பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 நவம்பர், 2016

சுற்றிலும் நம்மவர்களே

தெரியாத இடத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவரை சந்திக்கும் போது ஏற்படும் ஆனந்தமே தனி தான். தஞ்சை தேர்தலுக்கு பணி ஒதுக்கப்பட்ட போது அதே நிலை. பக்கத்து மாவட்டமாக இருந்தாலும், மாவட்ட அளவிலான தலைவர்களை தெரியும் என்றாலும் வார்டு அளவில் யாரையும் பழக்கம் கிடையாது என்ற நிலையில் சென்றோம்.

கொடிமரத்து மூலை பஸ் ஸ்டாப் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தோம். நேரத்தை செலவிட டீ குடிக்க முடிவெடுத்தோம். டீயை வாங்கி குடிக்கும் போது எதிரில் இருந்த கடையின் விளம்பரப் பலகையை பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. முதல் நாள் பார்த்த விசிட்டிங் கார்டின் விரிவாக்கப்பட்ட உருவம்.

தஞ்சாவூர் தேர்தல் பணிக்காக கரந்தை 5வது வார்டு செயலாளர் கார்த்திகேயன் அலுவலகத்தில் முதல் நாள் பார்த்த போது, முகநூல் நண்பர் சுலைமான் கொடுத்த விசிட்டிங் கார்ட். சுலைமான் இருக்கிறாரா என்று பார்த்தோம், அண்ணன் 'மா.சு'வை பார்க்க சென்றிருந்தார். தஞ்சை தேர்தலுக்கு வந்ததில் இருந்தே யாராவது ஒருவரை பழைய தொடர்புகளோடு சந்திக்கும் வாய்ப்பு.

முதல் நாள் 4 வது வார்டு செயலாளர் டி.எஸ்.கார்த்திகேயனை பார்க்க செல்லும் வழியில் ராஜா நின்று கொண்டிருந்தார். கடந்த பொதுத் தேர்தலின் போது தஞ்சை இணையதள கூட்டத்திற்கு அழைத்து சிறப்பித்தவர் ராஜா, இளைஞரணி இணையதள நிர்வாகி. ராஜா 4வது வார்டை சேர்ந்தவர் என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம்.

தஞ்சை செல்லும் போது ஒரு அலைபேசி அழைப்பு. பள்ளி நண்பர் மோகன் அழைத்தார். "எங்க பெரியம்மா மகன் வெங்கட் கரந்தையில் இருக்கிறார். உங்களை சந்திக்க சொல்லி இருக்கிறேன். எந்த உதவியாக இருந்தாலும் செய்வார்". ஆண்டிமடத்தை அடுத்த கவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். வார்டுக்கு சென்ற போது நிர்வாகிகள் வரவேற்றனர். புறப்படும் போது, பிரதிநிதி அருகே வந்து சொன்னார், "நான் தான் வெங்கட்". மோகன் சொன்ன   பக்கத்து ஊர்காரரே கழக நிர்வாகி வெங்கட்.

மீண்டும் கொடிமரத்து மூலை. டீ கடையை தாண்டி அலுவலகத்திற்கு நடந்த போது பெட்டிக்கடையில் இருந்து ஒருவர் வெளியே வந்தார். திமுக கரை வேட்டி. என்னை உற்றுப் பார்த்தார். அருகே வந்தார். "நீங்க சிவசங்கர் தானே ?" என்றார். ஆமாம் என்றேன். "நான் முருகேசன், 7வது வார்டு அவைத்தலைவர்" என்றார். " மகிழ்ச்சி. உங்க வார்டு நிர்வாகிகளை தான் இன்னும் சந்திக்கவில்லை" என்றேன்.

நான்கு நாட்களாக தஞ்சை சென்ற போதும் மற்ற வார்டு நிர்வாகிகளை தான் சந்தித்தோம், 7வது வார்டு நிர்வாகிகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. செல்போன் பேசி முடித்த முருகேசன்,"வார்டு செயலாளர் சந்திரனை இங்கேயே வர சொல்லிட்டேன், வந்துடுவாரு",என்றார். பிறகு, " எனக்கு சொந்த ஊர் தேவனூர். சந்திரனுக்கும் சொந்த ஊர் தேவனூர் தான்" என்றார் முருகேசன்.

" அப்படியா?", என்றுக் கேட்டேன். "ஆமாம். நான் தலையாரி ரத்தினம் மகன்.  40 வருஷத்திற்கு முன்ன வேல தேடி தஞ்சாவூரு வந்துட்டேன். சந்திரன் அப்பா காலத்திலய இங்க வந்துட்டாங்க. எனக்கு கணக்கப்பிள்ளை தான் தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணம் செஞ்சி வச்சாரு. எங்க வக்கிலு அய்யா ஆக்சிடண்ட்ல கால் முறிஞ்சு, இங்க தஞ்சாவூர் ராஜா மிராஸ்தார் ஹாஸ்பிடல்ல வைத்தியம் பார்த்தப்ப, நானும் சந்திரனும்  போய் கூடவே இருந்தோம். ஆனா இப்ப தான் உங்கள பார்க்கிறேன்" என்றார்.

செயலாளர் சந்திரன் வந்தார். அவரும் என்னை சந்தித்ததில் அகம் மகிழ்ந்தார். நானும் மகிழ்ந்தேன்.

தேவனூர் தான் எனக்கும் சொந்த ஊர். கணக்கப்பிள்ளை தான் என் தாத்தா சாமிதுரை. வக்கிலு அய்யா, என் தந்தையார் சிவசுப்ரமணியன்.

# உலகம் மிக சிறியது. எங்கு சென்றாலும் நம்மவர்களே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக