பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 23 ஜூன், 2017

கொச்சி மெட்ரோவும், பாகுபலியும்

கடந்த சில நாட்களாக மலையாள நண்பர்கள் இந்தத் தலைப்பில் பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.  எதேச்சையாக இரண்டு நாட்களுக்கு முன்பாக பாகுபலி-2 திரைப்படம் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதனால் இந்தத் தலைப்பு கொஞ்சம் கேரளாவை எட்டிப் பார்க்க வைத்தது. யூடியூபில் காட்சிகள் விரிந்தன.

கொச்சியில் மெட்ரோ ரயில் துவக்க விழா ஜூன் 17ம் தேதி நடைபெற்றது. மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் திட்டத்தை துவக்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை பிரதமர் துவக்கி வைப்பது மரபு. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதற்கு முன்பாக நடந்த சில நிகழ்வுகள் தான் சர்ச்சையாகி இருக்கின்றன.

பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால், யார் யார் கலந்து கொள்ள வேண்டுமென்ற பட்டியலை, 14 பெயர்களோடு, மாநில அரசு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறது. அதில் சில பெயர்களை நீக்கி பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. உள்ளுர் சட்டமன்ற உறுப்பினர், மேயர் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. பணி நடக்கும் போது, உள்ளூர் பிரச்சினையை தீர்க்கக் கூடியவர்கள் அவர்கள் தான்.

இதை விட இன்னும் சில பெயர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையானது. கொச்சி மெட்ரோ திட்டத்தை 2012ல் துவக்கி வைத்தவர் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங். அப்போது கேரளாவில் காங்கிரஸ் ஆளுங்கட்சி. அப்போது முதல்வர் உம்மன் சாண்டி, அவர் பெயரும் நீக்கப்பட்டிருந்தது. இப்போது காங்கிரஸ் எதிர்கட்சி. இப்போது எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. அவர் பெயரையும் நீக்கியிருந்தது பிரதமர் அலுவலகம். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்தை துவங்கியதே காங்கிரஸாக இருந்தாலும், இந்த எதிர்ப்பை அரசியல் நடவடிக்கை என கருத இடம் உண்டு.

இன்னொரு பெயர் நீக்கப்பட்டது தான் ஒட்டு மொத்த கொந்தளிப்புக்கு காரணமாக இருந்தது. அந்த பெயர் "சிரீதரன்". அவருக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு.  அது " மெட்ரோ மேன்". டெல்லி மெட்ரோ திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, குறிப்பிட்ட செலவை விடக் குறைவாக முடித்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றவர். அப்போது பத்திரிக்கைகள் அவருக்கு இந்த சிறப்புப் பெயரை வழங்கினார்கள்.

1990ல் அவர் ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் பணி சிறப்பை உணர்ந்து, புகழ்பெற்ற "கொங்கண் ரயில்வே" திட்டத்திற்கு அவரை ஒப்பந்த அடிப்படையில் தலைவர் ஆக்கியது. அதற்கு பிறகு தான் டெல்லி மெட்ரோ. அதன் பின் எங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றாலும் இவர் தான் பொறுப்பு. கொச்சி மெட்ரோவும் இவர் கைவண்ணமே. இப்போது இவருக்கு வயது 85. ஆனாலும் இவர் தேவை தொடர்கிறது.

கொச்சினில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவது மிகுந்த சிரமமானப் பணியாக இருந்தது. நில அமைப்பு, குறுகிய சாலைகள், தட்பவெப்பம் என பல இடர்பாடுகள் இருந்தாலும், இவரால் தான் திட்டம் நிறைவேறியது. இதனால் இவர் பெயர் இல்லை என்பது கொந்தளிக்க வைத்தது. இன்னொன்று, இவர் மண்ணின் மைந்தன். ஆமாம், இவர் கேரளாவை சேர்ந்தவர். எரியும் மாட்டுக்கறியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றியதாகியது.

மக்கள் எதிர்குரல் வலுத்தது. முகநூலும், ட்விட்டரும் அனல் தகித்தன. முதல்வர் பினராயி விஜயன், மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். ஏற்கனவே "பிரதமர் மோடி, கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர் வெங்கையா, முதல்வர் பினராயி விஜயன் " ஆகியோருக்கு மட்டுமே மேடையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எதிர்ப்பிற்கு பிறகு, இறங்கி வந்தது மத்திய அரசு.

திறப்பு விழா நாள் வந்தது. மோடியும் வந்தார். மென் நீலநிற பைஜாமா அணிந்து ஒய்யாரமாக வந்தார். திரும்பிய பக்கமெல்லாம் ரம்மியமாக கையசைத்தார். புதிய மெட்ரோ நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை நறுக்க நின்றார். வெங்கையாவும், பினராயியும் சிரீதரனை முன்னே அழைத்தார்கள். திரும்பிப் பார்த்து விட்டு ரிப்பனை நறுக்கினார் மோடி. முடித்து சம்பிரதாயமாக முதல்வருக்கும், சிரீதரனுக்கும் கை கொடுத்தார். புதிய மெட்ரோவில் ஏறினார்கள். 17 நிமிடப் பயணம். தன் பக்கம் திரும்பிய மோடியை முதல்வர் பினராயி சட்டை செய்யவில்லை. அமைதி நிலவியது ரயிலில். பிரதமர் அலுவலகமே வீடியோ வெளியிட்டுள்ளது. அடக்கமாக அமர்ந்திருந்தார் சிரீதரன்.

பாகுபலி-2 திரைப்படத்தில் எதிர்பாராத திருப்பமாக, மன்னராக பொறுப்பேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமரேந்திர பாகுபலியை ஒதுக்கி விட்டு, பல்வாள்தேவன் பொறுப்பேற்பார் என ராஜமாதா சிவகாமி அறிவித்துவிடுவார். யாருக்கும் அதில் விருப்பம் இருக்காது. மக்கள் மனம் கவர்ந்தவர் பாகுபலி தான். ஆனால் அறிவித்தவர் ராஜமாதாவாயிற்றே.

அரசனாக பதவியேற்பார் பல்வாள்தேவன். அவர் தந்தை கைத்தட்ட மெல்ல கரவொலி எழும்பி அடங்கும். மன்னனாக எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி சேனாதிபதியாக பதவியேற்க வருவான். அப்போதே வாழ்த்துக்குரல் எழ ஆரம்பிக்கும். "அமரேந்திர பாகுபலி என்னும் நான்" என சொன்னவுடன் அரங்கே அதிரும்.

மெட்ரோ விழாவில் மோடி மலையாளத்தில் தன் உரையை துவங்கினார், லேசான கரவொலி. அதன் பின் கொச்சி மெட்ரோவின் அருமை பெருமைகளை அடுக்கினார். அரங்கத்தில் அசைவில்லை. ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்து அமர்ந்தார். கையொலித்தார்கள் மக்கள்.

கொச்சி மெட்ரோ திட்டத்தின் நிர்வாக இயக்குநர் எலியாஸ் நன்றி கூற வந்தார். ஒவ்வொருவராக விளித்து நன்றி கூறினார். பிரதமருக்கு நன்றி கூறினார், கைத்தட்டல் எழுந்தமர்ந்தது. அடுத்து "சிரீதரன்" என்று உச்சரித்தார் எலியாஸ். எழுந்த கரவொலி அடங்கவில்லை. காத்திருந்து கரவொலி அடங்கிய பிறகு பேச்சை தொடந்தார் எலியாஸ். கேமராவை பிரதமர் பக்கம் திருப்பவில்லை.

அமரேந்திர பாகுபலி உறுதிமொழி எடுத்து முடித்த உடன் மக்கள் கரவொலி எழுப்புவார்கள், வீரர்கள் வேல்களை தரையில் தட்டுவார்கள், யானைகள் பிளிரும்,  தரை மெல்ல அதிரும், பொருட்கள் உருளும், மன்னனின் கொற்றக் கொடை சரியும்.

கொச்சி மேடையில் அது எதுவும் நடக்கவில்லை. ஆனால் கரவொலியிலேயே தட்டிக் காட்டிவிட்டார்கள் சேட்டன்களும், சேச்சிகளும்.

மெட்ரோவில் ரிலீஸான "பாகுபலி".

# மக்கள் தட்டத்தட்ட மகுடமும் சரியும்  !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக