பிரபலமான இடுகைகள்

திங்கள், 14 டிசம்பர், 2015

கடலூருக்கு கரம் நீட்டுவோம்

அந்த ஊர் தீவு போலவே இருக்கிறது. ஆமாம், மெயின் ரோட்டில் இருந்து போகும் பாதையே பயமுறுத்துகிறது. சிங்கிள் ரோட். இன்னொரு வாகனம் வந்தால், ஒதுங்க இடம் இல்லை. இரண்டு புறமும் வயல் வெளி தான்.

வழியெங்கும் சவுக்கு தோப்புகள். சவுக்கு கன்றுகள் சாய்ந்து கிடந்தன. சில இடங்களில் காற்றால் சாய்ந்த தோற்றம், சில இடங்களில் வெள்ள நீரால் சாய்க்கப்பட்ட தோற்றம். ஆமாம், இங்கு புயல் போல் காற்றும் வீசியிருக்கிறது, வெள்ளமாய் நீரும் விளையாண்டிருக்கிறது.

குறிஞ்சிப்பாடி தாண்டி கடலூர் சாலையில் வலப்புறம் திரும்புகிறது சாலை. நீண்டப் பயணம் போல் ஆயசமளிக்கிறது. 6 கிலோமீட்டர் இருக்கும். "வேறு சாலை இருக்கிறதா?". "இருக்கு. அதுவும் இது போல தான்". வழியில் ஓடை குறுக்கிடுகிறது. ஓடையில் ஆளுயரம் தாண்டி நீர் போன அடையாளம்.

போன ஊர் இடங்கொண்டான் பட்டு. ஆயிக்குப்பம் ஊராட்சி. குறிஞ்சிப்பாடி ஒன்றியம். சுற்றிலும் 1000 ஏக்கர் நிலத்தால் சூழப்பட்ட ஊர். உயர்நிலைப் பள்ளி என்றால், பக்கத்தில் 5 கி.மீ கடந்து குள்ளஞ்சாவடி தான். இல்லை என்றால் 10 கி.மீல் குறிஞ்சிப்பாடி.

பாம்புக்கடி, பிரசவம் என்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றாலும் இப்படி தான் கடக்க வேண்டும். காலை 7.00 மணிக்கு ஒரு பேருந்து வரும். மாலை 6.00 மணிக்கு அதே பேருந்து. இரண்டு நடை தான், வெளியே சென்று, வர. இல்லை என்றால் பைக் வைத்திருந்தால் உண்டு. அப்படி ஒரு ரிமோட் வில்லேஜ்.

இந்தக் கிராமத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் சகோதரர் பாபு. ஏற்கெனவே அறிமுகமான கழகத் தோழர் தான். அதைத் தாண்டி இந்த வெள்ள மீட்புப் பணியில் தன்னார்வத் தொண்டராக அவர் ஆற்றிய பணி ஈர்த்தது. அவர் மூலம் இந்தக் கிராமத்தை முடிவு செய்தோம்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்திய 'பெருமாள் ஏரியின்' கரையில் இருக்கும் கிராமம் தான் இது. பத்து கிலோமீட்டர் நீளக் கரை கொண்ட பெருமாள் ஏரியால், இந்தக் கிராமத்திற்கு துளியும் புண்ணியம் கிடையாது, பாதிப்பு தான். எதிர்புறம் இருக்கும் கிராமங்களுக்கு தான் பயன், பாசன வசதி.

ஆனால் வெள்ள பாதிப்பு இந்தக் கிராமத்திற்கு தான். வெள்ளமும் பாதித்தது, தீபாவளி போது வீசிய காற்றும் பாதித்தது. சுனாமியால் இந்த கிராமத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. தானே புயலால் இந்த ஊரின் தென்னை மரங்கள் வீழ்ந்தன. இப்போதும் இந்த கிராமம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்திற்கு உதவ சென்றது மன நிறைவளித்தது. இங்கேயும், இதை ஒட்டி இருக்கும் கிராமங்களிலும் தான் நேற்று  பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினோம்.

# கடலூருக்கு கரம் நீட்டுவோம் !
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக