பிரபலமான இடுகைகள்

வியாழன், 29 டிசம்பர், 2016

மனிதர் உணர்ந்து கொள்ள...

அண்ணன் செங்கோட்டையனை நான் நிரம்ப ரசிப்பேன். அப்போது அவர் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர். நான் ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினர். ஆமாம் 2006ம் ஆண்டு. சட்டமன்றத்தில் அண்ணன் உறுமுவார். திமுக அமைச்சர்கள் பேசுவதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தலையை மறுத்து,மறுத்து ஆட்டுவார். எழுந்தால் கடுமையாக எதிர்த்து பேசுவார்.

அப்போது வேறு சில முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளையும் கவனித்திருக்கிறேன். கேமரா நோக்குவதால், நின்று பேசும் போது பொங்குவார்கள், பேசி உட்காரும் போதே கண்டித்த அமைச்சர்களை  நோக்கி புன்முறுவல் பூப்பார்கள். ஆனால் அண்ணன் செங்கோட்டையன் அப்படி கிடையாது. பேசும் போதும் கண் பார்க்கமாட்டார், உட்கார்ந்தாலும் பார்க்கமாட்டார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அப்படி தான். திமுகவை எதிர்ப்பதென்றால் வெல்லம் சாப்பிட்ட மாதிரி. குலுக்கிவிட்ட சோடா பாட்டில் மாதிரி பொங்குவார்.

2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அண்ணன் செங்கோட்டையன் அமைச்சர். நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர். நான் கொஞ்சம் முந்திரிகாட்டு மண்ணுக்கே உரித்தான 'தொட்டால் பற்றிக் கொள்ளும் தயார் நிலையில்' இருப்பேன். அதனால் பலமுறை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவோடு, ஓ.பி.எஸ்ஸொடு, சபாநாயகரோடு மோதிக் கொண்டிருப்பேன். நான் எழுந்தாலே வெளியே அனுப்புவார்கள்.

எழாத ஒரு நாளும், நான் வம்பு செய்ததாக அண்ணன் ஓ.பி.எஸ் புகார் செய்யுமளவு நிலை. அப்படி ஒரு நாள் சபாநாயகர் அறையில் அண்ணன் செங்கோட்டையன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு. "என்ன சிவசங்கர் எப்பவும் பிரச்சினையா?" என்றுக் கேட்டார். "அண்ணா, நேத்து அவ்வளவு இல்லையே அண்ணே", என்றேன். " இல்லை சிவா. சலங்கை கட்டி ஆடறது, சலங்கை கட்டாம ஆடறதுன்னு ரெண்டு வகை இருக்கு. நேத்து கட்டாம ஆடுனிங்க. அவ்வளவு தான்"என்று சிரித்தார்.

அப்போது தான் தெரிந்தது, அவரது வெற்றி ரகசியம். கோபி தொகுதியை ரவுண்டு கட்டி, எல்லோரிடமும் அன்பாக பேசி வென்றிருக்கிறார். ஜெயலலிதா தேர்தல் சுற்றுப்பயணம் கிளம்பினால், இவர் தான் ரூட் போட்டு தருவார். அதிமுகவில் இவர் அளவிற்கு தமிழகத்தையும், அதிமுகவையும் அறிந்தவர்கள் கிடையாது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே இவரது அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தாலும், இவருக்கு சீட் கொடுக்காமல் இருக்கவில்லை. காரணம், இவரது தாக்கம் கொங்கு பெல்ட்டில் என்ன என்பதை ஜெயலலிதா நன்கு அறிந்தவர்.

சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக காட்டிய வேகத்தை தான், அமைச்சர் ஆன பிறகும் சி.வி.சண்முகம் காட்டுவார். செங்ஸ் போல் எதிர்கட்சி ச.ம.உ களிடம் பேச மாட்டார். அதே டென்ஷன் போஸ் தான் கொடுப்பார். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதாவை பார்த்தும் பெரிதாக ரியாக்‌ஷன் இருக்காது. ஜெயலலிதா சட்டமன்றத்தில் நுழையும் போதும், ஏதாவது அறிவிப்பு வெளியிடும் போதும் அண்ணன் ஓ.பி.எஸ் வளைந்து வணங்குவது உலகப் பிரசித்தம்.

ஆனால் சி.வி.சண்முகம் அது போல் வணங்கி நான் பார்த்ததில்லை. அதேபோல கடந்த தேர்தலில், இவரை வேறொரு  தொகுதியில் ஜெயலலிதா வேண்டாவெறுப்பாக தூக்கிப் போட்டும் வென்று வந்தார். எடப்பாடி பழனிசாமியும் இவர் போல் தான். அளவோடு வளைந்தே ஜெயலலிதாவை வணங்குவார். உறுப்பினர்கள் கேள்வி கேட்டாலும் "அம்மாவின் பார்வைக்கு கொண்டு செல்கிறேன்" என்று மற்ற அமைச்சர்களை போல் வழக்கமான பல்லவியை பாடமாட்டார். தன்னிச்சையாக பதிலளிப்பார்.

ஆனால் அப்போதே அண்ணன் ஓ.பி.எஸ் பெர்ஃபார்மன்ஸ் வேறு. அவர் போன்று பணிவையும், விசுவாசத்தையும், அன்பையும், பக்தியையும், நம்பிக்கையையும் உடல்மொழியால் வேறு ஒருவரால் வெளிப்படுத்த முடியாது. எல்லோரும் பிரமிக்கக் கூடியது. அந்த நாட்களில் அதை ரசித்து நான் தனி நிலைத்தகவலே போட்டிருக்கிறேன்.

சமீப நாட்களில் தொலைக்காட்சியை பார்க்கும் போது அண்ணன் ஓ.பி.எஸ் மட்டும் தான் மாறாமல் அப்படியே இருக்கிறார்.

அண்ணன் செங்கோட்டையன் தொழுத கரங்களும், இறைஞ்சும் கண்களாய் இருக்கிறார். சி.வி.சண்முகம் வணங்கும் போது, அவர் தலை குனிந்திருந்த பாங்கும், அவர் கைகள் வணங்கி இருந்த இடமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. எடப்பாடி பழனிசாமி, 'அபிராமி, அபிராமி' என்று இருந்த பக்தி கோலம் கிறங்கடிக்கிறது. இது எல்லாம் அம்மா காலத்தில் காணாதது.

# மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக