பிரபலமான இடுகைகள்

புதன், 15 மார்ச், 2017

'படுகொலை'க்கழங்கள் !

'படுகொலை'க்கழகங்கள் ஆகிக் கொண்டிருக்கின்றன பல்கலைக்கழகங்கள். அதில் குறிப்பாக தலைநகர் டெல்லி பல்கலைக்கழகங்கள். ஏற்கனவே ஹைதரபாத் பல்கலைக்கழகம் ஒரு உயிரை பலி வாங்கியது. அது ரோகித் வெமுலாவின் உயிர். அவர் ஓர் தலித் மாணவர். தன் தோழர்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்க 'அம்பேத்கர் மாணவர்கள் சங்கம்' என்ற அமைப்பை துவக்கினார். இது ஒழுக்கக் கேடானது என பலகலைக்கழகம் கருதியது. அவருக்கு வழங்கப்பட்ட தகுதி உதவித்தொகை ரூ 25,000 உடனே நிறுத்தப்பட்டது.

அகில பாரதிய வித்ய பரிஷத் ( ABVP), பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு புகார் கடிதம் எழுதியது. அவர் அந்தக் கடிதத்தை, துணை வேந்தருக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். அவ்வளவு தான், உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது "நீக்கம்". நீக்கப்பட்டதோடு மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றப் பட்டார் ரோகித். சஸ்பெண்ட் நடவடிக்கை ரோகித் வெமுலா மனதை நசுக்கியது. மன அழுத்தம் கொடுக்க நினைத்த அதிகார வர்க்கம் வெற்றிப் பெற்றது, நியாயம் தோற்றுப் போனது. 2016 ஜனவரி 17.  ரோகித் தற்கொலை செய்து கொண்டார்.

ரோகித்தின் நண்பர் தான் நேற்று டெல்லியில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் முத்துகிருஷ்ணன். முத்து அப்போது ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் எம்.பில் ஆய்வுப் படிப்பில் இருந்தார். ரோகித் வெமுலா தற்'கொலை' இவரை பாதித்தது. அதற்கான போராட்டத்தில் பங்கேற்றார். ரோகித்தின் தாயாரோடு போராட்டத்தில் உடனிருந்தார்.

பிறகு முத்துக்கிருஷ்ணனுக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இங்கு வந்து சேர்கிறார். டெல்லி கனவுகள் அவரை இங்கு கொண்டு வந்து நிறுத்தியது. அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவதும் அவரது சிந்தனையில் இருந்தது. அதனாலும் டெல்லி. ஆனால் டெல்லி அவர் நினைத்தது போல் இல்லை. டெல்லிப் பல்கலைக்கழகங்கள் அதற்கு முன் சுதந்திர பூமி. ஆனால் கடந்த சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது.

கடந்த மார்ச் மாதம் டெல்லிப் பல்கலைக்கழகங்களின் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. டெல்லி பல்கலைக்கழகத்தின் இடதுசாரி அமைப்புகளின் நிகழ்ச்சிக்கு இதே ஜே.என்.யூ மாணவர்களை அழைத்திருந்தனர். அதற்கு ஏபிவிபி எதிர்ப்பு தெரிவித்தது. "தேசவிரோதிகளை சுட்டுத் தள்ளுங்கள்" என்ற கோஷம் தான் ஏபிவிபியின் துருப்பு சீட்டு. ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிப்பு தெரிவித்தனர்.

ஏபிவிபி கூட்டம், அகில இந்திய மாணவர் சங்க உறுப்பினர்களை தாக்கியது. பத்திரிக்கையில் வந்த செய்திகளை முதல மறுத்த ஏபிவிபி, பிறகு தனது இரண்டு உறுப்பினர்களை நீக்கியது. ஏபிவிபியின் ஒப்புதல் வாக்குமூலம் அது. இதற்கிடையில் 'குர்மெஹர் கவுர்' என்ற மாணவியை மிரட்டியது தான், ஏபிவிபியின் முகத்திரையை கிழித்தது. குர்மெஹர் ஏபிவிபியின் நடவடிக்கைகளை எதிர்த்தார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏபிவிபி. எப்படி ? "உன்னை வன்புணர்வு செய்வோம். உன்னை கொல்வோம்". நினைத்துப் பார்க்க முடியாத மிரட்டல். ஆனால் குர்மெஹர் அஞ்சவில்லை. ஒரு அட்டையை ஏந்தி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில் இருந்த வாசகம் நெத்தியடி. "I am a student from Delhi University. I am not afraid of ABVP. I am not alone".

ஏபிவிபி என்பது பா.ஜ.கவின் மாணவர் அமைப்பு. குட்டி இவ்வளவு பாய்ந்தால் தாயும் பாய வேண்டுமல்லவா? "குர்மெஹர் தேசவிரோதி. பாகிஸ்தான் ஆதரவாளர். நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்" சொன்னவர் அனில் விஜய். அவர் ஒரு பா.ஜ.க அமைச்சர். இதில் கொடுமை குமெஹரின் தந்தை மன்தீப்சிங் ராணுவத்தில் பணிபுரிந்த போது, காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர். தேசத்திற்காக உயிரை அளித்தவரின் மகளைத் தான் 'தேச துரோகி' என்றார்கள் பா.ஜ.கவினர்.

இப்படியாக டெல்லியில் உள்ள பல்கலைக்கழகங்களில் சுதந்திரத்தின் குரல் ஏபிவிபி வகையறவால் நெரிக்கப்பட்டது. இன்னொருபுறம் உயர்சாதி அல்லாத மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப் பட்டார்கள். அவர்களில் ஒருவர் தான் நமது முத்துக்கிருஷ்ணன். முத்துக்கிருஷ்ணனின் முகநூல் பதிவில் அவரது அனுபவம் வெளிப்பட்டது.

" There is no Equality in M.phil/phd Admission, there is no equalitiy in Viva – voce, there is only denial of equality, denying prof. Sukhadeo  thorat recommendation,  denying Students protest places in Ad – block, denying the education of the Marginal’s. When Equality is denied everything is denied".

எம்.பில், பி.எச்டி இடம் அளிப்பதில் சமத்துவம் இல்லை. வாய்மொழி தேர்வில் சமத்துவம் இல்லை. பேராசிரியர் சுக்தேவ் முன்மொழிவுகளுக்கு மறுப்பு, மாணவர் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு. ஒதுக்கப்பட்டவர்களுக்கான கல்வி மறுப்பு. சமத்துவம் மறுக்கப்பட்டால் எல்லாம் மறுக்கப்படுவதாக அர்த்தம். இது தான் முத்து பதிந்ததின் அர்த்தம்.

மிக அழுத்தமாக தன் உணர்வுகளை பதிவு செய்துள்ளார் முத்து. தலித் என்ற காரணத்தால்,  உரிமை மறுக்கப்பட்டது தான் அவர் மன அழுத்தத்திற்கு காரணம். அது உயர்சாதி ஆசிரியர் வட்டத்தின் கைங்கர்யம். இவர்களது ஆட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான். இவர்களில் சிலர் ஏபிவிபியின் நிர்வாகிகள்.

டெல்லியை பொறுத்தவரை உயர்சாதியை தவிர தலித், பிற்பட்டோர் அனைவரும் ஒன்று தான். ஒரே  நடவடிக்கை தான், அது தவிர்ப்பு, ஒதுக்கித் தள்ளுதல்.

கடந்த ஆண்டு திருப்பூர் மாணவர் சரவணன் டெல்லியில் உயிரிழந்தார். மருத்துவப் படிப்பை தமிழகத்தில் முடித்தவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். மர்மமாக மரணமடைந்தார் டெல்லியில். இன்னும் உண்மை வெளி வரவில்லை.

முத்துக்கிருஷ்ணன் மரணம் கொலையா, தற்கொலையா என்ற கேள்வி எழுந்துள்ளது இப்போது. தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், அதுவும் கொலை தான்.

ஒரு தமிழனின் உயிர் இந்தியாவின் தலைநகரில் கொடூரமாக பறிக்கப்பட்டுள்ளது. தமிழன் என்பதைக் கூட விடுங்கள். மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவனுக்காக  மத்திய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. வாய் திறக்க வைப்போம்.

# முத்துகிருஷ்ணன்களை வாழ  விடு டெல்லியே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக