பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 மார்ச், 2016

பெண்ணே உரிமை பெற்றிடுக


1929ஆம் ஆண்டு செங்கற்பட்டு நகரில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது.  மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த செய்தியை படித்தவுடன் நம்முடைய பொதுபுத்தி வேலை செய்யும். பல ஆண்டு காலமாக நம் புத்தியில் புகுத்தப்பட்ட செய்தி வெளியே வரும்.

"கடவுள் இல்லை,
கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை,
கடவுளை  கற்பித்தவன் முட்டாள்,
கடவுளை பரப்புபவன் அயோக்கியன்,
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி"என்று பெரியார் தீர்மானம் போட்டிருப்பார் எனப் போகிறப் போக்கில் நம் புத்தி சொல்லும்.

இது நம் புத்தியில் திணிக்கப்பட்டிருக்கிற விடயம். பத்திரிக்கைகளும், மேதாவிகளும் செய்த வேலை இது.  ஆனால் அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே வேறு. அந்தத் தீர்மானங்கள் பிற்காலத்தில், பெரியாரின் தொண்டரால் சட்டமாக ஆக்கப்பட்டு நடைமுறைக்கும் வந்து விட்டது. ஆனால் இன்றும் பல்வேறு நாடுகளிலும் ஏன் இந்தியாவின் சில மாநிலங்களிலும் கனவாகவே இருக்கிறது.

அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள்:

"பெண்களுக்குச் சொத்துரிமையும், தொழில் நடத்தும் உரிமையும், ஆசிரியர் பணியில் பெருமளவு வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்".  தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1929. யாரும் சிந்திக்காததை அன்றே சிந்தித்தவர் தான் அந்தப் புரட்சியாளர்.

1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் அன்றைய  தமிழக முதல்வர் தலைவர் கலைஞர்  முதல் அய்ந்து வகுப்புகளுக்குத் தமிழ்நாட்டில் பெண் கள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணிவார்கள் என நியமித்தார்.

அதே போல ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு பெறும் உரிமை உண்டு என்ற சட்டத்தையும் நிறைவேற்றி பெரியாரின் தீர்மானத்திற்கு உயிரூட்டினார் தலைவர் கலைஞர்.

பெண் ஏன் அடிமை ஆனாள்?" என்ற தலைப்பில் நூல் எழுதியது மாத்திரமல்ல தொடர்ந்து பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். அது வெற்று முழக்கமாக அல்லாமல்  பெண் விடுதலை அடைய வேண்டுமென்று  போராடினார்.

உடையில் கூட ஆண் அனுபவிக்கிற சுதந்திரத்தை பெண்கள் அனுபவிக்க வேண்டுமென வலியுறுத்தினார் பெரியார். தன் துணைவியார் மற்றும் சகோதரி அந்த உடை சுதந்திரத்தை அனுபவிக்க ஆதரவு கொடுத்தார்.

"பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும்" பெண்களை பார்த்து அறைகூவியவர் தந்தைப் பெரியார்.

இப்படி பெண்ணுரிமைக்கு போராடிய பெரியாரின் பேரனாக, சட்டமாக்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்பாக, திராவிட இயக்க சிப்பாயாக நின்று உலக மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன்.

# பெண்ணே விழித்திடுக, உரிமைகள் கைக்கொள்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக