பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

மக்களோடு இருத்தல்


"வாழ்த்துக்கள் ஷங்கர். இவ்வளவு நெருக்கடியிலும் ஜெயிச்சிட்டீங்க", என்று வாழ்த்தினார் டாக்டர் மாசிலாமணி.  ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.  அடுத்து, "எவ்வளவு செலவாச்சி?" என்றுக் கேட்டார்.

2001 உள்ளாட்சித் தேர்தல் முடிவுற்ற நேரம். மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்தேன். அதிமுக ஆட்சி அமைந்திருந்ததால், 12 இடங்களில் நான் மட்டுமே கரை சேர்ந்திருந்தேன்.

" பூத் செலவுக்கு 35,000 ரூபாய் ஆச்சுங்க சார். அப்புறம், பைக்குக்கு பெட்ரோல் செலவு மட்டும் தான் சார். ஆனா, எதிர் வேட்பாளர் அஞ்சு லட்சத்துக்கு மேல செலவு செஞ்சிருப்பாரு"என்றேன் பெருமையாக.

"போன அஞ்சு வருஷத்தில, உங்க அர்மடா ஜீப் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியிருக்கும் ?", என்றுக் கேட்டார் டாக்டர். "ரெண்டரை லட்சம் சார்", என்றேன். "அப்போ எவ்வளவு சுத்தி இருப்பீங்க, எத்தனை கல்யாணம், துக்கத்துல கலந்துகிட்டு இருப்பீங்க, அதன் பலன் தான் இந்த வெற்றி. தேர்தலப்ப திடீர்னு செலவு பண்ணா ஜெயிச்சிட முடியாது", என்றார் டாக்டர். இது தான் அரசியல் பாலப்படம்.

கடந்த ஒரு மாதமாக தினம் நான்கைந்து இறப்பிற்கு செல்லும் நிலை.

நிலைத்தகவல் மூலமாக அறிந்து கொண்டவர்களும், அலைபேசுபவர்களிடம் துக்கத்தில் இருக்கிறேன் என்று சொல்லும் போதும், ஒரு கேள்வி தான் திரும்ப, திரும்ப வருகிறது. "எம்.எல்.ஏவுக்கு வேற வேலையே இல்லையா?. துக்கத்துக்கு போறதும், கல்யாணத்துக்கு போறதும் தானா வேலை?".

ஆமாம், அது தான் முக்கிய வேலை. தேர்தல் வெற்றிக்காக அல்ல, மக்கள் வாழ்நிலையை அறிய. அது எப்படி இது உதவும் என்று தோன்றலாம். அதில் தான் இருக்குது சூட்சுமம்.

ஒரு திருமணத்திற்கு சென்றால், 200லிருந்து 1000ம் பேரை சந்திக்கலாம். ஒரு இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றால், 50லிருந்து 500 பேரை சந்திக்கலாம். அவர்களில் 10 பேர் அருகில் வந்து நலம் விசாரிப்பார்கள். இரண்டு பேர் ஊர் சம்பந்தமான பொதுக் கோரிக்கை வைப்பார்கள்.

ஒரு மக்கள் பிரதிநிதியை எல்லா மக்களும் தேடி வந்து கோரிக்கை வைக்க இயலாது. இது போன்ற நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது தான் கூறுவார்கள். தேடி வந்து கோரிக்கை வைக்கிறவர்களில், 90 சதவீதம் சொந்த பிரச்சினையாகத் தான் இருக்கும். மீதி 10 சதவீதம் தான் பொதுப் பிரச்சினையாக இருக்கும். சில சமயம் வம்பும் வந்து சேரும்.

ஒரு எம்.எல்.ஏ கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்தாலும், அதிகம் பேர் திரள்வது சிரமம். இதைத் தாண்டி மக்கள் பிரதிநிதி மீது நம்பிக்கை இருந்தால் வருவார்கள். அடுத்து, இது போன்ற நிகழ்வுகளில் கூடி இருக்கும் போது தான், பலப் பிரச்சினைகள் விவாதிக்கப்படும். அது உலக அரசியல் முதல் உள்ளூர் பிரச்சினைகள் வரை இருக்கும். மக்கள் மன நிலை வெளிப்படும்.

இதை விட முக்கியம், நம்மை மதித்து வந்தார் என்ற எண்ணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, இழப்பின் வலிக்கு அது ஒரு ஆறுதலாக அமைகிறது. அவர்களில் ஒருவராக உணர்கிறார்கள்.

திருமணம், புதுமனைப் புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா, காதணி விழா என 12.02.2016 ன்று 21 நிகழ்வுகள். 560 கிலோமீட்டர் சுற்றுப்பயணம். பயண அசதியை, நிகழ்ச்சி வீட்டாரின் மகிழ்ச்சி முகம் போக்குகிறது.

# மக்களோடு இருத்தலே மகத்தானப் பணி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக