பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

தமிழ்நாடு படும்பாடு !

சென்னை விமான நிலையம் சென்றடைந்தேன். வழக்கமான கூட்ட நெரிசல். முன்புறம் சீருடையில்லா காவல்துறையினர் இருந்தனர். அதில் ஒருவர் பார்த்த முகமாக இருந்தார். நான் அவரை கடக்கும் போது சிரித்தார். நான் சிரித்து நின்றேன். "என்ன சார், எப்ப முடியும்?". யோசித்தேன். " அரசாங்கம் தான் சார்". "இப்ப தான் ஆரம்பிச்சிருக்காங்க. பார்ப்போம் சார்" என்று சிரித்து நகர்ந்தேன்.

குடியேற்றத் துறையில் (இமிக்ரேஷன்) கொஞ்சம் கடுமையாகத் தான் நடந்து கொள்வார்கள். காரணம், வெளிநாடு செல்பவர்களில் சிலர் எல்லா தவறான வழியையும் கையாள்வார்கள். அவர்களிடம் கடுமை காட்டியாக வேண்டும்.  அதனால் எல்லோரிடமும் அந்த கடுமை தொடரும். ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் போதும், இதே போல கிடைத்த அனுபவங்கள் பல உண்டு.

அதையே எதிர்பார்த்து கடவுச்சீட்டை நீட்டினேன். வாங்கி பார்த்தார். "விசா" என்று கை நீட்டினார். கொடுத்தேன், வாங்கி பரிசோதித்தார். "என்ன விஷயமா போறீங்க?". " ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போறேங்க". "நீங்க என்ன செய்றீங்க?". கொஞ்சம் தயங்கி சொன்னேன்," அரசியல்வாதி". நிமிர்ந்துப் பார்த்தார். "என்னவா இருக்கிறீங்க சார்?".  "முன்னாள் எம்.எல்.ஏ சார்". " எந்தத் தொகுதிங்க?". "குன்னம் சார்".

" எந்தக் கட்சிங்க சார்?". "தி.மு.கங்க". கையில் இருந்த கடவுச்சீட்டு, நுழைகை அனுமதிச் சீட்டு எல்லாவற்றையும் கீழே வைத்தார். " அப்புறம் எப்ப தான் சார் ஆட்சியக் கவிழ்ப்பீங்க ?". இது சமீபகாலமாக வழக்கமாக சந்திக்கிற கேள்வி தான். இருந்தாலும் இப்போது வித்தியாசமான இடத்தில் இருந்து என்பதால் கொஞ்சம் திகைப்பு. "இல்ல சார். கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டா காலமெல்லாம் பேச்சாகும்னு தளபதி நினைக்கிறார்".

" மக்கள் அப்படி எதிர்பார்க்கல சார். எப்ப இந்த ஆட்சி முடியும்னு தான் பார்க்குறாங்க. இப்ப அவங்களா கவிழ்த்துப்பாங்கன்னு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு. நல்லது நடக்கட்டும் சார்". சொல்லி விட்டு கடவுச்சீட்டில் படக்கென்று முத்திரைக் குத்தினார். கடவுச்சீட்டை திருப்பிக் கொடுத்து போகலாம் என்று தலையசைத்தார். "கண் ஸ்கேன் சார்", என்றேன். முடிந்தது என்று தலையசைத்தார். நன்றி சொல்லி நகர்ந்தேன்.

விமானம் சரியான நேரத்திற்கு கிளம்பியது. தூக்கத்தோடு பயணம். அயல்தேசம். அறை சென்று, சிறிது ஓய்விற்கு பிறகு, தயாரானேன். உணவிற்கு பிறகு நிகழ்ச்சிக்கு கிளம்பினேன். சீருந்து பிடித்தேன். அது ஒரு பல்கலைக்கழக வளாகம். சிறப்பான கட்டமைப்பு வசதிகள் கொண்டிருக்கிறது. முதல் நாளில் இருந்து நிகழ்ச்சிகள் போய் கொண்டிருந்தன.

தமிழ் துறை சார்ந்த விழா. பல தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கூடியிருந்தனர். சிலருக்கு அறிமுகப்படுத்தப் பட்டேன். ஆர்வமான உரையாடல் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. ஒரு தமிழறிஞர் என்னைப் பார்த்து கையமர்த்தினார். "அதெல்லாம் இருக்கட்டும். என்ன தான் அய்யா நடக்குது. இந்தக் கொடுமை எல்லாம் எவ்வளவு நாள் தொடரும். சீக்கிரம் முடிக்க வழியில்லையா?".

சிரித்தேன். " சிரிக்காதீங்க. பதில் சொல்லுங்க". பழைய பதிலையே (கவிழ்ப்பு வேணாமே) சொன்னேன். அவர் சமாதானம் ஆகவில்லை. " சார், அரசியல்ல இதெல்லாம் செய்யல்லன்னா தான் தப்பு. பாமர மக்களுக்கு அவங்க தினப்படி வாழ்க்கைக்கு பிரச்சினை இருக்கக் கூடாது. அவ்வளவு தான். நியாயம், தர்மம் பேசறவங்க ஓட்டுப் போட வரமாட்டாங்க". ஒரு பிரசங்கமே நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிகள் ஆரம்பித்து நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் வந்திருந்தனர், பங்கேற்பாளர்கள். தேநீர் இடைவெளி. பதிப்பக உரிமையாளர் கேட்டார்,"முரசொலி பவள விழா சிறப்பா இருந்ததா?". "முதல் நாள் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாள் மாலை நிகழ்வு மாத்திரம் மழை குறுக்கீடு".

அப்போது ஒரு அயல்நாட்டு அன்பர் ஆரம்பித்தார்," என்னாச்சு உங்க தமிழ்நாட்டுக்கு?".

# அய்யா, ஆள விடுங்க. நான் தமிழ்நாடே இல்லிங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக