பிரபலமான இடுகைகள்

கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பவளவிழா முரசொலிக்கு

18 வயதில், எதிர்கால திட்டமிடலில் கல்வியில் கவனம் பாயும். அல்லாதோருக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் மிகும். சிலருக்கு விளையாட்டில்  கவனம் திரும்பும்.

அந்த சிறுவனுக்கு தமிழ் மீதும், அரசியல் மீதும், எழுத்தின் மீதும் ஆர்வம் திரும்பியது. அவற்றிற்கு வடிவம் கொடுக்கும் வகையில் பத்திரிகை துவங்க திட்டமிடுகிறார்.

அன்றைய அவருடைய பொருளாதார சூழலுக்கு தகுந்தவாறு, கையெழுத்துப் பத்திரிக்கையை துவக்குகிறார். 18 வயதில் பத்திரிக்கை நிறுவனர் "கலைஞர்".

பத்திரிக்கைக்கு பெயர் சூட்ட வேண்டும்.  துவங்கும் போதே, போர் அறிவிப்பு ஒலியை நினைவில் நிறுத்தி பெயர் சூட்டுகிறார். அப்போது இந்திக்கு எதிரான போர் முரசு தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த நேரம்.

அதை ஒட்டிய பெயராக "முரசொலி" என சூட்டுகிறார். அன்றிலிருந்து சமூக அவலங்களுக்கு எதிராக அந்த முரசு தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது, இன்றும்.

மெல்ல வளர்ந்து வரும் சூழலில் முரசொலியை துண்டறிக்கையாக அச்சிட்டு வெளியிடுகிறார், அதன் நிறுவனரான தலைவர் கலைஞர். பின்னர் மாத இதழாக மலர்ந்தது முரசொலி.

அடுத்து வார இதழானது முரசொலி. அடுத்தக் கட்ட வளர்ச்சியாக நாளிதழாக உருவெடுத்தது. அதன் ஒவ்வொரு படி வளர்ச்சியையும் திட்டமிட்டு செயல்படுத்தினார் நிறுவனர் கலைஞர்.

தலைவர் கலைஞரும் அரசியல், கலை உலகம் என பயணித்துக் கொண்டிருந்தார். அவரும் படிப்படியாக வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்தார். "பராசக்தி" மூலம் திரை உலகில் முத்திரை பதித்தார்.

படத்திற்கு கலைஞர் எழுதிய அனல் பறக்கும் வசனங்கள் திரைப்படத்தின் வெற்றியை உறுதி செய்தன. அந்த திரைக்கதை வசனங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியானது. அதன் விற்பனை உச்சம் தொட்டது.

வசனப் புத்தகத்தில் கிடைத்த லாபத்தை கொண்டு, சென்னையில் முரசொலிக்கு அச்சகம் திறந்தார். நாளிதழாக கழகத்தின் கொள்கைகளை கழகத் தோழர்களிடம் கொண்டு சேர்த்தது முரசொலி.

அன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள் பல இதழ்களை நடத்தி வந்தனர். அதில் இன்றும் வெற்றிகரமாக நடக்கும் ஒரே பத்திரிக்கை 'முரசொலி' மட்டும் தான்.

ஏன், தலைவர் கலைஞரே பல பத்திரிக்கைகளை துவக்கி நடத்தியவர், பல பத்திரிக்கைகளை துவக்க காரணமாக இருந்தவர். ஆனால் அவற்றிலும் 'முரசொலி' தான் தொடர்ந்து ஒலிக்கிறது.

ஒரு பத்திரிக்கை தொடங்கி நடத்துவது சாதாரண செயல் கிடையாது. பொருளாதார பிரச்சினை ஒரு பக்கம். நாளிதழுக்கு தினம் செய்திகளை தொகுத்து வெளியிடுவது சிரமம்.

வெகுஜனப் பத்திரிக்கை என்றால், அரசியல், பொழுதுபோக்கு, கலை, இலக்கியம், ஜோதிடம் என கலந்துக் கட்டி சமாளித்து விடலாம். ஒரு இயக்க செய்திகளை மாத்திரம் வெளியிட்டு, கொள்கைகளை கொண்டு சேர்க்கும் பணியை செய்யும் நாளிதழை நடத்துவது மிகச் சிரமம்.

அதையும் 75 வருடம் நடத்துவது மிகப் பெரும் சாதனை. அந்த சாதனையை செய்தவர் தலைவர் கலைஞர். அதிலும் துவங்கிய நாளில் இருந்து, 75வது வருடம் வரை நிறுவியவரே நிர்வகிப்பது பெரும் சாதனை ஆகும்.

கையெழுத்து பத்திரிக்கையாக துவங்கிய போது எப்படி கண்ணும் கருத்துமாக முரசொலியை கவனித்தாரோ, முதலமைச்சராக இருந்த போதும் கவனித்தார், உடல் நலம் குன்றும் வரையிலும் தொடர்ந்து கவனித்தார்.

உடன்பிறப்பு கடிதம், கேள்வி பதில் என கலைஞரது நேரடி பங்களிப்பு இருக்கும். அதல்லாமல் கேலிச்சித்திரங்கள், எதிர்கட்சி நாளிதழ் மற்றும் தலைவர்களின் தாக்குதலுக்கான பதில் செய்தி என அவரது மறைமுக பங்களிப்பு இருக்கும்.

சாதாரண ஒரு தி.மு.க தொண்டர் கூட மாற்று அரசியல் கட்சித் தலைவரின் சவாலுக்கு பதில் சொல்லும் திறன் உள்ளவர்கள் என்று வியக்கப்படுவதுண்டு. அதற்கு முழு முதற் காரணம், முரசொலி தான். முரசொலி படித்தாலே தயாராகி விடலாம்.

காலை முரசொலி அலுவலகத்திற்கு சென்று கடிதம் எழுதி விட்டு, அன்றைய நாளிதழை வடிவமைத்து விட்டு வருபவர், மாலை முதல் இதழ் அச்சான உடன் அதைப் பார்த்தால் தான் மற்ற பணிகளுக்கு செல்வார். அவரது அந்த கடமை உணர்வு தான் முரசொலியின் வெற்றி.

முரசொலியின் வெற்றி  கலைஞரின் வெற்றி. அந்த அளவிற்கு கலைஞர் வேறு, முரசொலி வேறு என்று பிரிக்க முடியாது. கலைஞரின் வார்த்தையில் சொல்வதானால், "முரசொலி கலைஞரின் மூத்தப் பிள்ளை".

அந்த மூத்தப் பிள்ளை தான், கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர், பள்ளிக் கூடம், பல்கலைக்கழகம். முரசொலியை மாணவனாக வணங்குகிறேன்.

# தொடர்ந்து முரசு ஒலிக்கும், காலமெல்லாம் !

_எஸ்.எஸ்.சிவசங்கர்.

வியாழன், 22 டிசம்பர், 2016

போராட்டமே வாழ்க்கை !

அது 1945. சுதந்திரம் கிடைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. தலைவர் கலைஞர் பாண்டிச்சேரி சென்றிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அங்கு திராவிட நடிகர் கழகத்தின் "சாந்தா அல்லது பழனியப்பன்" என்ற நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் தலைவர் 'சிவகுரு' என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்தார். நாடகம் இருபத்தைந்து நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது.

புதுகை மக்கள் அவரை சிவகுரு என்றே அழைத்தனர். திராவிடக் கழக தோழர்கள் தலைவரை ஊக்கமளித்து, உற்சாகப்படுத்தினர். "தொழிலாளர் மித்திரன்" என்ற வார இதழில் கட்டுரை எழுத சொன்னார்கள். தலைவரும் 'அந்தப் பேனா' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். காந்தி அடிகளின் ஆசிரமத்தில் காணாமல் போன ஒரு பேனா பற்றி எழுதினார். காங்கிரஸார் தலைவரை அடையாளம் குறித்துக் கொண்டனர்.

அடுத்த வாரம் "காந்தி வைஸ்ராயானால்" என்ற கட்டுரை. காங்கிரஸார் கோபம் தலைக்கேறியது. நாள் தேடினர், தலைவரை தாக்க. அப்போது தான் புதுகையில் திராவிடர் கழக மாநாடு நடத்த முடிவானது. பெரியார், அண்ணா, அழகிரிசாமி பங்கேற்றனர்.  காலை பத்து மணிக்கு மாநாடு துவங்கியது. கலகம் செய்ய கும்பலும் கூடியது. "திராவிடத் தலைவர்களே திரும்பிப் போங்கள்" என்ற கோஷம் வேறு.

அண்ணா ஏற்றிய கொடி மரத்தை வீழ்த்தினார்கள் கலகக்காரர்கள். அமளி தொடங்கியது. பெரியாரையும், அண்ணாவையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். அந்த கும்பலின் கையில் தலைவர் கலைஞர் மாட்டினார். பலத்த அடிக்கு இடையே தலைவர் தப்பி ஓடுகிறார். வழியில் இருக்கும் வீடுகளில், பயந்து கதவை சாத்திக் கொள்கிறார்கள்.

ஒரு வீட்டின் கதவு திறந்திருக்கிறது. முன்னால் நின்ற பெண்கள் வாய் திறக்கவில்லை. அந்த வீட்டினுள் நுழைகிறார், தப்பிக்க. உள்ளே நுழைந்து பார்த்தால் எங்கும் மது பாட்டில்கள். அப்போது தான் புரிகிறது, அது தான் கலகம் நடத்த திட்டமிட்ட இடம் என்பது. அதற்குள் கலகக் கும்பல், தலைவரை பிடித்து விட்டது. ஆளாளுக்கு அடிக்க, தலைவர் மயக்கமுற்றார். இறந்துவிட்டார் என எண்ணி சாக்கடையோரம் தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர்.

இரண்டு மணி நேரம் கழித்து தான் விழித்து பார்க்கிறார். ஒரு வீட்டு தாழ்வாரத்தில் படுக்க வைக்கப் பட்டிருக்கிறார். ஒரு சிறுமி மற்றும் இளைஞனோடு ஒரு வயதான தாயும் இருக்கிறார். "அய்யோ, யார் பெற்ற பிள்ளையோ ! இப்படி சாகக் கிடக்கிறதே?", என்று அந்த தாயின் கனிவான வாசகம் தலைவர் நெஞ்சில் பதிந்து விட்டது. இதை தனது "நெஞ்சுக்கு நீதி" தன் வரலாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார்.

தலைவர் கலைஞருக்கு என்ன ஆயிற்று என்று பெரியாரும், அண்ணாவும் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவரை  ஊர் முழுதும் ஆட்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். விடியற்காலை தலைவர்களிடம் சென்று சேர கலைஞர் புறப்படுகிறார். கலகக்காரர்களிடம் மாட்டினால் ஆபத்து என, காப்பாற்றிய வீட்டார் அவரை மாறுவேடத்தில் செல்ல சொல்கிறார்கள்.

தலையில் குல்லா, நீண்ட ஜிப்பா, கைலி என இஸ்லாமியர் வேடத்தில் ரிக்‌ஷாவில் ஏறி சென்றார். பெரியார் தூங்காமல் காத்திருந்தார். தலைவர் கலைஞரை கண்டதும் கலங்கிய பெரியார் கட்டி அணைத்துக் கொண்டார். அவரே காயங்களுக்கு மருந்திட்டார். "என்னுடன் வா, போகலாம்" என பெரியார் ஆணையிட்டார். தலைவரும் உடன் சென்றார். ஈரோட்டுக்கு பயணம். "குடியரசு" பத்திரிக்கையில் துணை ஆசிரியர் ஆக்கினார் பெரியார். துணை ஆசிரியரானது, தலைவர் கலைஞரது அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்.

இந்த நிகழ்வில் தாக்கப்பட்டு இறந்து விட்டார் என்று முடிவெடுத்து அவர்கள் செல்ல, தப்பியவர் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு சென்றார். இது போல் விபத்தில், இயற்கை சீற்றத்தில், உடல் நலக்குறைவில் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்ற வதந்திகள் பரவி , அதை தாண்டி வந்து சாதனைகளை தொடர்ந்தார் கலைஞர்.

இப்போது ஜெயலலிதாவின் மருத்துவமனை செய்திகளுக்கு பிறகு மக்களுக்கும் குழப்பம், கலைஞர் உடல்நலம் குறித்து. இப்போதும் வந்து விட்டார் மீண்டு.

# போராட்டமே வாழ்க்கை, வெல்வதே வாடிக்கை !

ஞாயிறு, 5 ஜூன், 2016

சாதனைத் தலைவர்

1991மே மாதம். தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்தது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வந்தார். திருப்பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல், காரணம் திமுகவினர் என அதிமுக பொய் பிரச்சாரத்தில் குதித்தது. ராஜீவ் கொலையில் கொதித்து போன மக்கள், அந்தப் பிரச்சாரத்தை நம்பி திமுகவிற்கு எதிரான மனநிலைக்கு சென்றனர். அதிமுகவினர் திமுகவினர் இல்லங்களை தாக்கினர், கொடிக் கம்பங்களை வீழ்த்தினர்.

ஊருக்கு ஊர் ராஜீவ்காந்தி படத்தை வைத்து மாலை அணிவித்து, மக்களை துக்க மனநிலையிலேயே  வைத்திருந்தனர். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. ராஜீவ் மரணம் சுனாமியாக திமுகவை தாக்கியிருந்தது. போட்டியிட்ட தொகுதிகளில், ஒன்றைத் தவிர அத்தனையிலும் தோல்வி.

திமுக வெற்றி பெற்ற அந்த ஒரு தொகுதி துறைமுகம். வெற்றி பெற்ற அந்த ஒரே திமுக வேட்பாளர் தலைவர் கலைஞர். (பொதுத் தேர்தல் அன்று தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து, எழும்பூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்று, பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றார்.)

அந்த மாபெரும் அனுதாப அலையை எதிர்த்து வென்றது மாத்திரமல்ல, இது வரை போட்டியிட்ட 13 தேர்தல்களில் தோல்வியே காணாமல் வெற்றி பெற்று சாதனைப் படைத்திருக்கிறார். இது இந்திய சாதனை. உலக சாதனையாகவும் இருக்கும்.

1977 தேர்தலில், திமுக நெருக்கடி நிலையால்(மிசா) பாதிக்கப்பட்டு தேர்தலை சந்தித்த சூழல். 1980 தேர்தலில், அதற்கு முன்பான எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலை. 1984 தேர்தலில், அன்னை இந்திரா இறப்பாலும் எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவாலும் ஏற்பட்ட அனுதாப அலை (சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற சொற்றொடர் அப்போது பிரபலம்).

இப்படி தொடர் தாக்குதலில் மூன்று சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும், தோல்வி சுற்றி வந்தது திமுகவை. திமுகவின் வெற்றி பாதிக்கப்பட்ட போதும், தலைவர் கலைஞருக்கு மக்கள் வெற்றியையே அளித்து வந்துள்ளனர். அது இந்தத் தேர்தலில் இன்னும் பல சாதனைகளாக வடிவெடுத்துள்ளது.

92 வயதில் தேர்தலை சந்தித்தார். இந்த வயதின் தளர்ச்சியைப் புறம் தள்ளி, வேன் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வென்றார். அதிலும் சாதனைப் படைத்தார். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மண்ணின் மைந்தராக திருவாரூர் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

92 வயதில் வெற்றி. அதுவும் 13வது முறையாக வெற்றி. அதுவும் தோல்வியே காணாத வெற்றி. இனி ஒருவர் இந்த சாதனையை முறியடிப்பது எளிதல்ல. எளிதல்ல என்று சொல்வதை விட வாய்ப்பே இல்லை.

# சோதனைகளையும் சாதனைகளாக்கும் தலைவர் கலைஞர் வாழ்க !
 

திங்கள், 18 ஜனவரி, 2016

மீண்டும் பராசக்தி

நீதிமன்றம் தலைவர் கலைஞருக்கு புதிதல்ல. வழக்குகளை சந்திப்பதும் புதிதல்ல. அவர் சந்தித்த வழக்குகள் ஏராளம். ஆனால் அவை எதுவும் சொத்துக் குவிப்பு வழக்கல்ல. ஊழல் வழக்குகளும் புனையப்பட்டவை என நிரூபணமாயின.

ஜெயலலிதா போல், ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வரப்பெற்று சிறை சென்ற தலைவர் அல்ல அவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர் அவர். கல்லக்குடியில் தமிழுக்காக போராடி சிறை சென்றவர் அவர்.

இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழக மக்களுக்காக போராடிய போராட்டங்கள், ஈழத் தமிழருக்கான போராட்டம் என பல வழக்கிற்காக அவர் நீதிமன்றம் சென்றிருக்கிறார். ஜெயலலிதா இப்போது தொடுத்திருக்கிற அவதூறு வழக்கு அவருக்கு தூசு.

இந்த அவதூறு வழக்குகள் மூலம் அவரை முடக்கலாம் என ஜெயலலிதா நினைத்தால், அதை விட முட்டாள்தனமான எண்ணம் இருக்க முடியாது. இது போன்றவை தான் அவரை புத்துணர்வோடு வீறு கொண்டு எழ வைக்கும்.

அவர் அடிக்க, அடிக்க எழுகிற பந்து என்பதை பல முறை நிரூபித்திருக்கிறார் கலைஞர். இது ஜெயலலிதாவிற்கும் தெரியும். நள்ளிரவு கைதின் போது, புனைந்த வழக்கை , தொடர்ந்து நடத்த ஜெயலலிதாவிற்கே வெட்கமாகிப் போனது. வழக்கு காணாமல் போனது.

ராஜீவ் கொலை வழக்கில் அபாண்டமாக திமுக மீது குற்றம் சுமத்தி, ஒரு தேர்தலை வென்றார்கள். பிறகு ஜெயின் கமிஷன் வைத்த போது, அதையும் எதிர் கொண்டவர் தான் கலைஞர் அவர்கள். கொலைப் பழியை சுமத்திய போதே, கலங்காமல் நீதியை நிலை நாட்டியவர்.

அவரா இந்த அவதூறு வழக்குக்கு அஞ்சப் போகிறார். இன்று நீதிமன்றம் சென்று, எதற்கும் தயார் என காட்டி விட்டார். 92 வயதிலும் சிங்கம் என்பதை நிலை நாட்டி விட்டார். அரசியல் தலைவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அவரே உதாரணம்.

1952ல் "பராசக்தி" திரைப்படத்திற்கு, தலைவர் கலைஞர் எழுதிய வசனம், 64 ஆண்டுகள் கழித்தும் இந்தக் காட்சிக்கு அப்படியே பொருந்துகிறதே....

"நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது.
புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது.
ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல.
வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல.

வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்.
குழப்பம் விளைவித்தேன்.
அவதூறு செய்தேன்.
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்க போகிறேன் என்று.
இல்லை. நிச்சயமாக இல்லை."

# இதுவும் மெகா ஹிட் தான். மீண்டும் பராசக்திடா !

புதன், 15 ஜூலை, 2015

ஜனநாயகவாதி பெருந்தலைவர் காமராஜர்

1975, ஜூன் 26-ம் தேதி. இந்தியாவில் நெருக்கடி நிலை என்ற மிசா அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து எதிர் குரல் வருகிறது. திமுகவிடம் இருந்து மாத்திரமல்ல, பெருந்தலைவர் காமராஜர் அவர்களிடம் இருந்தும். திருத்தணியில் நடைபெற்ற கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கிறார் காமராஜர்,

நெருக்கடி நிலையால், தேசம் முழுதும் தனது நண்பர்களான பழைய காங்கிரஸ் தலைவர்கள், எதிர்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுகிற செய்தி தொடர்ந்து வருகிறது. மன வருத்ததிற்கு ஆளான காமராஜர் உடல் நலம் குன்றி, படுக்கையில் வீழ்கிறார்,

அப்போது இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த நெருக்கடி நிலையை, மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்த ஒரே மாநில அரசு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு தான். காமராஜர் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களை கைது செய்ய மத்திய அரசு நெருக்கடிக் கொடுக்கிறது. ஆனால் கலைஞர் தலைமையிலான அரசு அசைந்துக் கொடுக்கவில்லை.

ஜூலை 4ம் தேதி. காமராஜரது இல்லம். அன்றைய முதல்வர் கலைஞரும், கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனும், அவரை காண செல்கிறார்கள். அருகே அமர்ந்த கலைஞரை கண்டதும், காமராஜருக்கு கண்கள் கலங்கி விடுகின்றன. மெல்ல தொடுகிறார் கலைஞர். தழுவிக் கொள்கிறார் காமராஜர். அனைவர் கண்களிலும் கண்ணீர்,

“தேசம் போச்சு, தேசம் போச்சு” ஓங்கி குரல் கொடுக்கிறார் காமராஜர். கலைஞர் கதறி அழ ஆரம்பித்து விட்டார், கண்களில் வழியும் கண்ணீரோடு நாவலர் இருவரையும் சமாதானம் செய்கிறார். உணர்ச்சி மயமான சூழல். மீண்டும் பேச்சு துவங்குகிறது.

“அய்யா, நெருக்கடி நிலையை எதிர்த்து நாங்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறோம். நீங்கள் ஆணையிடுங்கள். இந்தியாவில் ஜனநாயகத்தை காத்திட, சர்வாதிகாரத்தை அழித்திட நீங்கள் தலைமையேற்று அணி நடத்துங்கள். உங்கள் பின்னால் அணி வகுக்கிறோம்” என்கிறார் கலைஞர்.

“பொறுமையாக இருங்க, அவசரப்படாதீங்க. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் ஜனநாயகம் இருக்குது, நீங்க ராஜினாமா செய்தால், அதுவும் போயிடும். கொஞ்ச நாள் பொறுமையா இருங்க” என காமராஜர் பதிலளித்தார். காமராஜர் அறிவுரையால் திமுக பொறுமை காத்தது.

இந்த மனவேதனையில்  கொஞ்சம் கொஞ்சமாக உடல் தளர்ந்த காமராஜர் அக்டோபர் 2 அன்று மறைந்தே போனார். அவர் இறந்த சில நிமிடங்களிலேயே, கலைஞர் காமராஜர் இல்லம் சென்று விட்டார். இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகள் துவங்கின.

காங்கிரஸ் தலைவர்கள் காமராஜது உடலை, தேனாம்பேட்டை காங்கிரஸ் திடலில் வைத்து, அங்கேயே அடக்கம் செய்ய முடிவெடுத்தனர். முதல்வர் கலைஞர் குறுக்கிட்டார். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்றார். காங்கிரஸ் தலைவர்களுக்கே திகைப்பு.

ராஜாஜி மண்டபத்தில் அரசு ஏற்பாட்டில், பொதுமக்கள் பார்வைக்கு காமராஜரது பூவுடல் வைக்கப்பட்டது. அடுத்து அடக்கம் செய்ய அரசு இடம் தேர்வு செய்ய வேண்டும். இரவாகி விட்டது. மழை பெய்து கொண்டிருந்தது.

முதல்வரே இடம் தேடி சென்றார், உடன் காங்கிரஸ் தலைவர்களான ராஜாராம் நாயுடுவும், திண்டிவனம் ராமமூர்த்தியும். கார் வெளிச்சத்திலேயே இடத்தை தேர்வு செய்து முடிவு செய்தார்கள்,

காந்தியின் தொண்டராக வாழ்ந்து, காந்தி பிறந்தநாளிலேயே மறைவுற்ற காமராஜருக்கு, காந்தி மண்டபத்திற்கு அருகிலேயே நினைவாலயம் முடிவானது. அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். நினைவகமும் கட்டப்பட்டது.

நெருக்கடி நிலை பிரதமர் இந்திராகாந்தியும் இறுதி நிகழ்ச்சிக்கு வந்து பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்தினார். ஆயிரம் இருந்தாலும், இந்திராவை பிரதமராக்கியவர் பெருந்தலைவர் தானே. ஆனால் இறுதி காலம் வரை நெருக்கடி நிலைக்கு அஞ்சாதத் தலைவனாகவே வாழ்ந்து மறைந்தார் காமராஜர்.

# அஞ்சாத ஜனநாயகவாதி பெருந்தலைவர் காமராஜரை பின்பற்றுவோம் !

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

தலைவர் இருக்கிறார் தயங்காதே !

சற்று மலைப்பாகத் தான் இருந்தது. சின்ன மாவட்டம், அதிலும் வறட்சி மாவட்டம், மூன்று ஆண்டுகளாக மழையும் இல்லை. இப்படி நெகட்டிவ் பாயிண்ட்களாக மனதில் ஓடியது.

ஆமாம், தேர்தல் நிதி வசூல் செய்ய வேண்டும் என்று தலைவர் கலைஞர் அறிவிப்பு வந்த உடன் தான் இப்படி சிந்தனை. ஆனால் தலைவர் சொல்லி விட்டாரே, இது தான் தலையாயப் பணி.

இன்னொரு புறம் தலைவர் சொல்லி விட்டார் என்பதை விட நமக்கே முக்கிய கடமை இருக்கிறதே. மக்கள் விரோத அரசாக செயல்படுகிற, ஒரு குற்றவாளிக்கு புகழ் பாடுகிற ஓ.பி.எஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமை முன்னால் நிற்கிறதே.

இந்த சூழ்நிலையில் மீன்சுருட்டி இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டத்திற்கு கிளம்பினேன். அண்ணன் சபாபதிமோகன் அவர்கள் சிறப்புரை. வழக்கம் போல் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அன்று காலை தான் தலைவர் அறிக்கை அளித்திருந்தார்,"இனி சால்வைக்கு பதில் தேர்தல் நிதியாக அளித்திடுங்கள்". அதையே நானும் மேடையில் அறிவித்தேன்.

சகோதரர் தன.அருள், தேர்தல் நிதி வழங்கி துவக்கி வைத்தார். அடுத்து சேட்டு வழங்கினார். நம்பிக்கை துளிர் விட்டது.

அடுத்த நாள் இரவு தா.பழூர் பொதுக்கூட்டம்.. லப்பைக்குடிகாடு பொதுக்கூட்டதில் முன்னதாக பேசி விட்டு கிளம்பினேன். 80 கி.மீ பயணம்.

ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தார். 9.30க்கு மேடை ஏறினேன். கண்ணன் ஒரு பையை பிரித்து ஒரு தாம்பாளத்தில் கொட்டினார்.

"முதல் தவணை தேர்தல் நிதியாக ரூபாய் 50,000/- வழங்குகிறேன்" என்று அறிவித்து கொடுத்தார். தெம்பு வந்தது. காலையிலேயே துணிச்சல் கொடுக்கும் சம்பவம் ஒன்று நடந்தது.

அன்று காலை, அரியலூர் ஒன்றியத்தில், தளபதி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல்.

ஒரு பள்ளிக்கு சென்றோம். பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினோம்.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பினோம். தலைமை ஆசிரியரை காணோம். விடை பெற தேடினோம். மற்றொரு ஆசிரியர் தேடி சென்றார்.

ஒரு அறைக்குள் அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பார்வையாளர் குறிப்பேடோ என்று பார்த்தால், ஒரு கவரோடு வந்தார். மனுவாக இருக்கும் என நினைத்து வாங்கினேன்.

கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது,"தேர்தல் நிதி". அரசு பள்ளி ஆசிரியர் கேட்காமலே நிதி தருகிறார். மாற்றம் நிச்சயம். துணிச்சல் வந்தது.

அடுத்து அவர் பெயர் எழுதியிருந்தார். அதை படித்த உடன், புது வேகம் பிறந்தது. அவர் பெயர், கருணாநிதி.

