பிரபலமான இடுகைகள்

கத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஜூன், 2017

என்று தணியும் இந்த....

குவைத், எண்ணெய் வளத்தால் பொருளாதார வளமாக இருக்கும் ஒரு நாடு. 1990 ஆகஸ்ட் 2 அன்று ஈராக் படைகள் குவைத் நாட்டின் உள் நுழைந்தன. சுதந்திரத்திற்கு போராடும் புரட்சியாளர்களுக்கு ஆதரவான படையெடுப்பு என ஈராக் அறிவித்தது. ஆகஸ்ட் 4, "சுதந்திர குவைத்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 8, குவைத் ஈராக் நாட்டோடு இணைக்கப்பட்டது என்ற அறிவிப்பு வந்தது. ஆகஸ்ட் 28, குவைத் ஈராக்கின் ஓர் மாநிலம் என அறிவிக்கப்பட்டது.

அரபு நாடுகள் அல்லோகல்லோப்பட்டுப் போயின. இதன் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என பதறிப் போனார்கள். படையெடுப்புக்காகப் பயப்படவில்லை. படையெடுத்த மனிதரை கண்டு பயம். ஈராக்கின் தன்னிகரற்ற தலைவனாக முடிசூட்டிக் கொண்ட "சதாம் உசேனை" கண்டு தான் அந்த பயம். உலகின் வல்லாதிக்க நாடுகளின் பார்வையும் அந்தப் பக்கம் திரும்பியது.

அமெரிக்கா தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெச்.டபிள்யூ. புஷ், போர் தான் வழி என்றார்.

ஈராக் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டது. காரணம், பொருளாதார அரசியல். ஈராக் குவைத்தை கைப்பற்றியதற்கும், அமெரிக்கா குவைத்தை விடுவித்ததற்கும் காரணமும் அதே பொருளாதார அரசியல் தான். அதிலும் குறிப்பாக எண்ணெய் அரசியல். மத்தியகிழக்கு நாடுகளில் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெய் தான் கிட்டத்தட்ட உலக பொருளாதார சுழற்சிக்கான மைய அச்சு. எனவே அதை சுற்றி தான் உலக அரசியல்.

மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் முதலீடு செய்த உலகப் பெரு நிறுவனங்கள், சதாம் ஜுரத்தால் பீடிக்கப்பட்டன. அடுத்து சதாமால் "உலக எண்ணெய் விலை"க்கு பாதிப்பு வரும், அதனால் உலக பொருளாதாரத்திக்கு பாதிப்பு வரும் என ஆதிக்க நாடுகள் கவலை கொண்டன. குவைத்தின் பெரும் பணம் பிரிட்டன் நாட்டில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் குவைத்திற்கு 'தேள் கொட்டியது', பிரிட்டனிற்கு 'நெரி' கட்டியது. பெரு நிறுவனங்கள், ஆதிக்க நாடுகள், பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் கதறின.

உலக பாதுகாப்பு கவுன்சில் ஆதரவுடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் 1991 ஜனவரி 16ல் குவைத்தின் உள் நுழைந்தன. பிப்ரவரியில் சதாமின் ஈராக் படை வெளியேற்றப்பட்டது. அத்தோடு பிரச்சினையை விடவில்லை அமெரிக்கா. அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. ஈராக்கிடம் "அணு ஆயுதங்கள், ஆந்த்ராக்ஸ், விஷவாயு ஆயுதங்கள் குவிந்திருக்கின்றன" என அறிவித்தது.

1993ல் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து படிப்படியாக அமெரிக்கா ஈராக்கிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது. ஈராக் தீவிரவாதத் தாக்குதலுக்கு தயாராகிறது என ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவிற்கு தகவல் கொடுத்தார். எதிரிகளான இவர்கள் எண்ணெய் அரசியலில் மட்டும் ஓரணி. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போர் அறிவித்தார்.

போருக்கு முன்பாகவே ஈராக் கிட்டத்தட்ட தளர்ந்து போயிருந்தது. ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது ஐக்கிய நாடுகள் சபை. ஈராக்கிற்கு உணவுப் பொருட்கள் செல்ல முடியவில்லை. ஈராக்கால் பெட்ரோலியப் பொருட்களை விற்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஈராக் அடிபணிந்தது. 1996 ஆம் ஆண்டு "உணவுக்கு எண்ணெய்" திட்டத்திற்கு ஈராக் ஒப்புதளித்தது. ஆனாலும் அமெரிக்க விடவில்லை.

2003 மார்ச் 20, போர் துவங்கியது. அமெரிக்கப் படைகள் மெல்ல முன்னேறின,  அவர்களின் கை ஓங்கியது. சதாம் தலைமறைவானார். ஏப்ரல் 9ல் நெடிதுயர்ந்த சதாமின் சிலை கீழே தள்ளப்பட்டது. சதாமின் சகாப்தம் முடிந்ததற்கான குறியீடாக இது அமைந்தது.

அப்புறம் தான் எதிர் கிளைமாக்ஸ். எந்த ஆயுதங்கள் எல்லாம் குவிக்கப்பட்டிருக்கிறது என போர் தொடுத்தாற்களோ, அதன் பிளாஸ்டிக் மாடல்கள் கூட ஈராக்கில் இல்லை. இந்தப் போரின் நோக்கம் "எண்ணெய் அரசியல்" தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும்  வெட்கப்படவில்லை, அமெரிக்கா.

2017 ஜூன் 5.  ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பிற்கு கத்தார் ஆதரவு தருகிறது என சவுதி அரேபியா குரல் கொடுத்தது. இதற்கு ஐக்கிய அரேபிய குடியரசு, பஹ்ரைன், எகிப்து ஆகிய அரபு நாடுகள் சவுதி அரேபிய குரலுக்கு ஆதரவு தெரிவித்தன. இது என்ன புதிய பிரச்சினை என்ற கேள்வி எழுந்தது. பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் கத்தார் முன்னணியில் இருந்து வரும் நிலையில், இந்த நாடுகளின் குரலுக்கான வேறு அர்த்தம் என்ன என ஆராயப்பட்டது. கத்தார் மீது இந்த நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.

அப்போது தான் அமெரிக்க அதிபர் பெரியண்ணன் டிரம்ப் காட்சிக்கு வந்தார். "தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும்" என எச்சரித்தார்.

கத்தார் இன்றைய தேதிக்கு உலக அளவில் குறிப்பிடத்தக்க பணக்கார நாடு. ஆனால் சுண்டைக்காய் அளவு நாடு. நாட்டில் இருக்கும் மக்களில் முக்கால்வாசி பேர் வெளி நாட்டினர், வேலைக்காக வந்தவர்கள்.

"இந்தத் தடையால எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது" என கத்தார் அறிவித்தது. இன்னொரு ஈராக்கா என்ற பேச்சு வந்தது. ஆனால் சதாம் போல் நாங்கள் வீம்பு காட்டி ஏமாந்துவிட மாட்டோம் என கத்தாரின் அடுத்த  நடவடிக்கை காட்டி விட்டது.

ஜூன் 14 அன்று ஒரு அறிவிப்பு. அமெரிக்காவுக்கும் கத்தாருக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ரூபாய் 77,460 கோடி மதிப்பிலான எப்-15 ரக விமானங்கள் 72ஐ கத்தாருக்கு விற்க அமெரிக்காவின் ஒப்பந்தம் தான். அப்போது இரண்டு நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கை குறித்து விவாதித்தது தான் ஹைலைட்.

கத்தார், பொருளாதார அரசியலின் நுட்பம் உணர்ந்து அடி எடுத்து வைப்பதாகத் தோன்றுகிறது. பலத்தால் அடிக்காதே, பணத்தால் அடி.

# என்று தணியும் இந்த எண்ணெய் மோகம் !

செவ்வாய், 1 டிசம்பர், 2015

கத்தார் நினைவலைகள் 1

கத்தார் வர்றன்னு சொன்ன உடனே ஆரூர் பாலா என்னை புக் பண்ணினார். ஆமாம் புக்கிங். "அண்ணே, கத்தார் வந்தவுடன் என் கார்ல தான் ஏறனும், வரனும். இது தம்பியோட அன்புக் கட்டளை". நானும் அந்த எண்ணத்தோடு தான் இருந்தேன்.

கத்தாரில் இறங்கிய போது விடியற்காலை 03.15. கார் பார்க்கிங் வந்து குமார் நிசானில் ஏறியதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். இடையில் பாலா தன் காரைக் கண்ணால் காட்டினார். சிரித்துக் கொண்டே கடந்தேன். சிரித்ததற்கு காரணம் அவரது புக்கிங் தான்.

அடுத்த நாளும் கங்கைகொண்ட சோழபுரம்  குமார் கார் தான். இடையில் கல்லூரி நண்பன் ராஜவிஜயன் கார். இப்படியே கார்கள் கடந்தன. மறுநாள் காலை பாலா காரில் செல்வதாக திட்டம். காலையில் காத்திருந்தோம்.

குமார் வந்தார். "அண்ணா, பாலா வர கொஞ்சம் லேட்டாகும். நாம போகலாம்", என்றார். லெபனிஸ் உணவகம் சென்றோம். சாப்பிடும் போது, பாலா வந்து பார்த்து சென்றார். அப்புறம் தான் மியூசியம் சென்றோம்.

இப்படியே பாலா காரில் ஏற முடியாமல் நேரம் கடந்தது. ஆனால் பாலா காத்திருந்தார், நானும். ஆனால் இரண்டாம் நாளும் பாலா காரில் ஏற வாய்க்கவில்லை.

மூன்றாம் நாள் காலை அறையில் வந்து கூப்பிட்டதே பாலா தான். உடன் மதன்குமார். காலை உணவிற்கு அழைத்து செல்ல சிறுவாச்சூர் ரமேஷ் வந்து விட்டார். அவர் சாய்ஸ், சரவணபவன் உணவகம்.

அப்போது தான் பாலா காரில் ஏறும் வாய்ப்பு. இதுவும் நிசான் கார். கார் முக்கியமல்ல. காரின் வெளி அமைப்பு, உள் அமைப்பு முக்கியமல்ல.  உள்ளே டேஷ்போர்டில் இருக்கும் பல்வேறு உபகரணங்கள் பிரத்யோகமல்ல.

அங்கே செருகப்பட்டிருந்த "பென் டிரைவ்" தான் மேட்டர். ஆமாம், அந்தப் பென் டிரைவ்காக தான், அவர் கார் பயணத்திற்கு அழைத்தார். ஆனால் அவர் காரில் ஏறி பேசி முடிக்கும் முன் ஹோட்டலை அடைந்து விட்டோம்.

பென் டிரைவ் ஓப்பன் செய்யப்பட வாய்ப்பில்லாமல் போனது. சரவணபவனில் பொங்கல், இட்லி, வடை என அவர்கள் அன்பிற்கு சாப்பிட்டு முடித்தோம். அங்கிருந்து அரசரின் மியூசியம் செல்லும் பயணம்.

அது லாங் டிரைவ். இதற்கு பாலா கார் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம், நானும் பாலாவும். ஆனால் கார் ஏறும் போது, அவரே மதன் காரில் ஏற சொன்னார். "உங்கக் கார்",என்றேன். "இல்லண்ணா. மதன் கார்ல போய்டுவோம். லாங் டிரைவ்க்கு இவரது லேண்ட் குரூஸர் தான் பெஸ்ட்", என்றார் பாலா.

கண்ணில் ஒரு 'கார்' காலம் !

(தொடரும்)

 

சனி, 7 நவம்பர், 2015

கத்தாரில் அண்ணாமலையன்கள்

கத்தாரில் எங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பை, எனது  நண்பர் ராஜ விஜயன் ஏற்படுத்திக் கொடுத்தார்.  சீனியர் சாய்மணி அவர்கள் தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அருமையான நிகழ்வாக அமைந்தது.

சீனியர், ஜூனியர் என பலரை சந்தித்தேன். சீனியர் என்றால் எங்களை விட இருபது ஆண்டுகளுக்கு முன்பு படித்தோரும் இருந்தனர். ஒரிரு ஆண்டுகள் சீனியரும் இருந்தனர்.

ஜூனியர்களில் ஓரிரு ஆண்டுகள் பின்னால் படித்தவர்களும் இருந்தனர். பதினைந்து ஆண்டுகள் பின்னால் படித்த ஒருவரும் இருந்தார். அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்கள். எனக்கு அது ஒரு வித்தியாசமான சந்திப்பு.

திருமேனி, சாய்மணி, அப்துல் கபூர், ரவீந்திரன், பரத், முரளிமுருகன், கிருஷ்ணகுமார், கார்த்திக் ராமையா, சுந்தர்ராமன், சுதர்ஷன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில் திருமேனி மற்றும் சாய்மணி ஆகிய இருவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கத்தார் சென்று பணியில் சேர்ந்து, இன்று உயர்ந்த நிலையில் இருப்போர். நீண்ட பணி அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

அவர்களுக்கு சில வருடங்களுக்கு முன், அவர்களது நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான புதிய நபர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதே சமயத்தில் அவர்களோடு படித்த வகுப்பு நண்பர் இவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பிரிவின் அலுவலர்.

பல்கலைக்கழகம் சென்றிருக்கிறார்கள். நண்பரை சந்தித்திருக்கிறார்கள். "வேலைவாய்ப்பு வழங்குகிறோம். சில நிபந்தனைகள்", என்றிருக்கிறார்கள். அதனை பட்டியலிட்டிருக்கிறார்கள்.

"அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருக்கக் கூடாது. அரியர் வைத்து பாஸ் செய்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். முக்கியமாக, முதல் தலைமுறையாக வேலைக்கு வருபவர்களாக இருக்க வேண்டும்"

கேட்ட அவர்களது நண்பர் திகைத்திருக்கிறார். "ஏன் இப்படி?" எனக் கேட்டிருக்கிறார். "நிறைய மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கும். இவர்கள் தான் வேலைக்கு சிரமப்படக் கூடியவர்கள். முதல் தலைமுறை, ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உதவியதாகவும் இருக்கும்".

"நம் பல்கலைக்கழக மாணவர்கள் எந்த மதிப்பெண் எடுத்தவராக இருந்தாலும்,  எந்த சூழ்நிலையையும் கையாள்பவராக தேறி விடுவார்கள். பணியில் சேர்ந்து விட்டால் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். நாங்களும் படித்த பல்கலைக்கழகத்திற்கு நன்றிக்கடன் தீர்த்ததாகி விடும்".

சொன்னபடி தேர்ந்தெடுத்து கத்தாரில் பணியும் வழங்கி இருக்கிறார்கள். இப்போது அவர்களும் சிறப்பாக பணிபுரிந்து நல்ல நிலையில் இருப்பதை மகிழ்வோடு சொன்னார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த அளவு உதவினாலே சிறப்பு தான்.

தங்கள் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினராக தங்களை சந்தித்ததில் மகிழ்ந்து நினைவுப் பரிசு அளித்தனர்.

ரவீந்திரன் ஒரு சிறந்த ஓவியர். தோகாவின் அடையாளமாகத் திகழும் ஷூக் எனப்படும் பழமையான மார்க்கெட் பகுதியை, அழகான ஓவியமாக வரைந்து பரிசாக வழங்கினார்.

# கத்தாரில் இருப்பினும், அடையாளம் மாறாத அண்ணாமலையன்கள் !

வெள்ளி, 6 நவம்பர், 2015

கத்தார் பாடம்

பார்வையை இழுத்தது அந்தப் பரந்த, விரிந்த பூங்கா. பெரும் புல்வெளி. கார் கடக்கும் போது உற்று நோக்கினேன். கத்தார் இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் இருந்து வெளியில் வரும் போது பார்த்தேன்.

நான் பார்ப்பதை கவனித்து விட்டு, "இதில் இன்னொரு விசேஷம் இருக்கிறது"என்றார் பாலா. என்ன என்றேன். "பூங்காவின் கீழே வாகன நிறுத்தம் இருக்கிறது",என்றார். "பூங்காவுக்கு வர்றவங்க நிறுத்த தானே?" என்று கேட்டேன்.

"பூங்காவுக்கு வர்றவங்க மட்டுமில்ல, பின்புறம் இருக்கும் நகரப் பகுதிக்கு வர்றவங்க நிறுத்தவும். 3000 கார் நிறுத்தலாம்" என்றார். இருக்கும் இடத்தை சரியாக உபயோகிக்கும் திட்டம்.

எனக்கு சென்னை நினைவு வந்தது. தியாகராய நகருக்கு இது போல ஒரு ஏற்பாடு செய்தால், பாண்டி பஜார், உஸ்மான் ரோடு ஆகியவை நிம்மதியாய் மூச்சு விடும். சென்னை மட்டுமல்ல, பெரு நகரங்களில் கையாள வேண்டிய உத்தி.

அந்த முக்கிய சாலையின் இன்னொரு பக்கம் செல்லும் போது ஒரு மண் முகட்டைக் காட்டினார் மதன். "அண்ணா இதப் பாருங்க". கட்டிடப் பணிக்கு குவிக்கப்பட்டுள்ளதோ என நினைத்தேன்.

"இந்த சாலைக்கு கீழே மெட்ரோ ரயில் வேலை நடக்குது. அங்கே அள்ளப்படுகிற மண் அத்தனையையும் கன்வேயர் பெல்ட் மூலம் இங்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள். பிறகு வெளியேற்றுகிறார்கள்.

லாரிகள் மூலம் வெளிக் கொண்டு வந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்து மாசும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது", என்றார்.

செலவு பிடிக்கும் காரியம் என்றாலும் அதன் பலன் கூடுதல். இயற்கை வாயு இருப்பதால் கத்தார் அரசு இப்படி செலவு செய்கிறது என்று கொண்டால் கூட, நம் நாட்டிற்கு ஏற்ற செலவு பிடிக்காத குறைந்தத் தொழில்நுட்பங்களை முயற்சிக்கலாம்.

நாட்டின் கட்டமைப்புத் துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளை வளர்ந்த நாட்டின் பணிகளை பார்வையிட அனுப்ப வேண்டும். பழமை மனப்பான்மையில் இருந்து வெளிக் கொணர வேண்டும்.

அரசு பெரும் பொருட் செலவு செய்யும் அய்.அய்.டி போன்ற ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களை, அரசு துறைகளோடு இணைந்து செயல்பட வைத்து பயன்படுத்த வேண்டும்.

# முன்னேற்றத்திற்கு முயல்வோம் !

வியாழன், 5 நவம்பர், 2015

கத்தாரிடம் கற்போம்

மியூசியம் போகலாம், என அழைத்த உடன் நம்மூர் மியூசியம் நினைப்பில் போனேன். முன்புறத் தோற்றமே மிரட்டியது. கத்தாரில் இருக்கிறோம் என்பதை நினைவுப் படுத்தியது. பரந்தப் புல்வெளி. பெரிய, சிறப்பான வாகன நிறுத்த வசதி. அங்கிருந்து மேல் தளத்திற்கு, கண்ணாடிக் கூண்டு மின் தூக்கி.

அது Museum of Islamic Arts.

முன்புறம் செயற்கை நீர் ஊற்று, சாரலில் நனைக்கிறது.  தானியங்கி கண்ணாடிக் கதவு விலகியது. திரைப்படத்தில் வரும் அரபு ஷேக் உடையில் ஒருவர் நின்றார். கைக்காட்டினார். இரும்பு கண்டுபிடிப்பான், நுண் கூர்மைக் கருவி என பாதுகாப்பு சோதனைகள்.

முடிந்து நிமிர்ந்தால், அய்ந்து நட்சத்திர விடுதி தோற்றம். இரண்டு அடுக்கு மாடி அளவிற்கு உயர்ந்த கூரை. பிரம்மாண்டத் தோற்றம். மிகப் பெரிய கண்ணாடி சன்னல்களுக்கு பின்புறம் பரந்தக் கடல், வானுயர்ந்த கட்டிடங்கள். முன்புறம் வசதியான இருக்கைகள் போடப்பட்டு, சின்ன உணவு விடுதி. அருங்காட்சியகம் என்ற எண்ணமே ஏற்படவில்லை.

இரண்டு தளங்களில் தொன்மையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முழுதும் குளிரூட்டப்பட்ட கட்டிடம் அது. உள்ளே இருக்கும் பொருட்களும் சேதம் இல்லாமல் இருக்கும். காண்போரும் சோர்வு இல்லாமல் காணக் கூடிய வாய்ப்பு.

மிக நேர்த்தியாக எல்லாப் பொருட்களையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வாள் காட்சியில் இருந்தால், அதற்கு தனி வெளிச்ச வசதி, அது குறித்த வரலாறு என சிறப்பான ஏற்பாடு.

வரலாற்று ரீதியான வாள், கேடயம் போன்ற போர் கருவிகள், அரண்மனையில் பயன்படுத்தியப் பொருட்கள், அரசர் உடைகள், கம்பளங்கள், கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் பொருட்கள் என பழைய காலத்திற்கே கொண்டு செல்கின்றது.

கத்தார் கழகத் தோழர்களுடன், நாங்கள் பத்து பேர் சென்றிருந்தோம். ஒரு பள்ளியின் வரலாற்றுப் பிரிவு மாணவர்கள் குழு போல் ஒவ்வொரு பொருளாக பார்த்து மகிழ்ந்தோம். அது குறித்து விவாதித்தோம்.

ஒரு விஷயம் பெரும்பாலானோர் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு குதிரையும், அதன் மேலமர்ந்த வீரனும் தான். போர் வீரன் தரிக்கும் பாதுகாப்பு கவசம் இது வரை நாம் அறிந்தது. இங்கு வீரன் தரித்த கவசத்தை விட, குதிரைக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசம் கவனம் கவர்ந்தது.

இடையில் ஒதுங்கிடம் சென்றோம். கை, முகம் கழுவி விட்டுப் பார்த்தால், அங்கு ஒரு கைக்கடிகாரம் இருந்தது. உடன் வந்த குமார் அவசரமாக வெளியேறினார். அருங்காட்சியகப் பாதுகாவலரை அழைத்து வந்து, அதனைக் காட்டி, அவரிடம் ஒப்படைத்தப் பிறகே நகர்ந்தார். கத்தார் கட்டுப்பாடு புரிந்தது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் பத்து நூற்றாண்டு காலத்திற்கானவை. அவை பல நாட்டில் இருந்து வந்தவை. அதிலும் இந்தியாவில் இருந்து வந்தப் பொருட்கள் பல. ஆனால் கத்தார் வரலாறு என்று பார்த்தால் ஒரு இருநூறு ஆண்டுகளுக்கான தான்.

இது தான் மனதில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருநூறு ஆண்டு வரலாறு இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றால், நம் தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான சாட்சிகள் கண் முன் நிற்பவற்றைப் பாதுகாக்க, காட்சிப்படுத்த எவ்வளவு தவறி இருக்கிறோம்.

#கத்தாரிடம் கற்போம் ! 

புதன், 4 நவம்பர், 2015

கத்தார் வரலாறு

மியூசியம் போகலாம், என அழைத்த உடன் நம்மூர் மியூசியம் நினைப்பில் போனேன். முன்புறத் தோற்றமே மிரட்டியது. கத்தாரில் இருக்கிறோம் என்பதை நினைவுப் படுத்தியது. பரந்தப் புல்வெளி. பெரிய, சிறப்பான வாகன நிறுத்த வசதி. அங்கிருந்து மேல் தளத்திற்கு, கண்ணாடிக் கூண்டு மின் தூக்கி.

அது Museum of Islamic Arts.

முன்புறம் செயற்கை நீர் ஊற்று, சாரலில் நனைக்கிறது.  தானியங்கி கண்ணாடிக் கதவு விலகியது. திரைப்படத்தில் வரும் அரபு ஷேக் உடையில் ஒருவர் நின்றார். கைக்காட்டினார். இரும்பு கண்டுபிடிப்பான், நுண் கூர்மைக் கருவி என பாதுகாப்பு சோதனைகள்.

முடிந்து நிமிர்ந்தால், அய்ந்து நட்சத்திர விடுதி தோற்றம். இரண்டு அடுக்கு மாடி அளவிற்கு உயர்ந்த கூரை. பிரம்மாண்டத் தோற்றம். மிகப் பெரிய கண்ணாடி சன்னல்களுக்கு பின்புறம் பரந்தக் கடல், வானுயர்ந்த கட்டிடங்கள். முன்புறம் வசதியான இருக்கைகள் போடப்பட்டு, சின்ன உணவு விடுதி. அருங்காட்சியகம் என்ற எண்ணமே ஏற்படவில்லை.

இரண்டு தளங்களில் தொன்மையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முழுதும் குளிரூட்டப்பட்ட கட்டிடம் அது. உள்ளே இருக்கும் பொருட்களும் சேதம் இல்லாமல் இருக்கும். காண்போரும் சோர்வு இல்லாமல் காணக் கூடிய வாய்ப்பு.

மிக நேர்த்தியாக எல்லாப் பொருட்களையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வாள் காட்சியில் இருந்தால், அதற்கு தனி வெளிச்ச வசதி, அது குறித்த வரலாறு என சிறப்பான ஏற்பாடு.

வரலாற்று ரீதியான வாள், கேடயம் போன்ற போர் கருவிகள், அரண்மனையில் பயன்படுத்தியப் பொருட்கள், அரசர் உடைகள், கம்பளங்கள், கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் பொருட்கள் என பழைய காலத்திற்கே கொண்டு செல்கின்றது.

கத்தார் கழகத் தோழர்களுடன், நாங்கள் பத்து பேர் சென்றிருந்தோம். ஒரு பள்ளியின் வரலாற்றுப் பிரிவு மாணவர்கள் குழு போல் ஒவ்வொரு பொருளாக பார்த்து மகிழ்ந்தோம். அது குறித்து விவாதித்தோம்.

ஒரு விஷயம் பெரும்பாலானோர் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு குதிரையும், அதன் மேலமர்ந்த வீரனும் தான். போர் வீரன் தரிக்கும் பாதுகாப்பு கவசம் இது வரை நாம் அறிந்தது. இங்கு வீரன் தரித்த கவசத்தை விட, குதிரைக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசம் கவனம் கவர்ந்தது.

இடையில் ஒதுங்கிடம் சென்றோம். கை, முகம் கழுவி விட்டுப் பார்த்தால், அங்கு ஒரு கைக்கடிகாரம் இருந்தது. உடன் வந்த குமார் அவசரமாக வெளியேறினார். அருங்காட்சியகப் பாதுகாவலரை அழைத்து வந்து, அதனைக் காட்டி, அவரிடம் ஒப்படைத்தப் பிறகே நகர்ந்தார். கத்தார் கட்டுப்பாடு புரிந்தது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் பத்து நூற்றாண்டு காலத்திற்கானவை. அவை பல நாட்டில் இருந்து வந்தவை. அதிலும் இந்தியாவில் இருந்து வந்தப் பொருட்கள் பல. ஆனால் கத்தார் வரலாறு என்று பார்த்தால் ஒரு இருநூறு ஆண்டுகளுக்கான தான்.

இது தான் மனதில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருநூறு ஆண்டு வரலாறு இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றால், நம் தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான சாட்சிகள் கண் முன் நிற்பவற்றைப் பாதுகாக்க, காட்சிப்படுத்த எவ்வளவு தவறி இருக்கிறோம்.

#கத்தாரிடம் கற்போம் !