பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

1990 - 2014 மாநாடுகள் - ஒரு மீள் பார்வை...

அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்களின் வாழ்த்துக்கள் டைம்மெஷினில் ஏற்றி விட்டது. 1990-ல் நடைபெற்ற மாநாட்டில் கல்லூரி மாணவனாகக் கலந்து கொண்ட நான் இந்த 2014 மாநாட்டின் வரவேற்புக்குழு செயலாளர்களில் ஒருவன் என்பதை வாழ்த்தியுள்ளார், இதற்கு முந்தைய ஸ்டேடஸில்.

கோவையில் 1993-ல், ஏழாவது மாநில மாநாடு. மறுமலர்ச்சிகள் வெளியேற்றப்பட்ட நேரம் என்பதால் ஒரு “வித” எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று அவர்களுக்கு “மகிழ்ச்சியை” கொடுத்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டபோது தனியார் நிறுவனப் பணியில் இருந்தேன்.

1996-ல் திருச்சியில் எட்டாவது மாநில மாநாடு. கழகத் தோழர்களை உற்சாகப்படுத்தி, கழகத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற அடித்தளமாக இருந்த மாநாடு. இந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் அண்ணன் கே.என்.நேரு அவர்கள். செயலாளர்களில் ஒருவர் எனது தந்தையார் எஸ்.சிவசுப்ரமணியன். இந்த மாநாட்டின் போது நடைபெற்ற ஊர்வலம் திருச்சியை குலுக்கியது. நான் அப்போது வளர்ந்து வந்த தொழிலதிபர்.

1997-ல் சேலத்தில் சிறப்பு மாநில மாநாட்டிலும், 1998-ல் திருநெல்வேலியில் திமுக பொன்விழா தொடக்க சிறப்பு மாநாட்டிலும் கழகத் தோழர்களோடு கலந்து கொண்டேன், முழு நேர அரசியல்வாதியாக. 1996 உள்ளாட்சித் தேர்தலில் , மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று, பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக தேர்வாகி இருந்தேன்.

                              Displaying img460.jpg

எதிர்கட்சியான நிலையில், 2003-ல் விழுப்புரம் மாவட்ட மாநாடு. 2004-ல் விருதுநகரில், நடைபெற்ற தென்மண்டல மாநாட்டில் அண்ணன் ஆ.ராசா அவர்கள் கொடியேற்றி ஆற்றிய உரை மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 2004-ல் சேலம் சிறப்பு மாநாடு. 2005-ல் திண்டுக்கல், தஞ்சை,கோவை, வேலூர் மண்டல மாநாடுகள் நடைபெற்றன. 2006 மார்ச்சில் ஒன்பதாவது மாநில மாநாடு, திருச்சியில். வரவேற்புக்குழு தலைவர் அண்ணன் கே.என்.நேரு, செயலாளர்களில் ஒருவர் ஆ.ராசா. இந்த மாநாடுகளின் போது, நான் ஆண்டிமடம் ஒன்றிய கழக செயலாளர், அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்.

2007 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் திமுக இளைஞர் அணியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மிகப் பெரிய இளைஞரணி அணிவகுப்பு நடைபெற்றது, தளபதி அவர்கள் தலைமையில். அணிவகுப்பை அண்ணன் ஆ.ராசா அவர்கள் துவங்கி வைத்தார்கள். அணிவகுப்பில் கலந்து கொண்டு மகிழ்ந்தோம். அப்போது நான் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் மற்றும் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர்.


                                    

இப்போது 2014-ல் திருச்சியில் கழகத்தின் பத்தாவது மாநில மாநாடு. இப்போது நான் அரியலூர் மாவட்ட செயலாளர் மற்றும் குன்னம் சட்டமன்ற உறுப்பினர். இதை விட பெருமை, மாநாட்டின் வரவேற்புக்குழு செயலாளர்.

மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவர் அண்ணன் கே.என்.நேரு அவர்கள். வரவேற்புக்குழு செயலாளர்களாக, நான்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளோம். புதுக்கோட்டை பெரியண்ணன்.அரசு, அரியலூர் எஸ்.எஸ்.சிவசங்கர், கரூர் நன்னியூர் ஜி.ராஜேந்திரன், பெரம்பலூர் பா.துரைசாமி.

உண்மையில், இது கிடைத்தற்கரிய வாய்ப்பு. கழக வரலாற்றில் என் பெயரும் இடம் பெறும் வாய்ப்பு.

நன்றி கோடி, தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தளபதி அவர்களுக்கும்.


                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக