பிரபலமான இடுகைகள்

வியாழன், 29 ஜூன், 2017

கிராம சுகாதாரமும் 'நீட்'டும் !

குளத்தூர், ஆண்டிமடத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள கிராமம். ஆண்டிமடம் தான் குளத்தூருக்கு அருகில் இருக்கும் சிறுநகரம்.  ஆண்டிமடத்தில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் உண்டு. ஏதேனும் உடல்நலக் கோளாறு என்றால், ஆண்டிமடத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையமோ அல்லது தனியார் மருத்துவமனையோ தான் தஞ்சம்.

ஆண்டிமடத்தை விட்டால், குளத்தூரில் இருந்து அடுத்த 8 கி.மீட்டரில் வாரியங்காவலில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் உண்டு. குளத்தூரில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் ஒரு டி.வி.எஸ்-50 அல்லது பைக் பிடித்து ஆண்டிமடம் அல்லது வாரியங்காவல் செல்ல வேண்டும்.

இப்படி இருந்த நிலையை மாற்றியவர்  அசோகசக்கரவர்த்தி. அசோக், ஆசிரியர் சுப்ரமணியன் அவர்களது  மகன். மருத்துவம் படித்தவர் சொந்த கிராமத்திலேயே சேவை செய்ய முடிவெடுத்தார்.

சந்திரகாசு அவர்களுக்கு வயது 82. ஏதும் அவசரமென்றால் இப்போது டாக்டர் அசோக்கிடம் பார்த்துக் கொள்கிறார். முன்னர் யாராவது ஹோமியோபதி டாக்டர்கள் தான் வீட்டுக்கு வந்து வைத்தியம் பார்ப்பார்கள்.

டாக்டர் கண்ணன், ஆசிரியர் தங்கராசு அவர்களது மகன். தனது கிராமமான பெரியகிருஷ்ணாபுரம் அருகில் இருக்கும் ஆண்டிமடத்தில் மருத்துவமனை கட்டி பணியாற்றுகிறார்.

டாக்டர் அறிவுச்செல்வன் தங்கள் கிராமமான இரும்புலிக்குறிச்சிக்கு அருகிலுள்ள சிறுநகரமான செந்துறையில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைத்துள்ளார். சுற்றி இருக்கும் பல கிராம மக்கள் இங்கு தான் சிகிச்சை பெறுகின்றனர்.

டாக்டர் ரமேஷ்குமார் காது,மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர். இவரது கிராமம் மணப்பத்தூர். இவர் அரியலூர் கூட செல்லாமல் செந்துறையிலேயே மருத்துவம் பார்க்கிறார். கிராம மக்கள் சேவை பெறுகிறார்கள்.

இவர்கள் எல்லாம் இவர்கள் பிறந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள சிறு நகரத்திலோ மருத்துவ சேவை செய்கிறார்கள். மேற்படிப்பு படித்திருந்தாலும் பெரு நகரத்திற்கு செல்லவில்லை.

கிராமத்து அரசு பள்ளியிலோ, சிறு நகரத்து தனியார் பள்ளியிலோ படித்தவர்கள் மருத்துவம் படித்தார்கள். அவர்கள் இது போன்று கிராமப்புற சேவையில் உள்ளனர்.

கிராமப்புறத்தில் இருந்து சென்று மருத்துவம் படித்தவர்கள் தான், அரசு மருத்துவமனையில் பணிபுரிய முன் வருகிறார்கள். இவர்களால் தான் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. கிராமத்தில் இருப்பவர்கள், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏதேனும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்தியம் பெற வாய்ப்பிருக்கிறது.

இலையூர் கிராமத்தில் டீக்கடை நடத்தும் சாதாரண ஏழையின் மகன் ராஜா, டீக்கடையில் காலை தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டு வாரியங்காவல் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்து, மாலை ஒரு மணி நேரம் கடையில் வேலை செய்து விட்டு, படித்து டாக்டர் படிப்புக்கு தேர்வானார். நீட் தேர்வுக்கு ரூபாய் ஒரு லட்சம் செலவு செய்து பயிற்சி பெற இவர்கள் குடும்பம் தாங்கியிருக்காது. நல்லகாலம், மோடி ஆட்சிக்கு முன் படிக்க போய்விட்டார். டாக்டர் ஆகிவிட்டார்.

சி.பி.எஸ்.சியில் படித்து, நகர்புற நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படிக்கும் வாய்ப்புள்ளவர்கள் நகரத்தில் உள்ளவர்கள், அல்லது கிராமப்புற பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள்.

இவர்கள் மருத்துவம் படித்து விட்டு கிராமத்திற்கு வரமாட்டார்கள். இவர்கள் பெருநகரங்களில் பணிபுரியவே விரும்புவார்கள். இந்த சூழலில் கிராமப்புறத்தில் பணிபுரிய மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும்.

கிராமப்புற மருத்துவ சேவையை நசுக்கிவிட்டால், நகர்புறத்திற்க்கு தான் மக்கள் வந்தாக வேண்டும். நகர்புறத்தில் வருங்காலத்தில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் தான் கோலோச்சும். இப்போது அப்போலோ, வருங்காலத்தில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்.

ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் வந்த "பிரபல மாடல்" மோடி, அந்த மருத்துவமனை விளம்பரத்திலும் வந்து சிரிப்பார், "இங்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்" என.

# கார்ப்பரேட் மோடி வாழ்க, ஏழைகள் சாக !

திங்கள், 26 ஜூன், 2017

நீட் தேர்வு - சமூக விரோதம்

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பிய போது, அதை பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஏகடியம் செய்தார்கள். ஏனைய இந்தியா ஏற்றுக் கொள்ளும் போது, தமிழகத்திற்கு மாத்திரம் என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.

இன்று நீட் தேர்வு முடிவுகள் அதற்கு பதில் சொல்லி விட்டது. முதல் 25 இடத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வரவில்லை என்று செய்திகள் வருகின்றன.

+2 தேர்வில், 1150 மதிப்பெண் எடுத்தவர்கள் கூட நீட்டில் வெற்றி பெறவில்லை, தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 40 % பேரே தகுதி பெற்றிருக்கிறார்கள் என்று நேற்றில் இருந்தே தமிழகம் அலையடிக்கிறது.

நீட் தேர்வு எழுதியவர்களில் 2% பேர் தான் மத்தியப் பாடத் திட்டத்தில் பயின்றவர்கள், மீதமுள்ளவர்கள் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இதற்காகவாவது, இந்த ஆண்டு மட்டுமாவது நீட் வேண்டாம் என ஒரு சாரார் குரல் கொடுத்தனர்.

இந்தக் குற்றச்சாட்டை உறுதிப் படுத்தி, தமிழக அரசே புதிதாக ஒரு அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85%, மத்தியப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 15% என இடத்தை பாகம் பிரித்திருக்கிறது.

இது சரி. மாநிலப் பாடத்திட்டத்தில், பொதுத் தேர்வில்  அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு என்ன நியாயம் கிடைக்கப் பெற போகிறது என்பது தான் முக்கிய கேள்வியாக உள்ளது.

எந்தக் கேள்விக்கும் நேராக பதில் சொல்லாத ஒரு மாநில அரசாங்கம், பதிலே சொல்லாத மத்திய அரசாங்கம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள்கள் . ஒரே மாநிலத்தில் ஆங்கிலத்தில் ஒரு கேள்வித்தாள், உள்ளூர் மொழியில் வேறு கேள்வித்தாள். அதற்கு தமிழகமே சாட்சி. இதில் இரண்டுமே கடுமையான கேள்வித்தாள்கள்.

குஜராத்தில் எளிதான கேள்வித்தாள் என நீட் தேர்வு குளறுபடிகளை சுட்டிக்காட்டி மதுரையை சேர்ந்த மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் நியாயம் இருப்பதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரசிடம் பதில் கேள்வி கேட்டது.

பதறிப் போன மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரியது.  உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உடனே உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் பணிந்தது.

அத்தோடு நில்லாமல் உடனே முடிவை வெளியிட வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஒரு வழக்கு ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போதே, விசாரணையின்றி தீர்ப்பு வழங்கியுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

இப்போது நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. நீதி கேட்ட பெண்ணின் குரல் காற்றோடு கலந்து விட்டது. அந்தப் பெண்ணின் குரல் போல தான் தமிழகத்தின் குரலும் கேட்க நாதியற்றுப் போயுள்ளது.

இன்னொருபுறம் தேர்வுத்தாள்களில்  இந்த கூத்துகள் என்றால், தேர்வு எப்படி நடைபெற்றிருக்கும் என்ற அய்யமும் எழுகிறது. காரணம், இவர்களது வரலாறு அப்படி.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க அரசு நான்காவது முறையாக தொடர்ந்து ஆள்கிறது. அங்கு நடைபெற்ற "வியாபம் ஊழல்" உலகப் பிரசித்தி பெற்றது. வியாபம் என்பது அந்த மாநிலத்தில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகள், பணிக்கான தேர்வுகளுக்கான அரசு அமைப்பு. மருத்துவக் கல்லூரி சேர்க்கை உள்பட பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் மிக அதிகம்.

2000 ஆண்டு துவங்கியது 2009ல் பெரும் பிரச்சினையானது. காவல்துறை வழக்கு தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தது. வழக்கு தேங்கியது. பிறகு நீதிமன்றம் தலையிட்டு சூடுபிடித்தது. இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என வழக்கோடு தொடர்புடையோர் கிட்டத்தட்ட 50 பேர் மர்மமான முறையில் மரணமுற்றுள்ளனர். அதற்கும் வழக்குப் பதியாமல் காவல்துறை ஏமாற்றியதும் நடந்தது.

2015 ஜூன் வரை 2000 பேருக்கு கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தும் இதில் திருப்திப் படாத உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கை சி.பி.ஐ இடம் ஒப்படைத்துள்ளது. இது நுழைவுத் தேர்வு நடத்தியதற்கு, உச்சநீதிமன்றத்திடம்  பா.ஜ.க பெற்றுள்ள தகுதிச் சான்றிதழ்.

இதை விட நம் தமிழ்நாட்டில் மத்திய பா.ஜ.க அரசு நடத்திய தேர்வின் கதை சிறப்பு. மூன்று மாதங்களுக்கு முன் மத்திய அரசின் தபால் துறை அஞ்சலக ஊழியர்களுக்கான தேர்வு நடந்தது. தமிழகத்தில் பணி என்பதால் தமிழ் தெரிவது அவசியம். அதற்கு 25 மதிப்பெண்கள். தேர்வு முடிவு வந்தது. 30 க்கு மேற்பட்ட  கோட்டங்களிலும் தேர்வு பெற்றவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். சந்தேகப்பட்ட நம்மவர்கள் அதில் உள்ளவர்கள் இருவருக்கு அலைபேசியில் பேச ஒருவருக்கும் தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை.

முழுவதும் விசாரிக்க எல்லாமே கோல்மால் எனத் தெரிய வந்தது. புகார் கொடுத்தார்கள், அரசு செவிசாய்க்கவில்லை. அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு, விசாரித்து உண்மை வெளிவந்துவிட்டது. இப்போது அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு நடந்துள்ளது ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு மோடியின் அரசு தான் பொறுப்பு.

வியாபம், தபால்துறை தேர்வுகள் ஒரு அடையாளம். பா.ஜ.க தேர்வை எப்படி நம்புவது என்பதும் இதனால் முக்கியக் கேள்வி.

அடிப்படையாக மாநில அரசின் பட்டியலான கல்வியில் மத்திய அரசு தலையிடுவதே தவறு. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.

இது வெறும் தேர்வெழுதிய மாணவர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. மக்களின் சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இது அரசின் சுகாதாரத் துறையை நொறுக்கி, கார்ப்பரேட்கள் கையில் கொடுக்கும் நடவடிக்கை.

பதில் சொல்ல வேண்டிய பிரதமர் மோடி பெருமான் எந்த நாட்டில் இருக்கிறாரோ? என்ன விவாதத்தில் இருக்கிறாரோ ?

தமிழக மாணவர்கள் எக்கேடு கேட்டால் அவருக்கு என்ன கவலை ?

# நீதி கேட்டது மதுரைப் பெண், பற்றி எரியும் !

வெள்ளி, 23 ஜூன், 2017

கொச்சி மெட்ரோவும், பாகுபலியும்

கடந்த சில நாட்களாக மலையாள நண்பர்கள் இந்தத் தலைப்பில் பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.  எதேச்சையாக இரண்டு நாட்களுக்கு முன்பாக பாகுபலி-2 திரைப்படம் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதனால் இந்தத் தலைப்பு கொஞ்சம் கேரளாவை எட்டிப் பார்க்க வைத்தது. யூடியூபில் காட்சிகள் விரிந்தன.

கொச்சியில் மெட்ரோ ரயில் துவக்க விழா ஜூன் 17ம் தேதி நடைபெற்றது. மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் திட்டத்தை துவக்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை பிரதமர் துவக்கி வைப்பது மரபு. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதற்கு முன்பாக நடந்த சில நிகழ்வுகள் தான் சர்ச்சையாகி இருக்கின்றன.

பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால், யார் யார் கலந்து கொள்ள வேண்டுமென்ற பட்டியலை, 14 பெயர்களோடு, மாநில அரசு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறது. அதில் சில பெயர்களை நீக்கி பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. உள்ளுர் சட்டமன்ற உறுப்பினர், மேயர் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. பணி நடக்கும் போது, உள்ளூர் பிரச்சினையை தீர்க்கக் கூடியவர்கள் அவர்கள் தான்.

இதை விட இன்னும் சில பெயர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையானது. கொச்சி மெட்ரோ திட்டத்தை 2012ல் துவக்கி வைத்தவர் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங். அப்போது கேரளாவில் காங்கிரஸ் ஆளுங்கட்சி. அப்போது முதல்வர் உம்மன் சாண்டி, அவர் பெயரும் நீக்கப்பட்டிருந்தது. இப்போது காங்கிரஸ் எதிர்கட்சி. இப்போது எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. அவர் பெயரையும் நீக்கியிருந்தது பிரதமர் அலுவலகம். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்தை துவங்கியதே காங்கிரஸாக இருந்தாலும், இந்த எதிர்ப்பை அரசியல் நடவடிக்கை என கருத இடம் உண்டு.

இன்னொரு பெயர் நீக்கப்பட்டது தான் ஒட்டு மொத்த கொந்தளிப்புக்கு காரணமாக இருந்தது. அந்த பெயர் "சிரீதரன்". அவருக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு.  அது " மெட்ரோ மேன்". டெல்லி மெட்ரோ திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, குறிப்பிட்ட செலவை விடக் குறைவாக முடித்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றவர். அப்போது பத்திரிக்கைகள் அவருக்கு இந்த சிறப்புப் பெயரை வழங்கினார்கள்.

1990ல் அவர் ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் பணி சிறப்பை உணர்ந்து, புகழ்பெற்ற "கொங்கண் ரயில்வே" திட்டத்திற்கு அவரை ஒப்பந்த அடிப்படையில் தலைவர் ஆக்கியது. அதற்கு பிறகு தான் டெல்லி மெட்ரோ. அதன் பின் எங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றாலும் இவர் தான் பொறுப்பு. கொச்சி மெட்ரோவும் இவர் கைவண்ணமே. இப்போது இவருக்கு வயது 85. ஆனாலும் இவர் தேவை தொடர்கிறது.

கொச்சினில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவது மிகுந்த சிரமமானப் பணியாக இருந்தது. நில அமைப்பு, குறுகிய சாலைகள், தட்பவெப்பம் என பல இடர்பாடுகள் இருந்தாலும், இவரால் தான் திட்டம் நிறைவேறியது. இதனால் இவர் பெயர் இல்லை என்பது கொந்தளிக்க வைத்தது. இன்னொன்று, இவர் மண்ணின் மைந்தன். ஆமாம், இவர் கேரளாவை சேர்ந்தவர். எரியும் மாட்டுக்கறியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றியதாகியது.

மக்கள் எதிர்குரல் வலுத்தது. முகநூலும், ட்விட்டரும் அனல் தகித்தன. முதல்வர் பினராயி விஜயன், மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். ஏற்கனவே "பிரதமர் மோடி, கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர் வெங்கையா, முதல்வர் பினராயி விஜயன் " ஆகியோருக்கு மட்டுமே மேடையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எதிர்ப்பிற்கு பிறகு, இறங்கி வந்தது மத்திய அரசு.

திறப்பு விழா நாள் வந்தது. மோடியும் வந்தார். மென் நீலநிற பைஜாமா அணிந்து ஒய்யாரமாக வந்தார். திரும்பிய பக்கமெல்லாம் ரம்மியமாக கையசைத்தார். புதிய மெட்ரோ நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை நறுக்க நின்றார். வெங்கையாவும், பினராயியும் சிரீதரனை முன்னே அழைத்தார்கள். திரும்பிப் பார்த்து விட்டு ரிப்பனை நறுக்கினார் மோடி. முடித்து சம்பிரதாயமாக முதல்வருக்கும், சிரீதரனுக்கும் கை கொடுத்தார். புதிய மெட்ரோவில் ஏறினார்கள். 17 நிமிடப் பயணம். தன் பக்கம் திரும்பிய மோடியை முதல்வர் பினராயி சட்டை செய்யவில்லை. அமைதி நிலவியது ரயிலில். பிரதமர் அலுவலகமே வீடியோ வெளியிட்டுள்ளது. அடக்கமாக அமர்ந்திருந்தார் சிரீதரன்.

பாகுபலி-2 திரைப்படத்தில் எதிர்பாராத திருப்பமாக, மன்னராக பொறுப்பேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமரேந்திர பாகுபலியை ஒதுக்கி விட்டு, பல்வாள்தேவன் பொறுப்பேற்பார் என ராஜமாதா சிவகாமி அறிவித்துவிடுவார். யாருக்கும் அதில் விருப்பம் இருக்காது. மக்கள் மனம் கவர்ந்தவர் பாகுபலி தான். ஆனால் அறிவித்தவர் ராஜமாதாவாயிற்றே.

அரசனாக பதவியேற்பார் பல்வாள்தேவன். அவர் தந்தை கைத்தட்ட மெல்ல கரவொலி எழும்பி அடங்கும். மன்னனாக எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி சேனாதிபதியாக பதவியேற்க வருவான். அப்போதே வாழ்த்துக்குரல் எழ ஆரம்பிக்கும். "அமரேந்திர பாகுபலி என்னும் நான்" என சொன்னவுடன் அரங்கே அதிரும்.

மெட்ரோ விழாவில் மோடி மலையாளத்தில் தன் உரையை துவங்கினார், லேசான கரவொலி. அதன் பின் கொச்சி மெட்ரோவின் அருமை பெருமைகளை அடுக்கினார். அரங்கத்தில் அசைவில்லை. ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்து அமர்ந்தார். கையொலித்தார்கள் மக்கள்.

கொச்சி மெட்ரோ திட்டத்தின் நிர்வாக இயக்குநர் எலியாஸ் நன்றி கூற வந்தார். ஒவ்வொருவராக விளித்து நன்றி கூறினார். பிரதமருக்கு நன்றி கூறினார், கைத்தட்டல் எழுந்தமர்ந்தது. அடுத்து "சிரீதரன்" என்று உச்சரித்தார் எலியாஸ். எழுந்த கரவொலி அடங்கவில்லை. காத்திருந்து கரவொலி அடங்கிய பிறகு பேச்சை தொடந்தார் எலியாஸ். கேமராவை பிரதமர் பக்கம் திருப்பவில்லை.

அமரேந்திர பாகுபலி உறுதிமொழி எடுத்து முடித்த உடன் மக்கள் கரவொலி எழுப்புவார்கள், வீரர்கள் வேல்களை தரையில் தட்டுவார்கள், யானைகள் பிளிரும்,  தரை மெல்ல அதிரும், பொருட்கள் உருளும், மன்னனின் கொற்றக் கொடை சரியும்.

கொச்சி மேடையில் அது எதுவும் நடக்கவில்லை. ஆனால் கரவொலியிலேயே தட்டிக் காட்டிவிட்டார்கள் சேட்டன்களும், சேச்சிகளும்.

மெட்ரோவில் ரிலீஸான "பாகுபலி".

# மக்கள் தட்டத்தட்ட மகுடமும் சரியும்  !

ஞாயிறு, 18 ஜூன், 2017

என்று தணியும் இந்த....

குவைத், எண்ணெய் வளத்தால் பொருளாதார வளமாக இருக்கும் ஒரு நாடு. 1990 ஆகஸ்ட் 2 அன்று ஈராக் படைகள் குவைத் நாட்டின் உள் நுழைந்தன. சுதந்திரத்திற்கு போராடும் புரட்சியாளர்களுக்கு ஆதரவான படையெடுப்பு என ஈராக் அறிவித்தது. ஆகஸ்ட் 4, "சுதந்திர குவைத்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 8, குவைத் ஈராக் நாட்டோடு இணைக்கப்பட்டது என்ற அறிவிப்பு வந்தது. ஆகஸ்ட் 28, குவைத் ஈராக்கின் ஓர் மாநிலம் என அறிவிக்கப்பட்டது.

அரபு நாடுகள் அல்லோகல்லோப்பட்டுப் போயின. இதன் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என பதறிப் போனார்கள். படையெடுப்புக்காகப் பயப்படவில்லை. படையெடுத்த மனிதரை கண்டு பயம். ஈராக்கின் தன்னிகரற்ற தலைவனாக முடிசூட்டிக் கொண்ட "சதாம் உசேனை" கண்டு தான் அந்த பயம். உலகின் வல்லாதிக்க நாடுகளின் பார்வையும் அந்தப் பக்கம் திரும்பியது.

அமெரிக்கா தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெச்.டபிள்யூ. புஷ், போர் தான் வழி என்றார்.

ஈராக் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டது. காரணம், பொருளாதார அரசியல். ஈராக் குவைத்தை கைப்பற்றியதற்கும், அமெரிக்கா குவைத்தை விடுவித்ததற்கும் காரணமும் அதே பொருளாதார அரசியல் தான். அதிலும் குறிப்பாக எண்ணெய் அரசியல். மத்தியகிழக்கு நாடுகளில் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெய் தான் கிட்டத்தட்ட உலக பொருளாதார சுழற்சிக்கான மைய அச்சு. எனவே அதை சுற்றி தான் உலக அரசியல்.

மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் முதலீடு செய்த உலகப் பெரு நிறுவனங்கள், சதாம் ஜுரத்தால் பீடிக்கப்பட்டன. அடுத்து சதாமால் "உலக எண்ணெய் விலை"க்கு பாதிப்பு வரும், அதனால் உலக பொருளாதாரத்திக்கு பாதிப்பு வரும் என ஆதிக்க நாடுகள் கவலை கொண்டன. குவைத்தின் பெரும் பணம் பிரிட்டன் நாட்டில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் குவைத்திற்கு 'தேள் கொட்டியது', பிரிட்டனிற்கு 'நெரி' கட்டியது. பெரு நிறுவனங்கள், ஆதிக்க நாடுகள், பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் கதறின.

உலக பாதுகாப்பு கவுன்சில் ஆதரவுடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் 1991 ஜனவரி 16ல் குவைத்தின் உள் நுழைந்தன. பிப்ரவரியில் சதாமின் ஈராக் படை வெளியேற்றப்பட்டது. அத்தோடு பிரச்சினையை விடவில்லை அமெரிக்கா. அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. ஈராக்கிடம் "அணு ஆயுதங்கள், ஆந்த்ராக்ஸ், விஷவாயு ஆயுதங்கள் குவிந்திருக்கின்றன" என அறிவித்தது.

1993ல் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து படிப்படியாக அமெரிக்கா ஈராக்கிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது. ஈராக் தீவிரவாதத் தாக்குதலுக்கு தயாராகிறது என ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவிற்கு தகவல் கொடுத்தார். எதிரிகளான இவர்கள் எண்ணெய் அரசியலில் மட்டும் ஓரணி. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போர் அறிவித்தார்.

போருக்கு முன்பாகவே ஈராக் கிட்டத்தட்ட தளர்ந்து போயிருந்தது. ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது ஐக்கிய நாடுகள் சபை. ஈராக்கிற்கு உணவுப் பொருட்கள் செல்ல முடியவில்லை. ஈராக்கால் பெட்ரோலியப் பொருட்களை விற்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஈராக் அடிபணிந்தது. 1996 ஆம் ஆண்டு "உணவுக்கு எண்ணெய்" திட்டத்திற்கு ஈராக் ஒப்புதளித்தது. ஆனாலும் அமெரிக்க விடவில்லை.

2003 மார்ச் 20, போர் துவங்கியது. அமெரிக்கப் படைகள் மெல்ல முன்னேறின,  அவர்களின் கை ஓங்கியது. சதாம் தலைமறைவானார். ஏப்ரல் 9ல் நெடிதுயர்ந்த சதாமின் சிலை கீழே தள்ளப்பட்டது. சதாமின் சகாப்தம் முடிந்ததற்கான குறியீடாக இது அமைந்தது.

அப்புறம் தான் எதிர் கிளைமாக்ஸ். எந்த ஆயுதங்கள் எல்லாம் குவிக்கப்பட்டிருக்கிறது என போர் தொடுத்தாற்களோ, அதன் பிளாஸ்டிக் மாடல்கள் கூட ஈராக்கில் இல்லை. இந்தப் போரின் நோக்கம் "எண்ணெய் அரசியல்" தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும்  வெட்கப்படவில்லை, அமெரிக்கா.

2017 ஜூன் 5.  ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பிற்கு கத்தார் ஆதரவு தருகிறது என சவுதி அரேபியா குரல் கொடுத்தது. இதற்கு ஐக்கிய அரேபிய குடியரசு, பஹ்ரைன், எகிப்து ஆகிய அரபு நாடுகள் சவுதி அரேபிய குரலுக்கு ஆதரவு தெரிவித்தன. இது என்ன புதிய பிரச்சினை என்ற கேள்வி எழுந்தது. பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் கத்தார் முன்னணியில் இருந்து வரும் நிலையில், இந்த நாடுகளின் குரலுக்கான வேறு அர்த்தம் என்ன என ஆராயப்பட்டது. கத்தார் மீது இந்த நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.

அப்போது தான் அமெரிக்க அதிபர் பெரியண்ணன் டிரம்ப் காட்சிக்கு வந்தார். "தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும்" என எச்சரித்தார்.

கத்தார் இன்றைய தேதிக்கு உலக அளவில் குறிப்பிடத்தக்க பணக்கார நாடு. ஆனால் சுண்டைக்காய் அளவு நாடு. நாட்டில் இருக்கும் மக்களில் முக்கால்வாசி பேர் வெளி நாட்டினர், வேலைக்காக வந்தவர்கள்.

"இந்தத் தடையால எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது" என கத்தார் அறிவித்தது. இன்னொரு ஈராக்கா என்ற பேச்சு வந்தது. ஆனால் சதாம் போல் நாங்கள் வீம்பு காட்டி ஏமாந்துவிட மாட்டோம் என கத்தாரின் அடுத்த  நடவடிக்கை காட்டி விட்டது.

ஜூன் 14 அன்று ஒரு அறிவிப்பு. அமெரிக்காவுக்கும் கத்தாருக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ரூபாய் 77,460 கோடி மதிப்பிலான எப்-15 ரக விமானங்கள் 72ஐ கத்தாருக்கு விற்க அமெரிக்காவின் ஒப்பந்தம் தான். அப்போது இரண்டு நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கை குறித்து விவாதித்தது தான் ஹைலைட்.

கத்தார், பொருளாதார அரசியலின் நுட்பம் உணர்ந்து அடி எடுத்து வைப்பதாகத் தோன்றுகிறது. பலத்தால் அடிக்காதே, பணத்தால் அடி.

# என்று தணியும் இந்த எண்ணெய் மோகம் !