பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 17 டிசம்பர், 2013

ஒரு தாயின் பனிக்குடத்தில் இருக்கிற குழந்தை ....

அண்ணா சாலை திமிலோகப்பட்டது. வாகனங்கள் உள்ளே நுழையவே இடம் இல்லை. நாங்கள் சாலையிலேயே இறங்கி உள்ளே சென்றோம். கலைஞர் அரங்க வெளியில் மாநாட்டுக்கு வந்தவர்கள் போல் கூட்டம்.

இந்தப் பொதுக்குழுவிற்கு கலந்துக் கொள்ள வந்தவர்களை போல், கூடுதலாக வந்தவர்கள் இன்னொரு மடங்கு இருக்கும். அவர்களுக்குத் தெரியும், நமக்கு உள்ளே அனுமதி கிடையாது, வெளியில் மரத்தடியில் தான் நிற்க வேண்டும் என. 

இருந்தாலும் ஆர்வம், யாருடன் கூட்டணி, இப்படி இருக்குமா, அப்படி இருக்குமா என, முகநூல் நண்பர்களை போலவே. அதைவிட ஊடகங்கள். உள்ளூர் ஊடகங்களில் இருந்து, தேசிய ஊடகங்கள் வரை.

                       Photo

உள்ளே பொதுக்குழு உறுப்பினர்களிடமும் தேர்தல் முடிவிற்கு காத்திருக்கிற உணர்வு. முதலில் மண்டேலா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவினர் கலவரம் காரணமாக உயிரிழந்த தோழனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தல் முதல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் நிறைவேற்றி முடிந்ததும், தலைவர் கலைஞர் மைக்கைப் பிடித்தார். "யாருக்காவது இந்தத் தீர்மானங்களில் வேறு கருத்து இருந்தால், எதிர்ப்பு தெரிவிக்கலாம்"

ஒரு கட்சியில் இப்படிப் பட்ட கேள்விகளே கேட்கப்படாது. இன்னும் சில கட்சிகளில், தவறி இப்படிக் கேட்டு விட்டால், கூட்டம் நடந்த மாதிரி தான். அது தான் கழகம், அவர் தான் கலைஞர்.

பிறகு கூட்டணி பற்றி கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவராக மேடை ஏறினர், பொதுக்குழு உறுப்பினர்களில் இருந்து, முன்னாள் அமைச்சர்கள் வரை. புகழ்ச்சி உரைகள் கிடையாது.

காங்கிரஸோடு கூட்டணி வைக்கக் கூடாது என சிலரும், பா.ஜ.கவோடு கூட்டணி வைக்கக் கூடாது என சிலரும், இரண்டு பேரும் வேண்டாம் என சிலரும் வாதங்களை எடுத்து வைத்தனர். கொள்கைபரப்பு செயலாளர் அண்ணன் சிவா பேச்சு டாப், மிகத் தெளிவாக, பாயிண்ட் பை பாயிண்டாக.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் மாலை பொதுக்குழு கூடியது. கழக முன்னோடிகளின் கருத்துகளுக்குப் பிறகு தளபதி அவர்கள் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். "தேர்தல் கூட்டணியை முடிவு எடுக்கும் அதிகாரம் தலைவர், பேராசிரியருக்கு வழங்கப்பட்டது"

தளபதி, பேராசிரியர் உரைகளுக்குப் பிறகு தலைவர் உரை. தேர்தல் கூட்டணிக் குறித்து பேச துவங்கியவர், மண்டேலாவை நினைவு கூர்ந்தார். சரியாக மண்டேலாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிற நேரத்தில், அவரது புகழை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

                         

மோடியின் வருகை, அதற்கு ஊடகங்களின் ஆதரவு எல்லாவற்றையும் குறிப்பிட்டு, சிலர் அதற்கு அதிர்ச்சியாகி இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது என்ற போது தான் அவரது கவனிப்பின் கூர்மை வெளிப்பட்டது.

வாஜ்பாய் அவர்கள் குறித்து பேசிய போது, வாஜ்பாய் மீது அவர் கொண்டிருக்கின்ற மரியாதையும், அன்பும் வெளிப்பட்டது. வாஜ்பாய் காலத்து பா.ஜ.க அல்ல, இப்போது இருப்பது என புள்ளி வைத்தார்.

"நன்றி மறந்த காங்கிரசின்" என்று தலைவர் ஆரம்பிக்கும் போதே, கைத்தட்டல் ஓங்கி எழ ஆரம்பித்தது. "ராஜாவிற்கு ஏற்பட்ட சோதனை, அடக்குமுறை, சங்கடம், அந்தக் களங்கம் ஆகியவை காங்கிரஸால் ஏற்பட்டது என்பதை அறியாதவர்கள் அல்ல" என்ற போது உச்சமடைந்தது.

"நீ இருக்க, தம்பி, நான் எதற்காக கவலைப் பட வேண்டும் ?" என்ற தலைவரின் வரிகள் கழகத்தோழர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது. தலைவரின் உரை கழகத்தினருக்கு ஊட்டிய புத்துணர்ச்சியோடு, பொதுக்குழு நிறைவுற்றது.

அண்ணன் ராசா மேடைக்கு வந்தார். மனம் நெகிழ்ந்தவராக, தலைவரை வணங்கினார். புன்னகையோடு தலைவர், அழைத்து அருகில் நிற்க சொன்னார். பத்திரிக்கையாளர்களின் கேமராக்கள் மின்னிண. 


                       

திகாரிலிருந்து விடுதலையாகி வந்த போது அண்ணன் ராசா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது,"ஒரு தாயின் பனிக்குடத்தில் இருக்கிற குழந்தை எவ்வளவு பாதுகாப்பாக இருக்குமோ, அவ்வளவு பாதுகாப்பாக தலைவரின் கரங்களில் உணர்கிறேன்"

# கழகமும், கழகத் தோழர்களும் அதே பாதுகாப்பு உணர்வோடு.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக