத்தார் செம்பருத்தி. படிப்பகம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.

செம்பருத்தி. பலருக்கு நினைவிருக்கும், புதியவர்களுக்கு தெரியாது.

சிங்கப்பூர் சென்ற போது, அங்கு இருந்தவர்களும் செம்பருத்தி குறித்து விசாரித்தார்கள். எனது பதிவை படிப்பவர்கள் செம்பருத்தி குறித்து விசாரிப்பார்கள். அதற்கு காரணமான பதிவை மீண்டும் பகிர்கிறேன்.
*****************

2013 ஆகஸ்ட்.

கொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்து காரில் ஏறினோம்...

"சார்" ஒரு சிறு குரல்.

திரும்பிப் பார்த்தால், கார் கதவு ஓரம் ஒரு சிறு பெண், பள்ளி யூனிஃபார்மோடு. சுற்றிலும் வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள். 

" என்னம்மா ?" என்றேன். " லைப்ரரியை திறக்கமாட்டேங்கறாங்க சார்". காரை விட்டு இறங்கி விட்டேன்.

" ஏன் திறக்கலை, என்ன காரணம்னு தெரியுமா ?" "அது தெரியலிங்க சார்" சுற்றிலும் நின்ற பெரியவர்களிடம் கேட்டேன் "என்ன காரணம் தெரியுமா ?". அவர்களுக்கு லைப்ரரி என்று ஒன்று இருப்பதே தெரியுமா என்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன்.

சிறுமியிடமே திரும்பினேன், "சாவி யாருகிட்டமா இருக்கு ?" "அது யாரோ வெளியூர் ஆள் கிட்ட இருக்குதாம் சார்" "எந்தக் கட்டிடத்தில் இருக்கு" "ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பின்னாடி இருக்கு சார்" "சரிம்மா, நான் விசாரிச்சி திறக்க ஏற்பாடு பண்றேம்மா"

காரில் ஏறினேன். "எங்கம்மா படிக்கிற ?" "பக்கத்தில வெண்மணி கிராமத்தில படிக்கிறேன் சார்" "எத்தனாவதும்மா?" "எட்டாவது சார்" "பேர் என்னம்மா ?"

"செம்பருத்தி சார்"

அடுத்த தெருவிற்கு சென்று, கொடியேற்றி வைத்து விட்டு கார் ஏற வருகையில் மீண்டும் செம்பருத்தி, தோழிகளோடு. சாக்லேட் கொடுத்தார். "எதுக்கும்மா ?" "நாளைக்கு எனக்கு பிறந்தநாள் சார்" "மகிழ்ச்சிம்மா, நல்லா படி" வாழ்த்தினேன். "சார் லைப்ரரிய மறந்துடாதீங்க”

இன்று ஊராட்சி மன்றத் தலைவரை தொடர்பு கொண்டு விசாரித்ததில், நூலகத்திற்கு தனிக் கட்டிடம் இல்லை என்பது தெரிய வந்தது, வேறு கட்டிடத்தில் இயங்குகிறது.

நூலகக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்க உள்ளேன்...

# கொளப்பாடியின் அறிவுக் கண் திறக்கும் “செம்பருத்தி” !
****************

அங்கு இருந்த நூலகம், பகுதி நேர நூலகம் என்பதால்  ஒதுக்கிய நிதி திரும்பி வந்தது. மீண்டும் அதற்கு புதிய தலைப்பு "படிப்பகம்" என்று வைத்து அடுத்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கினேன்.

கட்டிடம் கட்டப்படும் போதே செம்பருத்தியை தொடர்பு கொள்ளச் சொன்னேன். கட்டி முடித்த உடன் திறப்பு விழாவிற்கு செம்பருத்தியை அழைக்கச் சொன்னேன். இன்று திறப்பு விழா.

வரவேற்பு பதாகையில் செம்பருத்தி புகைப்படம்.  கல்வெட்டில் செம்பருத்தி பெயர் திறப்பாளர். செம்பருத்தி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். நாங்கள் எல்லோரும் உரையாற்றிய பிறகு, செம்பருத்தி இறுதியில், "நூலகம் கேட்ட காரணத்தை விளக்கி, நன்றி தெரிவித்து" சிறப்புரையாற்றினார். இன்று செம்பருத்தி தான் வி.ஐ.பி.

பின்னாளில் கல்விக்கு உதவுவதற்கு அலைபேசி எண் கேட்ட உடன் எழுதிக் கொடுத்தார், "செம்பருத்தி IPS ". நூலகம் கேட்ட போது இருந்த அதே உறுதி. நிச்சயம் ஆவார். உதவிடுவேன்.

# சல்யூட் செம்பருத்தி IPS !                                              

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

அரசியல்வாதி எல்லாம் அயோக்கியன் அல்ல

அரசியல்வாதிகள் என்றால் வெறுப்பு கொள்வோருக்காக ஒரு தகவல்.

மீண்டும் உஞ்சினி, செதலவாடி, வீராக்கன், நாகல்குழி கிராமங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற போகிறோம் என நோட்டீஸ் கொடுத்தார்கள் நெடுஞ்சாலை துறையினர். நான் மீண்டும்  எதிர்ப்பு தெரிவித்தேன்.

செய்தியை புதிதாக படிப்பவர்களுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்.

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உள்ள கிராமங்கள் தான் மேலே குறிப்பிட்டவை. உஞ்சினியில் இருந்து செதலவாடி, வீராக்கன், நாகல்குழி வழியாக ஒரு சாலை வாரியங்காவல் கிராமத்தை அடைகிறது. இது கிராம சாலை. காலையில் ஒரு நடை, மாலையில் ஒரு நடை ஒரு பேருந்து இந்த சாலையில் செல்கிறது. மற்றபடி இரு சக்கரவாகனங்களே அதிகம் புழங்கும்.

வருவாய் துறை திடீரென  களமிறங்கியது. சர்வே செய்யப்பட்டது. ஒவ்வொரு வீடாக குறியிட்டார்கள். குறியிட்ட வரை இடிக்க வேண்டும் என அறிவித்தார்கள். அப்புறம் தான் பிரச்சினையை சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் என் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.

அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். சரியான பதிலளிக்க தடுமாறினார்கள். புகார் வந்திருக்கிறது, அதன் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்பதே பதிலாக வந்தது. நான் குறிப்பிட்ட கிராமங்களுக்கு சென்றேன். அப்போது தான் பிரச்சினையின் ஆழம் தெரிந்தது.

அந்த சாலையை அகலப்படுத்தும் திட்டம் ஏதும் நெடுஞ்சாலை துறை வசம் இல்லை.

வீராக்கன் கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னை தலைமை செயலகத்தில் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டார். அதற்கு பிறகு சமூக சேவையில் ஆர்வம் கொண்டார். இந்த சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் எழுதினார்.

புகார் மீது நடவடிக்கை இல்லை, வழக்கம் போல். தாசில்தாரில் துவங்கி, கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் வரை புகார் படையெடுத்தார். கடைசியாக ஒரு அரசாணையை குறிப்பிட்டு, நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோர்ட்டுக்கு போவேன் என்று கடிதம் எழுதிவிட்டார்.

அந்தப் புகாருக்காவே இந்த நடவடிக்கை. சாலையில் இருந்து 50 மீட்டர் உள்ளடங்கி இருக்கும் குடிசையை குறியிட்டிருந்தார்கள், சாலைக்கு அவ்வளவு இடம் தேவையில்லை. சாலை ஓரம் இருக்கும் மின்கம்பங்களை தாண்டி உள்ளே இருக்கும் வீடுகளை இடிக்க குறியிட்டிருந்தார்கள். சாலையின் இருபுறமும் மழைநீர் ஓடும் பள்ளத்தை தாண்டி இருக்கும் வேலிகளை அகற்ற வேண்டும் என்றார்கள். எதுவும் நியாயமில்லை.

மக்கள் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். "சாலை துவக்கத்தில் இருந்து இறுதி வரை சாலை அகலப்படுத்த தேவையான இடத்தை, சீரான ஒரே அளவில் எடுத்துக் கொள்ளட்டும். அல்லது இன்னொரு வழி இருக்கிறது. வருவாய்த்துறை குறியிட்டிருந்தது 1992 சர்வே. இதற்கு முன் 1965 சர்வே ஒன்று இருக்கிறது. அந்த சர்வேபடி இடித்துக் கொள்ளட்டும்".

26.01.2016. வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை என உஞ்சினி கிராமத்தில் குவிந்தனர். நாங்களும் சென்றோம். குறியிட்ட வீடுகளை இடிக்க ஆயத்தமாயினர். அதிகாரிகளிடம் பேசினேன். "தேவையான இடத்தை சொல்லுங்கள். நானே பேசி அகற்றி கொடுக்கிறேன். தேவையில்லாத பகுதியில் இடிப்பதை ஒப்புக் கொள்ள முடியாது".

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்தப் பணியை ஒத்திவைத்து சென்றனர் அதிகாரிகள்.

சில வீடுகள் முற்றிலும் இடிக்கும் நிலை, சில வீடுகளை இடித்தால் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும். இரண்டு பஸ்கள் ஒரே நேரத்தில் போனாலும் , அந்த இடம் தேவைப்படாது. வீடுகளை இழப்போருக்கு மாற்று இடம் கொடுக்கவும் நடவடிக்கை இல்லை. 1965 சர்வே படி பார்த்தால் அந்த சாலையே கிடையாது. அதெல்லாம் அரசாங்க புறம்போக்காகத் தான் இருந்திருக்கும். சும்மா இருந்ததால், சாலை அமைக்கும் போது நெடுஞ்சாலைத்துறை கணக்கில் சேர்த்திருக்கிறார்கள். இல்லாவிட்டால், வீடற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய இடம் தான் அது.

இந்த பிரச்சினையின் ஆழம் புரியாமல், சில பிரகஸ்பதிகள், ஒரு சட்டமன்ற உறுப்பினரே ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுக்கலாமா என பிதற்ற ஆரம்பித்தனர். ஆளுங்கட்சி இது குறித்து சிறிதும் கவலை கொள்ளவில்லை.

மீண்டும் நேற்று (25..02.2016), பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. காலையிலேயே வீராக்கன் கிராமத்தில் காவல்துறையின் அதிரடிப்படை குவிக்கப்பட்டது. இரவில் இருந்தே எனக்கு அழைப்பு, அவசியம் வாருங்கள். காலையில் நானும் சென்றேன்.

அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், நான் செல்வது கடமை. ஆனால் உள்ளாட்சியில் அந்தப் பகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக தோழர்களும் என்னோடு குவிந்தனர். ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, பொதுக்குழு செல்வராஜ் என நூற்றுக்கும் மேற்பட்டோர்.

அப்போது ஒரு நபர்,"இதுக்கு ஏன் அரசியல்வாதி வரணும்? புறம்போக்கில் இருந்தால் இடிக்கட்டுமே" என்று பொத்தாம் பொதுவாகப் பேசினார். எட்டி அந்த ஆளின் துண்டைப் பிடித்தேன்,"மக்கள் கூப்பிட்டு வந்திருக்கன். எத இடிக்கனுமோ, அத அதிகாரிகிட்ட சொல்லு. என்ன கேக்காத. தப்பா இடிச்சா, உன்னால காப்பத்த முடியுமா?" என்றேன். என் கோபம் உணர்ந்து, ஊர்காரர்கள் அந்த ஆளை தள்ளி துரத்தினர். பிறகு தான் தெரிந்தது, அவர் அதிமுககாரர்.

ஒரு காலத்தில் எல்லாம் புறம்போக்கே. காடு திருத்தி அனுபவித்தவர்களின் வாரிசுகள் இன்று பட்டா இடம் என சொந்தமாகக் கொண்டு ஆள்கிறார்கள், அவ்வளவு தான். எவன் தலையில் தூக்கிக் கொண்டு வந்தது இந்த சொத்தெல்லாம். அடுத்தவன் கஷ்டத்தில், ஆனந்தப்பட இப்படியும் சில ஜீவன்கள்.

வருவாய்த்துறையினரும் நெடுஞ்சாலைத்துறையினரும் வந்தனர். கடந்த முறை வைத்த வாதத்தையே வலியுறுத்தினோம். வீட்டுக்காரர்களுக்கு தெரிவித்து சர்வே மீண்டும் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினோம். பேச்சுவார்த்தைக்கு பிறகு, வேலி, மரங்கள், வீட்டின் முன்புறம் நீட்டப்பட்டிருக்கும் அமைப்புகள் ஆகியவற்றை அகற்ற ஒப்புக் கொண்டோம்.  அத்தியாவசியமான இடங்களில் வீடுகளின் பகுதியை ஒரிரு நாட்களில் அகற்றவும் மக்கள் இசைவளித்தனர்.

அரசியல்வாதிகள் நாங்கள் உடன் இருந்திருக்காவிட்டால் நிலைமையே வேறாகியிருக்கும். அந்த அப்பாவி ஏழை மக்களின் வீடுகள் தேவையற்ற முறையில் இடிக்கப்பட்டு நடுரோட்டில் நின்றிருப்பர். அந்த மக்களால் காவல்துறையை எதிர்க்கும் துணிவில்லை.

காலை 09.30 முதல் மாலை 06.00 வரை, ஆக்கிரமிப்பு அகற்றிய ஜேசிபி இயந்திரத்தின் பின்னாலேயே, தெருதெருவாக மொட்டை வெயிலில் சுற்றி வந்தோம் நாங்கள். எங்களை கடைசி வரை இருக்க வேண்டும் என மக்கள் அன்புக் கட்டளை இட்டு விட்டார்கள். நாங்களும் மக்களோடு இருந்தோம்.

ஜெயலலிதா பிறந்தநாள் போர்டு ஒன்று சாலைக்கு இடைஞ்சலாக நின்று கொண்டிருந்தது. போர்டில் இருந்த ஜெ'வைத் தவிர,  அதிமுகவினர் கண்ணிலேயேபடவில்லை. பாமக தோழர்கள் வீராக்கன் கிராமத்தில் அதிகாரிகளுக்கு எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

ஒரு அறிவாளி துபாயில் உட்கார்ந்துக் கொண்டு இது தேர்தல் கால அரசியல் என்று சொல்லி இருக்கிறார். தேர்தல் வர இரண்டு  வருடம் இருக்கும் போதே சன்னாசிநல்லூர் மணல் குவாரி பிரச்சினையில் போராடினோம். ஊர் மக்கள் 500 பேரோடு சேர்த்து, எங்கள் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. நான் தான் முதல் குற்றவாளி அந்த வழக்கில். தேர்தல் வர மூன்று வருடம் இருக்கும் போதே முந்திரிக்கு நிவாரணம் கோரி போராடினோம். அப்போது வேறு  யாரும் களத்திற்கு வரவில்லை.

இதைவிடக் கொடுமை இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்படும் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் நான்கு வீட்டினர் கூட திமுகவினராக இருக்கமாட்டார்கள். என்னை இதில் நாடியவரே பாமக தோழர் சேட்டு தான். இன்றும் அவர் பாமக தான். அவர் ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சியினர் உதவியையும் நாடி இருக்கிறார். ஆனால், ஜனவரி 26ல் களத்தில் நின்றது நாங்கள் தான். தொடர்ந்து நிற்கிறோம், நிற்போம்.

இந்த அறிவாளிகளின் விமர்சனம் எல்லாம் பொருட்டே இல்லை.

காலை வீராக்கனில் பேச்சுவார்த்தை முடிந்து அதிகாரிகளோடு மேற்கே நடந்த போது, நிறுத்தி "கிழக்கே வருவீங்கள்ல தம்பி"என்றுக் கேட்டாரே அந்த அம்மாவின் கண்களில் இருந்த பரிதவிப்பு,

நாகல்குழி முடித்து மீண்டும் வீராக்கன் கிராமத்தை தாண்டும் போது கொடி கட்டிய வாகனத்தைத் தேடி, உள்ளே யாரிருக்கிறார் என்பதை கூட அறியாமல் வணங்கிய 80 வயது பெரியவரின் நன்றி,

உஞ்சினி கிராமத்தில் கடைசியாக பணி முடித்து கிளம்பும் போது வணங்கி அனுப்பினார்களே, அவர்களது அன்பு, இவை போதும்.

அந்தப் பாமரர்களின் ஆனந்தக் கண்ணீரின் ஈரம் போதும். உங்கள் வறட்டு வாதம் தூசு, அந்த உணர்வுக்கு முன்.

# அரசியல்வாதி எல்லோரும் அயோக்கியன் அல்ல ! .

புதன், 24 பிப்ரவரி, 2016

ஜெயலலிதா வாழ்க !

எனக்கு நண்பர்கள் எல்லோரையும் பிறந்தநாளில் வாழ்த்தித் தான் பழக்கம். இன்று  ஜெயலலிதா அவர்களுடைய பிறந்தநாள். அவர் எனக்கு நண்பர் கிடையாது. ஆனாலும் தமிழகத்தின் முதல்வர். நடுநிலை நணபர்கள் வாழ்த்தும் போது, நானும் வாழ்த்துவது தானே மரபு. வாழ்த்துகிறன்.

தான் மாறிவிட்டதாக ஆரம்பத்தில் காட்டிக் கொண்டாலும், சமச்சீர் கல்வியை தடை செய்து, திருவள்ளுவர் படம் மீது ஸ்டிக்கர் ஒட்டி, தான் பழைய ஜெயலலிதா தான் என வெளிப்படுத்தினாரே, அது தான் ஜெயலலிதா. அதற்காக வாழ்த்துகிறேன்.

மக்கள் கருத்து பற்றி கவலை கொள்ளாமல், புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சேட்டு வீட்டு கல்யாணத்திற்கு வாடகைக்கு விடுவது என பரபரத்தாரே, அதுதான் ஒரிஜினல் ஜெயலலிதா . அதற்காக பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.

கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தாலும், கட்சியில் இருக்கும் அடிமைகளை பால்குடம் தூக்க வைத்து, மொட்டை போட வைத்து , மண்சோறு சாப்பிட வைத்து, அலகு குத்த வைத்து எம்.ஜி.ஆர் கால அனுதாபத்திற்கு அயராமல் முயற்சித்தாரே, அதற்காக வாழ்த்துகிறேன்.

சட்டமன்றத்தில் அரைமணி நேரம் உட்கார்ந்து, தலைமை செயலகத்திற்கு மாதம் ஒரு முறை வந்து, கட்சி தலைமையகத்திற்கு வருடம் ஒரு முறை வந்தாலும், வழியெங்கும் கட்அவுட் வைக்க செய்து, பாதையை டிஜிட்டல் பேனரால் மூட செய்து, அதகளத்தால் அதிர செய்யும் அம்மாவை வாழ்த்துகிறேன்.

அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா மருந்தகம் என துவங்கி இப்போது சென்னை முதியோருக்கு இலவச பஸ்பாஸ், வீட்டுக்கு மினரல் வாட்டர் என சென்னைக்கான திட்டங்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழகத்தை மயக்க நினைக்கும் உங்கள் "நிரவாகத் திறமை"க்காக வாழ்த்துகிறேன்.

செம்பரம்பாக்கம் ஏரி தானாகவே திறந்து கொண்டது, ஓடைகள் எல்லாம் நிரம்பிக் கொண்டது, வானம் பத்து மாரி பொழிந்து சென்னையை அழித்தது என ஊடகங்களை கதற வைத்து, பத்திரிக்கைகளை அழ வைத்த  திறமைக்காகவே வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.

நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம், காவல் துறை என வித்தியாசக் கூட்டணி அமைத்தவர் சட்டமன்ற தேர்தலில்
மக்கள் நலக் கூட்டணி, பாஜக கூட்டணி, முதல்வர் வேட்பாளர்  என அரசியல் சித்து விளையாட்டில்  அசர வைக்கும் செல்வி ஜெயலலிதாவை வாழ்த்துகிறேன்.

ஆட்சித் துவக்கதில் திருவள்ளுவர் மீது ஒட்ட ஆரம்பித்த ஸ்டிக்கரை வெள்ள நிவாரணத்திலும் ஒட்டி, மணமக்கள் நெற்றியிலும் கட்டி, இப்போது பச்சையாகக் குத்தி பதற வைக்கும் உங்கள் நெஞ்சுரத்திற்காக வாழ்த்துகிறேன்.

பேருந்து கட்டணம் ஏற்றி, மின்கட்டணம் ஏற்றி, பால் விலை ஏற்றி, வெள்ள காலத்தில் சிறப்பான நிர்வாகம் செய்து மக்களை காப்பாற்றி, மக்கள் மனம் குளிர செய்துள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆயிரம் ஆண்டு காலம் வாழ்க !

#  ஜெயலலிதா நாமம் வாழ்க !

அம்பில் தர்மலிங்கம்

"அம்பில் அப்பாவயும், உங்களயும் பாக்கனும்னு ஆசப்படறாரு. ஒடம்பு ரொம்ப சரியில்லாம இருக்காரு. ஆஸ்பத்திரி போய் பாத்துட்டு வந்து ஊருல தான் இருக்காரு". சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள 15.02.2016 அன்று சென்னை சென்று கொண்டிருந்த போது இந்த அலைபேசி அழைப்பு.

"அடடா, நான் இப்போ விழுப்புரம் தாண்டிட்டேன். நாளைக்கு சட்டமன்றம் கூடுது. நேத்து பூரா பொன்பரப்பி, மருதூர் பக்கந்தான் இருந்தன். சொல்லி இருந்தா வந்து பாத்திருப்பேனே",என்றேன். "சரி. ஊருக்கு வந்தப்புறம் வந்து பாருங்க",என்றார் அம்பிலின் அண்ணன் மகன்.

அம்பில் என்றால் தர்மலிங்கம். செந்துறை ஒன்றியம் குமிழியம் கிராமத்தை சேர்ந்தவர். 92 வயது.

அன்பில் தர்மலிங்கம் அவர்கள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுகவின் செயலாளராக வலிமையாக செயல்பட்டவர். இந்த தர்மலிங்கம் அவரை போல்  குமிழியம் கிராமத்தில் கழகத்தின் வலுவான மனிதராக இருந்தக் காரணத்தினால், "அன்பில்" என கழகத் தோழர்களால் அழைக்கப்பட்டார்.

அன்பில் என்பது கிராமத்து வழக்கில் அம்பில் ஆனது. கழகத்தவருக்கு மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்திலும் அம்பில் என்றே ஆகிப் போனார். தர்மலிங்கம் என்பதை விட அம்பில் என்றே அறியப்பட்டார். நெடிதுயர்ந்த உருவம். ஒல்லியான தேகம். கணீர் என்றக் குரல். எந்தக் கும்பலிலும் தனித்துத் தெரிவார்.

எனது தந்தையாருக்கு நெருங்கிய நண்பர். கழக நிகழ்ச்சிகள், மாநாடுகள்,  தேர்தல் பணி என்றால் குடும்பப் பணியை தள்ளி வைத்து விட்டு முழுவீச்சில் செயல்படுவார். எதிரணியினர் வாதம் செய்தால், கறாரான வார்த்தைகளில் நறுக்குத் தெரித்தார் போல் பேசுவார். எனக்கு இரண்டுத் தேர்தல்களிலும் பம்பரமாக பணியாற்றியவர்.

புதன்கிழமை இரவு குமிழியம் கிராமத்திலிருந்து பழனிவேல் அழைத்தார். "அம்பில் பேசனும்கிறார்", என்று அலைப்பேசியை அவரிடம் கொடுத்தார். "தம்பி, அப்பா எப்படி இருக்காங்க. ரெண்டு பேரையும் பாக்கனும்னு ஆச" என்றார் அம்பில். "அப்பா வர்றது சிரமம். எனக்கு சனிக்கிழமை வர சட்டமன்றக் கூட்டம் இருக்கு. முடிச்சு வந்து, ஞாயிற்றுக்கிழமை காலைல உங்கள பாத்துட்டு மத்த வேலைய பார்க்கிறேன்"என்றேன்.

"ஆட்சிய பிடிச்சுடனும். கலைஞர் முதலமைச்சராகனும். கடுமையா வேல பாருங்க. எனக்கு தான் முடியல",என்றார். 92 வயதில், இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் என்ணம் எல்லாம் கழகம் தான். "அதெல்லாம் கவலப் படாதீங்க. தலைவர் தான் முதலமைச்சர். நீங்களும் நல்லா இருப்பீங்க",என்றேன். "சரி, வந்த உடனே வாங்க" என்றார் அம்பில்.

சட்டமன்றம் வியாழனில் இருந்து புறக்கணிப்பு என்றாலும், சில பணிகள் முடித்து, சனிக்கிழமை காலை தான் கிளம்பினேன். மாலை பொன்பரப்பி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக குமிழியம் சென்று அம்பில் அவர்களை சந்திப்பதாகத் திட்டம். அதற்குள் காலம்  முந்திக் கொண்டது.

அம்பில் மறைவுச் செய்தி. நேரே குமிழியம் சென்றேன். கழக வேட்டியுடன், தலைப்பாகைக் கட்டி படுத்திருந்தார். தூங்குவது போலவே இருந்தார் அம்பில். இறுதி ஊர்வலத்தில் கட்சி வேறுபாடின்றி ஊரார் திரண்டனர்.

அம்பில் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்.

# அம்பில் என்றும் இருப்பார் மனதில் !

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

இவ்ளோ அக்கப்போரா ?

வழக்கமாக சென்னை என்றால் பேண்ட், சர்ட் தான். அதற்கு பல காரணம் இருந்தாலும், முக்கியக் காரணம் சட்டமன்றக் கூட்டம் தான். அடிக்கடி என்னை  வெளியேற்றுவது சபாநாயகருக்கு பொழுதுபோக்கு என்பதால், ஒரு பாதுகாப்புக்கு பேண்ட். 2001-06ம் ஆண்டு சட்டமன்றத்தில் அண்ணன் பரிதி, வேட்டி இழந்து வெளியேறி, அன்றோடு பேண்ட் போட ஆரம்பித்தவர் தான். அது தான் காரணம்.

அன்று சட்டமன்றத்திற்கு கலர் சட்டையை எடுத்துப் போட்டேன். "என்ன சட்டசபைக்கு கலர் சட்டை போட்டுகிட்டு போறீங்களா?", என்று வினவினார் இல்லத்தரசி. "வலைதளக் கருத்தரங்குக்கு செல்ல வேண்டும். அதனால் தான்" என்றேன். "சட்டை லூசா தெரியுது. இன்சர்ட் செஞ்சிக்கிங்க",என்றார். பெல்ட்டை தேடினேன், அரியலூரில் கிடப்பது நினைவு வந்தது. ரொம்ப நாளாகி இருந்தது, இன் செய்து.

இன்சர்ட் செய்தால், கொஞ்சம் டிரிம்மாகவே தெரிந்தது. "பெல்ட் வாங்கி போட்டுடுங்க", ஆலோசனை வழங்கினார். அண்ணாசாலையில் கடைகள் திறக்கப்படவில்லை. தியாகராய நகர் சென்று பெல்ட்டை பிடித்தேன். கடையிலேயே இன்சர்ட் செய்து, பெல்ட்டை மாட்டிக் கொண்டேன். மடித்து விட்டிருந்த முழுக்கை சட்டையை நீட்டிவிட்டு, பொத்தான் போட்டேன். நேரே சட்டமன்றம் சென்றேன். காரில் இருந்து இறங்கும் போதே தேவராஜ் பார்த்து சிரித்தார்.

தினமலர் போட்டோகிராபர் ரமேஷ் கிளிக் செய்தார். "ஏன் சார்?" என்றேன். "டிபரண்ட் கெட்டப். புரொபைலுக்கு ஆகும்" என்று சிரித்தார். தளபதியை வரவேற்க வெளியில் வந்தார் கொறடா அண்ணன் சக்கரபாணி. மேலும், கீழும் பார்த்தவருக்கு சிரிப்பு அடக்கமுடியவில்லை.

அண்ணன் தங்கம் தென்னரசு ஒரு நிமிடம் திகைத்துப் பார்த்தார். "தம்பி, என்ன ஆச்சு? பெல்ட்டு, இன்சர்ட், அடடே ஷூ வேறயா?"என்றார். "ஏண்ணே, காலேஜ்ல ரேகிங் பண்ணாத சீனியர், இப்ப ஏண்ணே ?",என்றுக் கேட்டேன். "ஆரம்பத்தில் செஞ்சிருந்தா சரி. இப்ப கடைசி காலத்தில் ஏன் இந்த வேலை?", என்று சிரித்தார்.

வலைதளக் கருத்தரங்குக்கு செல்வதை சொன்னேன். "இங்க பாருங்க. போற கூட்டத்துக்காக கெட்டப் மாத்திக்கிறாரு" என சொல்ல, சுற்றி கழக எம் எல்.ஏக்கள் நின்று சிரிக்க, மூன்று நிருபர்கள் எங்கள் கூட்டத்தை புகைப்படம் எடுத்து கலாய்த்தனர். அந்த நேரத்தில் தளபதி வந்துவிட்டார்கள். உடன் வந்த அண்ணன் ஏ.வ.வேலு,"ஏம்பா, இன்ஸ்பெக்டர் கெட்டப்?",என்று சிரித்தார். விஷயத்தை சொன்னேன்.

அறிவாலயம் போனால், அங்கு அதற்கு மேல். "என்ன அய்.டி எம்ப்ளாயின்னு எண்ணமா ?", அம்பாக ஒரு அண்ணன். செல்பி எடுத்த ஒரு தம்பி காதோடு,"அண்ணே, கிளாஸ் எடுக்கறதுக்காக, காலேஜ் புரொபசர் மாதிரி கெட்டப்பா?".  ஒரு சீனியர் புகைந்தார்,"யூத்ன்னு நெனப்பா?".

மறுநாள் நீலநிற சட்டை போட்டு இன் செய்தேன். சட்டமன்றம். இன்றும் கலாட்டா, " இப்படியே கண்டினியூ பன்ற ஐடியாவா?".  "டி.ஆர்.பி.ராஜாவுக்கு கம்பெனி",என்றேன். "அப்ப இனிமே இப்படிதானா?". "அண்ணே 1200 ரூபா குடுத்து பெல்ட் வாங்கிருக்கேன், நாலு நாளைக்கு போடக்கூடாதா? விடுங்கண்ணே",என்றேன்.

பேரவைக்குள் நுழையும் போது சபைக்காவலர் நிறுத்தப் பார்த்தவர், அடையாளம் தெரிந்து அனுமதித்தார்.  காரிடரில் எதிர்புறம் அமைச்சர் ஓ.பி.எஸ் வந்தார். உற்றுப் பார்த்தவர்,"இது என்ன மாறுவேஷம்?"என்றுக் கேட்டார். "சும்மா ஜாலியாண்ணே",என்றேன்.

வீட்டுக்கு வந்ததும், முதலில் பெல்ட்டை கழட்டி பீரோவில் வைத்து விட்டேன்.

# ஒரு இன்சர்ட், பெல்ட்டுக்கு இவ்ளோ அக்கப்போரா ?