மறைந்த மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் அவர்களது ஏழாம் ஆண்டு நினைவு நாள்.
இன்று அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினோம்.
உடையார்பாளையம் வட்டக்கழக செயலாளராக பணியாற்றி, தொடர்ந்து தா.பழுர் ஒன்றியத்தின் ஒன்றிய கழகசெயலாளராக பணியாற்றி கழக வளர்ச்சிக்கு பாடுபட்டவர்.
பொதுப்பணியில் தா. பழூர் ஒன்றிய பெருந்தலைவராக இருமுறை , ஜெயங்கொண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருமுறை, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட வேளாண்விற்பனைக் குழு தலைவராக என மக்கள் பணியாற்றி மக்கள் தொண்டர் என புகழோடு வாழ்ந்தவர்.
இவரது திருமணத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேற்க தேதி வழங்கி, திருமண நிகழ்விடத்திற்கு வந்துவிட்டார். மணமகனை காணவில்லை. ராகுகாலத்தில் தான் திருமணம் செய்துகொண்டு மூட நம்பிக்கைகளை முறியடிப்பேன் என சொல்லிவிட்டார். அன்றைய முதல்வர் கலைஞரை ஒரு மணி நேரம் காக்கவைத்து, ராகுகாலத்தில் தான் மங்கல நாண் அணிவித்தார். கொண்ட கொள்கையில் உறுதியானவர்.
அவரது நாற்பதாண்டு கோரிக்கை கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை மாவட்டத்தையும், அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் மதனத்தூர் - நீலத்தநல்லூர் பாலம். இதை நினைவூட்டி கடந்த சட்டப்பேரவையில் நான் கோரிக்கை எழுப்பிய போது, அன்றைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் உடனடியாக பார்வையிட்டு, அண்ணன் ஆ.ராசா அவர்களது உறுதுணையோடு, தலைவர் கலைஞர் அனுமதி பெற்று 36 கோடியில் வழங்கினார்.
இந்த பாலத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளேன். தளபதி அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிமுடிக்கப்படும் போது ஆட்சி மாற்றம். மீண்டும் கழக ஆட்சி அமையும் போது அவர் பெயர் சூட்டப்படும்.
# அவர் மறைந்திருக்கலாம். அவரது கொள்கைப்பற்றும், சாதனைகளும் என்றும் அவரை நினைவில் நிறுத்தும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக