பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

இராஜேந்திர சோழங்குறிச்சி !

சோழங்குறிச்சி , அரியலூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமம். உடையார்பாளையம் பேரூரில் இருந்து சற்றே உள்ளடங்கிய கிராமம். மாமன்னன் இராஜேந்திர சோழன்,  கங்கைகொண்ட சோழபுரத்தை தன் தலைநகராக கொண்டு நிர்மாணித்த புதிய சாம்ராஜ்யத்தின் ஒரு கிராமம் தான் இது. அதனால் தான் 'சோழன்'குறிச்சி. கடந்த வாரத்தில் இருந்தே, அங்கிருந்து அழைப்பு.

திருஞானம், சென்னையில் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர். விடுமுறை கிடைத்தால் ஊருக்கு வந்துவிடுவார். மதி, வெளிநாடு சென்று பணியாற்றி வந்தவர். நல்லதம்பி, கல்லூரியில் துறைத் தலைவர். ஊருக்கு அழைத்துக் கொண்டிருந்த தோழர்கள் இவர்கள். நண்பர்கள் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கேரம்போர்ட் மற்றும் செஸ் போர்ட் வாங்கி வைத்திருந்தனர். அதனை வழங்குவதற்கே அழைத்திருந்தனர்.

சோழங்குறிச்சி ஒரு சிறப்பான ஊர். ஊர் வளர்ச்சிக்கு எல்லோரும் தோள் கொடுப்பார்கள். சோழங்குறிச்சியில்  அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவர்கள் சதுரங்கம் (செஸ்) விளையாட்டில் மாவட்ட அளவில் நான்காண்டுகளாக பரிசு வாங்கி வருகிறார்கள். இதை கண்டு ஜெயங்கொண்டம் நகரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளே பாராட்டியுள்ளார்கள்.

காரணம், தனியார் பள்ளியில் சதுரங்கம் விளையாட்டைப் பயிற்றுவிக்க, தனிப் பயிற்சியாளர் உள்ளார். சோழங்குறிச்சி அரசு பள்ளியில் பயிற்றுவிப்பவர்கள் விளையாட்டு ஆசிரியர் மட்டுமல்ல, ஆங்கிலம், கணித ஆசிரியர்களும். இங்கு இதற்கு தனியாக பயிற்சியாளர் கிடையாது. தங்கள் பாடம் நடத்திய நேரம் போக மற்ற ஓய்வு நேரங்களில் சதுரங்க விளையாட்டை பயிற்றுவிக்கிறார்கள்.

பள்ளியில் தலைமையாசிரியர் தலைமையில் நேற்று (30.08.2017) நடைபெற்ற எளிமையான விழாவில் கேரம்போர்டையும், செஸ் போர்டையும் மாணவர்களிடம்  வழங்கினோம். ஆசிரியர்களையும், வெற்றிப் பெற்ற மாணவர்களையும் வாழ்த்தி இரண்டு நிமிடம் பேசினேன். நேற்று நிகழ்ச்சி நடந்த அதே நேரம், அகல்யா என்ற இந்தப் பள்ளியின் மாணவி கரூரில் நடைபெற்ற மணடல அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்தக்கட்டமாக, இவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

வரும் செப்டம்பர் மாதம் சோழங்குறிச்சியில், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்காக ஒரு பெரும் திடலை சுத்தம் செய்து, விளையாட்டிற்கு தயார் செய்யும் பணி நடக்கிறது. இங்கு தான் அரசு உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டிடங்கள் அமைய உள்ளன. அந்த இடத்தை பார்வையிட அழைத்து சென்றனர். வெளியில் இருந்து மண் கொண்டு வந்து கொட்டப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது இந்தப் பகுதி. ஜல்லிக்கட்டுக்கும், பள்ளிக்கும் சேர்த்து பணி. இளைஞர்கள் பணியை பெருமிதமாக குறிப்பிட்டார் மூத்தவர் ஓய்வுப் பெற்ற ஆசிரியர் கலியபெருமாள்.

சோழர் காலத்து கிராமம் என்பதால் நிறைய ஏரிகள் உள்ளன. அவற்றை குடிமராமத்து பணி மூலம், ஆழப்படுத்தும் பெரும் பணி நடந்துள்ளது. எல்லா ஏரிகளையும் கழகத் தோழர்களே தூர் வாரியிருந்தனர். கடந்த மாதம் ஒரு ஏரியை பார்வையிட்டேன். அந்த ஏரியை மதி மற்றும் நண்பர்கள் ஆழப்படுத்தியிருந்தனர். இன்று ஒரு ஏரியை அழைத்து சென்று காண்பித்தனர்.

நான்கு அடி ஆழம் இருந்த சேறும், சகதியும் அகற்றப்பட்டிருக்கின்றன. பணியை சிறப்பாக செய்ய உதவியவர் சி.என்.அண்ணாதுரை என்ற உள்ளூரை சேர்ந்த பேராசிரியர் என்பதை குறிப்பிட்டார் ஷாஜஹான். அப்போது தான் திரு ஒரு வரலாற்று தகவலை சொன்னார். நாங்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஏரியும் ராஜேந்திர சோழர் காலத்து ஏரி தான்.

அப்போது சுற்றிலும் காட்டுப்பகுதி. அங்கு ராஜேந்திர சோழன் வேட்டைக்கு வருவாராம். நாங்கள் நின்றிருந்த ஏரியின் எதிர்கரையில் ஒரு கோயில் இருக்கிறது. ராஜேந்திரசோழன் காலத்தில் அங்கு ஒரு கற்றளி இருந்ததாகவும், அதை ஒட்டிய  ஓய்வு மண்டபத்தில் தான் ராஜேந்திரன் வேட்டைக்கு பின் ஒய்வெடுப்பார் என செவி வழி வரலாறாக உள்ளது. அங்கு வந்தால் அவர் மனத் துயர்  நீங்குமாம். அதனால் அந்த கோயிலின் பெயர் 'மனத் துயர் நீக்கும் மகாலிங்கம்' ஆலயம்.

எது எப்படியோ, ஊரில் இருக்கும் ஏரிகளை தூர் வாரி, மக்கள் மனத் துயர் நீக்கியுள்ளனர் கழகத் தோழர்கள்.

இந்த ஏரியை தூர் வாரிய கழகத் தோழருக்கு சற்று பொருள் நட்டம். ஆனாலும் அயராமல் பணி முடித்துள்ளார். அவருக்கு ஊர் சார்பாக, ஊராட்சி செயலாளர் செல்வராஜ் தலைமையில் சால்வை அணிவித்து வாழ்த்தி, நன்றி தெரிவித்தோம்.

ராஜேந்திர சோழர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரியை தூர் வாரிய அந்தத் தோழரின் பெயர், 'ராஜேந்திரன்'.

# நற்பணிகள் மூலம் வரலாற்றில் இடம் பெறும் "சோழங்குறிச்சி" !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக