பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 21 ஜூலை, 2015

புத்தகம் ரிலீஸ் ஆகுமா? (தொடர்ச்சி)


ஜூலை 7.
“இந்த ஃபாண்ட் சரியா வரல”
“நானே டைப் செய்தது தான். “அழகி” டிரான்ஸ்லிட்ரேஷன் ஃபாண்ட்”
“ரீ டைப் தான் செய்யனும்”
அது 100 பக்கம் தாண்டும். இதற்கு இடையில் சடைக்கம்பட்டி மகேந்திரன், பிளாகில் வந்த எனது மொத்த பதிவுகளையும் பிரிண்ட் எடுத்துக் கொடுத்தார், அதை பார்த்தால், அலைன் ஆகவில்லை தான். வேலைக்கு ஆகாது,
அன்று காலை அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம். கூட்டம் மதியம் நிறைவுற்றது. சாப்பிட்டு விட்டு, புத்தக சிந்தனையை மூட்டைக் கட்டி விட்டு படுத்தேன். ஒரு புத்தகத்தை புரட்டினேன். தூங்கி விட்டேன்.

கனவில், எங்கோ ஃபோன் அடித்தது போல் இருந்தது. லேசாக விழித்து பார்த்தேன். என் அலைபேசி தான்.
“பத்ரி”.
தூக்கம் போன இடம் தெரியவில்லை. எழுந்தேன்.

“சார், நான் ஃபிரி. நீங்க ஃபிரியா?” பத்ரி.
“ஃபிரிதான் சார். சொல்லுங்க”, நான்.
“புத்தகக் காட்சி 17 துவங்குது. அப்போ புத்தகம் 16 ரெடியா இருக்கனும், அப்ப தான் டிரான்ஸ்போர்ட்டேஷனுக்கு சரியா இருக்கும். 13 பிரிண்டிங்க் கொடுத்தா தான் 16 ரெடி ஆகும். அதுக்கு முன்னாடி லே அவுட் பார்த்து, ரேப்பர் தயார் செய்யனும்”
“உங்களுக்கு ஏற்கனவே திட்டமிட்ட வேலைகள் இருக்குமே?”, நான்.
“அது இருக்கு. பார்த்துக்கலாம் சார். நீங்க உடனே மெட்டிரீயல் அனுப்புங்க. எடிட்டோரியல் பார்த்து, ரெடி செய்ய சரியா இருக்கும்”
“எல்லாம் மெயிலில் ரெடியா இருக்கு, அனுப்பிடறேன் சார்”
“இல்ல சார். வேர்ட் பைல்ல எல்லா கட்டுரைகளையும் ஏற்றி ஒரே பைலா அனுப்பிடுங்க”
“அழகி ஃபாண்ட்ல இருக்கு”
“அது ஒன்னும் பிரச்சினையே இல்ல. யுனிக்கோடுக்கு மாற்றி ரெடி செஞ்சிடுவாங்க. மெயில் அனுப்பிடுங்க”
“சார், ப்ரிண்டிங்கிற்கு நான் என்ன செய்யனும்?”
“ஒன்னும் இல்ல சார். நாங்க ப்ரிண்ட் பண்ணிடுவோம். விற்க, விற்க ராயல்டி வரும். உங்க எழுத்து சேலபிள். நான் படிச்சிருக்கேன்ல, தெரியும்”

அதுவரை இருந்த பிரச்சினைகள், ஒரே நொடியில் முடிந்தது. அடுத்தப் பிரச்சினை. கம்ப்யூட்டர் அவுட். இது வரை மொபைலில் சமாளித்தாயிற்று. வேர்டு பைலில் அனுப்ப வேண்டுமே. மகேந்திரன் தனது லேப்டாப்பை கொண்டு வந்து கொடுத்தார்,

நல்லவேளையாக மாலை எந்த நிகழ்ச்சியும் இல்லை. உட்கார்ந்து முகநூல் கணக்கு துவங்கியதில் இருந்து போடப்பட்ட ஸ்டேடஸ்களை புரட்ட ஆரம்பித்தேன். பிளாகில் இல்லாத சில பதிவுகள் இங்கு இருந்தன. தெரிவு செய்த பட்டியல் மாற ஆரம்பித்தது.

வேர்ட் பைலில் ஏற்றும் போது, சில பதிவுகளில் ஆல்ட்ரேஷன் தேவைப்பட்டது. இரவு முழுதும் பணி.

ஜூலை 8.
ஒரு வழியாக பதிவுகளை தொகுத்து முடித்து மெயிலினேன். மணி நண்பகல் 12.00. மாலை “புகைப்படமும், என்னைப் பற்றிய விபரக் குறிப்பும்” அனுப்புங்கள் என பதில் வந்தது. சரி, வேலை துவங்கி விட்டது, நிம்மதி.

ஜூலை 9.
சென்னை பயணித்தேன். புத்தகப் பணியை முடித்து வர. அணிந்துரை இருந்தால் நன்றாக இருக்கும். “சார், அணிந்துரை வாங்கி அனுப்பலாமா?”. “தாராளமா. ஆனா எதுவா இருந்தாலும் திங்கட் கிழமைக்கு முன்னாடி. அன்றைக்கு பிரிண்ட்க்கு அனுப்பனும்”.

யாரிடம் வாங்கலாம், இரண்டு நாட்கள் தான் உள்ளன. முதலில் நினைவுக்கு வந்தவர் அண்ணன் கவிஞர் ராஜசுந்தரராஜன். ஏற்கனவே என் பதிவுகளை படிப்பவர், பாராட்டுபவர். எம்.எம்.அப்துல்லாவை தொடர்பு விபரம் கூறினேன். “பேசிடறேன் அண்ணா” என்றார்.

அடுத்து யோசித்தேன். நமக்கு பழக்கமான, பொதுவெளியில் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும், கவிஞர் யுகபாரதி. அலைபேசினேன். “மகிழ்ச்சி தோழர். நான் ஷூட்டிங் ஸ்பாட் போகிறேன். பாலாகிட்ட கொடுத்திடுங்க”. பாலா நாட் ரீச்சபிள்.

நண்பகல். பத்ரி அவர்களை தொடர்பு கொண்டேன், சந்திக்க. “வாங்க” என்றார். அது தான் முதல் சந்திப்பு. அணிந்துரைக்கு கொடுக்க ப்ரிண்ட் அவுட் கேட்டேன். தயாராக அரை மணி நேரம் ஆயிற்று. அதற்குள் ஒரு நீண்ட உரையாடல். பல விஷயங்கள். பயனுள்ளதாக அமைந்தது.

அட்டை டிசைனை எடுத்து வர சொல்லி பார்த்தார். முகநூல் பதிவுகள் என்பதால், முகநூல் அடையாளமான “f”-ஐ பெரிதாக போட்டு டிசைன் செய்திருந்தார்கள். நான் மறுக்கும் முன்பே, பத்ரி மறுத்துவிட்டார். “இந்த புத்தகத்தின் அடிநாதமே வேறு”.

அண்ணன் அப்துல்லா தொடர்பு கொள்ளவில்லை. துணை இயக்குநர் பாலா ஒரு வழியாக மாலை சிக்கினார். அவரிடத்தில் ஒரு தொகுப்பை ஒப்படைத்தோம்.

ஜூலை 10.
காலை அண்ணன் அப்துல்லா லைனுக்கு வந்தார். “கவிஞர் கிட்ட சொல்லிட்டேன். பேசிடுங்க”. கவிஞருக்கு பேசினேன். “தம்பி, பாப்பாவுக்கு பரிட்சை, உதவனும். இருந்தாலும் உங்க பணி முடிக்கணும். மெயில் அனுப்பிடுங்க”. அனுப்பினேன்.

“இந்த போட்டோ நல்லா இல்லை. வேற அனுப்புங்க” இணையர் கருத்து. நீண்ட நாட்களாக புகைப்படம் எடுக்க அறிவுரைத்துக் கொண்டிருந்த அக்கா ஈஸ்வரிரகு அவர்களை தொடர்பு கொண்டேன். ரகு அவர்கள் சிறப்பான புகைப்படம் எடுத்தார். அது ஒரு தனிக்கதை.

அதற்குள் இடியென ஒரு செய்தி. ஆண்டிமடத்தில் எங்கள் தெருவை சேர்ந்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலி. சென்னை வேலைகளை பாதியில் விட்டுவிட்டு, ஆண்டிமடம் கிளம்பினேன்.

காரில் வரும் போதே யுகபாரதி அவர்களிடமிருந்து குறுஞ்செய்தி. “அணிந்துரை அனுப்பி விட்டேன், மெயில் பார்க்கவும்”. தேனினும் இனிய அணிந்துரை. பதிப்பகத்திற்கு பார்வேர்ட் செய்தேன்.

ஜூலை 11.
விடியற்காலை 4.30க்கு, அண்ணன் ராஜசுந்தரராஜன் அணிந்துரை அனுப்பி இருந்தார். இலக்கிய உலகை சேர்ந்த அண்ணனது அணிந்துரை, ஒரு தகுதிச் சான்று. பதிப்பகத்திற்கு மெயில் அனுப்பினேன்.

ஜூலை 12. ஞாயிற்றுக்கிழமை.

ஜூலை 13.
ஒரு புதிய சிந்தனை. என்னுரை என்ற பெயரில் “நன்றியுரை” தயார் செய்து, வாய்ப்பு இருந்தால் இணைத்துக் கொள்ளவும் என அனுப்பினேன். அச்சுக்கு ஏற்றுக் கொண்டார்கள்.
இதற்கிடையில் புத்தகத்திற்கு சூட்ட பெயர் குழப்பம், நான் ஒன்று சிந்திக்க, கவிஞர் யுகபாரதி சில பெயர்களை சொல்ல.

மாலை எல்லாவற்றிற்கும் தீர்வாக, பத்ரி அட்டைப்பட லேஅவுட்டை அனுப்பினார். அவரே ஒரு பெயர் முடிவு செய்திருந்தார். அருமையாக அமைந்திருந்தது.

“சார் அட்டையில் என் படம் சற்று பெரிதாக இருக்கே. சின்னதா ஆக்கிட்டா பரவாயில்லை”
“சார், அது உங்க பார்வை, அடக்கமா இருக்கனும்னு. எங்கள் பார்வையில் இது தான் சரி”
“ப்ரிண்ட்டுக்கு அனுப்ப போகிறேன்”.

ஜூலை 14.
கவிஞர் யுகபாரதி ஒரு செய்தி அனுப்பி இருந்தார். “நீங்க நல்லா இருக்கணும் பாடல்” புலமைப்பித்தன் எழுதியது. ஆனால் வாலி எழுதியது போல் வந்துள்ளது. 40 வது பதிவு. அக்கறையான தோழர்.

திருத்தம் மேற் கொள்ள பத்ரி அவர்களை தொடர்பு கொண்டேன். “பிளேட் போட்டு பிரிண்டிங்கைத் தொடங்கிவிட்டோம். இனி மாற்ற முடியாது, நேரக் குறைவு காரணமாக.. அடுத்த அச்சில் சரி செய்துவிடலாம்.”

ஜூலை 16.
“சார். புக் ரெடி. நீங்க கேட்ட புத்தகங்களை அனுப்ப முகவரி அனுப்புங்க”.
முகவரி அனுப்பினேன்.
“சார், டிரான்ஸ்போர்டில் புக் பண்ணிட்டோம். நாளை வந்துவிடும்” பிரசன்னா.

“ஏங்க புக் பார்த்திட்டீங்களா?” இணையர்.
“இல்லை. நாளை தான் வந்து சேர்கிறது. நானும் நாளைக்கு தான் பார்க்கனும்”
“ஆனாலும் அட்டையில் உங்க படம் பெரிசா இருந்தது. சின்னதாக்க சொல்லி இருக்கலாம். உங்க ஸ்டைலுக்கு, அத ஏத்துக்க முடியல”
“பிரிண்ட் ஓடி, புத்தகம் வந்துகிட்டு இருக்கு. என்ன செய்ய?”.

ஜூலை 17. காலை 09.57. அரியலூர்.

டிரான்ஸ்போர்ட் லாரி வந்துக் கொண்டு இருக்கிறதாம்.

# நானும் புத்தகத்தைக் காண காத்திருக்கிறேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக