பிரபலமான இடுகைகள்

புதன், 16 டிசம்பர், 2015

காலம் எல்லாம் களங்கம்

அடுத்தவர் சிரமத்தில் இருக்கும் போது தானாக சென்று உதவுவது தான் மனிதாபிமானம். அப்படி உதவ மறந்து நிற்பவன் மனிதன் அல்ல, மரம். மனிதனே இப்படி என்றால், ஒரு இயக்கம் உதவுவதையே கடமையாகக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பேரழிவில் தனிமனிதர்களும் இயக்கங்களும் தங்கள் கடமையை சிறப்பாக இன்னும் ஆற்றிக் கொண்டிருப்பதை நாடறியும். தனி மனிதர்களின் பங்கே கூடுதல். மழை வலுத்து, வெள்ளம் பெருத்து சென்னை மூழ்கிய போது யாரும் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கவில்லை, யாரும் உதவச் சொல்லி அறிக்கை விடவுமில்லை.

ஆனால் அடுத்த நொடியே எல்லோரும் களத்தில் குதித்து விட்டார்கள். அவரவரால் முடிந்த உதவியை செய்தார்கள். தண்ணீரில் மூழ்கிய முதல்தளத்துக்காரர்களை, இரண்டாம் தளத்துக்காரர்கள் தங்கள் வீட்டில் தங்க வைத்தார்கள்.

பக்கத்து வீட்டுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுத்தார்கள். பால்பாக்கெட் வாங்கி, தெரு முழுதும் கொடுத்தார்கள். நீரில் தத்தளித்த முதியவர்களை மேட்டுக்கு தூக்கி வந்து விட்டார்கள். அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருப்போர், வீடிழந்தவர்களுக்கு உதவி செய்தார்கள். குப்பத்து மனிதர்கள் தான் மாடிகளில் சிக்கியோரை வெளிக் கொணர்ந்தார்கள்.

மீனவ நண்பர்கள் தான் செல்வந்தர்களை படகுக் கொண்டு மீட்டார்கள். பார வண்டி இழுப்பவர்கள், ஆட்டோக்காரர்கள், அய்.டியில் வேலைப் பார்ப்பவர்கள், அரசு வேலை பார்ப்பவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லோரும் முடிந்த வரை உதவினார்கள். பாகுபாடு, பாரபட்சம் என்பது இல்லவே இல்லை.

இஸ்லாமிய இயக்கத் தோழர்களின் பணியை எல்லோரும் பாராட்டினார்கள். களத்தில் நின்று கரம் கொடுத்தார்கள். பள்ளிவாசல்கள், சர்ச்'கள்  திறந்து விடப்பட்டன, பாதிக்கப்பட்டோர் தங்குவதற்கு. இந்து இயக்கத் தோழர்கள் பணிகளும் நடைபெற்றது.

ஜெயின் சங்கப் பணி அளப்பரியது. வெளி நாடு வாழ் தமிழர்கள் தாய்மண்ணிற்கு தங்கள் பங்களிப்பை அனுப்பினார்கள். மும்பை பாலியல் தொழிலாளர்கள் நிவாரண நிதி அனுப்பியது மனதை உருக்கும் செய்தி. எதிரி மாநிலமாக பார்க்கப்படும் கர்நாடக அரசும், மக்களும் போட்டிப் போட்டுக் கொண்டு உதவினர்.

கடலூரில் தமிழகம் எங்குமிருந்தும்  பல்வேறு கல்வி நிறுவனங்கள், வியாபாரிகள் சங்கம், அமைப்புகள் என உதவிப் பொருள் வாகனங்களோடு திரிந்ததை கண்கூடாக பார்த்தேன். அள்ளி, அள்ளி வழங்கினார்கள்.

அரசியல் கட்சிகள் உதவிகள் புரிந்தார்கள். திமுக தோழர்களால் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வந்தது. கொளத்தூர் தொகுதியில் அணையா அடுப்பில் உணவு தயாராகிக் கொண்டே இருந்தது. பா.ஜ.க, காங்கிரஸ், தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் கட்சி வரை தங்களால் முடிந்தப் பணியை செய்தார்கள்.

இவர்களைத் தாண்டி ஒரு இயக்கத்திற்கு கூடுதல் பொறுப்பு உண்டு, கடமை உண்டு, மக்கள் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தை வழங்கி இருப்பதால்.

ஆனால்  அந்த இயக்கம் மட்டும் களம் இறங்கவே இல்லை. தமிழகத்தின் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் என்று மார்தட்டிக் கொள்ளும் இயக்கம். தங்கள் தலைமைக்கு ஒரு இன்னல் என்றால் கோயில் கோயிலாக வழிபாடு நடத்தும் இயக்கம். 5000 பேரை பால் குடம் தூக்க வைக்கும் சக்தியுள்ள இயக்கம். தலைமைக்கு பிறந்தநாள் என்றால் பிரியாணி மேளா நடத்தும் இயக்கம். அந்த இயக்கம் மாத்திரம் இயங்கவேயில்லை.

அதற்கு அதன் தொண்டர்களை குறை சொல்ல முடியாது. தலைமை தான் காரணம். அந்தத் தொண்டர்களின் ஒவ்வொரு அமையும் தலைமையின் கண்ணசைவிலேயே நடந்து பழகி விட்டது. வழிகாட்டுதல் இல்லாமல் நிலை குலைந்து விட்டார்கள்.

இதன் மூலம் காலத்துக்கும் மறையா  களங்கத்தை உண்டாக்கி விட்டார். எந்த மக்கள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவை அள்ளி வழங்கினார்களோ, அவர்களின் கஷ்ட நேரத்தில் கைகழுவியது மன்னிக்க முடியாதக் குற்றம்.

நிரந்தரப் பொதுச்செயலாளர் என தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்ற அ.தி.மு. தொண்டனுக்கு, வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்.  மற்றவர்கள் வந்து உதவும் போது, ஆளுகின்ற இயக்கம் நாம் இப்படி ஆகி விட்டோமே என்று மறுகுகிறார்கள்.

டயர் நனையாமல் தன் தொகுதியில் மாத்திரம் வெள்ளம் பார்வையிட்டவர், பிரதமர் வருகிறார் என்றவுடன் ஹெலிகாப்டரில் அரை வட்டம் அடித்தவர், கடைசியாக வாட்ஸ் அப்பில் பாவ மன்னிப்பு கேட்டது தான் தன் தொண்டர்களுக்கு கொடுத்த உச்சபட்ச தண்டனை.

அம்மாவின் கருணை உரையைக் கேட்டு அந்தத் தொண்டர்களால் புளகாங்கிதப் படவும் முடியவில்லை. பகிரவும் முடியவில்லை.

# கால வெள்ளத்தாலும் அடித்து செல்ல முடியா கறை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக