பிரபலமான இடுகைகள்

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

மக்கள் பிரச்சினைக்கு காது கொடுக்க முடியாத...

குன்னம் தொகுதி, செந்துறை நகரை சுற்றியுள்ள பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், செந்துறை நகருக்கு வருவதற்கு பயன்படுத்தும் பாதை ரயில்வேதுறைக்கு சொந்தமானது. 

செந்துறை ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் கீழ்பகுதியே இப்படி பாதையாக பயன்பட்டது. இதன் வழியாக தான் இருசக்கர வாகனங்கள், கார் போன்றவை சென்று வருகின்றன.

செந்துறையில் உள்ள தாலுக்கா அலுவலகம், காவல் நிலையம், மருத்துவமனை போன்றவற்றிற்கு வருவதற்கும், ரெயில் நிலையத்திற்கு வருவதற்கும், கடைவீதிக்கு வருவதற்கும் காலம்காலமாக பயன்படுத்தும் பாதை இது. 

தற்போது இரண்டாவது இருப்புப்பாதை அமைக்கிற நேரத்தில் அந்த பாதையை மறிக்கிற விதமாக புதிய பாலம் கட்டுகிறார்கள். இந்த பாதை தடைபட்டால் ஆறு கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை வரும். அஃதில்லாமல் அந்த சாலையில் உள்ள ரயில்வே கேட்டால் தடைபட்டு வரும் சூழலும் ஏற்படும்.

ஏற்கனவே இருக்கிற பாலம் போலவே பாதைக்கு தடை இல்லாமல், புதிய பாலம் அமைக்க வேண்டும் என்பது தான் பொதுமக்கள் கோரிக்கை. 

இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள ரயில்வேகேட்டை எடுத்துவிட்டு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இப்படி செய்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். டிராக்டர், லாரி போன்றவை செல்ல முடியாத நிலை ஏற்படும்.

நக்கம்பாடி கிராமத்தில் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 60 பேருக்கான முதியோர் உதவித் தொகை திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. 

இவற்றையெல்லாம் கண்டித்து, ரயில்வே நிர்வாகமும் வருவாய்துறையும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒன்றிய தி.மு.க சார்பில் செந்துறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. கிராம பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

ஒன்றிய கழகச் செயலாளர் ஞானமூர்த்தி, மு.ஒ.செ செல்லக்கண்ணு, சொற்பொழிவாளர் பெருநற்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். நான் தலைமையேற்று உண்ணாநிலையில் பங்கேற்றேன்.


ரயிவே துறை போன்றவை மக்கள் நலனுக்காகவே இயங்குபவை. அவர்களே மக்கள் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக இது போன்ற நடவடிக்கைகள் தான் அரசு அலுவலர்கள் மீது மக்களின் வெறுப்பாக மாறுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக