பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

122 எம்.எல்.ஏக்களுக்கான ஆட்சி !

மேசை மீது தினத்தந்தியை விரித்து வைத்து விட்டு, டீயை ஒரு வாய் குடித்தேன். சொய்ங், சொய்ங், சொய்ங் என தொடர்ந்து சத்தம். "என்ன முருகா சத்தம்?" என்றுக் கேட்டேன்.

வாசற்படியில் நின்ற முருகன் சொன்னார், "வரிசையா காரா போவுதுண்ணா. தேசியக் கொடி கட்டிய காரு, அதிமுக கொடி கட்டிய காருன்னு வரிசையா போவுதுண்ணா". "மந்திரிங்க காரா?". " ஆமாண்ணா, சில மந்திரிங்களும் போறாங்க".

இத்தனை மந்திரிகள் வந்தா ஏதாவது பெரிய நிகழ்ச்சியா இருக்கணும்னு நினைச்சா, கொஞ்ச நேரத்தில் செய்தி வந்தது. அத்தனை மந்திரிகளும் அரியலூர் கலைக்கல்லூரிக்கு தான் வந்தார்கள்.

வந்து, ஒரு உயரமான கழியை நட்டு வைத்து பூசை செய்திருக்கிறார்கள். மறுநாள் பத்திரிக்கைகளில் புகைப்படமும் வந்தது. ஏழு மந்திரிகள் கழுத்து நிறைய மாலையோடும், தலையில் பரிவட்டத்தோடும் நின்றார்கள்.

மறைந்த முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழா. அதை அரியலூரில் வரும் 28ம் தேதி நடத்துகிறார்கள், அரசு சார்பாக. அந்த விழாவுக்கான பந்தல் கால் நடும் விழாவிற்கு தான் ஏழு மந்திரிகள் வந்துள்ளனர். விழாவிற்கு முதல்வரோடு பத்து மந்திரிகள் வருவார்களாம். அதற்கு முன்னோட்டம் தான் இந்த பந்தக்கால் நிகழ்ச்சியாம்.

ஒரு மந்திரிக்கே எவ்வளவு வேலைகள் இருக்கும். ஏழு மந்திரிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் ஒரு பந்தக்கால் நட இவர்கள் வந்தால் என்றால், அப்படி வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

முதல்வருக்கே வேலை இல்லை என்னும் போது, பாவம் மந்திரிகளுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது? எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவது, அதற்கு ஏற்பாடு செய்வது என  மொத்தத்தில் தமிழக அரசாங்கம் இப்படித் தான் நடக்கிறது.

இதைத் தெரிந்ததால் தான் முதல்வரை மந்திரிகள் மதிப்பதில்லை, மந்திரிகளை எம்.எல்.ஏக்கள் மதிப்பதில்லை, எம்.எல்.ஏக்களை கட்சிக்கார்கள் மதிப்பதில்லை. எல்லோரும் சேர்ந்து மக்களை மதிப்பதில்லை.

மிகக் கொடூரமான மக்கள் பிரதிநிதிகள் சேர்ந்து, ஒரு அரசாங்கம் அவலமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இது தான் தமிழகத்தின் தலைவிதியாக இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பெயர் எம்.சி.சம்பத். அந்த மாவட்டத்தை சேர்ந்த நான்கு அதிமுக எம்.எல்.ஏக்களும் அவரை மதிப்பதில்லை. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை அவர்கள் புறக்கணிப்பார்கள்.

நேற்று உச்சகட்டமாக சீனியர் மந்திரி செங்கோட்டையன் கலந்துகொண்ட நிகழ்ச்சியையும் புறக்கணித்திருக்கிறார்கள், சம்பத் கலந்து கொண்டதால். ஆனால் மந்திரிகள் அது குறித்து கவலைப்படவில்லை, வெட்கப்படவும் இல்லை.

காலையில் சென்னையில் பேட்டி கொடுக்கிறார் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க.தமிழ்ச்செல்வன். "டி.டி.வி.தினகரன் தான் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர்" என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.

நண்பகல் மதுரையில் இருந்து அமைச்சர் உதயக்குமார் பேட்டி. "டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாக பதவிப் பட்டியல் அறிவித்தது தவறு. அவருக்கு அதிகாரமே கிடையாது", அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் உதயக்குமார்.

இரவு, தொலைக்காட்சியில் ஒரு காட்சி. தேனீ மாவட்டம் தேக்கடி பக்கம் ஒரு ஆய்வு. மந்திரி உதயக்குமார் முன் நடக்க, தங்க.தமிழ்ச்செல்வன் பின் நடக்கிறார். ஒருவரை ஒருவர் பார்த்து 70 எம்.எம்'ல் சிரித்துக் கொள்கிறார்கள். காலை ஆரம்பித்து, மாலைக்குள் இவ்வளவு டிராமாக்கள்.

மந்திரி ராஜேந்திர பாலாஜி, முன்னாள் மந்திரி வைகைச்செல்வனை " அழுகிய தக்காளி" என்கிறார். இவர் அவரை 'போஸ்டர் ஓட்டியவர்' என்கிறார். இன்னும் ஒரே அணியில் தான் இருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ வெற்றிவேலும், மந்திரி ஜெயக்குமாரும் ஒருவர் முகத்தில் ஒருவர் காரி உமிழ்ந்துக் கொள்ளாத குறை தான். அவ்வளவு விமர்சனங்கள். ஆட்சியில் யார்  ஓங்குவது என்பதற்கு தான் இவ்வளவு பாடும் படுகிறார்கள். மக்கள் பிரச்சினைக்காக அல்ல.

இத்தனையும் எடப்பாடியா, டி.டி.வி.டியா என்று ஒரே அணிக்குள் நடக்கும் கூத்துகள். இதல்லாமல், ஓ.பி.எஸ் கும்பல் ஒன்று. கண்ணாடி முன்னால் உட்கார்ந்து தனக்கு தானே பேசிக் கொள்ளும் கூட்டம். எல்லாவற்றையும் காரசாரமாக பேசிவிட்டு, சட்டமன்றத்திற்குள் சென்றால் மௌனவிரதம் இருக்கும் வாய்பேசா மனிதர் போல் இருப்பார்கள்.

எவ்வளவு வெட்டுக்குத்து, காறி உமிழ்தல் நடந்தாலும் ஆட்சி கவிழக்கூடாது, பதவி போய்விடக் கூடாது என்பது மாத்திரமே ஒரே கொள்கை அவர்களுக்கு. யாரும் யாரையும் மதிப்பதில்லை, யார் பேச்சையும் யாரும் கேட்பதில்லை. ஆனால் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

முதல்வரும், அமைச்சரும், எம்.எல்.ஏவும் மதிப்பது ஆட்சியையும், பதவியையும் மாத்திரமே.

மொத்தத்தில், "இது 122 எம்.எல்.ஏக்களுக்காக, 122 எம்.எல்.ஏக்களால் நடத்தப்படும், 122 எம்.எல்.ஏக்களின் ஆட்சி".

(அப்போ ஆறுகுட்டி கதைன்னு கேக்குறீங்களா? போகப்போகத் தெரியும்)

இந்த 122ம் சேர்ந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள்.

# நீங்க நல்லா இருக்கணும், நாளும் முன்னேற !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக