பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஊர்வலம் துவங்கும் போதே கெடுபிடி....(1)

ஊர்வலத்திற்கு வரும் போது வாகனத்தை கிண்டியிலேயே காவல்துறை மடக்கியது. அதற்கு மேல் வாகனத்தை அனுமதிக்க முடியாது என்றனர். அங்கேயே போலீஸார் வீடியோ கேமரா கொண்டு படமெடுக்க துவங்கினர். கெடுபிடி அதிகமாக இருந்தது.
ஊர்வலம் துவங்கியது. நாங்கள் பங்கேற்ற இடம் கிட்டத்தட்ட ஊர்வலத்தின் மய்யப்பகுதி. துவங்கிய சைதாப்பேட்டையிலிருந்தே சாலையின் இருபுறமும் போலீஸ் வெகுவாக குவிக்கப் பட்டிருந்தனர். சாதாரணமாக அல்ல, சுவர் வைத்தது போல.

2001
ஆம் ஆண்டு, ஜூன் 30-ம் நாள் தலைவர் கலைஞர் நள்ளிரவில் 
ஜெயலலிதா அரசால் அராஜகமாக கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த ஊர்வலம் 2001 ஆகஸ்ட் 12 அன்று. மே மாதம் ஆட்சியை இழந்தக் கட்சியின் ஊர்வலமாகத் தெரியவில்லை.

கலைஞர் கைதை தொலைக்காட்சியில் பார்த்து தன்னையே இழுத்துப் போனதாக உணர்ந்த கலைஞரின் உடன்பிறப்புகள் வெள்ளமென திரண்டிருந்தனர். உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர். கைது செய்த முத்துக்கருப்பனையும் ஜெயலலிதாவையும் கண்டித்து முழக்கம் எழுப்பப் பட்டது.

காவலுக்கு நின்ற போலீஸார் தலைமையிடத்து உத்தரவின் பேரில் விறைப்பாய் நின்றனர். அதைப் பார்த்த கழகத் தோழர்களுக்கு இன்னும் கோபம் கூடி கோஷத்தின் டெஸிபல் உயர்ந்தது. போலீஸ் ஆளுயர லத்தியுடன் சற்று முறைக்க ஆரம்பித்தனர். "அஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்" என்ற முழக்கம் ஒலிக்க ஆரம்பித்தது. 

ஊர்வலம் ராதாகிருஷ்ணன் சாலையில் நுழையும் போது இருட்டத் துவங்கி இருந்தது. போலீஸினர் முகத்தில் வித்தியாசமான உணர்வு தெரிந்தது. சிலரின் கோஷம் கடுமையாக இருந்தது. சில இடங்களில் ஊர்வலத்தை போலீஸார் தடுப்பதாகவும் டைவர்ட் செய்வதாகவும் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. 

சிட்டி செண்டர் சிக்னல் தாண்டும் போது போலீஸார் "சீக்கிரம் போங்க" என எங்களை நெருக்கத் துவங்கினர். எங்களுக்கு முன்பாக திருச்சி மாவட்டத்தினர் சென்று கொண்டிருந்தனர். அவ்வப்போது எங்கிருந்தோ கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. போலீஸாரிடம் சொன்னால் கண்டு கொள்ளவில்லை. அப்போதே நெருட ஆரம்பித்தது.

டி.ஜி.பி அலுவலகத்திற்கு முன்பாக பறக்கும் ரெயில் பாலம் ஒன்று இருக்கும், அதற்கு கீழாக நாங்கள் செல்லும் போது தொலைவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. நிதானிப்பதற்குள் எங்கள் அருகிலேயே ஏதோ குண்டு போல் விழுந்தது. ஒரே புகை மயம். கண்ணீர் புகைக்குண்டு. கண்ணை கசக்கிக் கொண்டு சாலையின் ஓரத்திற்கு ஒதுங்கினோம். 

போலீஸார் எங்களை துரத்துவதிலேயே குறியாக இருந்தனர். அதற்குள் தொலைவில் கேட்ட சத்தம், டி.ஜி.பி அலுவலகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு என தெரிய வந்தது....

(
தொடரும்....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக