பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

122 எம்.எல்.ஏக்களுக்கான ஆட்சி !

மேசை மீது தினத்தந்தியை விரித்து வைத்து விட்டு, டீயை ஒரு வாய் குடித்தேன். சொய்ங், சொய்ங், சொய்ங் என தொடர்ந்து சத்தம். "என்ன முருகா சத்தம்?" என்றுக் கேட்டேன்.

வாசற்படியில் நின்ற முருகன் சொன்னார், "வரிசையா காரா போவுதுண்ணா. தேசியக் கொடி கட்டிய காரு, அதிமுக கொடி கட்டிய காருன்னு வரிசையா போவுதுண்ணா". "மந்திரிங்க காரா?". " ஆமாண்ணா, சில மந்திரிங்களும் போறாங்க".

இத்தனை மந்திரிகள் வந்தா ஏதாவது பெரிய நிகழ்ச்சியா இருக்கணும்னு நினைச்சா, கொஞ்ச நேரத்தில் செய்தி வந்தது. அத்தனை மந்திரிகளும் அரியலூர் கலைக்கல்லூரிக்கு தான் வந்தார்கள்.

வந்து, ஒரு உயரமான கழியை நட்டு வைத்து பூசை செய்திருக்கிறார்கள். மறுநாள் பத்திரிக்கைகளில் புகைப்படமும் வந்தது. ஏழு மந்திரிகள் கழுத்து நிறைய மாலையோடும், தலையில் பரிவட்டத்தோடும் நின்றார்கள்.

மறைந்த முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழா. அதை அரியலூரில் வரும் 28ம் தேதி நடத்துகிறார்கள், அரசு சார்பாக. அந்த விழாவுக்கான பந்தல் கால் நடும் விழாவிற்கு தான் ஏழு மந்திரிகள் வந்துள்ளனர். விழாவிற்கு முதல்வரோடு பத்து மந்திரிகள் வருவார்களாம். அதற்கு முன்னோட்டம் தான் இந்த பந்தக்கால் நிகழ்ச்சியாம்.

ஒரு மந்திரிக்கே எவ்வளவு வேலைகள் இருக்கும். ஏழு மந்திரிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் ஒரு பந்தக்கால் நட இவர்கள் வந்தால் என்றால், அப்படி வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

முதல்வருக்கே வேலை இல்லை என்னும் போது, பாவம் மந்திரிகளுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது? எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவது, அதற்கு ஏற்பாடு செய்வது என  மொத்தத்தில் தமிழக அரசாங்கம் இப்படித் தான் நடக்கிறது.

இதைத் தெரிந்ததால் தான் முதல்வரை மந்திரிகள் மதிப்பதில்லை, மந்திரிகளை எம்.எல்.ஏக்கள் மதிப்பதில்லை, எம்.எல்.ஏக்களை கட்சிக்கார்கள் மதிப்பதில்லை. எல்லோரும் சேர்ந்து மக்களை மதிப்பதில்லை.

மிகக் கொடூரமான மக்கள் பிரதிநிதிகள் சேர்ந்து, ஒரு அரசாங்கம் அவலமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இது தான் தமிழகத்தின் தலைவிதியாக இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பெயர் எம்.சி.சம்பத். அந்த மாவட்டத்தை சேர்ந்த நான்கு அதிமுக எம்.எல்.ஏக்களும் அவரை மதிப்பதில்லை. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை அவர்கள் புறக்கணிப்பார்கள்.

நேற்று உச்சகட்டமாக சீனியர் மந்திரி செங்கோட்டையன் கலந்துகொண்ட நிகழ்ச்சியையும் புறக்கணித்திருக்கிறார்கள், சம்பத் கலந்து கொண்டதால். ஆனால் மந்திரிகள் அது குறித்து கவலைப்படவில்லை, வெட்கப்படவும் இல்லை.

காலையில் சென்னையில் பேட்டி கொடுக்கிறார் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க.தமிழ்ச்செல்வன். "டி.டி.வி.தினகரன் தான் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர்" என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.

நண்பகல் மதுரையில் இருந்து அமைச்சர் உதயக்குமார் பேட்டி. "டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாக பதவிப் பட்டியல் அறிவித்தது தவறு. அவருக்கு அதிகாரமே கிடையாது", அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் உதயக்குமார்.

இரவு, தொலைக்காட்சியில் ஒரு காட்சி. தேனீ மாவட்டம் தேக்கடி பக்கம் ஒரு ஆய்வு. மந்திரி உதயக்குமார் முன் நடக்க, தங்க.தமிழ்ச்செல்வன் பின் நடக்கிறார். ஒருவரை ஒருவர் பார்த்து 70 எம்.எம்'ல் சிரித்துக் கொள்கிறார்கள். காலை ஆரம்பித்து, மாலைக்குள் இவ்வளவு டிராமாக்கள்.

மந்திரி ராஜேந்திர பாலாஜி, முன்னாள் மந்திரி வைகைச்செல்வனை " அழுகிய தக்காளி" என்கிறார். இவர் அவரை 'போஸ்டர் ஓட்டியவர்' என்கிறார். இன்னும் ஒரே அணியில் தான் இருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ வெற்றிவேலும், மந்திரி ஜெயக்குமாரும் ஒருவர் முகத்தில் ஒருவர் காரி உமிழ்ந்துக் கொள்ளாத குறை தான். அவ்வளவு விமர்சனங்கள். ஆட்சியில் யார்  ஓங்குவது என்பதற்கு தான் இவ்வளவு பாடும் படுகிறார்கள். மக்கள் பிரச்சினைக்காக அல்ல.

இத்தனையும் எடப்பாடியா, டி.டி.வி.டியா என்று ஒரே அணிக்குள் நடக்கும் கூத்துகள். இதல்லாமல், ஓ.பி.எஸ் கும்பல் ஒன்று. கண்ணாடி முன்னால் உட்கார்ந்து தனக்கு தானே பேசிக் கொள்ளும் கூட்டம். எல்லாவற்றையும் காரசாரமாக பேசிவிட்டு, சட்டமன்றத்திற்குள் சென்றால் மௌனவிரதம் இருக்கும் வாய்பேசா மனிதர் போல் இருப்பார்கள்.

எவ்வளவு வெட்டுக்குத்து, காறி உமிழ்தல் நடந்தாலும் ஆட்சி கவிழக்கூடாது, பதவி போய்விடக் கூடாது என்பது மாத்திரமே ஒரே கொள்கை அவர்களுக்கு. யாரும் யாரையும் மதிப்பதில்லை, யார் பேச்சையும் யாரும் கேட்பதில்லை. ஆனால் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

முதல்வரும், அமைச்சரும், எம்.எல்.ஏவும் மதிப்பது ஆட்சியையும், பதவியையும் மாத்திரமே.

மொத்தத்தில், "இது 122 எம்.எல்.ஏக்களுக்காக, 122 எம்.எல்.ஏக்களால் நடத்தப்படும், 122 எம்.எல்.ஏக்களின் ஆட்சி".

(அப்போ ஆறுகுட்டி கதைன்னு கேக்குறீங்களா? போகப்போகத் தெரியும்)

இந்த 122ம் சேர்ந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள்.

# நீங்க நல்லா இருக்கணும், நாளும் முன்னேற !



வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

பிரேக்கிங் நியூஸ் காலம் !

இந்த "பிரேக்கிங் நியூஸ், பிக் நியூஸ்" பரபரப்பில் ஒரு விஷயத்தை ஊடகங்கள் மறைக்க முனைகிறார்கள்.

அது தளபதி ஸ்டாலின் அவர்களின் நிதானம், கண்ணியம்.

ஜெயலலிதாவால் வெற்றி பெற்ற 134 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, அதிமுக இரண்டு தரப்பாக பிரிந்து 'பகடை' ஆடிக் கொண்டிருக்கிறது. கட்சியை கைப்பற்றுவதில் நடைபெறுவது இன்னும் அதிகம். ஆனால் அது அவர்கள் உள்கட்சி விவகாரம்.

அதே சமயம் ஆட்சி விவகாரத்தில் நடைபெறும் ஆட்டம், அவர்கள் கட்சிக்கானது மாத்திரமல்ல. தமிழக மக்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது. வாக்களித்தவர்கள் மாத்திரமல்ல, வாக்குரிமை இல்லா குழந்தைகள் வாழ்வையும் பாதிக்கும் விவகாரம், இவர்கள் ஆட்சிப் பொறுப்பு குறித்து நடத்தும் 'கண்ணாமூச்சி விளையாட்டு'. ஆட்சி இயந்திரம் இயங்காமல் முடங்கியே போய் விட்டது.

134 பேரில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் எத்தனை பேர், சசிகலா அவர்களிடம் எத்தனை பேர் என்பது 'கன்னித்தீவு ரகசியம்' போல் நீடிக்கிறது. ஆளுநர் மாளிகையிலோ, சட்டசபையிலோ பலம் நிரூபிக்கப் படும் வரை இந்தக் குழப்பம் நீடிக்கும். அதுவரை இருவருமே எங்களிடம் 'தான்' அதிக எண்ணிக்கை என அறிவித்தவாறு இருப்பார்கள்.

ஆனால் குழப்பமே இல்லாத எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை திமுக கொண்டிருக்கிறது. 89 பேர். மிக முக்கியமான ஒரு எண்ணிக்கை, இன்றைய காலக்கட்டத்தில். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டும் என்று நினைத்தால், திமுக ஒரே ஒரு கடிதத்தை ஆளுநர் இடம் அளித்தால் போதும்."எங்கள் இடம் மெஜாரிட்டி இருக்கிறது" என்ற ஒற்றை வரி கடிதம் போதும்.

சசிகலா எப்போது பொதுச்செயலாளர் ஆனாரோ, அப்பொழுதில் இருந்தே பொதுமக்களிடம் இருந்து எழும் வினா ஒன்றே ஒன்று தான், "திமுக ஏன் அமைதி காக்கிறது?". வேகமான தி.மு.கழகத் தோழர்களே வலைதளங்களில் இன்னும் காட்டமாக எழுதினார்கள்," மிக்சர் தின்பது ஓ.பி.எஸ் அல்ல, தி.மு.க தான்". சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள், "30 எம்.எல்.ஏக்களை அதிமுகவில் இருந்து உடைத்து ஆட்சி அமைக்க வேண்டியது தானே?".

அது எளிதான காரியம் தான், ஆனால் காலம் எல்லாம் பழிச் சொல்லுக்கு ஆளாக்கும் செயல். திமுக அந்த காரியத்தில் இறங்கவே இல்லை. மிக நிதானமாக அடிகளை எடுத்து வைத்தார் தளபதி அவர்கள். "ஆட்சியின் நலத் திட்டங்களை ஆதரிப்போம்" என்று அறிவித்தவர், ஆட்சியின் அவலங்களை தட்டிக் கேட்பதில் முன்னால் நின்றார்.

ஜல்லிக்கட்டு பிரச்சினை, மாணவர்கள் மற்றும் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு எதிர்ப்பு என மக்கள் நலன் சார்ந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, அரசின் மீது சாட்டையை சொடுக்கினார். தளபதி அவர்கள் கேள்விகளுக்கு பிறகே அரசு செயல்பட்டது, பல விவகாரங்களில்.

இந்த நேரத்தில் தான், சசிகலாவின் ஆட்சியை பிடிக்கும் வேலை நடந்தது. தமிழகம் எங்கும் சசிகலாவிற்கு எதிரான மனநிலை தான். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளைத் தவிர அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சசிகலாவிற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டில் உள்ளனர்.

இப்போது திமுக மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. இவர்கள் ஏன் ஆட்சி உரிமை கோரக் கூடாது என்ற கேள்வி பொதுமக்களிடத்தில் வலு பெற்றிருக்கிறது.

ஓ.பி.எஸ்ஸோடு எத்தனைப் பேர் என்று தெரியாமல், இப்போது ஐந்து பேர் இணைந்திருக்கிறார்கள். இதுவே திமுக உரிமை கோரினால், கூடுதல் எண்ணிக்கையில் அதிமுகவில் இருந்து, திமுக பக்கம் புலம் பெயரும் வாய்புள்ளது என்பது பொதுவாக எழுந்திருக்கும் கருத்து. அதிலும் தேர்தல் வந்தால் திமுக வெற்றி பெறும் என்ற நிலையில் பலரும் திடமான முடிவெடுப்பார்கள்.

ஆனால் இப்போதும் தளபதி சொல்கிறார், "அதிமுக உறுபினர்களின் உண்மை மன நிலை அறிந்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்". அவர்கள் உரிமையில் தலையிடவில்லை என்பதை தெளிவுப் படுத்தியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்திற்கு அதிமுகவினர் அடித்து கொள்ளும் வேலையில், ஜனநாயக ரீதியாக திமுக அமைதி காக்கிறது, தளபதி கண்ணியமாக செயல்படுகிறார் என மக்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் வழக்கம் போல் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் 'பிரேக்கிங் நியூஸிலேயே' கண்ணாக இருக்கின்றனர். இவர்கள் மறைப்பதை வரலாறு பதிவு செய்யும்.

# பிரேக்கிங் நியூஸை வரலாறு வெல்லும் !

வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஐ சப்போர்ட் சசிகலா

ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா.

சின்னம்மா அவர்களின் அளப்பறிய திறமை காரணமாகத் தான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.

ராஜாஜி, காமராஜர், அண்ணா அமர்ந்த முதல்வர் நாற்காலிக்கு 'இன்ச்' அளவிற்கு நெருங்கி நிற்கிறார் என்றால் அது அவரது உழைப்பு மற்றும் திறமை. படிப்படியாகத் தான் முன்னேறி இருக்கிறார். இதை எல்லோரும் மறைக்கிறார்கள்.

கணவர் அரசுப் பணியில் இருக்கிறார் என்று சும்மா இருந்துவிடாமல், வெளிநாடு சென்று வீடியோ தொழில் குறித்து கற்றறிந்தார். அப்போது யாருமே அதற்காக மெனக்கடாத காலம். இந்தத் தொழில் பிற்காலத்தில் சிறக்கும் என உணர்ந்தது தான் அவரது திறன். அந்த அடிப்படையில் தான் பிற்காலத்தில் ஜெயலலிதா இந்த உயரத்தை அடைந்திடுவார் என கணித்து அவர் நட்பை தேடிப் பிடித்தார். இது அவரது 'கணிப்பை' உறுதி செய்கிறது.

கணவரின் அரசுப் பணியை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரின் நட்பைப் பெற்றார். அவர் மூலம் தான் ஜெயலலிதாவை நெருங்கினார், ஒரு நிகழ்ச்சிக்காக. அத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஜெயலலிதாவை அணுகி அவருக்கு உதவிகள் புரிந்தார். அதன் மூலம் ஜெ'வின் அறிவிக்கப்படாத உதவியாளர் இடத்தைப் பிடித்தார். இது அவரது 'பழகும் பண்பை' வெளிப்படுத்துகிறது.

1991ல் ஜெயலலிதா ஆட்சியை பிடித்த உடன், தன்னை உடன்பிறவா சகோதரியாக அறிவிக்க வைத்தார். தனது அக்காள் மகன் சுதாகரனை, ஜெயலலிதாவின் 'வளர்ப்பு மகனாக'  ஆக்கினார். அவர் திருமணத்தில் இருவரும் ஒட்டியாணம் அணிந்து நடந்தக் காட்சி தான் இன்றைக்கும் அவரது முத்திரை. இது அவரது 'லாபியிங் பவரை' காட்டுகிறது.

1996 திமுக ஆட்சியில், சொத்துக்குவிப்பு வழக்கின் போது, ஜெயலலிதா வாயால் சசிகலா குரூப்பை ஒதுக்கி வைப்பதாக அறிவிக்க வைத்து, பிறகு கூடி கும்மியடித்தது வரலாறு. அப்புறமும் உடன்பிறவா சகோதரியாய் பயணித்தார். ஜெயலலிதாவாலும் தவிர்க்க இயலவில்லை. அது தான் சசியின் 'ஈர்ப்புத் திறன்'. அது கடைசி வரை வேலை செய்தது, சசியின்  'ஆளுமையை' நிலைநாட்டியது.

2001ல் மீண்டும் அதிமுக ஆட்சி. கடந்த ஆட்சிக்காலம் போல் சிக்கலில் மாட்டாமல், இந்த முறை வெளி நாடுகளில் முதலீட்டை துவங்கினார். ஒரு தீவு கையகப் படுத்தப்பட்டது. குடும்பத்தில் ஒவ்வொருவராய் அரசியலில் அறிமுகப்படுத்தினார். பிசிறடித்து, 'அக்கா ஜெ' கோபத்திற்கு ஆளானால், அடுத்தவரை இழுத்து வந்தார். தினகரனில் துவங்கி டாக்டர்.வெங்கடேஷ் வரை இழுத்து வந்தார். இது அவரது 'குடும்ப பாசத்தை' உறுதிப் படுத்துகிறது.

2006 திமுக ஆட்சி வந்தபிறகு சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் உயிர் பெற்றது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சசி தான் எனக் காரணம் காட்டி , 'சசியை' போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார் ஜெயலலிதா. சசியும் வெளியேறினார். இரண்டே மாதங்கள் தான், சசி ஜெ-வை  சமாதானப்படுத்தி கார்டன் நுழைந்தார். மெல்ல, மெல்ல அதிகாரத்தில் தன் கரம் நுழைத்து ஓங்கச் செய்தார் சசி. இது அவரது 'சூழ்ச்சித் திறனை' வெளிக் கொணர்ந்துள்ளது.

2011 தேர்தல் குறித்து அவர்களுக்கே குழப்பம். ஆனால் ஆட்சி அமைந்தது. அப்போது தான், ஆட்சி அதிகாரத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காவல்துறையில் 'தன்னர்'களை உயர் இடத்தில் கொண்டு வந்து அமர்த்தினார். கொஞ்சம், கொஞ்சமாக ஆக்டோபஸாய் கரம் விரித்தார், தமிழ்நாட்டை வளைத்துப் பிடித்தார். இது தான் இவரது 'மேலாண்மை'யை காட்டுகிறது.

2016ல் உடல்நலம் குறைந்த ஜெயலலிதாவை முன்னிறுத்தி பனியாற்றினார். வெற்றி பெற்ற பிறகு ஆட்சியை அதிகாரத்தோடு செலுத்தினார். 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் என சொல்லியே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை உலகிற்கே காட்டாமல் வைத்திருந்தது இவரது 'ரகசியக் காப்புத் திறனை' எடுத்துக் காட்டுகிறது.

இப்படி சசிகலாவின் " 'கணிப்புத் திறன்', 'பழகும் பண்பு', 'லாபியிங் பவர்', 'ஆளுமை', 'குடும்பப் பாசம்', 'சூழ்ச்சித் திறன்', 'மேலாண்மை', 'ரகசியக் காப்புத் திறன்' "ஆகியவை வெளிப்பட்டுள்ளது. இனி இப்படியொருவர் கிடைக்கப் போவதில்லை. இவர் மாத்திரம் வந்தால், இந்தத் திறமைகளை எல்லாம் பயன்படுத்தி, இந்தியாவை உயர் வழிக்கு கொண்டு செல்வது எளிது.

இவர் பிரதமரானால், இந்தியா 'ஏக இந்தியா' ஆக முழு நடவடிக்கைகள் துவங்கும். எதிர்கட்சிகள் முடக்கப்படும்.  காவிரி, பாலாறு, பெரியாறு 'மொத்தமாக' முடிக்கப்படும். அயல்நாடுகள் கண்ட்ரோலுக்கு கொண்டு வரப்படும்.

# ஆதலால், ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா ஃபார் பி.எம். !

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பன்னீரின் கண்ணீர் கடிதம்

பெறுநர்:
மேதகு. ஆளுநர் அவர்கள்,
ஆளுநர் மாளிகை, கிண்டி,
சென்னை,
தமிழ்நாடு.

அய்யா, வணக்கம்!

எப்படியாவது உடனே என்னை பதவி விலக்க ஏற்பாடு பண்ணுங்க. நான் சொந்த விருப்பத்தின் பேரில் தான் பதவி விலகுகிறேன். பல காரணங்களால் மனசு பாதிக்கப் பட்டிருக்கிறேன். அதனால் என்னால் சரியாக பணியாற்ற இயலாத சூழ்நிலை. இதை மனதில் கொண்டு இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

நான் எப்போதும் சேர்ல ஒண்டி, ஓரமா உட்கார்ந்தே பழகிட்டேன். இப்போ அம்மா இல்லாத சபையில அம்மா உக்காந்த நாற்காலியில என்னை சபாநாயகர் உட்கார வச்சிட்டாரு. இடம் நெறய இருக்குன்னு, ஹாயா உட்கார்ந்துட்டேன். இரண்டு நாள்ல உடம்புல ஒவ்வாமை வந்துடுச்சி. ராத்தியிரில தூக்கமும் வர மாட்டேங்குது. உடம்பு ஒரு மாதிரி ஆயிடுச்சி. பழைய மாதிரி ஒண்டி உட்கார்ந்தா தான் சரியா வரும்.

எனக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுத்தவர் முன்னாள் எம்.பி தினகரன். அவருக்கு பின் நின்றே பழகி விட்டேன். பிறகு அம்மா பெரும் வாய்ப்பு கொடுத்தார்கள். அதிலிருந்து அவர் பின் நின்றே பழகி விட்டேன். இப்போது திடீரென முன்னே நிற்கும் போது "வெட, வெட" என நடுக்குகிறது. அதனால் முதல்வர் பதவி எனக்கு சரியாக வராது.

2001ல் நீதிமன்றம் சொன்னதால், அம்மா பதவி விலகிய போது முதல்வர் ஆக்கினார் என்னை. அடுத்து அம்மா பெங்களூரு சிறைக்கு சென்ற போது, மீண்டும் என்னை பொறுப்பேற்க சொன்னார். நானும் ஏற்றேன். அம்மா மீண்டும் வந்தார். நான் போய் விட்டேன். அம்மா சொல்லும் போது வருவதும், போவதும் எனது பணி. "இடைக்கால முதல்வரே" பழகி விட்டது. இது செட்டாகவில்லை.

அடுத்து இப்போது அம்மாவே போய் விட்டார்.  மீண்டும் என்னை அழைத்து பணியேற்க சொன்னார்கள். நானும் கனத்த மனதோடு வந்தேன். அம்மா இல்லாத பிள்ளையை ஆளாளுக்கு மிரட்டுகிறார்கள். டெல்லியில் இருந்து ஃபோன் வந்தால், கார்டனில் இருந்து ஆள் வருகிறது. சின்ன, சின்ன பசங்க எல்லாம் வம்பிழுக்கறாங்க. முடியல.

அந்தப் பசங்க ஒரு பக்கம்னா, காலேஜ் பசங்க பாடாபடுத்திட்டாங்க. போராட்டம் பண்ணி மிரட்டிபுட்டாங்க. ஆளாளுக்கு போட்ட கோஷம் இன்னும் காதுல கொய்ங்குது. என் பேரப் பசங்களே எனக்கு மிக்சர் அன்பளிப்பு கொடுக்கிற அளவுக்கு இவங்க மீம்ஸ் வேல செய்யுது. சரின்னு வாடிவாசல் போனா அவங்க பூட்டி வச்சிக்கிட்டாங்க. சரின்னு கலைக்க சொன்னா, இந்த போலீஸ் கொளுத்தியே உட்டுட்டாங்க. டெரராவுது.

இன்னொரு பக்கம் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பாடாபடுத்தறாரு. எதுக்கெடுத்தாலும் நேரா பத்து மனு குடுக்கறாரு. தமிழ்நாட்டுலயே என்ன ஓவரா மதிக்கறது அவரு தான். என் காரப் பார்த்தா, ஒதுங்கி வழிவிடறாரு. வாழ்த்து சொல்றாரு. பயம்மா இருக்கு. பத்தாததுக்கு துரைமுருகன் "5 வருசம் முதல்வரா இருங்கன்னு" வாழ்த்தறாரு. மெர்சலாவுது.

அடுத்து சின்னாம்மா பொதுச்செயலாளர் ஆன பிறகு கொஞ்சம், கொஞ்சமா அம்மாவாகவே மாறி வர்றது நாட்டுக்கே தெரியும். புடவை, கொண்டை, வாட்ச், மேக்கப்னு மாறுனவங்க அம்மா மாதிரி இரும்பு மனுஷியாகறதுக்கு முன்னாடி நானே ஒதுங்கிக்கறது நல்லது. நைட்ல கனவுல 'அப்போலோ ஹாஸ்பிடலும், பிரதாப் ரெட்டியும்' வர்றாங்க. பயமாருக்கு.

இப்போது சின்னம்மா ஃபுல் மேக்கப்பில் இருக்கிறார். அது கலையும் முன், நீ கிளம்பு என்கிறார்கள். அதனால் நான் கிளம்பிவிட்டேன். என் பணி முடிந்தது.

(ஆள உடுங்கய்யா...)

இவண்
பி.பி.கண்ணீர்செல்வம்,
பெரியகுளம்.

வியாழன், 26 ஜனவரி, 2017

கொடியரசு தின வாழ்த்து

இரண்டு வருடத்திற்கு முன்னால அப்படி சொல்லி இருந்தா, நானே விழுந்து புரண்டு சிரிச்சிருப்பேன்.  இப்போ நண்டு, சிண்டு வரைக்கும் அத சர்வசாதாரணமா சொல்ல ஆரம்பிச்சிடுச்சிங்க. எல்லாம் இந்த மனுசனால வந்தது தான். வந்தப்ப பயங்கர டெரர்றா தான் இருந்தாரு. ஆனா அப்படியே பயங்கர காமெடியா ஆவாருன்னு  நினைக்கல.

இதுக்கு, அந்த காலத்தில நாம தான் முக்கிய கோரிக்கையா அத வச்சிருந்தோம். பின்னாடி நாட்டு நிலமைய நினைச்சி கைவிட்டோம். நாமளாவது சனநாயக வழி. இயக்கம் கட்டி, ஆயுதம் ஏந்தி போராடினவங்க உண்டு. அதில் உயிரிழப்பும் உண்டு. இப்படில்லாம் போராடி அரச பயங்கரவாதத்ல அந்த இயக்கம் அழிஞ்சே போச்சி. இப்படில்லாம் வரலாறு இருக்கறதனால, இனி வழியே இல்லன்னு மூடின சேப்டர் அது. பொசுக்குன்னு ஒப்பன் பண்ணிட்டாரு அண்ணன்.

கடந்த மாசம் நண்பர்கள் சிலரோட சந்திப்பு. அப்போ சர்வசாதாரணமா அவங்க அந்த சப்ஜெக்ட கையாண்டாங்க. கொஞ்சம் அட்வான்ஸா சிந்திக்கிற குரூப் தான். இருந்தாலும், இது ஓவர் திங்கிங்ஆ இருக்கேன்னு தோணுச்சி அப்போ.  ஆனா இப்போ சரியா தான் யோசிக்கிட்டு இருக்காங்கன்னு ஆயிடிச்சி. எல்லாம் அண்ணன நம்பி தான் யோசிருக்காங்க.

அண்ணன் அந்தத் திட்டத்த அறிவிச்சதுல முதல் பொறி விழுந்துருக்கு. ஆனா சரியா வெளியில தெரியல.  ரெண்டு, மூணு இடத்துல இந்தப் பேச்சு கிளம்பியிருக்கு. இங்க அப்போ கிளம்பல. இப்போ கிளம்பிடுச்சி. நண்டு ஒன்னு வாட்ஸ் அப் வீடியோல பேசுனப்ப இத சொல்லிச்சி. நான் பெருசா நெனைக்கல. ஆனா இன்னைக்கு முகநூல்ல பலரும் கதற்றத பார்த்தா பொறி வலுவாயிருக்குன்னு தெரியுது.

என்னாடா சப்ஜெக்ட்ட சொல்லாம இழுக்கறேன்னு பார்க்கறீங்களா? அவங்க சர்வசாதாரணமா சொன்னாலும், எனக்கு அத சொல்ல தயக்கமா தான் இருக்குது.

ம். அதே தான். தனி நாடு.

முன்னாடி அந்த நண்பர்கள் சொன்னப்ப நானே சிரிச்சேன். அப்ப தான் அவங்க சொன்னாங்க, நாங்கக் கூட இத நாங்களா நினைக்கல. எல்லாப் புகழும் அண்ணனுக்கு தான். அண்ணன் வேற யாரு, நம்ம மோடி அண்ணன் தான். அண்ணன் அவரு கட்சியில எல்லாரையும் காலி பண்ணி கைப்பிடிக்குள் வந்தது அவங்க கட்சிப் பிரச்சினை.

ஆனா அதே டேஸ்ட்ல இந்தியாவையும் கைக்குள்ள கொண்டு வரணும்னு பார்த்தாரு. குஜராத்த டைட்டா வச்சிருந்தது போல இந்தியாவையும். அது ஒரு மொழி பேசற, ஒரு கலாச்சாரம் கொண்ட மாநிலம். அத வச்சிருக்கறது வேற கதை. ஆனா இந்தியா பல மொழி, பல கலாச்சாரம் கொண்ட நாடு. இது மொத்தமா கைக்குள்ள வர்றது சிரமம்னு அண்ணனுக்கு புரிஞ்சுது.

அப்புறம் அவங்க வழிகாட்டி குரூப்போட ஏக இந்தியாவ நிர்மாணிக்க முடிவெடுத்தாரு. அப்பத் தான் இந்தி, சமஸ்கிருதம், பொதுச்சட்டம், பொதுக்கல்வின்னு ஆரம்பிச்சாரு. அப்பவே நம்ம நண்பர்கள் தனி நாடு கோரிக்கைக்கு அண்ணன் உயிர் குடுத்துடுவாருன்னு முடிவெடுத்துருக்காங்க.  பேசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

அப்போ பாத்து தான் அண்ணன் ஒரு சிக்ஸர் அடிச்சாரு. பந்து ஸ்டேடியத்துக்கு வெளியில போயிடுச்சி. ஆமாம், "செல்லாக்காசு" திட்டம் தான். மேற்கு வங்காளம் கிளம்புச்சி.  அது ஏதோ மம்தாவுக்கு மட்டும் பிரச்சினைன்னு நினைச்சாங்க. வங்காளம் தமிழ்நாடு மாதிரி தான், தனி சிந்தனை.  மொத்த இந்தியாவின் நிலைப்பாட்டில் இருந்து வித்தியாச சிந்தனை. அதனால அங்க கம்யூனிஸ்ட் கோலோச்சறது.  இப்போ மம்தா.

வடகிழக்கு மாநிலங்கள் பூரா ஒட்டிக்கிட்டு தான் இருக்கு. அதன் போக்கே வேற. காஷ்மீர் கதை தான் தெரிஞ்சது. கேரளா "செல்லாக்காசு" பிரச்சினையில  750 கி.மீ மனிதசங்கிலி நின்னு போராடி இருக்காங்க. இப்புடி ஆளுக்கொரு பக்கம் இழுக்கற நிலை.

அப்போ தான் நம்ம மேல உழுந்துது அடி.  காவேரி தீர்ப்ப ஒத்துக்க முடியாதுன்னு அண்ணன் கம்பெனி சொல்ல, லேசா.  அடுத்து அண்ணன் பொதுக்கல்வி, நீட் பொதுத் தேர்வு, பொங்கலுக்கு விடுமுற இல்லன்னு போட்டுத் தாக்க பொறி நெருப்பாச்சி. ஜல்லிக்கட்டு காள குறுக்க நெடுக்க ஓட, நெருப்பு காட்டுத் தீயாயிடிச்சி. மெரினா புரட்சியப்ப எதிரொலிக்க ஆரம்பிச்சுது. இளைஞர்கள் கோஷமாவே போட்டுட்டாங்க.

இப்போ கூட எந்த அரசியல் கட்சியும் "தனி நாடு" கோரிக்கையை பேசல, பேசவும் மாட்டாங்க. ஆனா இளைஞர்கள்கிட்ட இருந்து கேஷுவலா கிளம்பிடுச்சி.

அனல் பறக்கும் ஸ்டேடஸ்கள் தெறிச்சிது.

'நீ அனுமதி தரலன்னா, எங்க நாட்டுல ஜல்லிக்கட்டு நடத்திக்கிறோம்'

'கிரிக்கெட்டில் வென்ற அண்டை நாடான இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்'

'அண்ணா அப்போவே தமிழ்'நாடு'ன்னு தொலைநோக்கோடு தான் பேர் வச்சிருக்காரு'

இதெல்லாம் டிரெண்டிங்ல எழுதுனதுன்னு விட்டுட்டேன்.

ஒருத்தர் சீரியஸாவே எழுதி இருந்தாரு. "வல்லரசா இருந்தது ரஷ்யா. கிட்ட நெருங்கவே முடியாது. கார்ப்பசேவ் வந்தாரு. பிரிச்சி உட்டுட்டாரு. இந்தியாவின் கார்ப்பசேவ் 'மோடி' வாழ்க ! ".

டிவி விவாதத்துல அய்யநாதன் அழுத்தி சொல்றாரு. " இந்திய ஒன்றியத்தின் அங்கமான தமிழ்நாடு ". USA, USSR போல USI (United States of India)ன்னு ஃபீல் கொடுக்கிறாரு.

பாஸ், என்ன தான் நடக்குதுன்னு குழப்பமாயிடிச்சி.

இன்னைக்கு ஃபேஸ்புக் வந்தா நிறைய கருப்புக் கொடி ஃபுரொபைல் பிக்சர். அப்படியே போன வருசம் இந்த அளவுக்கு 'இந்திய' தேசியக் கொடி இருந்துது. இன்னொரு பக்கம் நாட்டுப்பற்ற வலியுறுத்தி, நாடு ஒண்ணா இருக்கனும்னு வலியுறுத்தி வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் கோஷம்.

வலியுறுத்தல எல்லாம் அண்ணன் மான்கிபாத்க்கு தான் ரீடைரக்ட் பண்ணனும். ஏன்னா அவர் தான் மனசு வைக்கணும். எல்லோரையும் மதிச்சி நடக்கனும், உரிமைய பறிக்கக்காம இருக்கணும். இத காங்கிரசுக்கும் CC போடணும்.

சரி, இந்தியா வாழ்க. அண்ணன் மோடிக்கு கொடியரசு தின வாழ்த்துக்கள். அடுத்த வருசமும் சொல்றது உங்கக் கைல தான் இருக்கு.

# பாத்து மனசு வைங்க அண்ணன் மோடி !