பிரபலமான இடுகைகள்

சனி, 13 ஆகஸ்ட், 2016

அம்மா சற்குண பாண்டியன்

67 வருடங்களாக ஓங்கி ஒலித்தக் குரல், இன்று அடங்கி விட்டது. 8 வயதிலேயே கழக மேடையில் ஒலிக்க ஆரம்பித்தக் குரல் அது. அடங்கும் வரையில் அயராமல் ஒலித்தது, கழகத்திற்காக. என்ன பிரதிபலன் என்று பாராமல் உழைத்தவர் அவர். கடைசி காலம் வரை கழகம் மட்டுமே உலகம் என்று வாழ்ந்து மறைந்து விட்டார்.

எட்டு வயதில் சின்னஞ்சிறு சிறுமியாகத் தான் அவர் அரசியலில் கால் எடுத்து வைத்தார். அதுவும் பாவாடை,சட்டை அணிந்த சிறுமியாக அவர் கூட்டத்திற்கு வந்தப் போது, வேடிக்கை பார்க்க வந்த சிறுமி என்று தான் நினைத்தார்கள் பார்வையாளர்கள். அவர் மேடை ஏறிய போது, எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

அந்த சிறுமி உயரத்திற்கு ஒலிவாங்கி (மைக்) எட்டவில்லை. ஒரு நாற்காலி மீது ஏற்றி நிற்க வைத்தார்கள். அவ்வளவு தான், பொங்கி எழுந்த கடலாக, வெடிக்கும் எரிமலையாக உணர்வுப்பூர்வமாக பேச கொள்கை ஆரம்பித்தார். அதுவரை அப்படி ஒரு பேச்சை அங்கு யாரும் கேட்டதில்லை. மெய்மறந்து போனார்கள் மக்கள்.

சிறுமியாக பள்ளிப் படிப்பை படித்ததை விட, திராவிடத்தைப் படித்தது தான் அதிகம். மூன்றாம் வகுப்பு தான் அப்போது அவர் படித்திருப்பார். தந்தையின் வழியில் கொள்கை உணர்வு பெற்றார். அப்போது ஆரம்பித்த அவரது கொள்கை முழக்கம் 75 வயதில் மறையும் வரை ஓயவில்லை. அந்த சிறுமி தான், மறைந்த அம்மா சற்குண பாண்டியன்.

கழக கொள்கை முழக்கப் "பேச்சாளராக", மகளிரணியின் தளகர்த்தராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழக அமைச்சராக, கழகத்தின் "துணைப் பொதுச் செயலாளராக" படிப்படியாக உழைப்பில் முன்னேறி வந்தவர் அம்மா. 67 வருட உழைப்பு. ஆனால் அதை வைத்து சிறிதும் சுய லாபம் பார்க்காதவர். கழக வளர்ச்சி மாத்திரமே அவர் குறிக்கோள் என்பது புலன்.

அவரை அமைச்சராக இருந்த போதும் பார்த்திருக்கிறேன், இல்லாத போதும் பார்த்திருக்கிறேன். எப்போதும் ஒரே மாதிரி தான், கழகத்தின் அடிப்படை தொண்டர் போல தான் நடந்து கொள்வார். கழகத் துணை பொது செயலாளர் என்ற முறையில் பொதுக் கூட்டங்களுக்கு வருவார். யாருக்கும் சிறு தொந்தரவு இருக்காது. அதிராத குரலில்," தம்பி, இரண்டு இட்லி மட்டும் போதும்" என்பார்.

பொதுக் கூட்ட மேடை ஏறி விட்டால், அதே குரல் வலுப் பெற்று விடும். யாருக்கும் அஞ்சாத குரலாக ஒலிக்கும். மடியில் கனமில்லா காரணத்தால், ஆட்சியாளர்களிடம் பயமில்லை. முன்னாள் அமைச்சர் என்ற பகட்டு இருக்காது. ஒரு பழைய இண்டிகா காரில், மருமகள் சிம்லாமுத்துசோழன் ஓட்ட, அம்மா சற்குணம் அமர்ந்து அண்ணா அறிவாலயம் வரும் காட்சி இன்னும்  மனதில் நிழலாடுகிறது.

அவர் வெற்றி பெற்ற தொகுதி, டாக்டர் இராதாகிருஷ்ண நகர். 1989லும், 1996லும் வெற்றி பெற்றார். 1996ல் தலைவர் கலைஞர் அமைச்சரவையில் இடம் பெற்றார். ஆனால் இந்த இரண்டு வெற்றிகளை பெறுவதற்கு முன், அந்தத் தொகுதியில் பல தோல்விகளை சந்தித்தார் அம்மா சற்குணம். அதிமுகவிற்கு சாதகமான தொகுதி அது. எளிதான வெற்றிக்காக, ஜெயலலிதாவே தேடி சென்ற தொகுதி. அதில் தான் பல முறை எதிர் நீச்சல் அடித்தார் அம்மா.

கழகத்தில் ஒரு பிளவுக்காக எதிரிகள் முயற்சித்த நேரத்தில், இவரை சாதி சொல்லி இழுக்க ஒரு பத்திரிக்கை அதிபர் முயற்ச்சித்தார். ஆனால் அம்மா சற்குணம் அசையவில்லை. "எனக்கு கழகம் தான் உயிர். கலைஞர் தான் தலைவர்", என்று அழுத்தமாக சொல்லி விட்டார். அதில் கடைசி வரை உறுதியாகவும் இருந்து விட்டார். சாதிக்கும், பணத்திற்கும் அசையவில்லை, கொள்கை தான் உயிர் என்று மெய்பித்து மறைந்து விட்டார்.

# அம்மா சற்குணம், பின்பற்ற வேண்டிய பொற்குணம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக