பிரபலமான இடுகைகள்

சனி, 20 டிசம்பர், 2014

மலேசியத் தமிழர்களும், பத்துமலை முருகனும்


பத்துமலை முருகன். மலேசியாவின் அடையாளம் இவர் என சொல்லும் அளவுக்கு, வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் இவரை பார்க்க குவிகிறார்கள். நானும் போய் பார்த்தேன், இந்த ஃபோட்டோ போடுவதற்காகவே.

               

இன்னொன்னு நான் தங்கி இரூக்கும் அறை அவர் கோவிலுக்கு பின்னால் தான். பில்லா-2 படத்தில் அஜித் டான்ஸ் ஆடும் போது பின்னால் விஸ்வரூபம் போல் நிற்பாரே அவரே தான். இவரது உயரம் 140 அடி.

மலேசியத் தமிழர்களுக்கு இவர் மீது அவ்வளவு பிரியம். இங்கு கொண்டாடப் படும் தைப்பூசம் மிகப் பிரசித்தி பெற்றது. தமிழர்கள் மாத்திரம் இல்லாமல், மலாய் மக்களும் வருகிறார்கள்.


எல்லா மதத்தவரும் வருகிறார்கள். இவர் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பெரும் சுற்றுலாத் தளமாகி விட்டது. அருகிலேயே மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் நெடுஞ்சாலை இருப்பதால் வசதி.

அருகிலே ஓடும் ஆற்றின் பெயரால் இந்த மலைக்கு பத்து மலை என்று பெயர் வந்திருக்கிறது. மலை மீது வழக்கம் போல் முருகன் குடி கொண்டுள்ளார். படி ஏறிப் போய் அவர் தரிசனம் பெறுகிறார்கள்.

மலை மீதுள்ள இந்தக் கோவிலை தம்புசாமிபிள்ளை என்ற மலேசியத் தமிழர் கட்டியுள்ளார். அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு, மலைக்கு முன்பாக இந்த உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சிலையை வடிவமைத்தவர் தியாகராஜன் என்ற திருவாரூரை சேர்ந்த சிற்பி. மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. முருகன் தங்கப் பூச்சு பூசப்பட்டு தகதக என மின்னுகிறார்.

இவருக்கு அடுத்து பினாங்கில் உள்ள தண்ணீர்மலை முருகன் கோவில் பிரசித்தியானதாம். பெரும்பாலும் மலேசியத் தமிழர்கள் வழிபடுவது முருகக் கடவுளை தான். அதனால் பரவலாக முருகன் கோவில் மலேசியா முழுதும் உள்ளது.

தமிழ் கடவுள் முருகன் என்பதை மலேசியத் தமிழர்கள் மறக்கவில்லை. நம்ம ஆளுங்க தான் திருப்பதி, சபரிமலை போய் காசக் கொட்டிட்டு வர்றது. இவங்கள பார்த்தாவது திருந்தனும்.

சின்னப்பா தேவர் இருந்திருந்தா, இங்க ஒரு படம் எடுத்து, இப்படி ஒரு பாட்டு போட்டிருப்பாரு...

# பத்துமலை மாமணியே முருகய்யா !

வெள்ளி, 19 டிசம்பர், 2014

வாதாடி 'பெற்ற' தீர்ப்பு (சட்டமன்ற விமர்சனம்)

04.12.2014 ஜீரோ நேரம். அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்பும் நேரம்.

அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் எழுந்து நின்றனர். கிட்டத்தட்ட அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் எழத் துவங்கினர். பதறி எழுந்தார் நத்தம் விஸ்வநாதன். அவை முன்னவராகப் பொறுப்பேற்ற முதல் தினம். அதனால் மிக பக்குவமாக பேசினார்,”ஒவ்வொரு உறுப்பினராக பேசுங்கள்".

துரைமுருகன் பேச எழுந்தார். ”சட்டமன்றம் நடக்கும்” என்று ஆரம்பித்தார். ஆனால் அவர் பேசுவதற்கு, சபாநாயகர் அனுமதிக்க மறுத்தார். சட்டசபை மூன்று நாட்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் அனைத்து எதிர்கட்சிகளும் பிரச்சினை எழுப்பியது. அதனால் தான் சபாநாயகர் அனுமதிக்க மறுத்தார்.

திடீரென சபாநாயகர்,”சவுந்தர்ராஜன் அத உள்ள வைங்க” என்று திரும்பி, திரும்பி உத்தரவிட்டார். மார்க்சிஸ்ட் சட்டமன்றக் குழு தலைவர் சவுந்தர்ராஜன் ஒரு அச்சடிக்கப்பட்ட காகிதத்தை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார்.

எல்லா மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கையிலும் அதே போன்ற காகிதம். அதில் இருந்த வாசகம்,”மக்கள் பிரச்சினையை பேச, பேரவைக் கூட்ட நாட்களை அதிகப்படுத்துக”. சபாநாயகர் உஷ்ணமாகிவிட்டார். “அலுவல் ஆய்வுக்குழு முடிவு தான் இறுதி” என்றவர் “ஆறுமுகம் பேசுங்க” என்று இ.கம்யூ தலைவரை பார்த்து சொன்னார்.

ஆறுமுகம், “தஞ்சை மாவட்டத்தில் போராட்டம்” என்றார். அவ்வளவு தான், உடனே சபாநாயகர் “முனுசாமி பேசுங்க” என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை அழைத்தார். அந்த நேரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினரை பேச அழைப்பது மரபு அல்ல, ஆனாலும் அழைத்தார்.

எதிர்கட்சிகளை வம்பிழுக்க சரியான ஆள், முனுசாமி தான் என இந்தத் திட்டம். மார்க்சிஸ்ட் வெளி நடப்பு செய்தனர். முனுசாமி மூச்சுக்கட்டி பேச ஆரம்பித்தார், முதல் வரிசைக்கு வர வேண்டுமல்லவா. பேச விடாததை கண்டித்து, திமுக வெளிநடப்பு செய்தோம். அடுத்து தேமுதிகவும் வெளிநடப்பு செய்தது.

இந்த நேரத்தில், "ஜெயலலிதாவால் 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" என்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தேமுதிக சார்பில் பார்த்தசாரதி பேசினார்.

அடுத்து பேசிய தளபதி அவர்கள்,”21,893 கோடிக்கு திட்டங்கள் முதல் ஆண்டு அறிவித்திருக்கிறீர்கள். அடுத்து 18,000 கோடி. மொத்தம் 39,893 கோடி. இதில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்ன நிலையில் உள்ளது ?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்,”என் மக்கள் யாரிடமும் கையேந்தி நிற்காத காலம் வரும் வரை உழைப்பேன் என்ற அம்மா, விழிகாட்டி, வழிகாட்டி வழி நடத்துகிறார்கள்” என்று புகழந்து கொண்டே போனார்.

அப்போது ஜெ.அன்பழகன் எழுந்து,” முதல்வர் யாரை புகழ்கிறார்? ஏன் இந்த அவையில் புகழ்கிறார்?” என இடைமறித்து கேட்க, அவரை அவையை விட்டு வெளியேற்றினார் சபாநாயகர்.

மறுபடியும் ஓ.பி.எஸ், ஜெ புகழ்பாடிக் கொண்டே போனார். நத்தம், ஓ.பி.எஸ்ஸை உட்கார சொல்ல, ஓ.பி.எஸ்ஸும் உட்கார்ந்து தண்ணீர் குடித்தார். அண்ணன் துரைமுருகன் எழுந்து,”எங்கள் தலைவரை சுருக்கமா பேச சொன்னீங்க. ஆனா முதல்வர் இப்படி பேசிக்கிட்டே போறாரே !” என்று கேட்டார்.

அதற்கு சபாநாயகர்,”இது அவைக் குறிப்பில் ஏறாது” என சொல்ல, அண்ணன் துரைமுருகன்,”எழுதுனா எழுதுங்க, எழுதாங்காட்டி போங்க” என கேஷூவலாக சொல்லி விட்டு அமர, அவையில் சிரிப்பலை.

ஓ.பி.எஸ்,” அரசு 110 விதியின் கீழ் சொன்னதை செய்யவில்லை என திமுகவினர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் 110 விதி அறிவிப்புகள் மக்கள் தலைவிதியை மாற்றி அமைத்திருக்கிறது, எதிர்கட்சிகளை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.” என டி.ராஜேந்தர் போல வார்த்தை விளையாட்டு ஆடினார்.

இப்படியாக 12.05 - 12.51 வரை பேசிக் கொண்டே போனார் ஓ.பி.எஸ். அடுத்து பால் விலை உயர்வு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு ஆகியன குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

அடுத்து முல்லைப் பெரியார் பிரச்சினை குறித்து ஓ.பி.எஸ் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இது குறித்து ஓ.பி.எஸ் மிக நீண்ட விளக்க உரையாற்றினார். பல உறுப்பினர்கள் தூங்கியே போனார்கள். செ.கு.தமிழரசன், தனியரசு ஆகியோரது வாழ்த்துரைக்கு பிறகு பா.ம.க கலையரசு வாழ்த்துரை வழங்கி களத்தில் போட்டியாகக் குதித்தார்.

இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்,” இது அம்மா சட்ட நுணுக்கங்களை அடுக்கி வாதாடி பெற்ற தீர்ப்பு” என சொல்ல, “இந்த நுணுக்கம் பெங்களூரு வழக்கில் எங்கப் போச்சி?” என பின் வரிசையில் இருந்து குரல் வர, பதில் இல்லை.

துரைமுருகன் முல்லைப் பெரியார் பிரச்சினை குறித்து பேச, தொடர்ந்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “முல்லைப் பெரியார் பிரச்சினைக்கு காரணம் எம்.ஜி.ஆர் தான், தீர்ப்பின் வெற்றிக்கு முன்னோடி கலைஞர்” என துரைமுருகன் சொன்னதற்கு, அமைச்சர் வைத்தி பொங்கி எழுந்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ எழுந்து, நாடகத்தில் வரும் பபூன் நடிகர் போல முகபாவங்களைக் காட்டி நக்கல் செய்தார். இதனைக் கண்டித்து திமுக சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஒரு கட்டத்தில் பதில் அளிக்க அனுமதி மறுத்த சபாநாயகரை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

# ஜெ’னநாயக பாதுகாவலர் சபாநாயகர் !

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மக்கள் முதல்வரும், பினாமி அரசும் (சட்டமன்ற விமர்சனம்)

04.12.2014. சட்டப்பேரவையில், கேள்வி நேரம் துவங்கியது.

அதிமுக மானாமதுரை ச.ம.உ குணசேகரன் (அதிமுக) மின்துறையில் கேள்வி கேட்டார். ஒரு புதிய மின்மாற்றி அமைக்கப்படுமா என. அமைச்சர் நத்தம் வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்.

                       

மீண்டும் குணசேகரன் “மக்கள் முதல்வர் அம்மாவை வணங்கி கேட்கிறேன்”. நத்தம் பதில் “மக்கள் முதல்வர் அம்மா ஆசியோடு நடக்கும் ஆட்சி நடவடிக்கை எடுக்கும்".
அவ்வளவு தான் ஒவ்வொரு கேள்விக்கும் அம்மா, அம்மா தான்.

காங்கிரஸ் பிரின்ஸ் கேள்விக்கு அமைச்சர் வைத்தி பதில்,”மக்களின் முதல்வர் இதயதெய்வம் அம்மாவை வணங்கி, இது குறித்த கருத்துரை ஏதும் அரசிடம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

அமைச்சர் மோகன்,” மாண்புமிகு அம்மா அரசு நடவடிக்கை எடுக்கும்”

அமைச்சர் வளர்மதி,”அம்மா இருக்கும் திசை நோக்கி வணங்கி பதில் அளிக்கிறேன்”

அமைச்சர் பழனியப்பன்,”மக்களின் முதல்வர் அம்மா திசை வணங்கி…”

அப்போது ஒரு கேள்வி கேட்க சரத்குமார் எழ அவர் காதில் “கடுக்கண்” டாலடித்தது. நேராக ஷூட்டிங் போவாரோ. சுரண்டை கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் கேட்டவர், மக்கள் முதல்வர் குறித்து புகழவில்லை. எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

அமைச்சர் காமராஜ்,”அம்மாவின் பொற்பாதங்கள் வணங்கி பதில் அளிக்கிறேன்”

சித.பழனிசாமி (அதிமுக சமஉ),”அம்மா தான் நிரந்தர முதல்வர், அம்மா தான் நிரந்தர பொது செயலாளர்…” என அடுக்கிக் கொண்டே போனார். பேப்பரே படிக்க மாட்டார் போல, நிரந்தர முதல்வராம்.

ஒரு கேள்விக்கு பதில் சொல்ல எழுந்த அமைச்சர் வேலுமணி தேவையில்லாமல் கடந்த திமுக ஆட்சி குறித்து குறிப்பிடும் போது, “மைனாரிட்டி திமுக ஆட்சி” என சொல்ல, நாங்கள் “பினாமி ஆட்சி” என்று குரல் கொடுக்க, அத்தோடு ஒழுங்காக பதில் சொல்லி அமர்ந்தார்.

“வருவாய் துறை சார்பாக ஒரு ஊருக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்படுமா ?” என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார் “ அலுவலகம் கட்ட மக்கள் முதல்வர் ‘அம்மா’ கவனத்திற்கு கொண்டு சென்று ஆவன செய்யப்படும்".

இப்படி எது கேட்டாலும், மக்கள் முதல்வர் அம்மா கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், மக்கள் முதல்வர் அம்மா செய்வார்கள், மக்கள் முதல்வர் அம்மா அரசு, மக்கள் முதல்வர் அம்மாவை வணங்கி என்றால், இந்த முதல்வர் ஓ.பி.எஸ் எதற்கு ?

அதே போல சட்டசபையில் அதிகாரிகள் வரிசையில் தலைமை செயலாளர் ஞானதேசிகன் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து “மக்கள் தலைமை செயலாளர்” ஷீலா பாலகிருஷ்ணன் அமர்ந்திருந்தார். அடுத்து “மக்கள் டி.ஜி.பி” ராமானுஜமும் அமர்ந்திருந்தார்.

இப்படி ஒரு அரசு. அலுவல்படி ஒரு முதல்வர், தலைமை செயலர். டி.ஜி.பி இருக்க, கூடுதலாக ஒரு “மக்கள் முதல்வர், அரசு ஆலோசகர்கள் என்ற பெயரில் மக்கள் தலைமை செயலாளர், மக்கள் டி.ஜி.பி” இருந்தால் அந்த அரசை எப்படி அழைக்க முடியும் ? இப்படி தான்…

திங்கள், 15 டிசம்பர், 2014

பயத்தோடு சட்டசபையில் நுழைந்தேன்...

04-12-2014. சட்டமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாள்.

சற்றே பயத்துடனும், ஆவலுடனும் தான் அவைக்குள் நுழைந்தேன். “அவர்அமர்ந்திருந்த இருக்கையை “பயத்துடன் பார்த்தேன். அவையில் நுழைந்தால் நேரே அந்த இருக்கை தான் கண்ணில் படும். ஹப்பா, இருக்கையின் மீது ஏதுமில்லை.

     

பரதன் போல் ஓ.பி.எஸ் ஆட்சி புரிவார் என்று சொன்னதால் வந்த பயம். தப்பா நினைக்காதீங்க. வழக்கமா மேசை மீது வைக்கிற “மக்கள் முதல்வர் படத்த இருக்கை மீது வைத்து விட்டு தன் இருக்கையில் அமர்வாரோ என்ற சந்தேகம் தான்.

ஆவலுடன் என் இருக்கைக்கு முன் இருக்கையை சென்று பார்த்தேன். அது தான் தலைவர் கலைஞருக்கு ஒதுக்கப்பட்ட இடம். தலைவர் அவைக்கு வருவதாக தெரிவித்த போது, சவால் விட்டாரே ஓ.பி.எஸ். அதற்கேற்ப தலைவரது சக்கர நாற்காலி வர, வசதி செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்த்தேன். செய்யப்பட வில்லை.

நான் இப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒருவர் குறுக்கே புகுந்து சட்டப்பேரவை செயலாளர் இருக்கையை சுற்றிக் கொண்டு போனார். அட, முதல்வர் ஓ.பி.எஸ். அம்மா அமர்ந்த இருக்கைக்கு கூட இடையூறு இல்லாமல் சுற்றி, உள்ளே வந்தார்.

வந்தவர் முதல்வர் இருக்கையில் அமரவில்லை. அது இரண்டு பேர் அமரக்கூடிய சோபா. அதில் ‘அவர் உட்கார்ந்த இடத்தை விட்டுவிட்டு கூட இன்னொரு பாதியில் அமரலாம். ஆனால் இவரோ தனது வழக்கமான இருக்கையில் அமைச்சராகவே அமர்ந்தார். என்னே ஒரு பக்தி !

வழக்கமாக ஜெ முதல்வராக இருக்கும் போது வந்தால், இரண்டு நிமிடத்திற்கு முன்பு அவரது கண்ணாடிக் கூடு, கைக்குட்டை போன்றவை வந்துவிடும். அதை பார்த்த உடனேயே அதிமுகவினர் அலர்ட்டாகி எழுந்து நின்று விடுவார்கள், கூப்பியக் கரங்களோடு.

ஆனால் ஓ.பி.எஸ் யாருக்கும் தொந்தரவு இல்லாமல், சரக்கென்று வந்து அமர்ந்து விட்டார். சபாநாயகர் தனது வழக்கமான பாதை வழியாக வந்தார். அவர் நுழையும் இடத்தில் தான் முதலமைச்சர் நாற்காலி. அந்த காலங்களில் அங்கே அமர்ந்திருக்கும் ஜெவை வணங்கி தான் உள்ளே நுழைவார்.

பழக்கதோஷத்திலோ, அல்லது மரியாதை நிமித்தமாகவோ பழைய முறையிலேயே அந்த காலி இருக்கையை நோக்கி குனிந்து, வணங்கி நுழைந்தார். அப்போது தான் எனக்கு அடுத்த பயம் வந்தது. பதவியேற்பின் போது நிகழ்ந்த “அழுகாச்சி காவியம் ஒன்ஸ்மோர் ஆகிவிடுமோ என.

நல்லகாலம் குரல் தளும்பாமல், கண் கலங்காமல் திருக்குறளை வாசித்தார். மற்றவர்களை பார்த்தேன். யாரிடத்திலும் சோகமில்லை, துக்கமில்லை. பளிச்சென்று மொட மொட வெள்ளை வேட்டி சட்டையில் ஜம்மென்று அமர்ந்திருந்தனர்.

இரண்டாவது வரிசையில் மந்திரி உதயக்குமார் மட்டும் நீண்ட தாடியுடன் மிகுந்த சோகமாக அமர்ந்திருந்தார், இன்னும் பிரார்த்தனை முடியவில்லை போலும் என நினைத்துக் கொண்டேன். மூன்றாவது வரிசையில் பழைய மந்திரி பச்சைமால் தாடியோடு இருந்தார். தாடிக்கும் டை அடித்து கருகருவென.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செந்தில்பாலாஜி, வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மொட்டையடித்து, லேசாக முடி வளர்ந்து வந்திருந்தனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மட்டும் மழமழவென ஃபிரெஷ் மொட்டை தலையாக அமர்ந்திருந்தார்.


# சிம்பாலிக்கா மின்கட்டண உயர்வ சொல்லியிருப்பாரோ பொள்ளாச்சி ?

சனி, 13 டிசம்பர், 2014

மணமகளின் உரிமை முழக்கம் !

அது சுயமரியாதைத் திருமணம். மணவிழாத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் அய்யா இராசகிரி தங்கராசு அவர்கள். அவர் உறுதிமொழியை சொல்ல, சொல்ல மணமகள் கோப்பெருந்தேவி முதலில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

                       

“மணமகன் என்னிடத்தில் என்ன உரிமையை எதிர்பார்க்கிறாரோ, அதே உரிமையை அவரிடம் எதிபார்க்க எனக்கும் உரிமை உண்டு”. இந்த வரியை சொல்லும் போது, மணமகள் ஒரு சின்ன இடைவெளி கொடுத்து “எனக்கும் உரிமை உண்டு” என்பதை அழுத்தமாக சொன்னார்.

லேசான புன்னகையோடு மீண்டும் தொடர்ந்தார்,”இந்த ஒப்பந்தத்தின் பேரில் நான் ரவிக்குமார் அவர்களை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொள்கிறேன்”.

மணமக்கள் இருவரும் டாக்டர்கள். மணமகன் ரவிக்குமார் M.D(குழந்தை நலம்). மணமகள் கோப்பெருந்தேவி M.B.B.S முடித்து M.E.M படிக்கிறார் (அவசர சிகிச்சை).

ஒரு காலத்தில் திருமணம் ஆன பிறகும், கணவர் பெயரை சொல்ல மனைவியர் தயங்கியது உண்டு. இன்று பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு சமத்துவம் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறது. காரணம் பெரியார். இருந்தாலும் மைக் முன்னால் வந்து நின்று விட்டால், மணமகள் மணமகன் பெயரை சொல்ல இன்னும் தயங்குகின்றனர்.

ஆனால் இங்கு கோப்பெருந்தேவிக்கு அந்த தயக்கம் இல்லை. அதைத் தாண்டி அழுத்தம் இருந்தது. காரணம், அவர் பெரியாரின் பெயர்த்தியாக வளர்த்தெடுக்கப்பட்டவர். தலைமைக் கழக சொற்பொழிவாளர் அண்ணன் பெருநற்கிள்ளி அவர்கள் தன் மகளை அப்படி வளர்த்திருக்கிறார்.

அண்ணன் பெருநற்கிள்ளி குடும்பமே பெரியாரின் வழிவந்தவர்கள். தமிழ் உணர்வாளர்கள். அவரது தந்தையார் ஆசிரியர் அரிகோவிந்தன் தன் பிள்ளைகளுக்கு இட்ட பெயர்களை பார்த்தாலே தெரியும். அன்பினுருவன், எழிலோவியன், கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி, அசோகன், இளையகுமார். இன்றும் அந்தக் குடும்பத்தில் நல்ல தமிழ் பெயர்கள் தொடர்கின்றன.

அண்ணன் பெருநற்கிள்ளி அவர்கள் பெரியார் திடல் மாணவர். இன்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பரப்பி வருபவர். அதனை தன் வாழ்வில் அவசியம் கடைபிடிப்பவர், அதற்காக என்ன விலை கொடுக்க வேண்டி வந்தாலும்.

மகளுக்கு காது குத்தாமலே விட்டுவிட்டார் அண்ணன் பெருநற்கிள்ளி, கொள்கையால். திருமணத்தன்று மணமகள் தோடு அணிந்திருக்க வேண்டுமென்று மணமகன் தாயார் விரும்ப, ஒரு வார விவாதத்திற்கு பிறகே ஒப்புக் கொண்டார். கால ஓட்டத்திற்கேற்ப சில சமரசங்களை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டுமென நான் பேசியும் வாதம் செய்தார்.

திருமணத்திற்கு அண்ணன் பெருநற்கிள்ளி துவக்க உரை ஆற்றினார். அதுவே அரை மணி நேரம் நீடித்தது. மகள் கல்யாணத்தில் இவரே அரைமணி நேரம் பேசுகிறாரே, முகூர்த்த நேரம் தாண்டுகிறதே என்று சிலர் முணுமுணுத்தனர். நான் சொன்னேன், “முகூர்த்த நேரம் தாண்ட வேண்டுமென்று தான் அண்ணன் பேசிக் கொண்டிருக்கிறார். தன் கொள்கையை நிலை நாட்டுகிறார்”.

அண்ணன் கிள்ளி அவர்கள் உரையில் குறிப்பிட்டது, “இது சுயமரியாதைத் திருமணமாக இருந்தாலும் எனக்கு மன நிறைவு இல்லை. காரணம், நான் மகள் திருமணத்தை செவ்வாய் கிழமையில் மாலை நேரத்தில் நடத்த விரும்பினேன். ஆனால் மணமகன் தாயார் ஒப்புக் கொள்ளவில்லை”

கொள்கை சமரசம் செய்ததால் ஏற்பட்ட வருத்தத்தை, மகள் திருமணத்திலேயே, பதிவு செய்யும் கொள்கையாளர் தான் அண்ணன் பெருநற்கிள்ளி.

# பெரியார் வாழ்கிறார், கொள்கையாளர் உணர்வில் !
                        

செவ்வாய், 9 டிசம்பர், 2014

முட்டை முறைகேடு - சட்டமன்றத்தில் எனது பேச்சு

08.12.2014 அன்று,  சட்டமன்றத்தில் "முட்டை கொள்முதலில் முறைகேடு" குறித்து எதிர்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கழகத்தின் சார்பாக பேச தளபதி அவர்கள் வாய்ப்பளித்தார்கள்.

                

பேச போகும் முன் கொறடா சக்கரபாணி அவர்கள்,"தளபதி அவர்கள் விவாதத்தில் பேச வேண்டும். சண்டை வராமல் பேசு" என்று அறிவுரை வழங்கினார். சபாநாயகர், முதல் வரி பேசிய உடனேயே "சிவசங்கர் சுருக்கமா பேசுங்க" என்றார். அதை தாண்டி முட்டைப் பிரச்சினையில் மக்கள் கருத்தை பதிவு செய்தேன்.

இது குறித்து முரசொலியில் வெளிவந்துள்ள செய்தி.

""சத்துணவு திட்டத்திற்கு, முட்டை கொள்முதலில் மாநில அளவில் ஒரே நிறுவனத்திடம் டெண்டர் விட்டது ஏன் ?
எடை குறைந்த – தரம் குறைந்த முட்டைகள் என பொதுமக்கள் புகார் ! பேரவையில் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு !

சத்துணவு திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகள் ஒரே நிறுவனத்திடம் டெண்டர் விடப்படுவது ஏன்? என்றும் எடை குறைந்த முட்டைகள், தரம் குறைந்தவைகளாக இருப்பதாக மக்கள் குறை கூறுகிறார்கள் என்றும் கழக உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் கழக உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது :

“பள்ளியிலே பயிலுகின்ற மாணவர்களுக்கு சத்துண்வோடு முட்டையினை வாரம் ஐந்து முறை வழங்குவதற்கு எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் ஆணையிட்டு, வழங்க ஏற்பாடு செய்தார்கள்.

அப்படி வழங்கப்படுகின்ற முட்டை, கடந்த ஆட்சி காலங்களில் மாவட்டங்களில் டெண்டர் விடப்பட்டது. பல பேர் டெண்டர் எடுத்து அந்த முட்டையை சப்ளை செய்தார்கள்.

தற்போது மாநில அளவிலே டெண்டர் விடப்பட்டு, ஒரே நபருக்கு வழங்கப்பட்டு, அவரே சப்ளை செய்கிற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அது போல, வாரம் மூன்று முறை அந்த முட்டைகளை பள்ளிகளுக்கு அனுப்புகின்ற முறை இருந்தது. ஆனால் இப்போது வாரம் ஒரு முறை அந்த முட்டைகளை முழுவதுமாக சப்ளை செய்வதால், அவற்றை தரமாக விநியோகிக்க முடியாத நிலை இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.

நாள் தோறும் 60 லட்சம் முட்டைகள் சப்ளை செய்யப்படுகின்ற நிலையில், ஒரு முட்டை 45கிராம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 30 முதல் 35 கிராம் எடை கொண்ட முட்டைகள் தான் சப்ளை செய்யப்படுவதாக மக்களிடத்திலே எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டே எங்கள் சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த செய்தி குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் ஓராண்டு கடந்த பிறகு இன்று பத்திரிக்கைகளிலே பல எதிர்கட்சிகள் இந்தச் செய்தி குறித்து பேசுகின்ற அளவிற்கு செய்தி வந்திருக்கிறது.

எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும் “
இவ்வாறு எஸ்.எஸ்.சிவசங்கர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வளர்மதி, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முட்டை கொள்முதலில் முறைகேடுகள் என வந்துள்ள செய்திகளுக்கும் நேரடியாக பதில் தராமல் வழக்கம் போல் கழக ஆட்சியை குறை கூறியே ஏறக்குறைய 20 பக்கங்களுக்கு மேல் படித்தார்.

அமைச்சரின் அர்த்தமற்ற பதிலுக்கு கழக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.""

         

திங்கள், 8 டிசம்பர், 2014

சட்டசபையில் ரவுடித்தனம் செய்த அமைச்சர்….


           
இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரை ஒரு வாரம் நடத்தாமல் மூன்று நாட்களாக சுருக்கியதன் நோக்கமே பிரதான எதிர்கட்சிகளை பேச விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான், அதிலும் குறிப்பாக திமுக-வை.

கூட்டத் தொடரின் கடைசி நாள், துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் இறுதியாக தளபதியே பேசுகிறார் என்றால் விடுவார்களா. இன்று அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

2.00 மணிக்கு சபையில் கில்லட்டின் நேரம். அப்படி என்றால் அந்த நேரத்திற்குள் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இது மரபு. இதை கணக்கு வைத்து ஆளுங்கட்சியின் ஒத்து நாயனங்களான செ.கு.தமிழரசன், தனியரசு போன்றோர் அதிக நேரம் எடுத்துக் கொள்ள சபாநாயகர் அனுமதித்தார்.

இதனால் திமுகவுக்கான வாய்ப்பு நண்பகல் 1.10-க்கு தான் வந்தது. தளபதி பேச எழுந்தார்கள். சபாநாயகரும், செயலாளரும் பார்த்துக் கொண்டனர், தயார் என்பது போல. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கவனிக்கத் தொடங்கினர். அமைச்சர்கள் தயாராகினர்.

“இது இரண்டாவது துணை நிலை நிலை அறிக்கை. இதில் ஒதுக்கப்பட்ட நிதி மூலமே அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. 110 விதியின் கீழ் இது வரை நீங்கள் அறிவித்துள்ள திட்டங்களுக்கு ரூபாய் 31,208 கோடி ஒதுக்கியிருக்க வேண்டும்.

ஆனால் இந்த துணை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கிற தொகை வெறும் 1,500 கோடி மட்டுமே. மற்ற அறிவிப்புகளுக்கான தொகை ஒதுக்கப்படவில்லையா ?” என்று தளபதி அவர்கள் உரையாற்றும் போதே முதல்வர் ஓ.பி.எஸ் எழுந்தார். அப்போது மணி 1.13.

கை நிறைய கத்தையாக காகிதங்கள். அடையாளத்திற்காக ஆங்காங்கே ஃபிளாக் வைக்கப்பட்டிருந்தது. அதில் புரட்டி, புரட்டி ஒரு பக்கத்திற்கு வந்தார் ஓ.பி.எஸ். படிக்க ஆரம்பித்தார். 04.12.2014 அன்று 110 விதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிலைக் குறித்து எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த போது வாசித்தவற்றையே மீண்டும் வாசித்தார்.

அந்த அறிக்கையும் ஒதுக்கப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இல்லாமல் வெறும் திட்ட விவரிப்பு தான். அப்படியே 110 அறிக்கைகளின் தொகுப்பு.

எதிர்கட்சி உறுப்பினர்கள் “அண்ணா முடியல. போதும்ணா” என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஒரே சலசலப்பாக, அவை முழுதும் சத்தமாக இருந்தது.

ஓ.பி.எஸ் “இப்படி தான் அன்று நான் இந்த அறிக்கையை படித்த போதும் திமுக உறுப்பினர்கள், படிக்க வேண்டாம் அவையில் தாக்கல் செய்யுங்கள். நாங்கள் படித்துக் கொள்கிறோம் என்று சொன்னீர்கள். ஆனால் நான் அப்போதே சொன்னேன், நீங்கள் படிக்க மாட்டீர்கள். அதனால் நான் பேசுவதைக் கேளுங்கள் என்று”

ஒரு இடைவெளி கொடுத்து, “நான் சொன்னது போல திமுக உறுப்பினர்கள் படிப்பதுமில்லை; சொல்வதை புரிந்து கொள்வதுமில்லை” என்று நக்கலானக் குரலில் சொல்லிவிட்டு ஒரு ஏளனப் பார்வை பார்த்தார்.

பிள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு முளைச்சது போல இருந்தது.

அண்ணன் துரைமுருகன் கடும் கோபமுற்றார். எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “எப்படி படிப்பதில்லை, புரிந்து கொள்வதில்லை என்று சொல்வது ?” என்று குரலெழுப்பினார். ஆனால் சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. கோபமிருந்தாலும் நாங்கள், தளபதி அவர்கள் உரையாற்ற வேண்டுமென்பதற்காக அமைதி காத்தோம்.

ஓ.பி.எஸ் தொடர்ந்து பேச ஆரம்பித்தவர் “மைனாரிட்டி திமுக ஆட்சி போல நாங்கள் இல்லை” என்றவுடன் தளபதி எழுந்து எதிப்பு தெரிவித்தார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். ஓ.பி.எஸ் தனது டிரேட்மார்க் சிரிப்போடு நின்றார். சபாநாயகர் தளபதி அவர்களை பேச அனுமதிக்கவில்லை.

தொடர்ந்த ஓ.பி.எஸ், “இத்தோடு முடிக்கிறேன். இனியும் கேள்வி கேட்டால் நானும் தொடருவேன்” என்று 110 குறித்து இனியும் பேச வேண்டாம் என மிரட்டுவது போல கூறிவிட்டு அமர்ந்தார். அப்போது நேரம் 1.28.

மூன்று நிமிடங்களே தளபதி அவர்கள் பேசியிருந்த நிலையில், பதில் சொல்கிறேன் என ஓ.பி.எஸ் 15 நிமிடங்களை, பேசி வீணடித்திருந்தார். தளபதி அவர்களை பேச விடாமல், அவரது நேரத்தை அபகரிப்பதே அவர்கள் நோக்கம். அதே போல சபாநாயகர் “உங்கள் நேரம் முடிகிறது” என சொல்ல, திமுக தரப்பு சூடு அதிகமானது. அதை உணர்ந்த சபாநாயகர் தளபதியை பேச அனுமதித்தார்.

மீண்டும் தளபதி அவர்கள் பேச எழுந்தார்கள். “மைனாரிட்டி ஆட்சி என்று குறிப்பிட்ட பினாமி முதல்வர்” என்றார்.

(இரண்டாம் நாளே, இது போல “மைனாரிட்டி திமுக ஆட்சி” என்று சொன்னதற்கு பதிலடியாக “பினாமி அதிமுக ஆட்சி” என்று தளபதி அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்த வார்த்தையை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். “இனி மைனாரிட்டி என்று சொன்னால் “பினாமி” என்று சொல்வோம்” என தளபதி எச்சரித்திருந்தார்கள்)

அவ்வளவு தான் அதிமுக ஒட்டு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று கூக்குரலிட்டார்கள். உடனே சபாநாயகர் “அவைக் குறிப்பிலிருந்து நீக்குகிறேன்” என சொல்லியும் அதிமுகவினர் உட்காராமல் தகராறு செய்தனர். சபாநாயகர் எழுந்து நின்று அவர்களை அமர செய்தார்.

கொந்தளித்த அமைச்சர் வைத்திலிங்கம்,”பினாமி முதல்வர் என்கிறார். அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர். அது தான் பினாமி ஆட்சி. மகள் டெல்லியில் “ என்னும் போதே திமுக உறுப்பினர்கள் எதிர் குரல் எழுப்பினோம்.

சபாநாயகரோ வைத்திலிங்கத்தைப் பார்த்து,”அந்த வார்த்தையை நீக்கி விட்டேன். நீங்கள் ஏன் பயன்படுத்துகிறீர்கள் ?” என பதற, வைத்தியோ அதைக் கண்டு கொள்ளாமல் பினாமி, பினாமி என்று கதறிக் கொண்டிருந்தார். சபாநாயகர் செய்வதறியாமல் முழித்தார்.

ஒரு கட்டத்தில் வைத்தி தளபதி அவர்களை நோக்கி விரலை ஆட்டி, அடித்து விடுவேன் என்பது போல சைகை புரிந்து ஆவேசமாக கத்த, எங்கள் பொறுமை எல்லை மீறியது. நாங்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க, வைத்தி வேட்டியை மடித்துகட்டி பாய்வது போல முன்னேற, நாங்கள் சபாநாயகரை பார்த்து “இது சரியா?” என்று கேட்டோம்.

ஆனால் சபாநாயகர் எழுந்து நின்று, எங்களை அமர சொல்லி ஆணையிட்டுக் கொண்டிருந்தார். அதிமுகவினர் ஓலமிட்டுக் கொண்டிருந்தனர், அவர்களை கண்டுக் கொள்ளவில்லை அவர்.

வைத்திலிங்கத்தை மற்ற அமைச்சர்கள் அமர வைத்தாலும் மீண்டும், மீண்டும் எழுந்து தளபதி அவர்களை நோக்கி ரவுடித்தனமாக கத்திக் கொண்டிருந்தார். திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி “ரவுடித்தனம் செய்யும் வைத்திலிங்கம் மீது நடவடிக்கை எடு” என கோஷம் எழுப்பினோம்.

அவரோ மீண்டும் எங்களை எச்சரிப்பதிலேயே குறியாக இருந்தார். வைத்திலிங்கம் பக்கமே திரும்பி பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் சபாநாயகரை நோக்கி முன்னேறினோம். வைத்திலிங்கம் கத்திக் கொண்டிக்க, பொறுமை இழந்த தளபதி அவர்கள், தன் மார்பை விரித்துக் காட்டி,”வந்து அடித்துப் பார்” என சொல்ல, சபாநாயகர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே போனோம். சபையின் நடுப்பகுதியை நோக்கி சென்றோம். தளபதி அவர்கள் எங்களை தடுத்து விட்டார். இன்னொரு வழியாக சபாநாயகர் இருக்கை அருகே சென்ற அன்பழகன், ஐ.பெரியசாமி ஆகியோர் சபாநாயகரிடம் நியாயம் கேட்டு வாதிட, சபாநாயகர் அதற்கு பதில் சொல்லாமல் “இடத்திற்கு போங்க, இடத்திற்கு போங்க” என்று கத்திக் கொண்டிருந்தார்.

கொறடா சக்கரபாணி எங்களை “இடத்துக்கு போய் உட்காருங்க, தளபதி தொடர்ந்து பேசி அவர்களுக்கு பதிலளிக்கட்டும்” என சொல்ல, நாங்களும் இருக்கைக்கு திரும்பினோம். அதைப் பார்த்த சபாநாயகர் தடாலென “திமுக உறுப்பினர்களை வெளியேற்றுகிறேன்” என்று உத்தரவிட்டார்.

வைத்திலிங்கத்தின் தரக்குறைவான நடவடிக்கையை கண்டிக்காத சபாநாயகர், திமுக உறுப்பினர்களின் நியாயக் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்கவில்லை. அவர்கள் நோக்கம் நிறைவேறியது, தளபதி அவர்களை சபையில் பேசவிடாமல் தடுத்து விட்டார்கள்.

110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் மக்களை ஏமாற்றுவதை புள்ளிவிபரங்களோடு தளபதி அவர்கள் அரசை தோலுரித்து விடுவார் என்பது தான் அவர்கள் பயம்.

நாங்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப் பட்டோம். சட்டசபை வளாகம் முழுதும் “ரவுடி வைத்திலிங்கத்தின் மீது நடவடிக்கை எடு” என்ற கோஷம் எதிரொலித்தது.

# பினாமி, ரவுடி, கண்மூடி மனிதர் கொண்ட சபை. வாழ்க ஜெ’னநாயகம் !

சனி, 6 டிசம்பர், 2014

வணக்கம் பாண்டியன் !

கடந்த நவம்பர் மாதம் முழுதும் பத்திரிக்கை, முகநூல் எங்கும் ஒரு முகம் கண்ணில் பட்டது. அதுவரை பார்த்திராத முகம். ஆனால் பளிச்சென்று மனதில் பதியும் முகம். தீர்க்கமானப் பார்வை. திருத்தமான மீசை. அந்த முகம் மனதில் பதிந்தது. கவனத்தை ஈர்த்தது.

                   

யார் என்று தேடியதில் திராவிடவியல் ஆராய்ச்சியாளர் என தெரிய வந்தது. பெயர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். அவர் குறித்து அறியும் ஆர்வம் அதிகமானது. தலைவர் கலைஞர் இரங்கல் தெரிவித்தார். பத்திரிக்கைகளில் அவர் குறித்த கட்டுரைகள் வந்தன.

புத்தகங்களும், கட்டுரைகளும் நிறைய எழுதியுள்ளார். எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி பத்திரிக்கையில் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுபவர். அதிலும் குறிப்பாக திராவிட அரசியலை இந்திய அளவில் இந்தக் கட்டுரைகள் மூலம் கொண்டு சென்றிருக்கிறார்.

பெரியார் கொள்கைகளை சுவாசிப்பவர். ஈழ ஆதரவுக் கருத்துகளை முக்கிய வெளிகளுக்கு கொண்டு சென்றவர். திரைப்படங்களை ஆய்ந்து அதன் அரசியலை வெளிக் கொணர்ந்தவர். எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் எப்படி கட்டமைக்கப்பட்டு, அரசியல் வெற்றியை ஈட்டியது என்று ஆராய்ந்து புத்தகம் எழுதியுள்ளார்.

                    

டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அரசியல் பிண்ணனி வாய்ந்தது. சூடான அரசியல் களமாகவும் விளங்குவது. அங்கு தமிழகத்தின் குரலாக ஒலித்திருக்கிறார். அதைத் தாண்டி அங்கு ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும் ஒலித்திருக்கிறார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, காஷ்மீர், வடகிழக்கு மாணவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியிருக்கிறார்.

இவருக்கு  “காட்சிப்பிழை” இதழ் நினைவரங்கம் நடத்தும் செய்தியை பார்த்தேன். ஊருக்கு அவசரமாக பயணிக்க வேண்டி இருந்தாலும், சிறிது நேரம் ஒத்திவைத்து பங்குக் கொண்டேன். தவற விடாமல் இருந்தேனே என்று ஆறுதல் அடைந்தேன். விட்டிருந்தால், பெரும் ஆளுமையின் புகழ்களை கேட்க தவறியிருப்பேன்.

                  

எஸ்.வி.ராஜதுரை, விடுதலை ராஜேந்திரன், நீதியரசர் சந்துரு, அ.மார்க்ஸ், புனித பாண்டியன், சுபகுணராஜன் என்று உணர்வாளர்களின் நினைவுரைகள் கேட்டோரை செதுக்கின. பாண்டியனின் மாணவர்கள் இருவரும், சகப் பேராசிரியர் ஒருவரும் வந்து தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அந்த முகமறியா அறிஞருக்காக 500 பேருக்கான அரங்கம் நிறைந்திருந்தது, பெரிய விளம்பரம் கிடையாது. சென்னையில் இந்தக் கூட்டம் கூடியது அவரது உழைப்பால்.

பாண்டியனின் மனைவி, சித்தப்பா, தங்கை ஆகியோர் அவர் வாழ்வை நம் முன் நிறுத்தினர். அவரது மனைவி ஆனந்தி “கடைசியாக பாண்டியனோடு நானும், மகளும் சந்தித்த போது உரையாடியது அம்பேத்கர்-காந்தி குறித்த உரையாடல். மகளின் கட்டுரைக்கு கருத்து கொடுத்தார். நாங்கள் சென்னையில் இருக்க, அவர் டெல்லியில் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகத் தான் பணிபுரிந்து மறைந்தார் என்பது ஒரு வகையில் மகிழ்ச்சியே” என்ற போது எல்லோர் கண்களிலும் நீர்த் துளிகள்.

ஒவ்வொருவருடைய நினைவுரையும் மனதில் நிற்கக் கூடியவை.

விடுதலை ராஜேந்திரன் சொன்னது உச்சம். “தன் கொள்கைக்காக எந்த அதிகாரத்தையும் எதிர்க்கக் கூடியவர் பாண்டியன். சமீபத்தில் மத்திய மோடி அரசு ஹிந்தி திணிப்பிற்காக அறிவிப்பு கொடுத்தது. மறுநாள் காலை பாண்டியன், டெல்லியில் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது துறை முகப்பில் மாட்டியிருந்த பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்திருக்கிறார். பாண்டியன் இறந்த அன்று, அவரது மாணவர்கள் அந்த வளாகத்தில் இருந்த பல பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்திருக்கிறார்கள்”

“எப்போது போன் செய்தாலும் பாண்டியன் வணக்கம் சொல்ல மாட்டார். அவர் பழக்கம் அப்படி. நேராக, ராஜேந்திரன் என்று அழைத்து செய்தியை சொல்லுவார். பிறகு எனக்கும் அப்படியே பழக்கமாகி விட்டது. இப்போது சொல்ல ஆசைப்படுகிறேன். ‘வணக்கம் பாண்டியன்’” என்று விடுதலை ராஜேந்திரன் முடித்த போது சபை அமைதியில் மூழ்கியது.

எம்.எஸ்.எஸ். பாண்டியனின் திறமைகளையும், பெருமைகளையும் அறிந்தபிறகு எனக்கும் சொல்லத் தோன்றுகிறது, அந்த முகமறியாப் பெருமகன் பாண்டியனிடம்

# வணக்கம் பாண்டியன். உங்கள் புகழ் நிலைக்கும் !

புதன், 3 டிசம்பர், 2014

அதிமுக கூடாரத்தின் கோணங்கித்தனமும், கோணல்களும்…


தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென 07.11.2014 அன்று ஒரு அறிக்கை விடுத்தார்கள். “புதிய முதல்வர் பொறுப்பேற்றிருக்கிற வேளையில் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும். ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடத்துவது வழக்கம்.”

“அதிலும் இப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

                   முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். | கோப்புப் படம்

அதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட தற்காலிக முதல்வர் ஓ.பி.எஸ் அவர்கள் வரைமுறை இல்லாமல் வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். “சட்டசபையை எப்போது கூட்ட வேண்டுமென்று எங்களுக்கு தெரியும். சட்டசபையை கூட்ட ஸ்டாலின் ஆலோசனை சொல்ல தேவையில்லை” என்று ஜெயாவின் ஆணவ வரிகளை அறிக்கையாக வெளியிட்டார்.

அதற்கு பதிலளித்த தளபதி அவர்கள்,“சட்டப் பேரவை ஒன்றும் “கொடநாடு எஸ்டேட்” மற்றும் சிறுதாவூர் அரண்மனை போல தனி நபர் சொத்தல்ல; அ.தி.மு.க. வுக்கு மட்டும் பட்டா பாத்தியமுள்ள இடமுமல்ல. அது தமிழக மக்களின் பொதுச் சொத்து; பேரவையில் அங்கம் வகித்திடும் அனைவருக்கும் உரிய பொதுச் சொத்து.

“சட்டசபையை கேட்பதற்குக் கூட எனக்கு உரிமை இல்லை என்று சொல்வது, என்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் குரலை நெரிப்பதற்குச் சமம்; மக்களாட்சியின் மாண்பையே காலில் போட்டு மிதித்திடும்செயல்.

ஸ்டாலின் ஆலோசனை தேவையில்லை” என்று சர்வாதிகாரப் பாணியில் எடுத்தெறிந்து பேச முற்படுவது “பன்னீர்செல்வம்” என்ற பெயருக்குப் பெரும் இழுக்கைத் தேடிக் கொடுத்து விடும். எனவே பன்னீர்செல்வம் அவர்களே “நா காக்க!” “நா காக்க!” என்று காட்டமாகவே எச்சரித்திருந்தார்.

மீண்டும் பினாமி முதல்வர் ஓ.பி.எஸ் அறிக்கை விட்டு கதையளக்கும் வேலையை தொடர்ந்தார். தலைவர் கலைஞர் அரசுக்கு கடமையை நினைவுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதற்கும் குழாயடி சண்டைக்கு வந்தார் ஓ.பி.எஸ். மற்றக் கட்சி தலைவர்களும், “மிகச் சில” பத்திரிக்கைகளும் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தத் துவங்கினர்.

கூட்டம் நடத்த மனமில்லாமல் அறிக்கை மேல் அறிக்கை விட்டு அழிச்சாட்டியம் செய்த அதிமுக கூடாரம் ஒரு கட்டத்தில் பணிந்தது. டிசம்பர் 4-ல் சட்டமன்றம் கூடும் என்ற அறிவிப்பு ஒரு வழியாக வந்தது. அடுத்த கோணங்கிதனத்தை ஆரம்பித்து விட்டனர்.

சட்டமன்றம் கூடினால், எத்தனை நாட்கள் நடத்துவது, என்ன அலுவல்களை எடுத்துக் கொள்வது என்பதனை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும். இந்தக் குழு வழக்கமாக சட்டமன்றம் கூடும், முதல் நாள் மாலை கூடி முடிவெடுக்கும். ஆனால் இந்த முறை சட்டமன்றம் கூடுவதற்கு முதல் நாளான இன்றே அவசரமாகக் கூடியிருக்கிறது. முதல் கோணல்.

வழக்கமாக இது போன்ற கூட்டத் தொடர்கள் ஒரு வாரம் நடக்கும். இந்தக் கூட்டத் தொடரை இரண்டு நாளே நடத்துவது என முடிவெடுத்திருக்கிறார்கள், கூட்டத்தில். எதிர்கட்சிகளான திமுக, தேமுதிக, மா.கம்யூ, மமக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மூன்று நாட்களே நடத்த முடியும் என்று அறிவித்து விட்டார்கள்.

இதனைக் கண்டித்து இந்த எதிர்கட்சிகள் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்து விட்டன. அப்போதும் அதிமுக ஒத்து வரவில்லை. இது அடுத்தக் கோணல்.

கூட்டம் நடக்கும் மூன்று நாட்களில், இரண்டு நாட்களுக்கு இறந்த முன்னாள் ச.ம.உ-க்களுக்கு இரங்கல் தீர்மானங்கள், கூடுதல் செலவிற்கான துணை நிதிநிலை அறிக்கை, மசோதா தாக்கல் போன்ற அரசு அலுவல்களை மேற்கொள்ள ஒதுக்கி விட்டனர்.

இறுதி நாளான மூன்றாம் நாளே துணை நிதிநிலை அறிக்கை மீது விவாதமும், பதிலுரையும் இடம் பெறுகிறது. அன்றே அதன் மீது வாக்கெடுப்பும் நடக்க இருக்கிறது. இப்படி திட்டமிட்டதற்கு காரணம், ஒரே நாள் என்பதால் எதிர்கட்சிகளுக்கு விவாதிக்க மிகக் குறைந்த நேரமே ஒதுக்கப்படும்.

அந்த நேரத்திற்குள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பிறந்த குழந்தைகளின் மரணம், மூட்டை ஊழல், பருப்பு ஊழல், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, காவேரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, யூரியா தட்டுபாடு என அனைத்தையும் பேச விடாமல் தடுத்து விடலாம் என்பது தான் அதிமுகவின் திட்டம்.

இது முற்றிலுமான கோணல்.

சட்டமன்றத்தில் பேச விடாமல் தடுத்து விட்டால், மக்களுக்கு இந்தப் பிரச்சினைகளை தெரியாமல் மறைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள் போல. மக்கள் என்ன அவ்வளவு ……………… ?

# பூனை கண்ணை மூடினால், உலகம் இருண்டு விடுமாம் !

திங்கள், 17 நவம்பர், 2014

போன் வந்தப்ப நம்பர பாத்தீங்களா ?

“வணக்கம். நான் மு.க.ஸ்டாலின் பேசறேன்”
“வணக்கம். நான் கலைஞர் பேசறேன்”


.
.
“நீங்க கருணாநிதி தானே?”
“ஆமாங்க”
“ஆலத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தானே?”
“ஆமாங்க”
.
.
“நான் அறிவாலயத்திலிருந்து ஸ்டாலின் பேசறேன்”
“ஏங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அவரு, பெரம்பலூர் வந்து என்னைப் பாத்துட்டு போனாரு. நீங்க யாருங்க?”
“ஸ்டாலின் தான் பேசறேங்க”
“நான் அவருக்கே தலைவர் கலைஞர்ங்க”
(இவர் பெயர் கருணாநிதி என்பதால், நாங்கள் பெயர் சொல்லி அழைக்க தயங்கி, அவரை “கலைஞர்” என்று அழைப்போம். அதில் அவர் கலைஞராகவே ஆகிவிட்டார்)
“உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல”
“திமுக-காரனுக்கு யாரும் புரிய வைக்க வேண்டாங்க. நல்லா புரியும்”
“போன் வந்தப்ப நம்பர பாத்தீங்களா?”
“ஆமாம். Private Number-னு வந்தது”
(இப்போ தான் நம்ம ஆளுக்கு லேசா புரிய ஆரம்பிச்சுது, குரல் தளபதி மாதிரி தான் இருக்குன்னு)
“அய்யா, அய்யா நான் பிரைவேட் நம்பர்ன உடனே வெளிநாட்டு கால்னு நினைச்சேன்”
“எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் அய்யா”
“ஆய்வுக்கு வந்தீங்களே. எப்படி இருந்தது?”
“உங்கள பார்த்ததும், உங்கக்கிட்ட பேசினதும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் அய்யா. தெரியாம பேசிட்டேன் அய்யா”
“பரவாயில்ல. ஊருக்கு வரும் போது பார்க்கிறேன், தலைவராச்சே”
சிரிப்போடு முடித்திருக்கிறார் தளபதி அவர்கள்.

***********************************

பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காட்டுராஜா ஒரு நிகழ்ச்சியில் இருந்திருக்கிறார். அதே போல் அழைப்பு
“வணக்கம். நான் ஸ்டாலின் பேசறேன்”
(நம்பமுடியாமல்) “யாருங்க?”
“சென்னையிலிருந்து மு.க.ஸ்டாலின் பேசறேன்”

*************************************

இப்படியே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து கிளைக்கழக ஆய்வில் கலந்து கொண்ட நூற்று அய்ம்பதும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் அலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார் தளபதி அவர்கள். தளபதியோடு பேசிய மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள் தோழர்கள்.
.
மூன்றாம் நாள் எனக்கும் அழைப்பு
“சங்கர், எங்க இருக்கீங்க?”
“அரியலூர்லங்க அண்ணன்”
“ஊர்ல என்ன விசேஷம்?”
“நீங்க எல்லோருக்கும் பேசினது தாங்க அண்ணா விசேஷம். எல்லோருக்கும் மகிழ்ச்சி, நீங்க அழைச்சு பேசியது”

************************************

அண்ணன் ஆ.ராசா தளபதியை சந்தித்திருக்கிறார்கள்.
“உங்க ஊர்காரங்க அவ்வளவு ஈசியா நம்ப மாட்டேங்கிறாங்க. நான் பேசறேன்னு உறுதிபடுத்திக்கிட்டு தான் பேசறாங்க” சிரிப்போடு தளபதி சொல்லி இருக்கிறார்கள்.

**********************************

ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கருணாநிதியும், காட்டுராஜாவும் தளபதியை சந்தித்தார்கள்.

“அய்யா, தெரியாம நடந்துடுச்சி. இவங்க குடும்பமே கழகக் குடுமபம். இவர் பெயர் தலைவர் பெயர் (கருணாநிதி). இவர் தம்பி பெயர் பேராசிரியர் பெயர் (அன்பழகன்). அடுத்த தம்பி பெயர் உங்கள் பெயர் (ஸ்டாலின்). இவர் தம்பிகள், நண்பர்கள் வெளி நாட்டில இருக்காங்க. அங்கிருந்து அழைக்கும் போது சமயத்தில் “பிரைவேட் நம்பர்”னு வரும். யாரோ விளையாடறாங்கன்னு நினைச்சு பேசிட்டாரு”
.
“பரவாயில்ல. இது சகஜம் தான்” என்ற தளபதி அவர்கள் அருகில் இருந்த அமைப்பு செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்களிடம் இவரைக் காட்டி “இவரு தான் ஃபோன்ல எங்கிட்ட சண்டை போட்டவர்” என்று சிரிக்க, பயத்தோடு போனவர்கள் மகிழ்வோடு திரும்பினார்கள்.

# தொண்டர்களின் தோழன் !

வியாழன், 13 நவம்பர், 2014

அறிவு வரமாட்டான்

அறிவழகன்.

பென்சிலுக்கு உடை உடுத்தியது போன்ற ஒல்லியான உருவம். பென்சிலால் வரைந்தது போல மீசை. எப்போதும் சிரித்த முகம். துறுதுறுப்பான பார்வை. விறுவிறுப்பான நடை. இவை அறிவுக்கு அமைந்த அடையாளங்கள்.

                

திருத்தமானப் பேச்சு. உறுதியான நிலைப்பாடு. எந்நேரமும் கருப்பு-சிவப்பு கரை வேட்டி. ஓயாத உழைப்பு. சலியாத கழகப்பணி. கழக நிகழ்வுகள் குறித்த துல்லிய நினைவு. இவை அறிவு ஏற்படுத்திக் கொண்ட அடையாளங்கள்.

பள்ளி செல்லும் காலத்திலேயே கழக மேடைகளிலேயே அதிக நாட்டம். பாடப்புத்தகம் படித்ததை விட முரசொலி படித்ததே முதற்பணி. அரை டிராயரோடு கழக நிகழ்ச்சிகளுக்கு வரத் துவங்கிய அறிவு இங்கேயே வளர்ந்தான்.

ஓலைக் குடிசை வீடு, போக்குவரத்து வசதியில்லா கிராமம், ஊக்குவிக்க யாரும் இல்லை என இவை யாவும் அறிவை தடுத்தாலும் அறிவின் கழகப்பணி நிற்கவில்லை. மகன் அறிவு, கழக மாநாட்டுக்கு போக விருப்பப்பட்டால் அண்டா, குண்டாவை அடகு வைத்து அனுப்பிவிடும் ஏழை விவசாயி தந்தை.

உள்ளுர் நிர்வாகிகள் அறிவை ஆளாகக் கூட மதிக்காத நிலை. காரணம் தோற்றம், ஏழ்மை. ஆனாலும் தன் பணியின் மூலம் மெல்ல, மெல்ல வெளிச்சத்திற்கு வந்தான். அப்போது மாவட்ட செயலாளராக இருந்த என் தந்தையார் பார்வையில் பட்டான். அங்கீகரிக்கப்பட்டான்.

நான் மாவட்ட செயலாளராக ஆன பிறகு அறிவுக்கான முக்கியத்துவம் கூடியது. மாவட்டக் கழகக் கூட்டங்கள் நடக்கும் போது கூட்ட நடவடிக்கை குறிப்பேட்டில் பதியப்படும். “மினிட் நோட்” என்று சொல்லப்படும் அவை வரலாற்று ஆவணங்கள். அதை எழுதி பராமரித்தவன் அறிவு.

அடுத்து பொதுக் கூட்டங்களுக்கு துண்டறிக்கை தயாரிப்பது. அது தான் பெரிதும் அரசியலாகும். யார் பெயரை எங்கு போடுவது, எப்படிப் போடுவது எனபதில் தான் சிக்கல் வரும். ஆனால் எந்த விமர்சனமும் வராமல் அதை தயாரித்து விடுவான் அறிவு. எங்கும் கண்ணுக்கு தெரியாத செயல்பாட்டாளர்கள் ஓரிருவர் தான் இருப்பர். எனக்கு அது போல் அறிவு.

2001 உள்ளாட்சித் தேர்தல். கழகம் எதிர்கட்சி. முக்கியப் புள்ளிகள் வெற்றி தோல்விக்கு அஞ்சி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் (50,000 வாக்கு) பதவிக்கு போட்டியிட முன்வரவில்லை. வாய்ப்பு கேட்காத அறிவை கூப்பிட்டு “நிற்கிறாயா?” என்றேன். "அண்ணன் சொன்னா நின்னுடறேன்” என்றான். நின்றான். தோல்வி தான், துவளவில்லை.

அந்த தோல்விக்கு பரிசாக 2006 தேர்தலில், பலத்த போட்டிக்கிடையே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வெற்றிப் பெற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினரானான். கழகப் பணிக்கு அங்கீகாரமாக, அண்ணன் ஆ.ராசா பரிந்துரையில் தொண்டரணியின் மாவட்ட துணை அமைப்பாளரானான். திருமணமானது. ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானான்.

2011 உள்ளாட்சித் தேர்தல். இந்த முறை தோல்வி. ஆனாலும் சலிக்காமல் தன் பணி தொடர்ந்தான். இந்த முறை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பணிக்கு பரிந்துரைத்தேன். மாநில அமைப்பாளர் அண்ணன் மா.உமாபதி கூட கிண்டலாகக் கேட்டார்,”தூணா ஆள் கொடுப்பீங்கன்னு பார்த்தேன், துரும்பா கொடுத்திருக்கீங்களே மாவட்டம்?”

கழக நிகழ்ச்சிகளின் போது கூட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய பணி என்பதால் அறிவின் ஒடிசலான தேகத்தை குறித்து அப்படிக் கேட்டவர், இப்படி முடித்தார்,” ஆனா அறிவா கொடுத்திருக்கீங்க. மகிழ்ச்சி”. இப்படி அனைவரையும் பணியால் கவர்ந்தவன் அறிவு.

இந்த நிலையில் அறிவின் சொந்த வாழ்க்கையில் சிறு இடர்பாடுகள். அதற்கு தீர்வாக மதுவை நாட ஆரம்பித்தான். கண்டிக்க முற்பட்ட காரணத்தால், என் கண்ணில் படுவதை தவிர்த்தான். தீபாவளிக்கு முன்பாக அலைபேசியில் அழைத்தான்,”அண்ணா, தீபாவளிக்கு தம்பிக்கு ஒண்ணும் கவனிப்பில்லையா?”

“நீ தான் என்னைப் பார்க்காம ஓடிட்டியே தம்பி” என்றேன். “பார்க்கலன்னா, அண்ணன் விட்டுடறதா” என்றான். “தீபாவளி முடிஞ்சு அண்ணன பார்க்கறேன். அண்ணன் நினைக்கிறது போல சரியாயிடுவேன்” என்றான். எப்போதும் அண்ணன் என்ற அழைப்பு தவறாது.

அதைவிட அவனது உறவினர்கள் அவனை எப்படி அழைக்கிறார்களோ, அதே முறையில் என்னை அழைப்பார்கள். அப்படி என்னை உடன்பிறந்தவனாகவே அவர்களிடம் உணர்த்தி வைத்திருப்பான். அவனது ஊரை சுற்றியிருக்கும் ஊர்களில் கழகத் தோழர்கள் இல்ல நிகழ்ச்சியில் என்னை கொண்டு போய் நிறுத்திவிடுவான். எனது சொந்த ஊர் போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டான்.

தீபாவளி முடிந்து இரண்டு நாட்களில் அறிவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி. சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதி. தொண்டையின் உட்புறம் ஒரு கட்டி. சாப்பிட முடியவில்லை, பேச முடியவில்லை. மதுப்பழக்கத்தால் கல்லீரல் பிரச்சினை. மஞ்சள் காமாலை என ஒட்டு மொத்தத் தாக்குதல்.

தன் உடல்நலம் சரியில்லாத என் தந்தையார், மருத்துவமனைக்கு சென்று அறிவை பார்த்துவிட்டு மருத்துவர்களை அழைத்து, “இவன் என் மகன். எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று சொல்லி வருமளவுக்கு அவர்களது செல்லப்பிள்ளை.

நானும் போய் பார்த்து, உயரதிகாரிகள் மூலமாக மருத்துவர்களுக்கு தகவல் சொல்லி சிறப்பு சிகிச்சையளிக்க வேண்டிவிட்டு வெகு நேரம் உடனிருந்தேன். கிளம்பும் போது,”3-ந்தேதி ஆர்ப்பாட்டம். 6-ந்தேதி தளபதி வருகை. இடையில் திருமணங்கள், 11-ந்தேதி உண்ணாவிரதம். 12-ந்தேதி வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு வந்தேன்.

ஆனால் அவன் முந்திக் கொண்டான். ஆம், நேற்று உயிரற்ற உடலாய் ஊர் திரும்பி விட்டான். சுற்று வட்டாரமே திரண்டுவிட்டது. இரவு 10.00 மணிக்கு உடல் எரியூட்டப்படும் வரை ஆயிரக்கணக்கானோர் அகலவில்லை. அது தான் அறிவின் பணிக்கான அடையாளம்.

மருத்துவமனையில் விடைபெறும் போது, ஒரு நிமிடம் என்ற அறிவு ஏதோ சைகை காட்டினான். எனக்கு புரியவில்லை. பேனாவையும், பேப்பரையும் வாங்கி எழுதிக் கொடுத்தான். "மினிட் நோட்டில் ஒரு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்களை எழுத விட்டுவிட்டேன், பேப்பரில் எழுதி வைத்திருக்கிறேன். அதை எடுத்து எழுதி விடுஙகள்"

என் கண்கள் கலங்கிவிட்டன. உயிருக்கு போராடும் நிலையிலும் கழகப்பணி தான். "உடல் நிலை சரியாகி நீயே வந்து எழுது" என்று சொல்லி வந்தேன். மினிட் காத்திருக்கிறது. அறிவு வரமாட்டான்.

# நீ என்ன வராமல் போவது, எங்களுள் தான் வாழ்கிறாய் அறிவு