பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அன்பான தளபதி

நேற்றிரவு மணி 10.45 அலைபேசி அழைத்தது. அய்யா துரைமுருகன் அவர்களது எண். "மாவட்ட ஷெயலாளரா?". " ஆமாங்கய்யா". "தளபதி பேசுறாங்கப்பா". அலைபேசி கைமாறியது.

"சங்கர், எங்க இருக்கீங்க?", தளபதி அவர்கள் தான். "அரியலூர்ல இருக்கன் அண்ணா". "அப்பா ஊர்ல இருக்காங்களா?". "இருக்காங்க அண்ணா". "கும்பகோணம் வர்றேன் காலையில. அப்பாவ பார்க்க வர்றேன்". "சரிங்க அண்ணா".

அய்யா கோ.சி.மணி அவர்களது படத்திறப்பு விழாவுக்கு கும்பகோணம் வந்துவிட்டு சென்னை செல்லும் போதும் அப்பாவை சந்திக்க முயற்சித்தார். அப்போது அப்பா ஹைதராபாத் செக்கப் சென்றிருந்தார்கள்.

அடுத்து செந்துறை அருகே, கொலை செய்யப்பட்ட நந்தினி இல்லத்திற்கு ஆறுதல் கூற வந்த போதும், கும்பகோணத்தில் சொன்னார், " சங்கர், ஆண்டிமடம் போய் அப்பாவ பார்த்திடலாம்". "அப்பா திருச்சி அப்போலோவுல இருக்காங்க அண்ணா".

திருச்சியிலும் அப்பாவை பார்க்க முயற்சித்தார். அண்ணன் நேரு இல்ல திருமண நேர நெருக்கடியில் சந்திக்க இயலவில்லை. இப்போது கும்பகோணம் பயணம் என்றவுடன் உடனே திட்டமிட்டு விட்டார், அப்பாவை சந்திக்க.

காலை உளுந்தூர்பேட்டை சென்றேன். ச.ம.உ அண்ணன் உதயசூரியன், மா.செ அங்கயற்கண்ணி ஆகியோரோடு வரவேற்பு கொடுத்தோம். தளபதி அவர்களது வாகனத்தில் அண்ணன் கு.க.செல்வம் அவர்களோடு, அண்ணன் உதயசூரியனும் நானும் பயணித்தோம்.

விருத்தாசலத்தில் வரவேற்பு கொடுத்த மா.செயலாளர் கணேசன், ச.ம.உ உடன் இணைந்தார். ஆண்டிமடம் பயணித்தோம். வழியெங்கும் தளபதி அவர்களுக்கு அன்பான வரவேற்பு நிகழ்ச்சிகள்.

ஆண்டிமடம். வீட்டு வாயிலில் கழகத் தோழர்கள் குவிந்திருந்து வரவேற்பளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்டு வீட்டுக்குள் வந்தார்.

கடந்த நான்கு மாதத்தில் இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்ததால் அப்பா மெலிந்து விட்டார்கள். களைப்பாகவும் இருந்தார்கள்.

வீட்டுக்குள் நுழைந்த எனக்கே ஆச்சரியம். அப்பா வேட்டி, சட்டை, வாட்ச் அணிந்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். தளபதியை பார்த்த உடன் எழுந்தார்கள். பதறிப் போன தளபதி,"நீங்க உக்காருங்கண்ணா" என்றார்.

"எப்படி இருக்கீங்கண்ணே?". அப்பா நல்லா இருக்கேன் என கையால் சைகை காட்டினார்கள். "தலைவரை பத்தி தான் எப்பவும் கேட்டுகிட்டு இருக்காங்க", என்றார் என் அம்மா. "தலைவர் நலம் குறித்து என்னிடமும் கேட்கிறார்கள்", என்றேன்.

உடனே தளபதி தன் அலைபேசியை எடுத்தார். கேலரியை திறந்து கொண்டே," சமீபத்தில் எடுத்த தலைவருடைய புகைப்படம் இருக்கு. பாருங்கண்ணே", என்றவாறு அய்ந்து நிமிடம் பொறுமையாக தேடி எடுத்து அப்பாவிடம் காட்டினார்கள்.

அப்பாவால், அந்தப் புகைப்படத்தை காணும் அரிய வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது. "அம்மா, அப்பாவ பார்க்கும் போது", என்றார் தளபதி. புகைப்படத்தில் தலைவர் கலைஞரும், தயாளு அம்மாள் அவர்களும் எதிரெதிராக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் காட்சி. தயாளு அம்மாள், தலைவர் கையை பற்றியிருக்கும் உணர்ச்சிமிகு புகைப்படம்.

படத்தை பார்த்த அப்பா லேசாக கலங்க, " தலைவர் கிட்ட நீங்க விசாரிச்சிங்கன்னு சொல்றேன். சென்னை வரும் போது சொல்லுங்க, தலைவர பார்க்க ஏற்பாடு செய்கிறேன்", என தளபதி சொல்ல, அப்பா கண்ணில் அவ்வளவு ஆனந்தம்.

அப்பாவின் சிகிச்சை நிலை, உணவு ஆகியவற்றை குறித்து விசாரித்தார்கள் தளபதி அவர்கள். உடனே அப்பா ,"கிளம்பலாமா?" எனக் கேட்க, எல்லோருக்கும் அதிர்ச்சி. "எங்கப்பா?" என என் தம்பி சிவக்குமார் கேட்க, "கூட்டத்துக்கு தான்" என்றார்கள் அப்பா. 

"மாலையில் தான்ணா கூட்டம். வெயிலா இருக்கு. நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு  மாலை
வாங்க. நான் முன்னாடி கும்பகோணம் கிளம்புறேன்" என்றார்கள் தளபதி.

அப்பா கண்ணீர்  பெருக்கோடு விடைகொடுக்க, "ஏன்ணா இதுக்கா நான் வந்தேன். நீங்க சந்தோஷமா, தெம்பா இருக்கணும் தானே பார்க்க வந்தேன். நல்லா இருப்பீங்க" என கையை பிடித்து சொல்ல, அப்பாவுக்கு ஆறுதல். இது மிகுந்த தெம்பை தரும்.

1989ல் அப்பா எஸ்.சிவசுப்ரமணியன், ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். பொது நிறுவனங்கள் குழுத் தலைவராக நியமித்தார் அப்போதைய முதல்வர் தலைவர் கலைஞர். குழுவின் உறுப்பினர் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்கள்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய போது, தளபதி அவர்களை அழைத்து வந்து, கிராமங்கள் தோறும் கழக கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அப்பா. அப்படி நீண்ட கால உறவு இது.

கார் கிளம்பியது. முகநூல் நான்கு ஆண்டுகளுக்கு முன்னான நினைவை காட்டியது. அப்பா ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை முடிந்து சென்னை வந்த போது, தளபதி அவர்கள் அப்பாவை சந்தித்து நலம் விசாரித்த நாள் இன்றாம்.

"மணியண்ணன் வீடு மயிலாடுதுறை வழியில தானே சங்கர். கும்பகோணம் போனா அவர் தான் முன்னாடி நின்னு வரவேற்பார்", என்று மறைந்த அய்யா கோ.சி.மணி நினைவில் மூழ்கினார் தளபதி.

போகின்ற வழியெங்கும் இருக்கும் கழகத்திற்கு உழைத்த முன்னோடிகளை நினைவில் கொண்டு, அவர்களை சந்தித்து நலம் விசாரிக்கும் தளபதி அவர்களின் பண்பை வெளிப்படுத்தும் நிகழ்வு இது. மறைந்த முன்னோடிகளையும் நன்றியோடு நினைவு கூறும் பண்பு இளைய தலைமுறைக்கு பாடம்.

# அன்பான, பண்பான, பாசத் தளபதி வழிகாட்டுகிறார் !

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

திராவிட இயக்க பேராசிரியர்

பேச்சு ஒரு கலை. அதுவும் மக்களை கவரும் விதத்தில் பேசுவது சிரமம்.  அனைவருக்கும் புரிவது போல் பேசுவது சிரமம். கவரும் விதத்திலும், எளிமையாக புரியும் விதத்திலும் பேசுவது மிகச் சிரமம். 

அதையே ஆதாரத்தோடு, அழுத்தமாக பேசுவது மிக, மிக சிரமம். அதில்  முத்திரையை பதித்து  பேசுவது சிறப்பு. பேசும் குரலைக் கொண்டும், தொனியைக் கொண்டும், கருத்தைக் கொண்டும், பேசுபவரை அடையாளப் படுத்தும் வகையில் பேசுவது தனிச் சிறப்பு.

அப்படி பேசுவோர் மிகச் சிலர். அதில் ஒருவர் தான் அய்யா சுப.வீரபாண்டியன். கவரும் வகையில், எளிதாகப் புரியும் வகையில், ஆதாரத்தோடும், அழுத்தத்தோடும், முத்திரை பதியும் வகையில் பேசுபவர் அய்யா தான்.

மாநாட்டில் பேசும் மணி நேரப் பேச்சாக இருந்தாலும், கூட்டத்தில் பேசும் நிமிடக் கணக்கு பேச்சாக இருந்தாலும், வாட்ஸ் அப்பில் பரப்பும் நொடிக் கணக்கு பேச்சாக இருந்தாலும் முத்திரைப் பதிப்பவர் அய்யா சுப.வீ.

கருப்புச் சட்டை, நெருப்புக் கொள்கை,  கொள்கை தெளிவு,   சிரிக்கும் விழி, இனிக்கும் மொழி, அணுக்கச் சிரிப்பு,  நெருக்க சினேகம் என ஒரு வித்தியாச மனிதர் சுப.வீரபாண்டியன்.

இவரது தந்தை காரைக்குடி சுப்பையா, தந்தை பெரியாரின் நெருங்கிய நண்பர். திராவிட இயக்க தீவிர செயற்பாட்டாளர். பெரியாரின் பெருந்தொண்டர் என்பதில் பெருமிதம் கொள்பவர்.

சுப.வீ அவர்களது தாயார் விசாலாட்சி அம்மாள். செட்டிநாட்டு பகுதியில் கருப்பு சேலை உடுத்தி, கழகப் பணியாற்றிய முதல் பெண்மணி. இவரது தலைமையில் ஒரு திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது அறிவித்த 96 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றவர் பெரியவர் ராம.சுப்பையா. சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றியவர். தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆரோடு நெருக்கமானவர்.

சுப.வீ அவர்களது சகோதரர் எஸ்.பி.முத்துராமன் பிரபல திரைப்பட இயக்குநர். குடும்பப் பிண்ணனி இவரை திராவிட இயக்க உணர்வாளர் ஆக்கியது. இவர் கற்ற கல்வி தமிழ் பற்றாளர் ஆக்கியது.

கல்வி பேராசிரியர் ஆக்கியது. பணியில் இருந்த போதும், பெரியார் கொள்கையை பரப்பும் பணியை நிறுத்தவில்லை. அதே போல ஈழ விடுதலையில் தீராத ஆர்வம் கொண்டவர். அந்த ஆர்வமே அவரை களத்தை நோக்கி நகர்த்தியது.

அப்போது தான் திலீபன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இறுதியில் தன் உயிரையே தந்தார் திலீபன். திலீபன் மரணம் தான் சுப.வீ அவர்களை களத்தில் இறக்கியது. ஈழ விடுதலைக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் ஈழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர் அய்யா சுப.வீ அவர்களாகத் தான் இருக்கும். வோட்டரசியலுக்கு வராமல் கொள்கைக்காக முழங்கி அதிக இழப்பை சந்தித்தவர்.

விடுதலைப்புலிகளிடம் வான் படை இருக்கிறது என்ற செய்தியை உலகிற்கு முதன்முதலில் அறிவித்தவர் சுப.வீ அவர்கள் தான். இன்னும் பல பணிகளை வெளி உலகிற்கு தெரியாமல் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஆற்றியிருக்கிறார்.

அதற்கு அவருக்கு கிடைத்த பரிசு ஓன்றரை ஆண்டுகள் சிறை. ஆமாம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 'பொடா' சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்.   கைது நடவடிக்கை அவரை இன்னும் தீவிரமாக இயங்க வைத்தது.

'கருஞ்சட்டைத் தமிழர்' என்ற மாதமிருமுறை இதழை லாப நோக்கமின்றி, கொள்கைக்கான பணியாக நடத்தி வருகிறார். தொடர்ந்து நூல்களும் எழுதி தமிழுக்கான பங்களிப்பை அளித்து வருபவர்.

சமீபகாலமாக வாட்ஸ் அப்பில் இவரது 'ஒரு நிமிடப் பேச்சு' மிகப் பிரபலம். கொள்கை ரீதியாக மாறுபட்டோரும் இவரது பேச்சை தினமும் கேட்க தவறுவதில்லை. சொல்ல வரும் செய்தியை ஒரு நிம்மிடத்திற்குள் அழுத்தமாக, சுருக்கமாக வெளியிடுவது இவரால் மாத்திரமே முடியும்.

தலைவர் கலைஞர் மீது இவருக்கு அளப்பற்ற மரியாதை. இவர் மீது தலைவருக்கு மிகுந்த அன்பு. பல விஷயங்களுக்கு தலைவர் இவரோடு கலந்துரையாடுவார்.

திராவிட இயக்க வரலாற்றை இளைஞரணிக்கான பயிற்சி பாசறையில் எடுத்துரைக்க , அய்யா சுப.வீ அவர்களையே முன்னிறுத்தினார் தளபதி அவர்கள்.

நேற்று அய்யா சுப.வீ அவர்களது பிறந்தநாள்.

# திராவிட இயக்க பேராசிரியர் சுப.வீ வாழ்க !

சனி, 15 ஏப்ரல், 2017

அம்பேத்கர் - இந்தியாவின் தலைவர்

நான்காண்டுகளுக்கு முன் தென் தமிழ்நாட்டில் ஒரு சம்பவம். ஒரு கிராமத்தின் தெரு வழியாக சென்ற பள்ளிச் சிறுவனொருவன்
மறிக்கப்பட்டான். அவன் அணிந்திருந்த செருப்பு, அவன் தலை மீது சுமத்தப்பட்டு அனுப்பப் பட்டான். காரணம், தலித் சிறுவன் அவன்.

தமிழகத்தை விட, வட இந்தியாவில் நிலை இன்னும் மோசம். தொழில்நுட்பங்கள் முன்னேறி, உலகம் வளர்ச்சி கண்டுள்ள 2000க்கு பிறகே  இந்த நிலை என்றால், 1900களுக்கு முன் எப்படி இருந்திருக்கும், அதுவும் மகராஷ்டிராவில்.

அம்பேத்கருக்கு ஏற்பட்ட அனுபவம் வேறொருவருக்கு கிட்டியிருந்தால் முளையிலேயே கருகியிருப்பர். ராணுவத்தில் பணியாற்றிய தந்தை அமைந்தக் காரணத்தால் பள்ளி செல்லும் வாய்ப்பு அம்பேத்கருக்கும், அவரது சகோதரர்களுக்கும். ஆனால் அவரது சகோதரர்களால் பள்ளி படிப்பை தாண்ட இயவில்லை. அம்பேத்கர் பள்ளியை மட்டும் தாண்டவில்லை, உயர் கல்விக்காக நாட்டையே தாண்டி பயணித்தார்.

அயல்நாட்டுக் கல்வி பெறுதல் அந்த காலத்தில் கிடைத்தற்கரிய வாய்ப்பு. அதுவும் மிக, மிக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைக்கவே கிடைக்காது. ஆனால் அம்பேத்கர் சாதித்தார். தன் அறிவுக் கூர்மையால், விடா முயற்சியால் அயல்நாடு சென்று கல்வி கற்றார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர், நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். எம்.ஏ படித்து முடித்தார். இதற்கு அப்போதைய பரோடா அரசு நிதி உதவி வழங்கியது.

சட்டம், பொருளாதாரம், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு தன் அறிவுப் பெருக்கை வெளிப்படுத்தினார். அந்தக் கல்வி அறிவை சுய முன்னேற்றத்திற்கு மாத்திரம் பயன்படுத்தாமல், நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியக் காரணத்தால் தான், இறந்து அறுபத்தோரு ஆண்டுகளுக்கு பிறகும் நினைவுக் கூறப்படுகிறார், கொண்டாடப் படுகிறார்.

வழக்கறிஞராக பணியாற்றிய போதே, தன் சமூகப் பணியை துவங்கி விட்டார். பத்திரிக்கைகள் துவங்கி, அதன் மூலம் தலித் மக்களுக்காக குரல் எழுப்பினார். சைமன் கமிஷன் வருகை தந்த போது அரசியல் நுழைவு நிகழ்ந்தது. அப்போது எதிர்காலத்தில் இந்தியா அமைவதற்கான அறிக்கையை தயாரித்தார். அவரது அந்த தொலைநோக்கு பார்வை தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக அவரது பெரும் பங்களிப்பு.

இந்து மதம் என்ற பெயரால் சாதிகளாகப் பிரிக்கப்பட்டு, அடித்தட்டு மக்களை ஒடுக்கியதை நேரடியாக அனுபவித்தக் காரணத்தால், அதன் மூல வேரை கண்டுபிடித்து சிகிச்சையை துவங்கினார். சாதிகள் குறித்த அவரது ஆழ்ந்த அறிவு தான் லண்டனில் அவரது ஆய்வறிக்கையாக வெளிப்பட்டது. அதன் தலைப்பு, "இந்தியாவில் சாதிகள் - அதன் செயற்பாடு, தோற்றம், வளர்ச்சி". இது தான் இந்தியா குறித்த உண்மைத் தன்மையை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது.

சாதிகள் பெயரால், மதத்தின் பெயரால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மாத்திரம் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி, கோலோச்சி வந்ததை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது. இது தலித்களுக்கு மாத்திரமான குரலல்ல. சூத்திரர்கள் என்று பிற்படுத்தப்பட்ட இனத்துக்குமான குரலாகவும் அமைந்தது. இதைத் தீர்க்க ஒரே வழி சாதிகளின் வேரை அறுப்பது தான் என்று முடிவெடுத்தார். சாதிகளை நிறுவிய "மனுநீதி"யை எதிர்ப்பதே சமூக விடுதலைக்கான வழியாக கண்டறிந்தார்.

"மனுநீதி"யை எரிக்கும் போராட்டத்தைத்  துவங்கினார். அந்தக் காலக்கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதே பெரும் விஷயம். அதிலும் ஆளும் இனத்தின் வேத நூலை எரித்துப் போராடுவது கனவிலும் நடவாத விஷயம். நடத்திக் காட்டினார் அம்பேத்கர். அதிலும் இந்த மனுநீதியைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பூமியான மகராஷ்டிராவில், மனுநீதியை எரித்தது தான் அம்பேத்கரின் அடையாளம். இப்படித் துவங்கிய அரசியல் வாழ்வு தான் அவரை உச்சத்தில் கொண்டு வந்து அமர்த்தியது.

சுதந்திரம் பெற்ற இந்தியாவின்  முதல் சட்ட அமைச்சராகப் பதவியேற்றார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்தக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்தார். இது அவரது அறிவின் ஆழத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தியது. அம்பேத்கர் குறித்து எழுதுவதற்கு பக்கங்கள் போதாது. அம்பேத்கர் எழுதிய பக்கங்களின் எண்ணிக்கையை எழுத, இனி இன்னொரு அரசியல் தலைவரால் இயலாது. அதிலும் அறிவார்ந்த, கருத்து செறிந்த அந்த பார்வை யாருக்கும் வராது.

அம்பேத்கரை தலித் தலைவராக சிறு வட்டத்தில் அடைக்க இன்னும் மதவாத சக்திகள் முனைகின்றன. அவர் அரசியல் மேதை, பொருளாதார நிபுணர், சமூக மருத்துவர், இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

# அம்பேத்கர் இந்தியாவின் தலைவர் !

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

வடசென்னை வளரட்டும் !

வடசென்னை தான் ஆதிசென்னை என்பது வடசென்னை வாசிகளின் குரல். அதற்கு பல ஆதாரங்களை அடுக்குகிறார்கள். முன்னூற்று எழுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதை கணக்கில் கொண்டு சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. சென்னப்ப நாயக்கன் பட்டினம் 'சென்னை'யாக உருமாறியது. கோட்டையில் இருந்து கூப்பிடும் தூரத்தில் துறைமுகம்.

அதன் தொடர்ச்சி ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் என விரிகிறது. ஆங்கிலேயர் காலத்தில் துணி வெளுப்போரின் குடியிருப்பு பகுதி தான் அவர்களால் 'வாஷர்மேன்பேட்' என்றழைக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை என்பது செய்தி. அடுத்து மீனவர் குடியிருப்புகள். இவர்கள் பூர்வீகக் குடிகள். அந்த காலகட்டத்தில் உருவானப் பகுதிகள் இவை. இதன் நீட்சியாய் விளங்கும் திருவொற்றியூர் சோழர்கால கோவிலைக் கொண்டுள்ளது.

தென் சென்னையானது அக்காலத்தில் வயல்வெளியாக இருந்தது திட்டமிட்ட நகர் பகுதியாக விரிவடைந்ததால் தான் நெருக்கடி குறைவானதாக இருக்கிறது. தமிழகத்தின் ஏனையப்பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்தோரே தென்சென்னையின் பெரும்பான்மை. இங்கும் பூர்வக்குடிகள் உண்டு. ஆனால் இவர்கள் எண்ணிக்கை குறைவு. வடசென்னையில் பூர்வக்குடிகள் எண்ணிக்கை அதிகம், வந்தேறியோர் குறைவு.

வடசென்னை விரிவாக்கத்திற்கு வழி இல்லாமல் போனதால், தென்சென்னை பெருத்தது, விரிந்தது. விரிவாக்க இடமில்லாத காரணத்தால் தான் மக்கள் தொகை பெருகப், பெருக வடசென்னையில் குடியிருப்புகள் நெருக்கியடித்தது. அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. சாலைகள் விரிவாக்கம் செய்வதில் எதிர்ப்புகள். ஒரு சில சாலைகள் மாத்திரம் அகலப்படுத்தப் பட்டுள்ளன.

இந்தப் பகுதியில் சிறு தொழிற்கூடங்கள் அதிகம். இதனால் தொழிலாளர்கள் அதிகம். அதிலும் தினக்கூலியாக பணியாற்றுவோரே அதிகம். அரசுப் பள்ளிகள் தாண்டி, தென்சென்னை போல் தனியார் பள்ளிகள் கிடையாது. பெற்றோரின் குறைந்தக் கல்வி, பொருளாதார சூழல், குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இங்கு கல்வி வளர்ச்சி குறைவானதாகவே இருக்கிறது.

கல்வி வாய்ப்பு குறைவால் உடல் உழைப்பு பிரதானமாகிறது. இதனால் இந்தப் பகுதி மக்கள் அதை ஒட்டிய வாழ் நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் வடசென்னை பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதியாகவே நீடிக்கிறது. இங்கு வியாபாரம் செய்து பொருளாதாரத்தில் மேம்பட்டிருப்போர் பெரும்பாலும் வட இந்தியர்கள்.

திரைப்படங்களில் வடசென்னையை வன்முறைக் களமாகவே காட்டி மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டனர். ஊரின் அமைப்பும், உழைக்கும் மக்களின் உடல்வாகும் அதற்கு சாட்சியமாக அமைகிறது. ஆனால் தென்சென்னையில் பக்கத்து வீட்டில் பிரச்சினை என்றால் எட்டிப் பார்க்க ஆள் இருக்காது,  தொழிலாளர் பகுதிகள் விதிவிலக்கு. வடசென்னை பகுதியில் முணுக்கென்றால் கூட்டம் கூடி விடுகிறார்கள். ஆதரவு கொடுக்கும் மனப்பான்மை.

ஊரின் அமைப்பு எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் வசதியாக இருக்கிறது. ஆங்காங்கே கைவிடப்பட்ட தொழிற்கூடங்கள், குறுகலான சந்துகள், ஆள் நடமாட்டமில்லா பகுதிகள் என இருண்டப் பகுதிகள். அதே போல துறைமுகமும், தொழிற்சாலைகளும் பணப்புழக்கத்தோடு இருப்பதால் தொழிற் போட்டி அதிகம். அதை நிலை நிறுத்துவதில் வன்முறை தான் ஆயுதம். பணத்திற்காக முதலாளிகளின் கைப்பாவையாக இந்தப் பகுதியினர் சிலர்.  இது ஒரு சங்கிலித் தொடராக நீள்கிறது. ஆனாலும் பொதுமக்கள் அச்சமின்றியே வாழ்கின்றனர்.

கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேறுவதற்கான வாய்ப்பும், அடிப்படை வசதிகள் மேம்பாடும் இங்கே மிக அவசியம். அரசு, மக்கள் பிரதிநிதிகள், மக்கள் என மும்முனை கூட்டு முயற்சி இருந்தால் தான் இந்தப் பகுதி 'சென்னை' போல் முன்னேற வாய்ப்பிருக்கிறது. இங்கிருக்கிற தொழிற்சாலைகள் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

# வடசென்னையும் வளரட்டும், வாழட்டும் !

சனி, 1 ஏப்ரல், 2017

தளபதி வாழ்த்திய செம்பருத்தி !

தளபதி அவர்களது பிறந்தநாள் அன்று சால்வைக்கு பதில் நூல்களாக வழங்கச் சொன்னதில் நூல்கள் குவிந்தன. அவற்றை பிரித்து பல்வேறு நூலகங்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்கள் தளபதி அவர்கள்.

அதனைக் கண்ட மாணவி செம்பருத்தி தளபதி அவர்களுக்கு கடிதம் எழுதினார் "தங்களது கிராம நூலகத்திற்கும் நூல்கள் தருமாறு ". நேற்றைய முன் தினம் புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்திற்கு நேரிடையாக சென்று நூல்களை அளித்தார் தளபதி. இன்று மீதி நூல்களை பத்துக்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு வழங்கினார்.

செம்பருத்தியின் கோரிக்கையை ஏற்று  தளபதி அவர்கள் நூல்களை வழங்க உறுதி அளித்தார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரிடமும் நூல்களை நேரடியாக வழங்கினார்.

கொளப்பாடியில் இருந்து காலை கிளம்பி அறிவாலயம் வந்தடைந்தார் செம்பருத்தி. தளபதி அவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும், பரபரப்பிலும் இருந்தார். தளபதி அவர்களை சந்திக்கும் முன் " சார், என்ன கேட்பாங்க?" என்றார். "ஒண்ணும் கேக்க மாட்டாங்க. அப்படி கேட்டாக்க பதட்டமில்லாம பதில் சொல்லும்மா" என்றேன். ஆனால் அப்படி கேட்டாரே தவிர, அவர் தயாராகத் தான் இருந்தார் என்பது பிறகு தான் தெரிந்தது.

தளபதி அவர்களது அறையில் நுழைந்தோம். தளபதியை வணங்கினார் செம்பருத்தி. அருகில் அழைத்து நிறுத்தினார் தளபதி. செம்பருத்தி உடன் அவரது அண்ணனும், சித்தியும் வந்திருந்தனர். "சங்கர் வாங்க", என்றழைத்து என்னையும் உடன் நிறுத்தினார். தளபதி அவர்களது மேசை புத்தகங்களால் நிறைந்திருந்தது.

" செம்பருத்தியா?" என்றார். ஆமாம் என்று தலையசைத்தார் செம்பருத்தி. "எந்த ஊர்?", என்றுக் கேட்டார் தளபதி. தளபதியை பார்த்த பிரமிப்பில் நின்றுக் கொண்டிருந்த செம்பருத்தி, " கொளப்பாடி", என்றார். "குன்னம் தொகுதி", என்றேன். " என்ன நூலகம்?", என்றுக் கேட்டார். "ஊர்புற நூலகம். செம்பருத்தியால் கட்டிட வசதி கிடைத்தது. நூல்கள் அன்பளிப்பாக செம்பருத்தியால் சேர்ந்தது", என்றேன்.

"நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் இருக்கிறது?" என்றுக் கேட்டார். "687 புத்தகங்கள் இருக்கிறது", என்று துல்லியமாக பதிலளித்தார் செம்பருத்தி. "இதில் 200 புத்தகங்கள் இருக்கிறது. உங்கள் நூலகத்தில் கொடுத்திடுங்க. வாழ்த்துக்கள்", என்றார் தளபதி. மகிழ்ச்சியாகத் தலையசைத்தார் செம்பருத்தி. வணங்கி விடைப் பெற்றார்கள் செம்பருத்தி குடும்பத்தினர்.

வெளியில் வந்தும் படபடப்பு அடங்கவில்லை செம்பருத்திக்கு. "சார், அந்த போட்டோ கிடைக்குமா?", என்றுக் கேட்டார் செம்பருத்தி. "அவசியம் வாங்கிக் கொடுத்துடறேம்மா", என்றேன். அதற்குள் அவரை தந்தி டிவியினர் பேட்டிக்கு அழைத்தனர். தயங்கினார்.  "மனசுல பட்டதை பேசும்மா", என்றேன். எளிமையாக பேசினார்.

கீரனூர் நூலகத்திற்கு நூல்கள் பெற வந்த கீரை தமிழ்ராஜா செம்பருத்தியை கண்டு உற்சாகமானார். " அண்ணனால உலகம் பூரா தெரிஞ்சுட்ட, வாழ்த்துக்கள்", என்றார். "அது செம்பருத்தி படிப்பு ஆர்வத்திற்கு கிடைத்த பாராட்டு" என்று ராஜாவிற்கு பதிலளித்தேன்.

செம்பருத்தியை நோக்கி ,"சொன்ன மாதிரி ஐ.பி.எஸ் படிக்க முயற்சி எடுக்கணும். இன்னும் புகழ் பெற வேண்டும் ", என்று வாழ்த்தினேன். " சார், நல்லா படிக்க சொல்லுங்க", என்று சிரித்தவாறு புகார் சொன்னார் செம்பருத்தியின் அண்ணன். "சார், இப்போ பிளஸ் ஒன் தான் . இந்த வருஷம் நல்லா படிச்சி மார்க் வாங்கிடுவேன்" என்று உறுதியளித்தார் செம்பருத்தி.

கொளப்பாடி போய் சேர்த்து அலைபேசினார். "சார், கலைஞர் டிவியில் காட்டினாங்க. மு.க.ஸ்டாலின் சார் கூட இருக்கறது பாத்து  எங்க அம்மாவுக்கு சந்தோஷம். போட்டோ மட்டும் அனுப்பிடுங்க சார்", என்றார். " வாட்ஸ் அப் வந்திடுச்சிம்மா. பிரிண்ட் போட்டு அனுப்பிடறேன்", என்றேன்.

செம்பருத்தி தன்  படத்தை பார்ப்பதற்கு முன் , உலக அளவில் சென்று விட்டது தளபதி அவர்களது முகநூல் மூலமாக.

# தளபதி அவர்களது வாழ்த்து பெற்ற செம்பருத்தி !