     

# நம் தலைவர் இருக்கிறார் தயங்காதே !

வெள்ளி, 9 ஜனவரி, 2015

மிகச் சிலரே வரலாறாய் வாழ்கிறார்கள்....

நான் அப்போது நான்கு மாதக் குழந்தையாக இருந்திருப்பேன். அப்போது கிலுகிலுப்பையை ஆட்டி விளையாடிக் கொண்டிருந்திருப்பேன். எனக்கு அன்றைய நாட்டு நடப்பு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

                

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த ஆண்டு. கழகம் என்ன செய்யப் போகிறது என்று, இன்று போல அன்றும் பத்திரிக்கைகள் ஆருடம் எழுதிக் கொண்டிருந்த நேரம். அண்ணா வகித்த முதல்வர் பதவி தலைவர் கலைஞரை தேடி வருகிறது.

அப்போது கழகத்தின் நான்காவது பொதுக்குழு கூடியது. தலைவர் கலைஞர், கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் முறை. அப்போது யாருக்கும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள், இந்தத் தலைவர் பெரும் சாதனைகளை படைக்கப் போகிறார் என்று.

அதற்கு பிறகு, இரண்டு முறை கழகத்தை பிளக்க, சிதைக்க முயற்சி நடந்தது. நெருக்கடி மிசா காலத்தில் கழகத்தை கரைத்து விட ஆன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால் அத்தனையும் தாண்டி இன்றும் கழகத்தை வலுவோடு வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

பதிமூன்று ஆண்டு காலம் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி. வனவாசம் போன்ற எதிர்கட்சி பயணம். பல வித நெருக்கடிகள். அத்தனை சோதனைகளையும் தகர்த்து, மீண்டும் 1989-ல் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றினார்.

ஒன்றரை ஆண்டு கால ஆட்சி கலைக்கப்பட்டது. ராஜிவ்காந்தி கொலை பழியை கழகத்தின் மீது சுமத்தி, வரலாறு காணாத தோல்வியை ஏற்படுத்தினார்கள். அந்தப் பழியையும் துடைத்து எறிந்து, மீண்டும் அரியணை ஏறினார்.
விபரம் தெரியும் வயது வரை தந்தையின் தலைவர், நமக்கும் தலைவர் என்று நேசித்து வந்தேன். விபரம் தெரிய ஆரம்பித்த பிறகு, அவரது இந்தக் கடும் பயணத்தை உணர்ந்து பிரமிக்க ஆரம்பித்தேன். அவருக்கு வந்த சோதனைகள் வேறு மனிதனுக்கு வந்திருந்தால், நூறு முறை இதயம் நின்றிருக்கும்.

2000-ல் நடைபெற்ற பதினோராவது கழக அமைப்புத் தேர்தலில் நான் போட்டியிட்டு மாவட்ட செயலாளராகி, அந்தப் பொதுக்குழுவில் தலைவர் கலைஞர் எட்டாவது முறையாக தலைவரானதை நேரடியாக பார்க்கின்ற வாய்ப்பை பெற்றேன்.

இப்போது பதினான்காவது கழக அமைப்புத் தேர்தல் முடிந்து, இன்று (09.01.2015) நடைபெற்ற பொதுக்குழுவில் பதினோராவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கலைஞர். இன்றும் பிரமிப்பு குறையாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆட்சி மாற்றங்கள், காட்சி மாற்றங்கள் எதற்கும் களைத்துப் போகாமல், மாரத்தான் பந்தயத்தில் ஓடுகிற வீரனைப் போல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

பலர் வாழ்வும் தெரியாமல், வரலாறும் தெரியாமல் மறைந்து போகிறார்கள். சிலர் வரலாற்றை படித்தும், ரசித்தும் வாழ்கிறார்கள். சிலருக்கே வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாகின்ற வாய்ப்பு கிடைக்கும். மிகச் சிலரே வரலாறாய் வாழ்கிறார்கள். அந்த மிகச் சிலரில் ஒருவர் தலைவர் கலைஞர்.

# வாழும் வரலாறு தலைவர் கலைஞர் வாழ்க !