பிரபலமான இடுகைகள்

புதன், 28 டிசம்பர், 2016

பதிவிடல் விருப்பமிடல்

நள்ளிரவு கடந்தும் கடமையே கண்ணாக இருந்தேன். வேற என்ன கடமை, முகநூல் தான். அப்போது மெசெஞ்சரில் வந்தார் ராஜேஷ் குமார். "சார், நான் இப்போ பேசலாமா?". மணி 01.00.  அறிமுகம் கிடையாது. முகநூலில் நண்பரும் இல்லை. இரண்டு பேர் மியூச்சுவல் ப்ரெண்ட்ஸ். இரண்டு நாட்களுக்கு முன் பேசுவதற்கு அலைபேசி எண் வாங்கியிருந்தார். இப்போ எதுக்கு பேசனும்ங்கறாரு என்று குழப்பம்.

பேசினார். "சார், பெரம்பலூர் வந்திருக்கேன். காலை அரியலூர் வருவேன். எப்போ, எங்கே சந்திக்கலாம்?". விபரம் சொன்னேன். காலையில் வந்தார். ராஜேஷ்குமார் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர். எம்.இ படித்தவர். பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவர். +2 மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

"மூன்று வருசமா உங்கள ஃபாலோ பண்றேன் சார். ராஜேஷ் தீனா போட்ட பதிவில் உங்கள பாராட்டி எழுதி இருந்தாரு. அப்புறம் தான் உங்க முகநூல் பக்கத்த பார்த்தேன். எங்க எம்.எல்.ஏ சி.ஹெச்.சேகரோடு, டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டத பார்த்ததில் சந்தோஷம். அதிலிருந்து உங்க பதிவுகள தொடர்ந்து படிக்கிறேன் ", என்று மூச்சு விடாமல் பேசினார்.

அப்புறம் அந்த இரண்டு சப்ஜெக்டையும் தொட்டார். "செம்பருத்திய நூலகம் திறக்க சொன்னத மறக்க மாட்டேன் சார். அரியலூர் தொகுதி ரிசல்ட் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல, வருத்தம்". உடன் வந்தவரை அறிமுகப்படுத்திக் கொண்டதில், அவர் எனது நண்பர் உளுந்தூர்பேட்டை சுப்பையனின் தம்பி. அவர் போன பிறகு யோசித்தேன். தமிழகத்தின் அந்தக் கடைசியான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த, தொடர்பே இல்லாத இளைஞரை எட்டியிருக்கிறோம் என்றால் முகநூல் தான் காரணம்.

'ஆறு வருடமாச்சி, முகநூலில் இணைந்து' என முகநூல் நினைவூட்டிய போது, நினைத்துப் பார்த்தேன். இது போன்ற பல உறவுகள். நான் 'எழுதுவேன்' என்று எனக்கே தெரிய வைத்து, நக்கீரனில் எழுதி, இப்போது அந்திமழை மாத இதழில் எழுதும் அளவு கொண்டு வந்து நிறுத்தியது முகநூல் தான். இன்னும் பல செய்திகளை சொல்லலாம். சில நேரங்களில் நண்பர்கள் கிண்டலடித்தாலும், இது ஒரு தனி உலகம் தான். நான்கு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் முத்தாய்ப்பு.

கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அய்யா கோசி.மணி அவர்களுடைய படத்தை  தளபதி அவர்கள் திறந்து வைத்த ஆற்றிய உரையும், அண்ணன் துரைமுருகன் ஆற்றிய உரையும் நெகிழ்ச்சியின் உச்சம். அந்த உணர்வோடு, இரவு வந்த உடன் உட்கார்ந்து டைப் செய்து, நிலைத்தகவல் இட்ட போது நேரம் இரவு 12.05.

காலை எழுந்து நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தேன். அலைபேசி அழைத்தது. புதிய எண், கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. " அல்லோ, சிவசங்கர்ங்களா". "ஆமாங்க, சிவசங்கர் தான் பேசறன்". " பேஸ்புக்லாம் நல்லா எழுதறீங்கன்னு சொல்றாங்க", பேசியவர் ஒரு இடைவெளி விட்டார்.  ரெண்டு நாள் முன்னர் தான் வைகோ அறிக்கை பதிவிட்டிருந்தேன். அது தொடர்பான யாரோ போல என நினைத்தேன்.

"இந்த கோபால்சாமி பத்தி ஏதோ எழுதி இருக்கீங்கன்னாங்க. அப்புறம் நேத்து கும்பகோணத்தில கோசி.மணி படத்திறப்பு விழாவுல இந்த துரைமுருகன் பேசுனதையும் எழுதி இருக்கீங்களாம். நான் உங்களுத படிக்கல. படிக்கலாம்னு பார்க்கறன். கொஞ்சம் என்னையும் சேத்துக்குறுக்கீங்களா? என் பேரு வந்து" என்று சொல்லும் போது தான், அந்தக் குரலை லேசாக உணர்ந்தேன்.

அவர் பலகுரல் மன்னன் என்பது தெரியும். இதே போல் கலாய்ப்பார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்போது எதிர்பார்க்கவில்லை. அவராகத் தான் இருக்கும் என்று என்னும் போதே, என்னால் மகிழ்ச்சியை அடக்க முடியாமல் சிரித்தவாறே "அய்யா", என்றேன்.

அவர் சிரிக்காமல் சொன்னார்,"எம் பேரு துரைமுருகன்ங்கோ". நான் வெடித்து சிரித்தேன்.

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களை பார்க்க சென்றிருக்கிறார் அறந்தாங்கி முன்னாள் ச.ம.உறுப்பினர் அண்ணன் உதயம் சண்முகம். அவரோடு சென்ற முகநூல் நண்பர் கிரி, என் பதிவு குறித்து அமைச்சரிடம் சிலாகித்ததன் விளைவு அது, என பின்னர் தெரிய வந்தது.

#பதிவிடல் விருப்பமிடல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக