பிரபலமான இடுகைகள்

சனி, 16 ஜூலை, 2016

அரியலூர் புத்தகத் திருவிழா

இந்த வருடம் போக இயலாதது வருத்தமாக போயிற்று, சென்னை புத்தகக் காட்சிக்கு. பல வருடங்களாக சென்று, புத்தகங்கள் வாங்கிய கைக்கு கொஞ்சம் அரிப்பு தான். "இவ்ளோ புத்தகம் வாங்கி அடுக்கறீங்க. படிச்சு முடிக்கற மாதிரியும் தெரியல. அதுக்குள்ள அடுத்த வருஷம் வாங்க ரெடியாகறீங்க. சரி, பரவாயில்ல புத்தகம் தானே".

சென்னை புத்தகக் காட்சிக்கு போக முடியாத வருத்தத்தை, அரியலூர் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் தீர்த்துக் கொள்ள வேண்டியது தான். கடந்த ஆண்டின் அரியலூர் புத்தகத் திருவிழாவில் "மக்களோடு நான்" நூலை வெளியிட்டு தான் படைப்பாளியாக ஞானஸ்நானம் பெற்றேன். அதனால் புத்தகத் திருவிழா என்றும் மனதில் நிற்கும்.

இந்த ஆண்டும் நூல் வெளியீடு உண்டா? என்று கேள்விகள். நூல்களுக்கான சங்கதிகள் தயார். ஆனால் தேர்தலுக்கு பிறகு கிடைத்த இடைவெளி, நூலாக வடிவம் கொடுக்க போதுமானதாக இல்லை. அடுத்த ஆண்டுக்குள் தயாராக வேண்டும். நூல் வெளியீடு கிட்டத்தட்ட ஒரு பிரசவம் போலவே, வலியும், மகிழ்வும். ஆனால் எழுதுவதும், பகிர்வதும் நம்மை இலேசாக்குகின்றன.

எழுதுவது போலவே, புத்தகம் படிப்பது ஒரு சுகானுபவம். நமக்கு பிடித்த சப்ஜெக்ட் என்றால் லயித்துப் போக வைக்கும். புத்தகத்தில் ஈர்ப்பு இல்லாதவர்களை கூட, கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நூலை கொடுத்து படிக்க செய்தால் ஒன்றி விடுவார்கள். முதல் சில பக்கங்களை படித்த உடனே உள் வாங்கி விடும். அவர்கள் மூழ்கிப் போவார்கள்.

எனவே எந்த நிகழ்விற்கும் ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தோம் என்றால், மற்றவர்களை படிக்க தூண்டும். அது அவர்களை பண்படுத்த நம்மாலான பணி என திருப்தி அடையலாம். தமிழுக்கும் நம்மாலான சேவை. புத்தகமும் அவர்கள் வீட்டு அலமாரியில் இடம் பிடித்து, நம்மை எப்போதும் அவர்கள் மனதில் நிறுத்தும்.

இந்த தேர்தலுக்கு பிறகு எனக்கு பத்துக்கும் மேற்பட்ட நூல்கள், பல்வேறு நிகழ்வுகளில் பரிசாகக் கொடுக்கப் பட்டுள்ளன. தோல்வியில் இருந்து மீட்கும் விதமாக, போராட்ட உணர்வை தூண்டும் விதமாக நூல்கள். "முள்ளி வாய்க்கால்", "துரோகச் சுவடுகள்", "நான் பார்த்த அரசியல்", "உன்னால் முடியும்", "சிம்மாசன சீக்ரெட்". புத்தகத்தை படித்து தேறுகிறேனோ இல்லையோ, தலைப்புகளே தனி தெம்பு தந்தன.

அரியலூர் புத்தகத் திருவிழாவை முன்னெடுத்து நடத்துபவர்கள் எல்லோரும் மூத்தவர்கள். "ரிட்டயர் ஆன ஆளுங்களுக்கு வேற வேலை இல்லையா ?" இதெல்லாம் நடக்கறத வேலையா ?" என்று கிண்டல் அடித்தவர்களுக்கு, கடந்த ஆண்டு நிகழ்வின் வெற்றி பதில் சொல்லியது. இந்த ஆண்டும் இதோ நிகழ்வு துவங்கி விட்டது.

செல்வ வளம் கொழிக்கும் பகுதியல்ல, பெரிய ஆட்களின் ஆதரவில்லை. ஆனால் அதற்காக "தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு" கலங்கி நின்று விடவில்லை. இந்த அமைப்பு தான், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்தோடு இணைந்து நிகழ்வை நடத்துபவர்கள். எமது 'பெரியார் அறிவு மய்யம்' இந்த ஆண்டும் சுவரொட்டி மூலம் நிகழ்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி செய்துள்ளது.

ஜூலை 15 முதல் 24 வரை அரியலூரில் நடைபெறுகிறது இரண்டாம் புத்தகத் திருவிழா. தினம் மாலை கருத்தரங்குகளும் உண்டு. அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர் !

# புரட்டுக புத்தகத்தை ! விரட்டுக அறியாமையை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக