பிரபலமான இடுகைகள்

திங்கள், 8 டிசம்பர், 2014

சட்டசபையில் ரவுடித்தனம் செய்த அமைச்சர்….


           
இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரை ஒரு வாரம் நடத்தாமல் மூன்று நாட்களாக சுருக்கியதன் நோக்கமே பிரதான எதிர்கட்சிகளை பேச விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான், அதிலும் குறிப்பாக திமுக-வை.

கூட்டத் தொடரின் கடைசி நாள், துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் இறுதியாக தளபதியே பேசுகிறார் என்றால் விடுவார்களா. இன்று அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

2.00 மணிக்கு சபையில் கில்லட்டின் நேரம். அப்படி என்றால் அந்த நேரத்திற்குள் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இது மரபு. இதை கணக்கு வைத்து ஆளுங்கட்சியின் ஒத்து நாயனங்களான செ.கு.தமிழரசன், தனியரசு போன்றோர் அதிக நேரம் எடுத்துக் கொள்ள சபாநாயகர் அனுமதித்தார்.

இதனால் திமுகவுக்கான வாய்ப்பு நண்பகல் 1.10-க்கு தான் வந்தது. தளபதி பேச எழுந்தார்கள். சபாநாயகரும், செயலாளரும் பார்த்துக் கொண்டனர், தயார் என்பது போல. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கவனிக்கத் தொடங்கினர். அமைச்சர்கள் தயாராகினர்.

“இது இரண்டாவது துணை நிலை நிலை அறிக்கை. இதில் ஒதுக்கப்பட்ட நிதி மூலமே அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. 110 விதியின் கீழ் இது வரை நீங்கள் அறிவித்துள்ள திட்டங்களுக்கு ரூபாய் 31,208 கோடி ஒதுக்கியிருக்க வேண்டும்.

ஆனால் இந்த துணை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கிற தொகை வெறும் 1,500 கோடி மட்டுமே. மற்ற அறிவிப்புகளுக்கான தொகை ஒதுக்கப்படவில்லையா ?” என்று தளபதி அவர்கள் உரையாற்றும் போதே முதல்வர் ஓ.பி.எஸ் எழுந்தார். அப்போது மணி 1.13.

கை நிறைய கத்தையாக காகிதங்கள். அடையாளத்திற்காக ஆங்காங்கே ஃபிளாக் வைக்கப்பட்டிருந்தது. அதில் புரட்டி, புரட்டி ஒரு பக்கத்திற்கு வந்தார் ஓ.பி.எஸ். படிக்க ஆரம்பித்தார். 04.12.2014 அன்று 110 விதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிலைக் குறித்து எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த போது வாசித்தவற்றையே மீண்டும் வாசித்தார்.

அந்த அறிக்கையும் ஒதுக்கப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இல்லாமல் வெறும் திட்ட விவரிப்பு தான். அப்படியே 110 அறிக்கைகளின் தொகுப்பு.

எதிர்கட்சி உறுப்பினர்கள் “அண்ணா முடியல. போதும்ணா” என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஒரே சலசலப்பாக, அவை முழுதும் சத்தமாக இருந்தது.

ஓ.பி.எஸ் “இப்படி தான் அன்று நான் இந்த அறிக்கையை படித்த போதும் திமுக உறுப்பினர்கள், படிக்க வேண்டாம் அவையில் தாக்கல் செய்யுங்கள். நாங்கள் படித்துக் கொள்கிறோம் என்று சொன்னீர்கள். ஆனால் நான் அப்போதே சொன்னேன், நீங்கள் படிக்க மாட்டீர்கள். அதனால் நான் பேசுவதைக் கேளுங்கள் என்று”

ஒரு இடைவெளி கொடுத்து, “நான் சொன்னது போல திமுக உறுப்பினர்கள் படிப்பதுமில்லை; சொல்வதை புரிந்து கொள்வதுமில்லை” என்று நக்கலானக் குரலில் சொல்லிவிட்டு ஒரு ஏளனப் பார்வை பார்த்தார்.

பிள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு முளைச்சது போல இருந்தது.

அண்ணன் துரைமுருகன் கடும் கோபமுற்றார். எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “எப்படி படிப்பதில்லை, புரிந்து கொள்வதில்லை என்று சொல்வது ?” என்று குரலெழுப்பினார். ஆனால் சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. கோபமிருந்தாலும் நாங்கள், தளபதி அவர்கள் உரையாற்ற வேண்டுமென்பதற்காக அமைதி காத்தோம்.

ஓ.பி.எஸ் தொடர்ந்து பேச ஆரம்பித்தவர் “மைனாரிட்டி திமுக ஆட்சி போல நாங்கள் இல்லை” என்றவுடன் தளபதி எழுந்து எதிப்பு தெரிவித்தார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். ஓ.பி.எஸ் தனது டிரேட்மார்க் சிரிப்போடு நின்றார். சபாநாயகர் தளபதி அவர்களை பேச அனுமதிக்கவில்லை.

தொடர்ந்த ஓ.பி.எஸ், “இத்தோடு முடிக்கிறேன். இனியும் கேள்வி கேட்டால் நானும் தொடருவேன்” என்று 110 குறித்து இனியும் பேச வேண்டாம் என மிரட்டுவது போல கூறிவிட்டு அமர்ந்தார். அப்போது நேரம் 1.28.

மூன்று நிமிடங்களே தளபதி அவர்கள் பேசியிருந்த நிலையில், பதில் சொல்கிறேன் என ஓ.பி.எஸ் 15 நிமிடங்களை, பேசி வீணடித்திருந்தார். தளபதி அவர்களை பேச விடாமல், அவரது நேரத்தை அபகரிப்பதே அவர்கள் நோக்கம். அதே போல சபாநாயகர் “உங்கள் நேரம் முடிகிறது” என சொல்ல, திமுக தரப்பு சூடு அதிகமானது. அதை உணர்ந்த சபாநாயகர் தளபதியை பேச அனுமதித்தார்.

மீண்டும் தளபதி அவர்கள் பேச எழுந்தார்கள். “மைனாரிட்டி ஆட்சி என்று குறிப்பிட்ட பினாமி முதல்வர்” என்றார்.

(இரண்டாம் நாளே, இது போல “மைனாரிட்டி திமுக ஆட்சி” என்று சொன்னதற்கு பதிலடியாக “பினாமி அதிமுக ஆட்சி” என்று தளபதி அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்த வார்த்தையை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். “இனி மைனாரிட்டி என்று சொன்னால் “பினாமி” என்று சொல்வோம்” என தளபதி எச்சரித்திருந்தார்கள்)

அவ்வளவு தான் அதிமுக ஒட்டு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று கூக்குரலிட்டார்கள். உடனே சபாநாயகர் “அவைக் குறிப்பிலிருந்து நீக்குகிறேன்” என சொல்லியும் அதிமுகவினர் உட்காராமல் தகராறு செய்தனர். சபாநாயகர் எழுந்து நின்று அவர்களை அமர செய்தார்.

கொந்தளித்த அமைச்சர் வைத்திலிங்கம்,”பினாமி முதல்வர் என்கிறார். அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர். அது தான் பினாமி ஆட்சி. மகள் டெல்லியில் “ என்னும் போதே திமுக உறுப்பினர்கள் எதிர் குரல் எழுப்பினோம்.

சபாநாயகரோ வைத்திலிங்கத்தைப் பார்த்து,”அந்த வார்த்தையை நீக்கி விட்டேன். நீங்கள் ஏன் பயன்படுத்துகிறீர்கள் ?” என பதற, வைத்தியோ அதைக் கண்டு கொள்ளாமல் பினாமி, பினாமி என்று கதறிக் கொண்டிருந்தார். சபாநாயகர் செய்வதறியாமல் முழித்தார்.

ஒரு கட்டத்தில் வைத்தி தளபதி அவர்களை நோக்கி விரலை ஆட்டி, அடித்து விடுவேன் என்பது போல சைகை புரிந்து ஆவேசமாக கத்த, எங்கள் பொறுமை எல்லை மீறியது. நாங்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க, வைத்தி வேட்டியை மடித்துகட்டி பாய்வது போல முன்னேற, நாங்கள் சபாநாயகரை பார்த்து “இது சரியா?” என்று கேட்டோம்.

ஆனால் சபாநாயகர் எழுந்து நின்று, எங்களை அமர சொல்லி ஆணையிட்டுக் கொண்டிருந்தார். அதிமுகவினர் ஓலமிட்டுக் கொண்டிருந்தனர், அவர்களை கண்டுக் கொள்ளவில்லை அவர்.

வைத்திலிங்கத்தை மற்ற அமைச்சர்கள் அமர வைத்தாலும் மீண்டும், மீண்டும் எழுந்து தளபதி அவர்களை நோக்கி ரவுடித்தனமாக கத்திக் கொண்டிருந்தார். திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி “ரவுடித்தனம் செய்யும் வைத்திலிங்கம் மீது நடவடிக்கை எடு” என கோஷம் எழுப்பினோம்.

அவரோ மீண்டும் எங்களை எச்சரிப்பதிலேயே குறியாக இருந்தார். வைத்திலிங்கம் பக்கமே திரும்பி பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் சபாநாயகரை நோக்கி முன்னேறினோம். வைத்திலிங்கம் கத்திக் கொண்டிக்க, பொறுமை இழந்த தளபதி அவர்கள், தன் மார்பை விரித்துக் காட்டி,”வந்து அடித்துப் பார்” என சொல்ல, சபாநாயகர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே போனோம். சபையின் நடுப்பகுதியை நோக்கி சென்றோம். தளபதி அவர்கள் எங்களை தடுத்து விட்டார். இன்னொரு வழியாக சபாநாயகர் இருக்கை அருகே சென்ற அன்பழகன், ஐ.பெரியசாமி ஆகியோர் சபாநாயகரிடம் நியாயம் கேட்டு வாதிட, சபாநாயகர் அதற்கு பதில் சொல்லாமல் “இடத்திற்கு போங்க, இடத்திற்கு போங்க” என்று கத்திக் கொண்டிருந்தார்.

கொறடா சக்கரபாணி எங்களை “இடத்துக்கு போய் உட்காருங்க, தளபதி தொடர்ந்து பேசி அவர்களுக்கு பதிலளிக்கட்டும்” என சொல்ல, நாங்களும் இருக்கைக்கு திரும்பினோம். அதைப் பார்த்த சபாநாயகர் தடாலென “திமுக உறுப்பினர்களை வெளியேற்றுகிறேன்” என்று உத்தரவிட்டார்.

வைத்திலிங்கத்தின் தரக்குறைவான நடவடிக்கையை கண்டிக்காத சபாநாயகர், திமுக உறுப்பினர்களின் நியாயக் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்கவில்லை. அவர்கள் நோக்கம் நிறைவேறியது, தளபதி அவர்களை சபையில் பேசவிடாமல் தடுத்து விட்டார்கள்.

110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் மக்களை ஏமாற்றுவதை புள்ளிவிபரங்களோடு தளபதி அவர்கள் அரசை தோலுரித்து விடுவார் என்பது தான் அவர்கள் பயம்.

நாங்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப் பட்டோம். சட்டசபை வளாகம் முழுதும் “ரவுடி வைத்திலிங்கத்தின் மீது நடவடிக்கை எடு” என்ற கோஷம் எதிரொலித்தது.

# பினாமி, ரவுடி, கண்மூடி மனிதர் கொண்ட சபை. வாழ்க ஜெ’னநாயகம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக