பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 14 மார்ச், 2017

இரோம் ஷர்மிளாவும் சமூகமும்

இரோம் ஷர்மிளாவும் சமூகமும்.

நாடே பொங்கிக் கொண்டிருக்கிறது, இரோம் ஷர்மிளா தோல்விக்காக.

2000மாவது வருடம் நவம்பர் மாதம் 2ம் தேதி, மதியம் 03.30.  மணிப்பூர் மாநிலத்தில் 'மலோம்' என்ற கிராமம். பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருக்கிறார்கள். ராணுவம் வந்து இறங்குகிறது, இந்திய ராணுவம் தான். கண்மூடித் திறப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. ஆமாம் துப்பாக்கியால் அந்தப் பகுதியை துளைத்தெடுத்து விட்டார்கள். மலோம் இந்தியாவில் தான் இருக்கிறது.

பேருந்திற்கு காத்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் 10 பேர் உயிர் பறிக்கப்பட்டது. அதில் 62 வயது பெண்மணியும் உண்டு, 19,18 வயது சிறார்களும் உண்டு. ஆனால் அவர்கள் "தீவிரவாதிகள்". ஆமாம், அரசு அப்படித் தான் சொன்னது. இவர்கள் இல்லாமல் இன்னும் 42 'தீவிரவாதிகளும்' குண்டுக்காயங்களை பெற்றார்கள். 14 வருடங்கள் கழிந்து, உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் அறிக்கை வந்தது.  உயர்நீதிமன்ற தீர்ப்பும் வந்தது. " இவர்கள் அப்பாவிகள்".

இந்தத் துப்பாக்கிச்சூட்டின் போது பார்த்த ஒரு நேரடி சாட்சி தான் கவிஞர் இரோம் ஷர்மிளா. அந்த சம்பவம் கவிஞரை "போராளி" ஆக்கியது. மனம் பாதித்த இரோம் உண்ணாவிரதத்தை துவங்கினார். யாருக்கு எதிராக?

இரும்பு கரத்தில் மணிப்பூரை நெருக்கிப் பிடித்திருந்த அரசுக்கு எதிராகத் தான் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்தார். இந்திய பேரரசின் கைப்பாவையான மணிப்பூர் அரசு.

தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மாநில அரசு கொண்டு வந்திருந்த AFSPA ( Armed Forces Special Powers Act) சட்டம், யாரையும் கேள்வி கேட்க அனுமதிக்கவில்லை. இந்த சட்டத்தின் தைரியத்தில் தான் மலோமில் நடந்த படுகொலைகள். அந்த படுகொலையை நடத்தியவர்கள் "அசாம் ரைபிள்ஸ்" என்ற துணை ராணுவப்படை. அவர்களது வாகன அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கான பதிலடி தான் அந்த படுகொலைகள்.

உண்ணாவிரதத்தில் உட்காரும் போது இரோம் ஷர்மிளாவிற்கு தெரியாது, இது பதினாறு ஆண்டுகள் நீளுமென. ஆம், தீர்வு கிடைக்குமென நம்பி போராட்டத்தை தொடர்ந்தார். அரசு இரோமின் போராட்டத்தை "தற்கொலை முயற்சி" என்றது. கைது செய்து, மருத்துவமனையில் சேர்த்தார்கள். மூக்கில் குழாய் செருகப்பட்டு, உணவு செலுத்தப்பட்டது.  ஆனாலும் போராட்டத்தை தொடர்ந்தார் இரோம். அந்த பதினாறு வருட வரலாற்றை புத்தகமாகத் தான் படிக்க வேண்டும்.

கடந்த வருடம், டெல்லிக் கோர்ட்டில் கண்ணீரோடு இரோம் கூறியவை தான் கவனிக்கப் பட வேண்டியவை. " நான் உயிரோடு இருக்க ஆசைப்படுகிறேன். நான் வாழ விரும்புகிறேன். நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நான் காதல் செய்ய விரும்புகிறேன். ஆனால் இதை எல்லாம் செய்யும் முன் 'ஆயுதப்படை சட்டம்' (Armed forces act) திரும்பப் பெற வேண்டுமென விரும்புகிறேன்". அவரை 'இரும்புப் பெண்மணி' என்று சொல்வதில் இருக்கும் உண்மையை இந்த கூற்று உறுதி செய்தது.

உலக வரலாற்றில் இல்லாதப் போராட்டம் இது. தனி ஒருப் பெண்ணாக நின்று போராடியது பெரும் வரலாறு. அந்தப் பதினாறு வருடங்கள் உணவு இல்லை, வேறு உணர்வு இல்லை, காதல் இல்லை, குடும்பம் இல்லை, தனி வாழ்க்கை இல்லை, பொழுதுபோக்கு இல்லை, பொழுதே அவர் கையில் இருந்ததில்லை, போராட்டமே வாழ்க்கையாய் கழிந்து விட்டது. அவருக்கு இவ்வளவுக்கும் கிடைத்த பரிசு தான் " 90 வாக்குகள்".

போராட்டக் களத்தில் தீர்வு கிடைக்காது என்ற காரணத்தினால் தான் அரசியல் களத்திற்கு வந்தார். இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். மணிப்பூரின் முதல்வர் இபோபி சிங் போட்டியிட்ட தொகுதியில் இரோம் போட்டியிட்டார். இபோபி மூன்றாவது  முறை முதல்வர். அவர் தொகுதியில் போட்டியிட்டது தவறு என்ற வாதமும் உண்டு. அதே போல் போராட்டத்தை கைவிட்டதை மக்கள் ஏற்கவில்லை, அதனால் தோல்வி என்ற வாதமும் உண்டு. மணிப்பூரி அல்லாதவரை காதலித்தார், அதனால் தோல்வி என்ற வாதமும் உண்டு.

மொத்தத்தில் அவரது "தியாகம்" தோல்வி. இவ்வளவு தான் சமூகம்.

அவர் யாரது கனவுக்காக போராடினோரோ, அந்த மக்களே இரோமின் 'ஜனநாயகக் கனவை' கலைத்து விட்டார்கள். இதில் இரோம் வருத்தப்பட எதுவுமில்லை. பதினாறு வருடப் போராட்ட வாழ்வின் சோதனைகளில் இதுவும் ஒன்று. "இனி இங்கு கால் வைக்க மாட்டேன்", கனவோடு வந்த இரோம் கண்ணீரோடு சொன்னவை. கனவை கலைத்தவர்களின் பின் தலைமுறை காலத்திற்கும் வருத்தப்படும்.

இரோம் ஷர்மிளாவிற்கு வாக்களிக்காததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் பொதுமக்களுக்கு. ஆனால் அத்தனைக் காரணங்களும் அவரது தனிமனித தியாகத்தின் முன் தூசு.

போராளிகளை மக்கள் கொண்டாடுவார்கள், ஆனால் தேர்ந்தெடுக்க மாட்டார்கள், என்ற பொது புத்தி இனி வந்துவிடும். அதற்காக போராளிகள் ஒதுங்கி விடக்கூடாது. போராடுவோர் இல்லை என்றால் சமூகம் 'சாக்கடையாகி' விடும். மக்கள் மக்களாகவே இருக்கட்டும், போராளிகள் போராளிகளாகவே இருக்க வேண்டும்.

பொதுமக்களின் அரசியலை, அவர்கள் மனவோட்டத்தை வெளிப்படுத்துவதற்காகவே தோல்வி என்று தெரிந்தும் போட்டியிட்டார் இரோம் ஷர்மிளா என்ற வாதம் ஏற்கக் கூடியதாகவே இருக்கிறது. எப்படியோ, அரசியல் வாழ்க.

இரோம் ஷர்மிளா ஆதரவாளர்கள் வருத்தத்தில் சொல்லி இருந்தாலும், அது சரி தான்.

# "அந்த 90 வாக்குகளுக்கு நன்றி !"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக