பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

'தலைமை' ஆசிரியர் தளபதி !

"என்ன மாவட்டம் மழ உண்டா?". " கொஞ்சம் தான்ணே பேஞ்சுது", என் பதில். "எங்கூர்லயும் மழ இல்ல மாவட்டம். ஆத்துலயும் தண்ணி வர்ல்ல", ஆதங்கப்பட்டார் அண்ணன் பூண்டி கலைவாணன். திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர். என்னை எங்குப் பார்த்தாலும் 'மழையில்' தான் ஆரம்பிப்பார். மண்ணின் மைந்தர், மண் பாசம் மிக்கவர். நான் கொஞ்சம் தணிந்தக் குரலில் பதில் அளித்துக் கொண்டிருந்தேன்.

" உங்க ஊருல நிலத்தடி நீர் என்ன மட்டத்துல இருக்கு, போர் எத்தன அடி ஆழம்?, மோட்டார் எத்தன அடியில நிக்கும்?" என அவர் தொடர்ந்து வினவ, நான் சகஜமாக பதில் அளிக்க ஆரம்பித்தேன். அவர் திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் அவல நிலையை சொல்லிக் கொண்டு வந்தார். டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து, பேசும் சுவாரஸ்யத்தோடு உரையாடிக் கொண்டிருந்தோம்.

ஆனால் நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் தளபதி அவர்களது காரில். முன் சீட்டில் தளபதி. பின் சீட்டில் எங்கள் இருவர் இல்லாமல் முரசொலி செல்வம் அவர்கள். முரசொலி மாறனின் தம்பி, தலைவர் கலைஞரின் மருமகன்.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர். தமிழகத்தின் பிரதானத் தலைவராக உருவெடுத்திருப்பவர்.  அவருக்கு வரும் அலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்துக் கொண்டு, வாட்ஸ் அப் தகவல்களைப் பார்த்துக் கொண்டு அவ்வப்போது எங்கள் உரையாடலிலும் பங்கெடுத்தார் தளபதி. சிலர் இது போல் பேசுவதை இடைஞ்சலாக காட்டிக் கொள்வார்கள், எனது அனுபவம். ஆனால் அவர் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.

இது பிப்ரவரி 5 அன்று நடந்தது. அன்று காலை தளபதி அலுவலகத்தில் இருந்து அழைப்பு. கொலையுண்ட "நந்தினி" இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறுவதற்காக தளபதி வர விரும்புகிறார்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள் என தகவல் சொன்னார்கள். சில நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழைப்பு.

சில நொடிகளில் தளபதி அவர்களிடம் இருந்து அழைப்பு. "சங்கர், சாயந்தரம் வந்திடலாமா? திருவாரூர்ல இருந்து எப்படி வரலாம்? நான் மதியம் சாப்பிட்டு விட்டு கிளம்பிவிடுவேன்". " கும்பகோணம் வழியா வந்திடலாங்க அண்ணா". நந்தினிக் குறித்த சில செய்திகளை நான் சொல்ல முற்பட்டேன். அவர் அவற்றை ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். "இப்போ புரோக்ராம வெளியில் சொல்ல வேண்டாம். தேவை இல்லாத கூட்டம் கூடிடுவாங்க. அவங்க குடும்பத்தினரிடம் ஃப்ரியா பேச முடியாது", என்றார்.

மாலை கும்பகோணம் கிளம்பினோம். வரும் வழியில் கலைவாணன் அழைத்தார்," மாவட்டம், ஆண்டிமடம் போகிற வழியில இருக்கா?". "இல்லண்ணே, ஏன்?". " தளபதி அப்பாவ பாக்கணும்னாங்க". "அப்பா ஊரில் இல்லை. செக்கப்புக்கு திருச்சி போயிருக்காங்க".

கும்பகோணத்தில் வரவேற்றோம். காரில் ஏறியவுடன் என் தந்தை நலம் குறித்து விசாரித்தார்.

சிறுகடம்பூர் கிராமம் வரை பல இடங்களில் கழகத் தோழர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் கையசைத்து வரவேற்றனர். குமிளியம் கிராமத்தில் வெடி வெடித்து வரவேற்றனர். கார் கிளம்பிய உடன், " என்ன சங்கர் துக்கம் விசாரிக்கப் போறோம். வெடி வெடிக்கறது தப்பில்லையா?", என்றுக் கேட்டார். "ஆர்வக் கோளாறுல செஞ்சிட்டாங்க அண்ணா", சமாளித்தேன்.

கார் சிறுகடம்பூர் கிராமத்தை அடைந்தது. முக்கியச் சாலையில் இருந்து ஊருள் சென்று, தெரு சாலையில் திரும்பிய கார் அந்த சிறு சிமெண்ட் சாலை முன் நின்றது. கட்டுக்கடங்காக் கூட்டம். அலையடிக்கும் கூட்டத்தில் இறங்கி நடந்தார். சிமெண்ட் சாலையில் இருந்து ஒருவர் நடக்கும் பாதை நந்தினி வீட்டுக்கு. அதில் வந்து நந்தினி படத்திற்கு மாலை அணிவித்தார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பெருங் கூட்டத்தில் யார் அவரை இடிக்கிறார்கள் என்றுக் கூட தெரியவில்லை. மணி 7.00 ஆகியிருந்தது. இருட்டி விட்டது. திரும்புகையில் சிமெண்ட் சாலையில் பத்திரிக்கையாளர்கள் மறித்தனர். இரைச்சல் அடங்கக் காத்திருந்து பேட்டியளித்தார். கார் ஏறிக் கிளம்பினோம்.

அடுத்து வந்த காரில் இருந்து முன்னாள் எம்.பி அண்ணன் ஏ.கே.எஸ் விஜயன் தளபதிக்கு அலைபேசியில் அழைத்து காபி இருக்கிறது என்று சொல்ல, வேண்டாம் என மறுத்தார் தளபதி. அவர் வற்புறுத்தவே அலைபேசியை என்னிடம் கொடுத்தார்கள் தளபதி. " சங்கர், எங்கேயாவது ஓரமா நிறுத்துங்க. அண்ணன் காஃபி சாப்பிடட்டும். மதிய சாப்பாட்டுக்கு பிறகு எதுவும் அண்ணன் சாப்பிடல" , என்றார் விஜயன். செந்துறை தாண்டி கார் நிற்கக் கூடிய ஒரு மரத்தடியை காட்டினேன்.

மரத்தடியில் இறங்கி நின்று காஃபியை அருந்தினார். கார் ஏறிய உடன்,"சங்கர் எத்தனை மணிக்கு திருச்சி போவோம்?" என்றுக் கேட்டார். "ஒன்பதாயிடும்" என்றேன். "நேரு காத்திருப்பார். வரவேற்பிற்கு போயிடணும் அவசியம் வரணும்னு சொல்லி இருக்கார். நேரு கிட்ட பேசி, எந்தப் பாதையில் வர்றோம்னு சொல்லிடுங்க"என்றார்.

08.40 மணிக்கு திருச்சி சுங்கச்சாவடியை அடைந்தோம். " வரவேற்புக்கு போனா சரியா இருக்கும்ல?",என்றுக் கேட்டார்.  அண்ணன் நேரு அவர்களும், அண்ணன் ஆ.ராசா அவர்களும் காத்திருந்தனர். நான் விடைப்பெற்றேன். "பத்திரமா போங்க சங்கர்".

முக்கிய நிகழ்வுகளை மனதில் வைத்திருந்து செல்லுதல், கழக மூத்தவர்களை நினைவில் வைத்து விசாரித்தல் - சந்தித்தல், எளிமையாய் இருத்தல், பதற்றம் இல்லாமல் இயல்பாக இருத்தல்,  தோழர்கள் மீது அக்கறையாய் இருத்தல், அடுத்தவர் கருத்துகளை கவனித்தல் என தனது ஒவ்வொரு அசைவிலும்  தலைமைப் பண்புக்கான பாடத்தை  போதித்தார் தளபதி.

# எம் 'தலைமை' ஆசிரியர் தளபதி வாழ்க !

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

தேக்கம்பட்டி கிராமத்தின் பிரச்சினை

தேக்கம்பட்டி மக்கள் குரல் அரசின் காதை எட்டுமா?

கோவை மாவட்டம் ,மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ளது தேக்கம்பட்டி கிராமம்.  மேட்டுப்பாளையத்தில் இருந்து மேற்குபுறமாக சென்றால் தேக்கம்பட்டி கிராமம். மலையடிவாரத்தில். அந்தப் பக்கம் 16 கி.மீ போனால் கேரளா.

இரண்டு வருடங்களுக்கு ஊர் மக்கள் மகிழ்ந்து போயினர், தங்கள் ஊர் பிரபலமாகிறதென. இப்போது விரக்தியின் விளிம்பில் உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறும் என அரசு அறிவித்தது. தேக்கம்பட்டி கிராமத்திற்கு ஒருபுறம்  மிகப் பெரும் அங்கீகாரம் கிடைத்தது என.  அதற்கு முன்பாக இந்த யானைகள் முகாம் முதுமலையில் நடைபெற்றது. ஆம்,  ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு கோவில் யானைகளுக்கு நடைபெறும் புத்துணர்வு முகாம்.

மலைமீது 40க்கு மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளன. அது தான் பிரச்சினையாகி விட்டது.

கடந்த ஆண்டு கிட்டம்பட்டி கிராமத்தில், 30க்கு மேற்பட்ட காட்டுயானைகள் நுழைந்து வாழைத் தோப்பை துவம்சம் செய்து விட்டன. விவசாயிகளின் உழைப்பு பாழாகிப் போனது.

முகாம் நடைபெறும் இடம் காட்டு யானைகள் வழக்கமாக நீர் அருந்தும் இடமாதலால் காட்டு யானைகள் முகாமிற்குள் நுழையும் வாய்ப்புக்கள் அதிகமாகி விட்டது.

யானைகள் நீர் அருந்தும் வழித்தடம் அடைக்கப்படுவதால் காட்டு யானைகள் தேக்கம்பட்டி,தாசனூர் ,NG புதூர் ,RG புதூர் , தொட்டதாசனூர் ,நெல்லித்துறை,கிட்டாம் பாளையம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை அழிப்பதும் ,பொது மக்களை கொலைவெறித் தாக்குதல் நடத்தி உயிரிழப்பு ஏற்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது.      
                                                                                                                       அடுத்து, இது யானைகளின் இனப்பெருக்க காலம் என்பதாலும் முகாமில் உள்ளவை பெரும்பாலனவை பெண் யானைகள் என்பதாலும் எதிர்பாலினக் கவர்ச்சியின் காரணமாக காட்டு யானைகளின் வருகையை மேலும் அதிகப்படுத்துகிறது.

முகாமில் உள்ள யானைகளை காண அனுமதிக்கப்பட்ட பார்வை நேரத்தில் வரும் பார்வையாளர்கள் தேக்கம்பட்டி-பத்திரகாளி அம்மன் சாலைகளில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதாலும் ,சாலையோரத்தில் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைப்பதாலும் வாகன நெருக்கடி ஏற்படுவதால் இப்பகுதியில் செல்லும் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

பார்வை நேரங்களில் மேற்குறிப்பிட்ட வழித்தடங்களில் வாகனங்களில் பயணிக்கும் சுற்றுப்புற கிராம மக்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர் .

முகாம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் இருப்பதால் காட்டு யானைகள். பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்குகின்றன.
                                       
யானைகள் முகாம் நடைபெறும் இடத்தை பொது மக்களுக்கு ஊறு விளைவிக்காதவாறு முதுமலை வனப்பகுதியில் நடத்த வேண்டும். காட்டு யானைகள் சேதப்படுத்தும் விவசாயப் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தேக்கம்பட்டி முதல் முகாம் நடைபெறும் வரை மின் விளக்குகள் அமைக்க தேக்கம்பட்டி ஊராட்சி 3 இலட்சம் மின் வாரியத்திற்கு பணம் செலுத்தியும் காலம் தாமதம் செய்யும் மின் வாரியத்தை பணிகளைத் தொடங்க நிர்பந்திக்க வேண்டும்.

முகாமை மாற்றும் வரை, முகாமிற்கு பார்வை நேரத்தில் வரும் மக்கள் தங்கள் வாகனங்களை பத்திரகாளி அம்மன் கோவிலில் உள்ள வாகன நிறுத்திமிடத்தில் நிறுத்த உத்தரவிட வேண்டும்.

வியாபாரிகள் சாலைகளின் ஓரங்களில் கடைகள் அமைக்கத் தடை விதிக்க வேண்டும்.

மிக முக்கியமானது, முகாம் நடக்கும் 48 நாட்களும் வனத்துறையினர் ரோந்து வாகனங்களில் தேக்கம்பட்டி,நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் இரவு நேரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கும் ,பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் .

அதே போல, காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகளை முகாமிற்கு வரவழைக்க வேண்டும் 

ஊடகத் துறை நண்பர்கள் யானைகள் முகாமால் தேக்கம்பட்டி, நெல்லித்துறை ஊராட்சி மக்கள் படும் இன்னல்களை உரிய  மக்கள் பிரதிநிதிகள்,அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இந்த கிராமத்தை சேர்ந்த சகோதரர் திலீப் பொறியாளராக பணிபுரிந்தாலும், இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

# எளியவர்கள் குரலுக்கு நியாமம் கிடைக்கட்டும்!

#மக்கள்_குரல்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

பிரேக்கிங் நியூஸ் காலம் !

இந்த "பிரேக்கிங் நியூஸ், பிக் நியூஸ்" பரபரப்பில் ஒரு விஷயத்தை ஊடகங்கள் மறைக்க முனைகிறார்கள்.

அது தளபதி ஸ்டாலின் அவர்களின் நிதானம், கண்ணியம்.

ஜெயலலிதாவால் வெற்றி பெற்ற 134 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, அதிமுக இரண்டு தரப்பாக பிரிந்து 'பகடை' ஆடிக் கொண்டிருக்கிறது. கட்சியை கைப்பற்றுவதில் நடைபெறுவது இன்னும் அதிகம். ஆனால் அது அவர்கள் உள்கட்சி விவகாரம்.

அதே சமயம் ஆட்சி விவகாரத்தில் நடைபெறும் ஆட்டம், அவர்கள் கட்சிக்கானது மாத்திரமல்ல. தமிழக மக்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது. வாக்களித்தவர்கள் மாத்திரமல்ல, வாக்குரிமை இல்லா குழந்தைகள் வாழ்வையும் பாதிக்கும் விவகாரம், இவர்கள் ஆட்சிப் பொறுப்பு குறித்து நடத்தும் 'கண்ணாமூச்சி விளையாட்டு'. ஆட்சி இயந்திரம் இயங்காமல் முடங்கியே போய் விட்டது.

134 பேரில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் எத்தனை பேர், சசிகலா அவர்களிடம் எத்தனை பேர் என்பது 'கன்னித்தீவு ரகசியம்' போல் நீடிக்கிறது. ஆளுநர் மாளிகையிலோ, சட்டசபையிலோ பலம் நிரூபிக்கப் படும் வரை இந்தக் குழப்பம் நீடிக்கும். அதுவரை இருவருமே எங்களிடம் 'தான்' அதிக எண்ணிக்கை என அறிவித்தவாறு இருப்பார்கள்.

ஆனால் குழப்பமே இல்லாத எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை திமுக கொண்டிருக்கிறது. 89 பேர். மிக முக்கியமான ஒரு எண்ணிக்கை, இன்றைய காலக்கட்டத்தில். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டும் என்று நினைத்தால், திமுக ஒரே ஒரு கடிதத்தை ஆளுநர் இடம் அளித்தால் போதும்."எங்கள் இடம் மெஜாரிட்டி இருக்கிறது" என்ற ஒற்றை வரி கடிதம் போதும்.

சசிகலா எப்போது பொதுச்செயலாளர் ஆனாரோ, அப்பொழுதில் இருந்தே பொதுமக்களிடம் இருந்து எழும் வினா ஒன்றே ஒன்று தான், "திமுக ஏன் அமைதி காக்கிறது?". வேகமான தி.மு.கழகத் தோழர்களே வலைதளங்களில் இன்னும் காட்டமாக எழுதினார்கள்," மிக்சர் தின்பது ஓ.பி.எஸ் அல்ல, தி.மு.க தான்". சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள், "30 எம்.எல்.ஏக்களை அதிமுகவில் இருந்து உடைத்து ஆட்சி அமைக்க வேண்டியது தானே?".

அது எளிதான காரியம் தான், ஆனால் காலம் எல்லாம் பழிச் சொல்லுக்கு ஆளாக்கும் செயல். திமுக அந்த காரியத்தில் இறங்கவே இல்லை. மிக நிதானமாக அடிகளை எடுத்து வைத்தார் தளபதி அவர்கள். "ஆட்சியின் நலத் திட்டங்களை ஆதரிப்போம்" என்று அறிவித்தவர், ஆட்சியின் அவலங்களை தட்டிக் கேட்பதில் முன்னால் நின்றார்.

ஜல்லிக்கட்டு பிரச்சினை, மாணவர்கள் மற்றும் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு எதிர்ப்பு என மக்கள் நலன் சார்ந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, அரசின் மீது சாட்டையை சொடுக்கினார். தளபதி அவர்கள் கேள்விகளுக்கு பிறகே அரசு செயல்பட்டது, பல விவகாரங்களில்.

இந்த நேரத்தில் தான், சசிகலாவின் ஆட்சியை பிடிக்கும் வேலை நடந்தது. தமிழகம் எங்கும் சசிகலாவிற்கு எதிரான மனநிலை தான். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளைத் தவிர அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சசிகலாவிற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டில் உள்ளனர்.

இப்போது திமுக மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. இவர்கள் ஏன் ஆட்சி உரிமை கோரக் கூடாது என்ற கேள்வி பொதுமக்களிடத்தில் வலு பெற்றிருக்கிறது.

ஓ.பி.எஸ்ஸோடு எத்தனைப் பேர் என்று தெரியாமல், இப்போது ஐந்து பேர் இணைந்திருக்கிறார்கள். இதுவே திமுக உரிமை கோரினால், கூடுதல் எண்ணிக்கையில் அதிமுகவில் இருந்து, திமுக பக்கம் புலம் பெயரும் வாய்புள்ளது என்பது பொதுவாக எழுந்திருக்கும் கருத்து. அதிலும் தேர்தல் வந்தால் திமுக வெற்றி பெறும் என்ற நிலையில் பலரும் திடமான முடிவெடுப்பார்கள்.

ஆனால் இப்போதும் தளபதி சொல்கிறார், "அதிமுக உறுபினர்களின் உண்மை மன நிலை அறிந்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்". அவர்கள் உரிமையில் தலையிடவில்லை என்பதை தெளிவுப் படுத்தியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்திற்கு அதிமுகவினர் அடித்து கொள்ளும் வேலையில், ஜனநாயக ரீதியாக திமுக அமைதி காக்கிறது, தளபதி கண்ணியமாக செயல்படுகிறார் என மக்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் வழக்கம் போல் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் 'பிரேக்கிங் நியூஸிலேயே' கண்ணாக இருக்கின்றனர். இவர்கள் மறைப்பதை வரலாறு பதிவு செய்யும்.

# பிரேக்கிங் நியூஸை வரலாறு வெல்லும் !

வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஐ சப்போர்ட் சசிகலா

ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா.

சின்னம்மா அவர்களின் அளப்பறிய திறமை காரணமாகத் தான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.

ராஜாஜி, காமராஜர், அண்ணா அமர்ந்த முதல்வர் நாற்காலிக்கு 'இன்ச்' அளவிற்கு நெருங்கி நிற்கிறார் என்றால் அது அவரது உழைப்பு மற்றும் திறமை. படிப்படியாகத் தான் முன்னேறி இருக்கிறார். இதை எல்லோரும் மறைக்கிறார்கள்.

கணவர் அரசுப் பணியில் இருக்கிறார் என்று சும்மா இருந்துவிடாமல், வெளிநாடு சென்று வீடியோ தொழில் குறித்து கற்றறிந்தார். அப்போது யாருமே அதற்காக மெனக்கடாத காலம். இந்தத் தொழில் பிற்காலத்தில் சிறக்கும் என உணர்ந்தது தான் அவரது திறன். அந்த அடிப்படையில் தான் பிற்காலத்தில் ஜெயலலிதா இந்த உயரத்தை அடைந்திடுவார் என கணித்து அவர் நட்பை தேடிப் பிடித்தார். இது அவரது 'கணிப்பை' உறுதி செய்கிறது.

கணவரின் அரசுப் பணியை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரின் நட்பைப் பெற்றார். அவர் மூலம் தான் ஜெயலலிதாவை நெருங்கினார், ஒரு நிகழ்ச்சிக்காக. அத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஜெயலலிதாவை அணுகி அவருக்கு உதவிகள் புரிந்தார். அதன் மூலம் ஜெ'வின் அறிவிக்கப்படாத உதவியாளர் இடத்தைப் பிடித்தார். இது அவரது 'பழகும் பண்பை' வெளிப்படுத்துகிறது.

1991ல் ஜெயலலிதா ஆட்சியை பிடித்த உடன், தன்னை உடன்பிறவா சகோதரியாக அறிவிக்க வைத்தார். தனது அக்காள் மகன் சுதாகரனை, ஜெயலலிதாவின் 'வளர்ப்பு மகனாக'  ஆக்கினார். அவர் திருமணத்தில் இருவரும் ஒட்டியாணம் அணிந்து நடந்தக் காட்சி தான் இன்றைக்கும் அவரது முத்திரை. இது அவரது 'லாபியிங் பவரை' காட்டுகிறது.

1996 திமுக ஆட்சியில், சொத்துக்குவிப்பு வழக்கின் போது, ஜெயலலிதா வாயால் சசிகலா குரூப்பை ஒதுக்கி வைப்பதாக அறிவிக்க வைத்து, பிறகு கூடி கும்மியடித்தது வரலாறு. அப்புறமும் உடன்பிறவா சகோதரியாய் பயணித்தார். ஜெயலலிதாவாலும் தவிர்க்க இயலவில்லை. அது தான் சசியின் 'ஈர்ப்புத் திறன்'. அது கடைசி வரை வேலை செய்தது, சசியின்  'ஆளுமையை' நிலைநாட்டியது.

2001ல் மீண்டும் அதிமுக ஆட்சி. கடந்த ஆட்சிக்காலம் போல் சிக்கலில் மாட்டாமல், இந்த முறை வெளி நாடுகளில் முதலீட்டை துவங்கினார். ஒரு தீவு கையகப் படுத்தப்பட்டது. குடும்பத்தில் ஒவ்வொருவராய் அரசியலில் அறிமுகப்படுத்தினார். பிசிறடித்து, 'அக்கா ஜெ' கோபத்திற்கு ஆளானால், அடுத்தவரை இழுத்து வந்தார். தினகரனில் துவங்கி டாக்டர்.வெங்கடேஷ் வரை இழுத்து வந்தார். இது அவரது 'குடும்ப பாசத்தை' உறுதிப் படுத்துகிறது.

2006 திமுக ஆட்சி வந்தபிறகு சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் உயிர் பெற்றது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சசி தான் எனக் காரணம் காட்டி , 'சசியை' போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார் ஜெயலலிதா. சசியும் வெளியேறினார். இரண்டே மாதங்கள் தான், சசி ஜெ-வை  சமாதானப்படுத்தி கார்டன் நுழைந்தார். மெல்ல, மெல்ல அதிகாரத்தில் தன் கரம் நுழைத்து ஓங்கச் செய்தார் சசி. இது அவரது 'சூழ்ச்சித் திறனை' வெளிக் கொணர்ந்துள்ளது.

2011 தேர்தல் குறித்து அவர்களுக்கே குழப்பம். ஆனால் ஆட்சி அமைந்தது. அப்போது தான், ஆட்சி அதிகாரத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காவல்துறையில் 'தன்னர்'களை உயர் இடத்தில் கொண்டு வந்து அமர்த்தினார். கொஞ்சம், கொஞ்சமாக ஆக்டோபஸாய் கரம் விரித்தார், தமிழ்நாட்டை வளைத்துப் பிடித்தார். இது தான் இவரது 'மேலாண்மை'யை காட்டுகிறது.

2016ல் உடல்நலம் குறைந்த ஜெயலலிதாவை முன்னிறுத்தி பனியாற்றினார். வெற்றி பெற்ற பிறகு ஆட்சியை அதிகாரத்தோடு செலுத்தினார். 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் என சொல்லியே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை உலகிற்கே காட்டாமல் வைத்திருந்தது இவரது 'ரகசியக் காப்புத் திறனை' எடுத்துக் காட்டுகிறது.

இப்படி சசிகலாவின் " 'கணிப்புத் திறன்', 'பழகும் பண்பு', 'லாபியிங் பவர்', 'ஆளுமை', 'குடும்பப் பாசம்', 'சூழ்ச்சித் திறன்', 'மேலாண்மை', 'ரகசியக் காப்புத் திறன்' "ஆகியவை வெளிப்பட்டுள்ளது. இனி இப்படியொருவர் கிடைக்கப் போவதில்லை. இவர் மாத்திரம் வந்தால், இந்தத் திறமைகளை எல்லாம் பயன்படுத்தி, இந்தியாவை உயர் வழிக்கு கொண்டு செல்வது எளிது.

இவர் பிரதமரானால், இந்தியா 'ஏக இந்தியா' ஆக முழு நடவடிக்கைகள் துவங்கும். எதிர்கட்சிகள் முடக்கப்படும்.  காவிரி, பாலாறு, பெரியாறு 'மொத்தமாக' முடிக்கப்படும். அயல்நாடுகள் கண்ட்ரோலுக்கு கொண்டு வரப்படும்.

# ஆதலால், ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா ஃபார் பி.எம். !

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பன்னீரின் கண்ணீர் கடிதம்

பெறுநர்:
மேதகு. ஆளுநர் அவர்கள்,
ஆளுநர் மாளிகை, கிண்டி,
சென்னை,
தமிழ்நாடு.

அய்யா, வணக்கம்!

எப்படியாவது உடனே என்னை பதவி விலக்க ஏற்பாடு பண்ணுங்க. நான் சொந்த விருப்பத்தின் பேரில் தான் பதவி விலகுகிறேன். பல காரணங்களால் மனசு பாதிக்கப் பட்டிருக்கிறேன். அதனால் என்னால் சரியாக பணியாற்ற இயலாத சூழ்நிலை. இதை மனதில் கொண்டு இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

நான் எப்போதும் சேர்ல ஒண்டி, ஓரமா உட்கார்ந்தே பழகிட்டேன். இப்போ அம்மா இல்லாத சபையில அம்மா உக்காந்த நாற்காலியில என்னை சபாநாயகர் உட்கார வச்சிட்டாரு. இடம் நெறய இருக்குன்னு, ஹாயா உட்கார்ந்துட்டேன். இரண்டு நாள்ல உடம்புல ஒவ்வாமை வந்துடுச்சி. ராத்தியிரில தூக்கமும் வர மாட்டேங்குது. உடம்பு ஒரு மாதிரி ஆயிடுச்சி. பழைய மாதிரி ஒண்டி உட்கார்ந்தா தான் சரியா வரும்.

எனக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுத்தவர் முன்னாள் எம்.பி தினகரன். அவருக்கு பின் நின்றே பழகி விட்டேன். பிறகு அம்மா பெரும் வாய்ப்பு கொடுத்தார்கள். அதிலிருந்து அவர் பின் நின்றே பழகி விட்டேன். இப்போது திடீரென முன்னே நிற்கும் போது "வெட, வெட" என நடுக்குகிறது. அதனால் முதல்வர் பதவி எனக்கு சரியாக வராது.

2001ல் நீதிமன்றம் சொன்னதால், அம்மா பதவி விலகிய போது முதல்வர் ஆக்கினார் என்னை. அடுத்து அம்மா பெங்களூரு சிறைக்கு சென்ற போது, மீண்டும் என்னை பொறுப்பேற்க சொன்னார். நானும் ஏற்றேன். அம்மா மீண்டும் வந்தார். நான் போய் விட்டேன். அம்மா சொல்லும் போது வருவதும், போவதும் எனது பணி. "இடைக்கால முதல்வரே" பழகி விட்டது. இது செட்டாகவில்லை.

அடுத்து இப்போது அம்மாவே போய் விட்டார்.  மீண்டும் என்னை அழைத்து பணியேற்க சொன்னார்கள். நானும் கனத்த மனதோடு வந்தேன். அம்மா இல்லாத பிள்ளையை ஆளாளுக்கு மிரட்டுகிறார்கள். டெல்லியில் இருந்து ஃபோன் வந்தால், கார்டனில் இருந்து ஆள் வருகிறது. சின்ன, சின்ன பசங்க எல்லாம் வம்பிழுக்கறாங்க. முடியல.

அந்தப் பசங்க ஒரு பக்கம்னா, காலேஜ் பசங்க பாடாபடுத்திட்டாங்க. போராட்டம் பண்ணி மிரட்டிபுட்டாங்க. ஆளாளுக்கு போட்ட கோஷம் இன்னும் காதுல கொய்ங்குது. என் பேரப் பசங்களே எனக்கு மிக்சர் அன்பளிப்பு கொடுக்கிற அளவுக்கு இவங்க மீம்ஸ் வேல செய்யுது. சரின்னு வாடிவாசல் போனா அவங்க பூட்டி வச்சிக்கிட்டாங்க. சரின்னு கலைக்க சொன்னா, இந்த போலீஸ் கொளுத்தியே உட்டுட்டாங்க. டெரராவுது.

இன்னொரு பக்கம் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பாடாபடுத்தறாரு. எதுக்கெடுத்தாலும் நேரா பத்து மனு குடுக்கறாரு. தமிழ்நாட்டுலயே என்ன ஓவரா மதிக்கறது அவரு தான். என் காரப் பார்த்தா, ஒதுங்கி வழிவிடறாரு. வாழ்த்து சொல்றாரு. பயம்மா இருக்கு. பத்தாததுக்கு துரைமுருகன் "5 வருசம் முதல்வரா இருங்கன்னு" வாழ்த்தறாரு. மெர்சலாவுது.

அடுத்து சின்னாம்மா பொதுச்செயலாளர் ஆன பிறகு கொஞ்சம், கொஞ்சமா அம்மாவாகவே மாறி வர்றது நாட்டுக்கே தெரியும். புடவை, கொண்டை, வாட்ச், மேக்கப்னு மாறுனவங்க அம்மா மாதிரி இரும்பு மனுஷியாகறதுக்கு முன்னாடி நானே ஒதுங்கிக்கறது நல்லது. நைட்ல கனவுல 'அப்போலோ ஹாஸ்பிடலும், பிரதாப் ரெட்டியும்' வர்றாங்க. பயமாருக்கு.

இப்போது சின்னம்மா ஃபுல் மேக்கப்பில் இருக்கிறார். அது கலையும் முன், நீ கிளம்பு என்கிறார்கள். அதனால் நான் கிளம்பிவிட்டேன். என் பணி முடிந்தது.

(ஆள உடுங்கய்யா...)

இவண்
பி.பி.கண்ணீர்செல்வம்,
பெரியகுளம்.