பிரபலமான இடுகைகள்

வியாழன், 8 மே, 2014

இரு சக்கரப் பேரணி - "ஓட்டுவீங்க இல்ல?".

கலவர முகத்தோடு அண்ணன் ஞானமூர்த்தி கேட்டார், "ஓட்டுவீங்க இல்ல?". மையமாக தலையசைத்தேன். பக்கத்தில வர்ற பைக் எல்லாம் இடிக்கிற மாதிரி வரும் போது நீங்க மட்டும் பதில் சொல்லிடுவீங்களா ?

அப்போது பார்த்து அண்ணன் செல்வராஜ், "கியர்லாம் பின்னாடி அமுக்கனும்" என்றார். இதற்குள் கிளட்ச் கைப்பழக்கமானது. ஒரு ஃபர்லாங்கில் செந்துறை பஸ்ஸ்டாண்ட் அடைந்தோம். இதற்குள் கியர் கால்பழக்கத்திற்கு வந்துவிட்டது. நிதானமாக 25 கி.மீ வேகத்தில் வாகனத்தை செலுத்தினேன்.

எங்கள் பைக்கிற்கு இணையாக ஒரு பைக், மற்ற பைக்குகள் பின்னால் என பேரணி ஒழுங்கானது. சிறுதெருவை காட்டினார் அண்ணன் ஞானமூர்த்தி,"உள்ளே போவதா?" என்றார். "மெயின் ரோடு மட்டுமே" என்றேன். என் கஷ்டத்தை உணர்ந்தவராக, மற்றோரை நேரே வரக் கைக்காட்டினார்.

செந்துறை தாண்டியது. பைக் பழகியிருந்தது. "பேரணியில் நான் தொடர்ந்தால், ஒருவரை ஒருவர் முந்தாமல் வருவார்கள் போலிருக்கே?" என்று கேட்டேன். "உண்மை தான். உங்க பின்னாடியே வருவாங்க. ஸ்பீடையும் கண்ட்ரோல் பண்ணிட்டீங்க. ஓட்டுங்க, பேசிப்போம்"என்றார் அண்ணன் ஞானமூர்த்தி. அவருக்கும் நம்பிக்கை வந்துடுச்சி போல.

சேடக்குடிகாடு, மருவத்தூர் கிராமங்களை மெயின் ரோடிலேயே கடந்தோம். பொன்பரப்பிக்கு முன்பாக சிறுகளத்தூர் செல்ல திருப்பினோம். சிறுகளத்தூரில் சந்துபொந்துகள் வழியாக செல்ல வேண்டிய நிலை. சர்வசாதாரணமாக பைக் செல்ல ஆரம்பித்தது. 


                         

உச்சி வெயிலில் முந்திரிக்காடுகளின் வழியே புகுந்து புறப்பட்டன பைக்குகள். கீழமாளிகை, மருங்கூர், மாத்தூர் வழியாக கோட்டைக்காடு கிராமத்தை அடைந்த போது மதியம் 2.30. மதிய உணவு நேரம். அது கோட்டைக்காடு முனியப்பா கோவில். சுற்றிலும் இருந்த மர நிழலில் அமர்ந்தனர். உணவு வந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட 80 கிமீ பயணம். சாலையில் இருந்த புழுதி அனைத்தும் வந்தோர் உடையிலும், தலை முடியிலும். செம்மண் பூமி. என் உடை செக்கக்செவேல் என ஆகியிருந்தது. புதுத் துண்டை தண்ணீரில் நனைத்து தலையை துடைத்தேன், துண்டு சிகப்பு நிறமானது. நீரில் அலசி முகம் துடைத்தேன். மீண்டும் சிகப்பானது.

அந்தக் கோவில் புகழ் வாய்ந்தது. முனியப்பா பலருக்கும் குலதெய்வம். அப்போது தான் ஒரு குடும்பம் படையல் போட்டிருந்தனர். எங்கள் முகத்தைப் "பார்த்து" பிரசாதம் கொடுத்தனர். புளிசாதம், தயிர்சாதம். திருப்தியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், பிரசாதம் கொடுத்தவரை கூப்பிட்டு அறிமுகப்படுத்தினார்கள்.

"இவர் தான் எங்க எம்.எல்.ஏ". சோற்றுக் கையோடு வணக்கம் வைத்தேன். அவர் மகிழ்ச்சியோடு, "நாங்களும் கழகம் தாங்க, கள்ளக்குறிச்சி" என்றார். வயிறார நன்றி சொன்னேன். உணவோடு பயணத்தை நிறைவு செய்தேன். 19.04.2014 ஆண்டிமடம் பேரணி.

முதல் பயணத்தில் சிறப்பாக பைக் ஓட்டியதற்கு (பெரிய?)பரிசோடு காத்திருந்தார்கள்.......(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக