பிரபலமான இடுகைகள்

தளபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தளபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜனவரி, 2017

உண்மையின் குரல்

அதிமுக கரைவேட்டியோடு ஒரு சிலர், கோபாலபுரம் தலைவர் கலைஞர் இல்லம் முன்  நிற்பதை பார்த்து கழகத் தோழர்களுக்கு சந்தேகம். காவல்துறையினரும் கவனிக்கின்றனர். அவர்களை அணுகி என்னவென்று விசாரிக்கிறார்கள்.  அப்போது வீட்டின் முகப்பறையில் இருந்த தளபதி  அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்திடம் அந்த அதிமுகவினரை கூப்பிட சொல்கிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை பார்க்க  கரூரில் இருந்து வந்த  அதிமுகவினர் 12 பேர் அவர்கள். ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்த்து விட்டு   தலைவர் கலைஞரை பார்க்க அதிமுக கரைவேட்டியுடன் கோபாலபுரம் வந்துள்ளனர். அதிமுக கரை வேட்டியுடன் அனைவரும் உள்ளே வந்துள்ளனர். அவர்களிடம்  தளபதி, "சென்னையில் எங்கெங்கு எல்லாம் போய் பார்த்தீங்க? எனவும், உங்கள் ஊர் என்ன? பெயர் என்ன? என்ன தொழில் பண்றீங்க" என எளிமையாக அவர்களிடம் 15 நிமிடம் பேசியுள்ளார்.

பின்னர், "போட்டா எடுத்துக்கலமா?" எனக்கேட்ட அவர்களிடம் "இதென்ன கேள்வி? வாங்க" என அருகில்  அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் தளபதி.
அப்போது தளபதியிடம் பேசிய அவர்கள், "எங்கம்மாவை கொன்னுட்டாங்க, நீங்க தான் கேஸ் போட்டு கொன்னவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கனும்" எனக் கூறியுள்ளனர்.

அடுத்த நாள் இதே போல ஜெயலலிதா நினைவிடம் வந்த ஒரு குடும்பமும் கோபாலபுரம் வந்துள்ளனர். அவர்களுக்கும் தளபதி அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு. அவர்களை தனக்கு பக்கத்து இருக்கையில் அமர சொல்ல, கூச்சப்பட்டுள்ளனர். தனது சகோதரி செல்வி அவர்களை அழைத்து அவர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளார், "இவங்க என் சகோதரி செல்வி. அவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி". அவர்கள் அவரது எளிமையை கண்டு பிரமித்திருக்கின்றனர்.

வெளியில் வந்த அவரை ஊடக நிருபர் பேட்டி எடுக்க," தளபதி ஸ்டாலின் தான், அம்மா இறப்பு குறித்து உண்மையை வெளியே கொண்டு வரணும். அவர் தான் அடுத்த முதலமைச்சர். அதுவும் மூணு மாதத்தில் நடக்கும்", என்று கூறுகிறார். அது அவருக்கு ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட கோபத்தின் தாக்கம். இவரால் தான் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை.

இது ஏதோ ஜெயலலிதா மரணத்தால் தற்போது ஏற்பட்ட நம்பிக்கை அல்ல. தனது அரசியல் பயணம் துவங்கியதில் இருந்து, தளபதி நிதானமாக எடுத்து வைத்த அடிகளால் ஏற்படுத்திய நம்பிக்கை. ஒவ்வொரு இடத்தில் பேசும் போதும் பேச வேண்டியவற்றை மட்டுமே பேசுபவர்.

சில தலைவர்கள் இருக்கிறார்கள், காதல் மனைவியிடம் கூட போர்களத்து வீரனை போல் பேசுவார்கள். சிலர் எதிரில் இருக்கும் கூட்டம்  கை தட்ட,தட்ட டெஸிபல் கூடி பேசி வழக்கு வாங்கிக் கொள்வார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள், முதல் நாள் பேசியதற்கு அவர்களே மறுநாள் மறுப்பறிக்கை வாசிப்பார்கள்.

இவர் குறிப்பு வைத்துக் கொண்டு பேசுவதை கேலி செய்வோரும் உண்டு. தனது சொல்லுக்கான வலு அவருக்கு தெரியும். அதில் பிழை இருக்கக் கூடாது என்று தான் குறிப்பு.  அதனால் தான் இன்றைக்கும் தான் சொன்னதில் இருந்து பின் வாங்காமல் நடை போடுகிறார். முழ நீளம், மூச்சு வாங்க பேசி விட்டு, என்ன பேசினோம் என்று தெரியாமல் முழிப்பதில்லை.

இவரது உரையில் அலங்கார சொற்கள் இருக்காது, ஆவேசம் இருக்காது. ஏன், அண்ணாவை போல் அடுக்குமொழி இருக்காது, தலைவர் கலைஞரை போல் இலக்கிய நயம் இருக்காது. ஆனால் உண்மை இருக்கும். அதை  மக்கள் நம்புகிறார்கள் என்பதன் அடையாளம் தான் அதிமுகவினரின் வெளிப்பாடு.

அவரது அடையாளமாக எளிமையும், உண்மையும் கொள்ளப்படுகின்றன. அதற்கு என்றும் வீரியம் கூடுதல்.

இவரது அறிக்கைகள் தான் இப்போது தமிழக அரசின் கண்திறப்பான். ஒவ்வொரு அறிக்கையாக வெளி வர,வர அரசாங்கம் செயல்படுகிறது. ஜெயலலிதா உடல் நலிவுற்ற போது, ஓ.பி.எஸ்ஸிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை தளபதி அறிக்கை தான் அரசை ஆட்டிவிக்கிறது.

# உண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கும் !

திங்கள், 19 டிசம்பர், 2016

தொண்டனுக்கு அடையாளம்

"1967க்கு முன்னால் திமுக பொதுக்குழு கூட்டம். 'சி.பா.ஆதித்தனார் கழகத்தின் சார்பில் போட்டியிட  விருப்பம் தெரிவித்துள்ளார்', என்றார் அண்ணா. பொதுக்குழு நிசப்தமாகி விட்டது. பின் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞர் கரம் உயர்த்தி கேள்வி கேட்டார், 'எந்த சின்னத்தில் போட்டியிட போகிறார்'. அவர் தான் கோ.சி.மணி.  அண்ணா, மணியிடத்தில் கொண்டிருந்த உரிமையின் காரணமாக சொன்னார்,'உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட போகிறார். உட்கார் மணி' என்றார்.

அடுத்து மதுரையில் இன்னொரு பொதுக்குழுவிற்கு சென்றார் மணி. சில நண்பர்கள் விவகாரத்தை ஆரம்பித்து விட்டார்கள், பொதுக்குழு வேறு மாதிரி சென்றது. தலைவர் கலைஞர் கழுத்தைத் தூக்கி அப்படி பார்த்தார். காரணம், மணி உட்கார்ந்திருக்கிற இடம் தலைவருக்கு தெரியும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து வந்து கேட்டார்  மணி, 'நான் மூன்று கேள்வி கேட்கிறேன்'. கேள்வி கேட்டவன் இருந்த இடம் தெரியவில்லை. அது தான் மணி.

இன்னொரு முறை வேறொரு சம்பவம். தலைவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளா தஞ்சை வந்தார். எதிரிகள் வேல், கம்போடு நிற்கிறார்கள் என்று ஒருவர் நகர்ந்து விட்டார். தலைவர் கோபமாகி, 'என்ன மணி?' என்றார். 'கொஞ்சம் இருங்க,பொறுங்க' என்றார் மணி. பிறகு அங்கு போனால், ஒருத்தரும் இல்லை, எந்த பிரச்சினையும் இல்லை. 'என்ன மணி?' என்றார் தலைவர். 'அவன் அரை பர்லாங் அந்த பக்கம் போயிட்டான்' என்றார் மணி. தலைவர் சொன்னார்,"இது தான் மணி".

இந்த இயக்கம், கொடி, சின்னம் எங்களுக்கு சொந்தம் என்று ஒருவன் சொன்னான். வழக்கு உச்ச நீதிமன்றம் போய்விட்டது. பொதுக்குழு எங்கு நடத்தலாம் என்ற போது, தலைவர் சொன்னார் 'மணி இருக்கும் ஊரில் நடத்துவோம்'. அந்த பொதுக்குழு தான் வழக்கை வெல்ல வைத்தது. அதற்கு பிறகு தான் சின்னம், கொடி, அறிவாலயம் ஆகியவை திமுகவுக்கு சொந்தம். திமுக கலைஞருக்கு சொந்தம் என்று வந்தது. இந்த இயக்கத்தை காத்த பெருமகனை வணங்குகிறேன்", என்று தன் புகழாரத்தில் குறிப்பிட்டார் கழகத்தின் முதன்மை செயலாளர் அண்ணன் துரைமுருகன்.

மறைந்த முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய கோ.சி.மணி அவர்கள் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று (18.12.2016) மாலை, கும்பகோணம் நகரில் நடைபெற்றது.

தலைவர் கலைஞர் உடல்நலம் குன்றியிருக்கிற நேரத்தில், தளபதி அவர்கள் வர இயலுமா என்ற கேள்வி, தஞ்சை மாவட்டக் கழக தோழர்கள் மத்தியில் எழுந்திருந்தது. ஆனால் வருத்தம் நீக்கும் வகையில் தளபதி வருகை தந்து, அய்யா மணி அவர்கள் படத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரை.

" ஒரு ஊராட்சியின் தலைவராக இருந்த ஒருவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக வந்தார் என்றால் அது அண்ணன் கோ.சி.மணி அவர்களாகத் தான் இருக்கும். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது , உள்ளாட்சியில் நல்லாட்சி கண்டவர் என்பார்கள் என்னை. ஆனால் என்னை பொறுத்த வரையில், அதற்கு மிகப் பொருத்தமானவர் அண்ணன் கோ.சி.மணி அவர்கள் தான்.

அண்ணன் மணி அவர்கள் மறைவுற்ற நேரத்தில் மருத்துவமனையில் இருந்த தலைவர் கலைஞர் அவர்களிடம், தயங்கி, தயங்கி சொன்னோம். கலைஞர் அழுது விட்டார்.

கட்சிக்கு சோதனை ஏற்பட்ட போது, பொதுக்குழுவை கூட்ட தஞ்சையை தேர்ந்தெடுக்க காரணம், அண்ணன் கோ.சி.மணி அவர்கள் மாவட்ட செயலாளராக இருந்தது தான்.

ஒரு மாவட்ட செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் தான் அண்ணன் கோ.சி.மணி அவர்கள். ஒரு அமைச்சர் எப்படி பணியாற்றிட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர் தான். ஒரு இயக்கத்தினுடைய தளகர்த்தர் எப்படி வழி நடத்திட வேண்டும் என்பதற்கும் அண்ணன் கோ.சி.மணி அவர்கள். ஆக தளகர்த்தர், அமைச்சர், மாவட்ட செயலாளர் என்பதை தாண்டி ஒரு கட்சியினுடைய தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்திருக்கிறார் கோ.சி.மணி.

2001ல் எதிர்கட்சியாக கழகம் செயல்பட்ட நேரம். ஜெயலலிதா முதலமைச்சர். நமது ஆட்சியை குற்றம் சாட்டி பேசும் போது ஜெயலலிதா, 'சோடியம் விளக்குகளை திமுக ஆட்சியில் போட்டதால் மின்சாரம் அதிகமாகிறது. எனவே அதனை மாற்றி டியூப்லைட் போட்டேன்' என்று சாதனை போல் பேசினார். உடனே 'சிக்கனம்னா  அதையும் மாத்திட்டு அரிக்கேன் விளக்கை ஏற்றி வையுங்களேன்' என்று சொன்னவர் அண்ணன் கோ.சி.மணி. நாங்கள் அசந்து போய் உட்கார்ந்திருந்தோம். அப்போது நாங்கள் சிரித்து விட்டோம். ஆனால் இப்போது நினைத்தால் அழுகை வருகிறது.

இதைவிட இன்னொரு செய்தி. அண்ணன் கோ.சி.மணி கூட்டுறவுத் துறை அமைச்சர். அவரது மனைவி இறந்து விட்டார். நான் அஞ்சலி செலுத்த வந்தேன். மாலை வைத்து வணங்கினேன். என்னை கையை பிடித்து சற்று தள்ளி அழைத்து சென்றார். நான் அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர். 'கும்பகோணம் தேரோடும் வீதியை சீர் செய்ய வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கி தர வேண்டும்' என்று என்னிடத்திலே கேட்டார். இப்போது நினைச்சாலும் என் நெஞ்சு பதறுகிறது. அவர் எந்த அளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்பிலே கவனம் செலுத்தினார் என்பதற்கு இது தான் சான்று".

தளபதியின் இந்தப் பேச்சை கேட்ட நிகழ்வில் இருந்தவர்கள் கலங்கி விட்டோம்.

# இன்னொரு மனிதன் கோ.சி.மணியாக பிறக்கவும் முடியாது, உருவாகவும் முடியாது !

செவ்வாய், 17 நவம்பர், 2015

வெள்ளத்தில் மூழ்கும் தமிழகம்

அவர் முதல்வர் அல்ல, எதிர்கட்சித் தலைவரும் அல்ல, ஆனால் அவர் தான் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறார். காரணம் அவர் கடமையாளர்.  தான் இயங்கினால், தானாக எல்லாம் இயங்கும்  என்பதை தளபதி உணர்ந்திருப்பார் போலும்.

நமக்கு நாமே பயணம் மூன்று கட்டமாக முடிந்திருந்தது அப்போது. 11,000 கிலோமீட்டர் தூர நீண்ட பயணம். ஒவ்வொரு நாளும் காலை 08.00 மணிக்கு தயாரானால், நிகழ்ச்சி முடிவு இரவு 10.00க்கா, 12.00க்கா என்பது யாருக்கும் தெரியாது. அப்போது தான் இரவு உணவு.

இப்படியே நடைபயணமாக, சைக்கிள் பயணமாக, வாகனப் பயணமாக சென்று மக்களை சந்தித்து வந்த நேரம் அது. ஒரு நாள் பயணத்திற்கே ஒய்வு தேவை என்பது பலரின் நிலை இன்று. ஆனால் இவருடையதோ இடையறதா, ஓய்வில்லாதப் பயணம்.

அதனால் அவர் ஓய்வெடுப்பார் என்று நினைத்திருக்கும் போது தான் அந்த செய்தி. கடலூர் மாவட்டம் கன மழையால் பாதித்தது என்ற செய்தி.

மொத்த மாவட்டமும் நீரில் மிதக்கிறது. நெய்வேலியில் ஒரே நாளில் 47 செ.மீ மழை. இது வரை காணாத வெள்ளம். பல ஊர்களில் சாலையை காணவில்லை. குறிஞ்சிப்பாடி பகுதியில் வீடுகள் இடிந்தன. ஒவ்வொரு நாளும் உயிர்சேதக் கணக்கு கூடுகிறது. இப்படி கடலூர், "கண்ணீர் ஊர்" ஆனது.

கடலூர் மாவட்டம் அவர் தொகுதியும் அல்ல. அங்கு திமுக எம்.எல்.ஏக்கள் யாருமில்லை. ஆனாலும் அவர் விரைந்தார். ஒவ்வொரு பகுதியாக சென்றார். மக்களை சந்தித்தார், ஆறுதல் கூறினார், தேற்றினார்.

சென்னையிலும் தன் தொகுதியான 'கொளத்தூரோடு' பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை அவர். எங்கெங்கு பாதிப்போ, அங்கெல்லாம் சென்றார். முழங்கால் அளவு நீரில் அசராமல் நடந்தார். கழிவு நீரும்  சில இடங்களில் கலந்தே சென்றது.

வாகனம் செல்லாத இடங்களில் இரு சக்கர வாகனமான ஸ்கூட்டியில் சென்றார். எப்படியோ, எந்த வகையிலோ பாதிக்கப்பட்டோரை சென்றடைந்தார். ஆறுதல் கூறினார், நிவாரண உதவிகளை வழங்கினார்.

தெருவில் சாக்கடை கலந்த நீர் பெருக்கெடுத்தாலே, வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் பலர். வெள்ளம் பெருக்கெடுத்தாலே சிலர் வெளியே வரமாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளும் பலர் அப்படித் தான்.

ஆனால் இவர் வந்தார், இவர் மட்டுமே வந்தார்.

இதை சில அறிவாளிகள் 'நாடகம்' என்று எள்ளி நகையாடுகிறார்களாம்.

இருக்கட்டும், தன் சகோதரன் அடிப்பட்டால் துடிப்பதையும் நாடகம் என்று அவர்கள் சொல்வார்களேயானால், அதில் நாம் சிறந்த நடிகராக இருப்பது தவறு இல்லை.

தன்னலம் மறந்து, பொது நலம் காக்கின்ற தலைவன் அவர். அவர் நடிகர் என்றால், நாமெல்லாம் நடிகர்களாக முயற்சிக்க வேண்டும்.

# இவரது அன்பு வெள்ளத்தில் மூழ்குகிறது தமிழகம் !

சனி, 7 நவம்பர், 2015

தமிழகம் காத்திருக்கிறது

தளபதி  இதற்கு முன்பாகவும் தமிழகம் முழுதும்  பயணித்திருக்கிறார். "நமக்கு நாமே" பயணத்தை விட கூடுதல் தூரமும் பயணித்திருப்பார். தேர்தல் பிரச்சாரத்தில், இதைவிட சில உள் பகுதிகளுக்கும் போயிருப்பார்.

ஆனால் இந்தப் பயணம் தான் கவனம் ஈர்த்து விட்டது.

இப்போது சந்தித்தது போலவே மக்களை தொடர்ந்து சந்தித்தும் வந்திருக்கிறார். துணை முதல்வராக, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை சந்தித்திருக்கிறார் . சுழல்நிதி வழங்கும் நிகழ்ச்சியில் மகளிரை சந்தித்திருக்கிறார்.

ஆனால் இப்போதைய சந்திப்பு தான் செய்தியாகி இருக்கிறது.

கட்சிக்காரர்களுக்கு பயணத்திற்கு முன்பு வருத்தம். காரணம், வழக்கமாக தளபதி பயணம் என்றால் அலைகடலென திரண்டு வாருங்கள் என்று அழைப்பது வழக்கம். வரவேற்பு அளிக்க அனுமதிக்கப் படுவர்.

ஆனால் இப்போது கூட்டம் கூட்டக் கூடாது, பொது மக்களை இயல்பாக சந்திக்க விட வேண்டும்,  பொதுமக்களை சந்திக்க இடைஞ்சலாக இருக்கக் கூடாது என அடுக்கடுக்கானக் கட்டுப்பாடுகள்.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாகத் தான், சாலையில் இறங்கி நடப்பது சாத்தியமாயிற்று.  நினைத்த இடத்தில் நின்று மக்களோடு உரையாடுவது நடந்தேறியது. செல்ஃபி எடுக்கப் பிரியப்பட்ட குழந்தைகளுக்கு வாய்ப்பு கிட்டியது.

இதுவரை அவர் உரையாற்றி தான் மற்றவர்கள் கேட்பது வழக்கம். இந்தப் பயணத்தில் விருப்பப் பட்டோரை எல்லாம் பேச விட்டு காது குளிரக் கேட்டார். அவர் பேசிய நேரத்தை விட, மற்றவர்கள்  பேசிய நேரம் அதிகம். மகளிர், விவசாயி, மாணவர், நெசவாளர், தொழிலாளர் என எல்லாத் தட்டு மக்களும் தங்கள் குறைகளை பேசித் தீர்த்தனர்.

இது தான் அத்தனைப் பார்வையையும் இவர் பக்கம் திருப்பி இருக்கிறது.

இதனால் தான் 'விடியல் மீட்புப் பயணம்' மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது மாத்திரமல்ல, அவர்களை கவர்ந்தும் விட்டது. அதனால்  தான் எதிர்கட்சிகளின் கண்களுக்கு உறுத்தலாகவும் அமைந்து விட்டது.

தம் குறை கேட்க, காது கொடுக்க ஒரு தலைவன் வந்து விட்டான் என்பதே மக்களின் வருத்தம் போக்கி இருக்கிறது, மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

அந்த மகிழ்ச்சி தான் இந்த அன்பு, அரவணைப்பு. படத்தில் உள்ள மூதாட்டி ஒரு குறியீடு தான்.

# தமிழகமும் காத்திருக்கிறது, வாரி அணைக்க !

செவ்வாய், 20 அக்டோபர், 2015

விடியல் மீட்பு பயணம் 5

கண்ணிமைப்பதற்குள் வாகனத்தில் இருந்து இறங்கிய தளபதியை பார்த்தேன். உடன்  நாங்களும் வணடியில் இருந்து குதித்தோம். மேற்கு பள்ளிவாசலில் இறங்க வேண்டிய தளபதி 100 மீட்டர் முன்பே இறங்கி விட்டார்.

இந்த 'நமக்கு நாமே' பயணத்தில், மக்களை சந்திப்பதென்றால் கட்சியின் எந்த நிர்வாகியிடமும் கருத்து கேட்கவில்லை தளபதி. தானே முடிவெடுத்து சிறப்பாக செயல்படுத்தினார். இப்போதும் அதையே செய்தார்.

"தலைவர்களை அவர்கள் கட்சிக்காரர்களை தாண்டி சந்திக்க இயலாது" என்பது ஒரு பொதுக் கருத்தாக இருக்கிறது. அதனை  உடைத்தெறிய வேண்டும் என்பது தளபதியின் நோக்கம் போலத் தெரிந்தது. இப்போது அதனை தகர்த்தும் விட்டார்.

நிற்கிறவர்களின் முகம் பார்த்தே கண்டுபிடித்து விடுகிறார், யார் கட்சிக்காரர்கள், யார் பொதுமக்கள் என்பதனை. சால்வையோடு நிற்கும் கட்சிக்காரர்களை தவிர்த்து, மனுக்களோடு நிற்கும் மக்களை நாடித் தான் சென்றார்.

இப்போதும் அப்படியே, திரளாக நின்ற இஸ்லாமியப் பெண்கள் தங்கள் குறைகளை கூற தளபதியை பார்த்து கை நீட்ட, வாகனத்திலிருந்து இறங்கி விட்டார். அவர்கள் அருகே சென்றார்.

பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப் படாததால் தாங்கள் அவதிப்படுவதை எடுத்துக் கூறினார்கள் அந்தப் பெண்கள். பெரும்பாலானோர் கருப்பு நிற பர்தாவில். தங்கள் குறையை காதுக் கொடுத்துக் கேட்ட தலைவனை சந்தித்த திருப்தி அவர்கள் முகத்தில். வழக்கமாக இது போல வெளியில் வந்து யாரையும் சந்திக்காதவர்கள் இந்தப் பெண்கள். தளபதி மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையால் தான் திரண்டிருக்கிறார்கள்.

அங்கிருந்து நடந்து மக்களை சந்தித்தவாறு, மேற்கு ஜமாத்தை அடைந்தார். அங்கு மனுக்கள் பெற்று செல்வதாக திட்டம். உட்கார்ந்து தங்கள் கருத்தைக் கேட்க வேண்டுமென நிர்வாகிகள் சொல்ல, உட்கார்ந்து விட்டார். இரண்டு ஜமாத் நிர்வாகிகள் பேச, அதனைக் கேட்டு பதிலளித்தார் தளபதி.

நாங்கள் கடிகாரத்தை பார்த்தவாறு இருந்தோம். தொழுகை நேரத்திற்குள் கிழக்கு பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும். "நடந்து போயிடலாமா?" என்று கேட்டார் தளபதி. அடுத்தக் கட்ட நடைபயணம்.

ஒரு முதியவர் தளபதியை காணும் ஆர்வத்தில் வீட்டிலிருந்து அவசரமாக வெளியில் வர, தளபதி 'டக்' என திரும்பி அந்த வீட்டை நோக்கி சென்றார். நான்கு படிக்கட்டுகள் ஏறி முதியவரை நெருங்கினார். மகிழ்ந்துப் போன முதியவர் தளபதி கரம் பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து தளபதி நடக்க, நாங்கள் ஓடினோம். ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் தளபதி. உயரமான காம்பவுண்ட் சுவருக்கு அந்தப் பக்கம் இருந்து இரண்டு சிறுவர்கள் ஆர்வமாக கையசைக்க, அவர்களிடம் சென்றார். எக்கி அவர்கள் கரம் பிடித்துக் குலுக்கினார். வாழ் நாளுக்கும் மறக்க மாட்டார்கள் அந்த சிறுவர்கள்.

ஆங்காங்கே நின்ற இஸ்லாமிய பெண்களிடம் குறைகளை கேட்டவாறே நடந்தார் தளபதி. ஒரு மாற்றுத் திறனாளி இளைஞர்  கையில் மனுவோடு நிற்பதைப் பார்த்து கிட்டே சென்றார். அவர் சொன்னதற்கு காது கொடுத்து மனு பெற்றுக் கொண்டார். அந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒரு சமூக ஆர்வலர்.

இவ்வாறு நடைபயணம் கிழக்கு பள்ளிவாசலை அடைந்தது. அங்கே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஜமாத் நிர்வாகிகள் திரண்டிருந்தனர். அவர்களில் சிலர் தங்கள் கருத்தை தெரிவிக்க, பேச கையில் மைக்கை எடுத்தார் தளபதி. பாங்கு ஒலிக்க ஆரம்பித்தது. பாங்குக்கு இடைவெளி விட்டு பிறகு பேசினார். இஸ்லாமியர்களுக்கு கழகம் பாதுகாவலாக இருப்பதை விளக்கி, அவர்கள் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தார்.

வழியெங்கும் பள்ளி மாணவர்கள், பெண்கள் நின்று கையசைத்து உற்சாகமாக, வணங்கியவாறே பயணம் தொடர்ந்தார் தளபதி.

(பயணம் தொடரும் 5....)

திங்கள், 19 அக்டோபர், 2015

விடியல் மீட்பு பயணம் 4

தளபதி பொறுமையாக கேட்கிறார் என்ற உடன் பெண்கள் விலாவாரியாக அரசின் தவறுகளை, தங்கள் தேவைகளை எடுத்துக் கூற ஆரம்பித்தனர். சிலர் பேருரையே ஆற்றினர்.

தளபதி நடைக்கு ஈடு கொடுத்து ஓடி வந்ததில், வியர்வை மழையில் நனைந்து, சட்டை தொப்பலாக ஈரம். பரிதாபப்பட்டு, மண்டப முதலாளி அறையில் மின்விசிறிக்கு கீழே இருக்கை கொடுத்தனர் எனக்கு.

மகளிர் பிரச்சினையில் முதலிடம் டாஸ்மாக் தான்.  அடுத்து ரேஷன் கடைப் பிரச்சினை, சுய உதவிக்குழுவுக்கு அரசு உதவி இல்லை என அரசு மீது குற்றப் பத்திரிக்கை வாசித்தார்கள் பெண்கள்.

குறை கேட்டு முடித்து தளபதி உரையாற்ற ஆரம்பித்தார். உணர்வுப்பூர்வமான, யதார்த்தமானப் பேச்சு. வந்திருந்த தாய்குலத்தின் புண்பட்ட மனதிற்கு ஆறுதல் அளிக்கும் பேச்சு.

தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சியில் முதல் நடவடிக்கையே டாஸ்மாக் கடைகளை மூடுவது தான் என உத்தரவாதம் அளித்தார். கரவொலியால்  மண்டபம் அதிர்ந்தது.

மகளிர் உரையாடல் முடித்து கிளம்பினார் தளபதி. வடக்கு மாதவி சாலையில் இருந்து, பைபாஸ் வழியாக திருச்சி-சென்னை நெடுஞ்சாலையை அடைந்தது தளபதி கான்வாய்.

நெடுஞ்சாலையில் மற்ற பயணிகள் வாகனங்களுக்கு இடையே தளபதி வாகனம் பயணித்தது. அந்த வாகனங்களில் இருந்தவர்கள் தளபதி அவர்களை அருகில் பார்த்ததில் வியந்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அடுத்த நிறுத்தம் வாலிகண்டபுரம். கரும்பு, பருத்தி, சோளம், வெங்காய விவசாயிகளுடன் உரையாடல் நிகழ்ச்சி. இயற்கை சூழலில், சோளக்காட்டிற்கும், நெல் வயலுக்கும்  முன்பாக இருந்த தென்னந்தோப்பில் நிகழ்ச்சி. அங்கு வந்த தளபதி வயலில் இருந்த ரைஸ்மில்லில் நுழைந்தார். ரைஸ்மில் தொழிலுக்கு இப்போது இருக்கும் பிரச்சினையை கேட்டறிந்தார்.

தென்னந்தோப்பிற்கு வந்தார். அங்கு அமர்ந்திருந்த விவசாயிகளுக்கு அருகில் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டார். அடுத்து அவர்களது கருத்துகளை கேட்டார். விவசாயிகள் மின்சாரப் பிரச்சினையையும், விளை பொருட்களுக்கு சரியான விலை இல்லாததையும் எடுத்துக் கூறினார்கள்.

ஒரு இஸ்லாமியப் பெண்ணும் விவசாயப் பிரச்சினை குறித்து கருத்து சொன்னார். தளபதி அவர்கள் கழக ஆட்சியில் இலவச மின்சாரம் வழங்கியதையும், விவசாய கடனை தள்ளுபடி செய்ததையும் விளக்கி, எதிர்காலத்தில் கழக ஆட்சியில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார். பயணம் துவங்கியது.

அடுத்து லப்பைகுடிக்காடு பேரூராட்சி. முழுதும் இஸ்லாமிய சமுதாயத்தினர் வசிக்கும் ஊர். இரண்டு ஜமாத்கள் உண்டு, கிழக்கு ஜமாத், மேற்கு ஜமாத். முதலில் இருக்கும் மேற்கு ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து விட்டு, அடுத்து கிழக்கு ஜமாத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற பல்வேறு ஜமாத் நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது.

லப்பைகுடிகாடு துவக்கத்தில் பாலத்தின் அருகே நின்று கழகத் தோழர்கள் வரவேற்பளித்தனர். சால்வையை பெறறுக் கொண்டார்.  அடுத்து மேற்கு பள்ளிவாசல் அருகே இறங்க வேண்டும். 100 மீட்டர் இருக்கும். நாங்கள் அந்த பள்ளிவாசலைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். திடீரென வாகனம் நின்றது. கண்ணிமைப்பதற்குள் தளபதி கீழே இறங்கி விட்டார்.

(பயணம் தொடரும் 4...)